COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, June 1, 2012

மாலெ தீப்பொறி 2012, ஜுன் 01 - 15 தொகுதி 10 இதழ் 16

முன்முயற்சி

உள்ளாட்சி அமைப்புக்களை
மக்கள் போராட்ட மேடைகளாக்குவோம்
!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் கிராமப்புற வறியவர்களுக்கு ரூ.132 சட்ட கூலி தராமல், வேலை அளவுக்கு ஏற்ப ரூ.80, ரூ.70 எனக் கொடுத்து ஏமாற்றுவதாக, ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ள மாலெ கட்சியின் தோழர் சரஸ்வதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மாலெ கட்சியின் தோழர் ஒருவர் தலைவராக பொறுப்பெடுத்துள்ள ஊராட்சியில் அரசாங்கத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
ஊர் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மக்கள் வேலை செய்யும் இடத்துக்கு போய், அந்த இடத்துக்கு அதிகாரிகளை வரவழைத்து மாலெ கட்சியின் ஊராட்சி தலைவர் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் 21.05.2012 அன்று வேலை உறுதித் திட்டத்தில் ரூ.132 கூலி தராத ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மாலெ கட்சி அறிவித்தது. போராட்டத்தை தடுக்க ஒன்றிய வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், அலுவலக அதிகாரிகள், ஒன்றியத் தலைவர் ஆகியோர் முயன்றனர். சட்டக் கூலி ரூ.132 என அறிவித்து எந்த ஊராட்சியில் தருகிறார்கள் எனக் கேட்டனர். மத்திய அரசின் அறிவிப்பு எங்கு அமலா னது எனக் கேட்பதற்கு மாறாக இங்கு அமலாக வேண்டும் எனவும், மாலெ கட்சி தலைமை உள்ள ஊராட்சியில், அதை அமலாக்குவதே முதல் கடமை எனவும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
அதன்பின் அதிகாரிகளும் ஆளும் கட்சிக் காரர்களும் மிரட்டும் தொனியில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மக்கள் வேலைக்கு ஒழுங்காக வருகிறார்களா, அளவைப்படி வேலைகள் செய்கிறார்களா என்று கேட்டனர்.  வேலைக்கு வரும் மக்களை, போராட்டத்துக்கு போனால் செய்த வேலைக்கான கூலி இல்லை, வேலை இல்லை என மிரட்டினர். மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை.
ஒன்றிய வளர்ச்சி அலுவலரும், ஒன்றிய தலைவரும் ஊராட்சி தலைவர் பதவியை பறித்துவிடுவோம் என மிரட்டினர். ஊராட்சியில் எந்த வேலையும் நிதியும் வருவதை தடுத்து விடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம், பதவி பொருட்டல்ல என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
மிரட்டல்களை முறியடித்து, 21.05.2012 அன்று சோழவரம் ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலக முற்றுகைக்கு 200க்கும் மேற்பட்ட கிராமப்புற வறியவர்கள் வந்து சேர்ந்தனர். முற்றுகையில் கலந்துகொண்டவர்கள் அதிகாரிகளிடம் வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி தராமல் ஏமாற்று நடப்பதைக் கண்டித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். மக்கள் கேள்விகளுக்கு துணை வட்டாட்சியரும், ஒன்றிய வளர்ச்சி அலுவலரும் ஊராட்சி அதிகாரிகளும் பதில் சொல்ல முடியவில்லை.
