நிதிநிலை அறிக்கை: பொய் அறிவிப்புகள்
வெற்று தேர்தல் வாக்குறுதிகள்
01 பிப்ரவரி 2019
தேர்தல்கள் வருகிற நேரத்தில் மக்களை ஏமாற்ற ஜனரஞ்சக வெற்று வீச்சுகள் நிறைந்ததுதான் இன்று முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. 2 ஹெக்டேர் நிலம் வரை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 ஊதிய உதவி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம், ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு ஆகிய ஆரவாரமான அறிவிப்புகள் உண்மையில் பொருளற்றவை.
விவசாயிகளுக்கு அறிவித்திருக்கும் ஊதிய உதவி ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500. (அய்ந்து பேர் உள்ள குடும்பத்தில் நாளொன்றில் ஒருவருக்கு ரூ.3). விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற முந்தைய வாக்குறுதியை கேலி செய்வதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அற்பமான தொகையும் குத்தகைதாரர்களுக்கும் சாகுபடியாளர்களுக்கும் கிடையாது. விவசாய உற்பத்தியாளர்களின் பெரும்பிரிவினருக்கு உண்மையில் எதுவும் கிடைக்காது. உர மானியம், உணவுப் பொருள் மானியம் ஆகியவை தொடர்ந்து குறையும்போது, (2018 - 2019ல் இவை முறையே 2.85% மற்றும் 6.97 சதம் என இருந்ததில் இருந்து 2019 - 2020ல் 2.69% மற்றும் 6.62% என குறைந்துள்ளது) இது கிராமப்புற நெருக்கடியை மேலும் மோசமானதாக்கும்.
இன்று இருபது முதல் முப்பது வயதில் இருக்கும் ஓர் அமைப்புசாரா தொழிலாளிக்கு அவர் 60 வயதை எட்டும்போது மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் என்பது, அவர் இன்றில் இருந்தே செலுத்தத் துவங்கும் முன்தொகையை விட கூடுதலாக எதுவும் இருக்காது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி கட்டுவதில் விலக்கு இருக்கும். ( ரூ.5 லட்சத்துக்கும் மேல் வருமானம் பெறுபவர்கள்
ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் படிநிலைக்கும் வரி செலுத்த வேண்டும்). உண்மையான வரி விலக்கு மீண்டும் சூப்பர் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று நின்று விடும். அவர்கள் சொத்து வரி கட்ட வேண்டியதில்லை. நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் போதும் கூடுதல் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.
வேலை வாய்ப்பு பற்றி நிதிநிலை அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. வேலை தேடுபவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்ற படாடோப அறிவிப்பு மட்டும் இருக்கிறது. கடுமையான வேலை வாய்ப்பின்மையை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு அது பெரிய அடியாகும். பணமதிப்பகற்றத்தால் வேலை வாய்ப்பின்மை விகிதம் 2%ல் இருந்து 6.1% என அதிகரித்துவிட்டது. (15 - 29 வயதில் இருக்கும் இளைஞர்களில் கிராமப்புற ஆண்களுக்கு இது 2011 - 2012ல் 5%ல் இருந்து 2017 - 2018ல் 17.4% எனவும் கிராமப்புற பெண்களுக்கு 4.8%ல் இருந்து 13.6% எனவும் நகர்ப்புற ஆண், பெண் இளைஞர்களுக்கு 18.7%ல் இருந்து 27.2% எனவும் உயர்ந்துள்ளது. பல்வேறு அரசு திட்டங்களில் குறைஊதியம் பெறும் தன்னார்வலர்களாக நடத்தப்படும் தொழிலாளர்கள் எழுப்பும் முக்கியமான கோரிக்கைகளான பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் ஆகியவை பற்றி நிதிநிலை அறிக்கை மவுனம் காக்கிறது.
கிராமப்புற வளர்ச்சி, சமூக நலத்திட்டங்கள், மாநிலங்கள் அமல்படுத்தும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு குறைந்து (2018 - 2019ல் முறையே 5.5%, 1.69%, 12.41% என்பதில் இருந்து 2019 - 2020ல் 4.99%, 1.77%, 11.77%) ராணுவத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு அதிகரிக்கிறது.
தேர்தல் வரும்போது முன்வைக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள் இடைக்கால தன்மை கொண்டவை. இந்த அரசாங்கம் அந்த விதிகளை எல்லாம் மீறி, ஆட்சிக் காலம் முடிகிறபோது, முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைத்துள்ளது. 2014 முதல் அரசாங்கத்தின் பேரழிவுமிக்க பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக மவுனமாக இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் பொருளாதாரம், வெற்று ஆரவாரம் என்றே அறியப்படுகிறது. அது எல்லா முக்கிய பொருளாதார குறியீடுகளிலும் கடுமையான நிச்சயமின்மை, ஆழமான சரிவு ஆகியவற்றை கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை ஒரு மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த சரியும் போக்குகள் தீவிரமடையும் என்று அச்சுறுத்துவதாகவே தேர்தலுக்கு முந்தைய இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக பழுது நீக்குவது, கார்ப்பரேட் பேராசைக்கும் வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு அடிபணியும் போக்குக்கும் சேவை செய்வதற்கு மாறாக, சாமான்ய மக்களின் நலன்களை முன்னேற்றுவதாக பொருளாதாரக் கொள்கைகள் மறுதிசைவழிப்படுத்தப்பட, இந்த அச்சுறுத்தலுக்கு வருகிற தேர்தல்களில் மக்கள் சரியான பதிலடி தர வேண்டும்.
திபங்கர்
பொதுச் செயலாளர்
இகக மாலெ