வேறு வழியின்றி கூலி உயர்வு உடனே தருவதாகவும், மக்களிடம் மரியாதையாகவும் வெளிப்படையாக நடப்பதாகவும் அறிவித்த பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், கட்சி மாநில குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார்,  ஊராட்சியின் மாலெ கட்சித் தலைவர் தோழர் சரஸ்வதி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊராட்சிகளை போராட்ட மேடைகளாக வளர்த்தெடுப்பது, கிராமப்புற முக்கூட்டுக்கு எதிரான சக்திவாய்ந்த போராட்டங்களைக் கட்டமைப்பது என மாலெ கட்சி முன்வைத்துள்ள கடமைகளுக்கு ஏற்ப இந்தப் போராட் டம் கட்டமைக்கப்பட்டது. ஊராட்சிக்கு வர வேண்டிய நலத்திட்டங்கள் வராது என்ற மிரட்டல்கள், அதன் மூலம் வெற்றி பெற்ற வரை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது, மக்களுக்குச் சேர வேண்டியவற்றை தடுப்பது போன்ற ஆதிக்க சக்திகளின் வழமையான முயற்சிகளை, மக்களை சார்ந்து நின்று, மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடித்து முன்செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விசயத்தில் ஊராட்சி மட்ட கட்சி அமைப்புக்களின் அரசியல், கருத்தியல் வலிமை மட்டுமே வழிவிலகல்களில் இருந்து பாதுகாக்கும்.

தலையங்கம்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில்
மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி!


‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’. இது ஜெயலலிதாவின் லட்சியமாம்! நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை விளம்பரங்கள் சொல்கின்றன. இந்த வரிகள் தீக்கதிர், ஜனசக்தி உள்ளிட்ட ஏடுகளைக் கூட ஆக்கிரமித்துள்ளன.
சாமான்ய மக்கள் தாங்கமுடியாத பஸ் கட்டண உயர்வைப் பெற வேண்டும். சுமக்கமுடியாத பால் கட்டண உயர்வை சுமக்க வேண்டும். மின்கட்டண உயர்வின் தொடர் அதிர்ச்சியில் வாழ வேண்டும். கசக்கிப் பிழியும் விலைவாசி உயர்வால் துன்பப்பட வேண்டும். தலித்துகள் துப்பாக்கிச் சூட்டில் மடிய வேண்டும். பழங்குடிப் பெண்கள் காவல்துறை வன்முறையால் சின்னாபின்னமாக வேண்டும். கூடங்குளம் மக்கள் ஜெயலலிதாவின் நயவஞ்சக வாக்குறுதியால் ஏமாற வேண்டும். கிராமப்புற ஏழைகள், தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலைக் குறைப்பை, கூலிக் குறைப்பை பெற வேண்டும். நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள் வேலைஇல்லா திண்டாட்டத்தைப் பெற வேண்டும். தானே புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் வறுமையில் வாட வேண்டும். டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் கொத்துகொத்தாக மடிய வேண்டும். இதுதான் ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற ஜெயலலிதாவின் லட்சியம். அவரது லட்சியம் இவ்வாறுதான் நிறைவேறியுள்ளது! இதுதான் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை!
ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான தொலை நோக்கு திட்டம் 2023ம் இந்த ஓராண்டு சாதனையில் அடங்கும். இந்த திட்டம் 2023ல் வறுமை இல்லா தமிகத்தை உருவாக்கும் என்கிறது. இந்த திட்டத்தின் மூலம் நெருக்கடியிலிருக்கும் விவசாயம் அழிவுக்குள் தள்ளப்படும். உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பேரால் நிலவங்கி உருவாக்கப்படும். அந்த நிலங்கள் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கப்படும். நீர், மின்சாரம், மலிவான உழைப்பு பெரு முதலாளிகளுக்குத் தங்குதடையின்றி கிடைக்கும். பெரும் உள் நாட்டு, வெளி நாட்டு முதலாளிகள் வளர்ச்சி பெறுவார்கள். முதலாளித் துவம் மூர்க்கத்தனத்துடன் தாக்கும். இதைத்தான் எல்லாரும் (உள் நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள்) எல்லாமும் (நிலம், நீர், மலிவான உழைப்பு, அளவில்லா சலுகைகள்) பெறுவார்கள் என்று ஜெயலலிதா சொல்கிறார்!
இந்தப் பாடல் கருப்புப் பணம் திரைப்படத்தில் வருகிறது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். வரிகளை அடுத்து வருவது. ‘வல்லான் (வலுத்தவன் - முதலாளிகள்) பொருள் குவிக்கும் தனிஉடமை ஒழிந்து, வரவேண்டும் இந்நாட்டில் பொது உடமை’. வலுத்தவன் பொருள் குவிக்கும் நிலை உள்ள வரை, ஏற்றத்தாழ்வுகள் பெருகும். மக்கள் வாழ்வாதாரங்கள் பறிபோகும். பட்டினி பெருகும். வறுமை தாண்டவமாடும். வேலைஇல்லா திண்டாட்டம் தலை விரித்தாடும். வலுத்தவர்கள் (பெருமுதலாளிகள்) பொருள் குவிக்கும் தனிஉடமை ஒழிந்தால்தான் மக்கள் துயரம் நீங்கும். துன்பம் ஒழியும். இந்த வரிகளை ஏனோ ஜெயலலிதா மறந்துவிட்டார்!
அவரது தலைமையிலான ஆட்சியின் ஓராண்டு சாதனையை சட்ட மன்றத்தில் விளக்கும்போது, ஜனநாயகம் பற்றியும் ஜெயலலிதா வகுப்பு நடத்தியிருக்கிறார். அதிகப்படியான மக்களுக்கு அதிக நன்மைகளை செய்வதுதான் ஜனநாயகம் என்று பேசியிருக்கிறார்! அதிகப்படியான மக்களுக்கு அதிகப்படியான தீமைகளைத் தருவதும் மிகமிகக் குறைவானவர்களுக்கு (வலுத்த பெருமுதலாளிகளுக்கு) அளவில்லா நன்மைகளைத் தருவதும்தான் ஜெயலலிதாவின் ஜனநாயகம் என்பது ஓராண்டில் நிரூபணமாகிவிட்டது. வல்லான் (வலுத்தவர்கள்) பொருள் குவிக்கும் முதலாளித்துவ வளர்ச்சி திட்டத்தைத்தான் (2023) தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்கும் திட்டம் என்கிறார் ஜெயலலிதா!
மக்கள் விரோத முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். வெற்றிகரமான பிப்ரவரி 28 அகில இந்திய வேலை நிறுத்தமும் இதைத்தான் உணர்த்தியது. முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் ஆட்சியாளர்களை தோற்கடித்து வருகிறார்கள். தமிழக மக்கள் தங்கள் தேர்தல் தீர்ப்பு மூலம் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு எதிராக, அதன் விளைபொருளான ஊழலுக்கு எதிராக தங்கள் கோபத்தைக் கொட்டி தீர்த்தனர். ஆனா லும் தேர்தல் தீர்ப்புக்கு எதிராகவே அதிமுக ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. பெருமுதலாளித்துவ பாதையை வெகுஆவேசமாக செயல்படுத்திவருகிறது. அதையே நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனையாகவும் காட்டுகிறது!
ஓராண்டு சாதனை பத்திரிக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்ள 43 அதிமுக அமைச்சர்கள் புதுக்கோட்டையை ஆக்கிரமித்துள்ளனர். மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுதந்திரமான தேர்தலை அடாவடி தேர்தலாக மாற்றி வருகின்றனர். ஜெயலலிதாவோ தேசிய அரசியலில் - ஜனாதிபதி தேர்தலில் - இறங்கியுள்ளார். மலைவாழ் சமூகத்து சங்மாவுக்கு ஆதரவு தேடி வருகிறார். மலைவாழ் மக்கள் மீது அவருக்குள்ள  அக்கறையைவிட தேசிய அரசியலில் தன்னை முக்கிய சக்தியாக காட்டிக்கொள்ளும் அக்கறையே தூக்கலாக தெரிகிறது. தேசிய அரசியலில் கருணாநிதியை பின்னுக்கு தள்ளும் அனைத்து உத்திகளையும் செய்து பார்க்கிறார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கருணாநிதி 30ம் தேதி ஆர்ப்பாட்டம் என்றவுடன் 29ம் தேதியே அதிமுக போராட்டம் என்று அறிவித்திருக்கிறார். கர்நாடகா, புதுடெல்லி, மகாராஷ்ட்ரா, கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களிலும் போராட்டம் அறிவித்திருக்கிறார். அதிமுக ஒரு அகில இந்திய கட்சி, தான் ஒரு தேசிய தலைவர் என்று காட்ட முற்படுகிறார். கருணாநிதியால் தமிழ்நாட்டில் மட்டும்தான் போராட்டம் அறிவிக்க முடியும். தன்னால் அகில இந்திய அளவில் போராட்டம் அறிவிக்க முடியும் என்று காட்டுகிறார்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அதேசமயம் பெட்ரோல் மீதான மாநில வரியை ரத்து செய்தால் சாமான்ய மக்களுக்கு சுமை குறையும். அதை செய்ய ஜெயலலிதா முன்வரவில்லை. மத்திய அரசு எதிர்ப்பு - மாநில உரிமை என்ற அரசியலை தூக்கலாக காட்டிக்கொள்வதன் மூலம் செல்வாக்கு மிக்க பிராந்திய அரசியல் தலைவராக தன்னை நிறுத்திக் கொள்ள முயலுகிறார். மத்திய அரசுக்கு எதிராக பெருகிவரும் தமிழக மக்களின் கோபத்தை ஆதாயமாக்கிக்  கொள்ளும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலிலும் மத்திய அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்புகிறார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி நடத்திவரும் மத்திய ஆட்சி பின்பற்றி வரும் நாசகரமான ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை அணுவளவும் மாறாமல் செயல்படுத்தி வருகிறது அதிமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத - சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிருப்தியை மத்திய அரசு எதிர்ப்பு அரசியலுக்குள் மறைத்துக் கொள்ளப் பார்க்கிறார் ஜெயலலிதா. மறைந்து விடும் என நம்புகிறார்.
ஜெயலலிதாவின் இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய அவசர அவசியம் உருவாகியுள்ளது. அதிமுக ஆட்சியின், நூறாண்டு பேசும் ஓராண்டு வேதனையிலிருந்து மக்களைப் பாதுகாக்க, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையின் தாக்குதலிலிருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாக்க, அதிமுக ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை முன்வந்துள்ளது.
இந்த அரசியல் கடமையை முன்னெடுத்துச் செல்ல புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மாலெ கட்சி போட்டியிடுகிறது. அதிமுகவின் மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கைகளை எதிர்த்து, சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து அதிருப்தி அடைந்து வரும் உழைக்கும் மக்களின் குரலாக, இடதுசாரி அரசியலாக களத்தில் நிற்கிறது மாலெ கட்சி. பெரிய கட்சிகள், தேர்தலிலிருந்து விலகியுள்ளன. அதிமுக எதிர்ப்பு அரசியலிலிருந்து விலகியுள்ளன. களத்திலிருக்கும் கட்சிகளில் மாலெ கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள், அதிமுக ஆட்சியின் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்க்கிற கட்சிகள் இல்லை. பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை நிராகரிப்போம். மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காகப் போராடுவோம் என்ற கட்சியின் கோவை மாநாட்டு முழக்கத்தை செயல்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ளது மாலெ கட்சி.
அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்புக் குரலாக, புரட்சிகர எதிர்க்கட்சியாக களத்திலிருக்கும் மாலெ கட்சியை உழைக்கும் மக்கள் ஆதரித்து வலுப்படுத்த அழைப்பு விடுக்கிறோம். மூர்க்கத்தனமான முதலாளித்துவ ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம் போட, இடதுசாரி கட்சிகள், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், போராடும் தலித் இயக்கங்கள் மாலெ கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகள் களத்தில் இறங்குவதை தவிர்த்துவிட்ட நிலையில் உழைக்கும் மக்கள் அரசியலுக்கு, இடதுசாரி அரசியலுக்கு ஆதரவு தருவதே மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியை ஆதரிப்பதே, இடதுசாரிகளின் கடமையாகும். உண்மையான அதிமுக எதிர்ப்பு அரசியலுக்கு வலுச்சேர்க்க, அதிமுக ஆட்சிக்கு எதிரான உழைக்கும் மக்கள் குரலாக, இடதுசாரி, ஜனநாயக அரசியலாக துணிச்சலுடன் செயல்படுவோம்!

வழக்கு

வழக்கு எண் (ரிட் மனு) 6785/2012

கோடை விடுமுறையில் உயர்நீதிமன்றம் எல்லா நாட்களிலும் இயங்காது. வாரத்தில் ஒரு நாள்தான் செயல்படும். நாம் சட்டவிரோதமாக சர்வாதிகார முறையில் எது செய்தாலும் யாராலும் இந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என, தப்புக் கணக்கு போட்டனர் தமிழக அரசும் காவல் துறையும். அவர்கள் எண்ணத்தில் மண் விழ வைத்தது வழக்கு எண். 6785/2012. வாழ்க்கையில் சுட்டெரிக்கும் நிஜங்களையும், மக்களுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்ப்புணர்வையும், வழக்கு எண். 18/9 திரைப்படம் தமிழக மக்கள் முன்கொண்டு வந்த நேரத்தில்தான், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில், வழக்கு எண். 6785/2012ல் 17.05.2012 அன்று, அரசின் அத்து மீறல் உத்தரவு ஒன்று, தன் முடிவைச் சந்தித்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தனது மாநிலக் குழு உறுப்பினரும் திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான தோழர் டி.சங்கரபாண்டியன் மூலம், 03.05.2012 மனுவில் 30.05.2012 அன்று, நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒடுக்குமுறை எதிர்ப்பு அரசியல் கருத்தரங்கம் நடத்த, காவல் துறையிடம் அனுமதி கேட்டது. காவல்துறை, 11.05.2012 அன்று தேதியிடப்படாத ஓர் உத்தரவின் மூலம், நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சென்னை நகர காவல் சட்டம் 1888ன் கீழ் 04.05.2012 அன்று தடை உத்தரவு போட்டுள்ளதால், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக உத்தரவிட்டது.
கட்சி மாநிலக்குழு கூட்டம் சென்னையில் 12, 13, 14 தேதிகளில் மே மாதம் நடைபெற்றது. 12 அன்று மாலை அனுமதி மறுப்பு உத்தரவு மின் அஞ்சல் மூலம் கூட்டம் நடக்கும் போது கிடைத்தது. உத்தரவு சட்டவிரோதமானது என நன்கு தெரிந்தும், நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் செயல் படுகிறார்கள் என்பதால், இதனை விட்டு விடக் கூடாது எனக் கட்சி மாநிலக்குழு முடிவெடுத்தது. ஏப்ரல் - மே 2012 நெடும் பயண அனுமதி மறுப்பை, சட்டபூர்வமாக முறியடித்ததையும் மாநிலக் குழு நினைவில் வைத்தது.
12.05.2012 அன்று இரவு ரிட் மனு தோழர் சந்திரமோகன் உதவியுடன் தோழர் குமாரசாமியால் தயாரிக்கப்பட்டது. 13.05.2012 அன்று தோழர் பாரதி, தொழிலாளர் வழக்கறிஞர் திரு.ரமேஷ் மூலம் வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விதம் ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டார். அந்த வாரத்தில் 14.05.2012 திங்கள்கிழமை தாக்கல் செய்யும் நாள் என்பதால் 13.05.2012 மாலை தோழர் சங்கரபாண்டியனிடம் கையொப்பம் பெறப்பட்டு அன்றிரவே ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளைக்குப் புறப்பட்டார். 14.05.2012 அன்று காலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ரிட் மனு 6785/2012 என்ற எண் பெற்றது. வழக்கு விவரம் அன்று மாலையும், மறுநாள் காலையும் செய்தித் தாள்களில் வெளியானது.
16.05.2012 அன்று காலை இரு நீதிபதிகள் அமர்வம் முடிந்த பிறகு, பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. தோழர்கள் குமாரசாமி நெல்லை ரமேஷ், கோவை குருசாமி, ஆகியோருடன் சென்னை மூத்த வழக்கறிஞர் திரு.ரமேஷ÷ம் நீதிமன்றத்தில் இருந்தனர். 
வழக்கில், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானது, மனிதர்கள் மற்றும் சூழலுக்கு உடனடியாகவும், தலைமுறை தலைமுறையாகவும் தீமை விளைவிக்கும், ஃபுகுஷிமாவுக்குப் பிறகு மேலை நாடுகளெல்லாம் அணு நிலையங்களைக் கைவிடுகின்றன, எதிர்ப்பாளர்கள் மீது தேச விரோதக் குற்றம் உட்பட வழக்குகள் மனம் போன போக்கில் போடப் படுகின்றன, கடுமையான ஒடுக்குமுறை ஏவப்படுகின்றது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை மீறப்பட்டுள்ளது என்பதையும், இது போன்ற சூழல்களில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் தனபாலன், மணிகுமார் ஆகியோர் அனுமதி வழங்கக்கோரி உத்தரவு பிறப்பித்த தீர்ப்புக்களையும், நெடுமாறன் வழக்கில் நீதிபதி ஜெயசிம்மபாபு வழங்கிய மாற்றுக் கருத்துக்களுக்கான உரிமை பற்றிய முக்கியத் தீர்ப்பையும் ஆதாரமாகத் தந்தனர்.
வழக்கை, நீதிபதி வாசுகி 16.05.2012 அன்று பிற்பகல் விசாரித்தார். சென்னை மாநகரக் காவல் சட்டம் 1888ன் பிரிவு 41 மீறல்களைத் தோழர் குமாரசாமி பட்டியலிட்டுச் சொன்னார். இந்தச் சட்டம் அந்நிய காலனிய ஆட்சிக் காலச் சட்டம் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. பிரிவு 41ல் நான்கு துணைப் பிரிவுகள் உள்ளன. ஊர்வலங்கள் கூட்டங்களுக்கு 15 நாட்கள் தடை போடும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால் தடை உத்தரவு 15 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். நம் நாட்டில் 1947 ஆகஸ்ட் 15 முதல் ஆட்சியாளர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தடை உத்தரவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பொது தடை உத்தரவுக்கு அவர்கள் காரணம் சொல்ல வேண்டியதில்லை. யாரிடமும் விளக்கம் கோரவோ, யாருக்கும் வாய்ப்பு தரவோ வேண்டியதில்லை.
ஆனால், தடை உத்தரவு அமலில் உள்ள போது, எந்த ஒரு தனி நபரோ அமைப்போ, ஆர்ப்பாட்டம் கூட்டம் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி மனு செய்யலாம். காவல்துறை அனுமதி மறுப்பதென்றால், மனு கொடுப்பவரிடம் விளக்கம் கோர வேண்டும். தம் தரப்பைச் சொல்ல வாய்ப்பு தர வேண்டும். அனுமதி மறுப்பதென்றால், அதற்கான காரணங்களை எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும்.
மாலெ கட்சியின் வழக்கில், முதலில் நீதிபதி, காவல்துறை பொதுத் தடை போட வாய்ப்பு தர வேண்டியதில்லை என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு, கேள்வி எழுப்பியதாகத் தெரிந்தது. நம் தரப்பில், அது பொதுத் தடை போட மட்டுமே பொருந்தும் எனவும், தனித்தனி அனுமதி மறுப்பு பற்றி பிரிவுகள் 41 (3) 41 (4) சொல்கின்றன எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. பிறகு நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் பிரிவு 41படி பொதுத் தடை அவர்களது 04.05.2012 உத்தரவுப்படி, 19.05.2012 வரைதான் அமலில் இருக்கும் எனக் குறிப்பிட்டு, 30.05.2012 நிகழ்சிக்கு அது எப்படிப் பொருந்தும் எனக் கேள்வி எழுப்பினார். கட்சி தரப்பில், நாங்கள் அரசியல் கருத்தரங்கத்திற்கு அனுமதி கேட்டதற்கு, காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பதாகச் சொல்லி உள்ளதிலிருந்தே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய ஆணவமான அலட்சியம் புலப்படுகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு தரப்பில், கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் என்ற இரண்டுமே கூட்டங்கள்தானே, அதனால் சொற்களைப் பெரிதுபடுத்தக் கூடாது என வாதிடப்பட்டது. கட்சி தரப்பில், சட்டத்தில், மற்றும் அல்லது என்ற ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு வேறு பொருள் உள்ளது என விளக்கப்பட்டது. நீதிபதி, கட்சியிடம் விளக்கம் கோராததையும் கட்சிக்கு வாய்ப்பு தராததையும் கணக்கில் கொண்டு, கட்சி நேரில் எடுத்துச் சொல்ல (பெர்சனல் இயரிங்) வாய்ப்புத் தந்தால் பொருத்தமாக இருக்காதா எனக் கேட்டார். முந்தைய மூன்று தீர்ப்புக்க ளிலும், கருத்துக்களைச் சொல்ல, கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் தரப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் கூட்டம் போட்டுச் சொல்ல என்ன தடை என நீதிபதி அரசு வழக்கறிஞரி டம் கேட்டார். அரசு தரப்பு, எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் பெற்று, மறுநாள் தாக்கல் செய்வதாகச் சொன்னது.
வழக்கு 23.05.2012 அல்லது 30.05.2012 எனத் தள்ளி வைக்கப்படாமல், 17.05.2012 என மறுநாளே போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும், தோழர் குமாரசாமி கலந்து கொள்ளும் 17.05.2012 அன்றைய கூட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. அந்நிகழ்ச்சி 18.05.2012க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கறிஞர் ரமேஷ் சென்னை திரும்பினார். 17.05.2012 அன்று தோழர்கள் குமாரசாமி, ரமேஷ், குருசாமி மதுரையிலேயே இருந்தனர்.
வழக்கு மீண்டும் 17.05.2012 அன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு பழைய பாட்டையே பாடியது. சென்சிடிவ், சட்டம் ஒழுங்கு எனத் திரும்பவும் சொன்னது. உங்கள் பெரிய படையைக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி சொன்னார். கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, இடம் போன்றவற்றில் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர நமக்குச் சொல்லப்பட்டதை, நாம் ஏற்றுக் கொண்டோம்.
தேதியை மாற்ற அரசு கோருவதை நாம் ஏன் ஏற்கக் கூடாது என நீதிபதி கேட்டார். அதற்கு அரசு தரப்பில் ஒரே ஓர் நியாயமான காரணம் சொன்னாலும் ஏற்பதாகச் சொன்னோம். அரசு தரப்பு, ஜ÷ன் மாதம் முதல் மின்சார நிலைமை சீர்படும் என மிகவும் வினோதமான ஒரு காரணம் சொன்னது. இந்தக் காரணம் ஏற்கத்தக்கதல்ல, நகைப்புக் குரியது என அனைவர்க்கும் தெரியும். பிறகு 17.05.2012 மாலை நீதிபதி, அனுமதி மறுப்பை ரத்து செய்தும், முந்தைய தீர்ப்புக்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், அரசியலமைப்புச் சட்ட 19ஆவது பிரிவு ஆகியவைப்படி மனுதாரர் தரும் புதிய மனுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், மனுதாரர் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்க வேண்டும் எனவும், காவல் துறை பொருத்தமான இடத்தில் அனுமதி வழங்கலாம் எனவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வழக்கு எண். 6785/2012அய் முடித்து வைத்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு நகல் 18.05.2012 பெறப்பட்டு, 19.05.2012 புதிய மனு கொடுக்கப்பட்டு, 23.05.2012 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் 30.05.2012 நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அரசும் காவல்துறையும் நீதிமன்றக் கோடை விடுமுறை நாட்களில், அடிப்படை உரிமைகளுக்கு விடுமுறை கொடுக்கப் பார்த்தார்கள். முந்தைய வழக்குகளில் எல்லாம், நீதிமன்றம் அன்றாடம் இயங்கும் நாட்களிலேயே கூட, நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி கோரிய தேதிக்குப் பின்புதான் அனுமதி கிடைத்தது. ஆனால், விடுமுறைக் காலத்தில், இரண்டே நாட்களில், நிகழ்ச்சிக்கு முன்பாகவே, கட்சி அனுமதியைப் பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், மக்கள் மன்றத்திலும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பை எடுத்துச் செல்ல, இகக(மாலெ) முடிவு செய்துள்ளது. அந்தத் திசையில், 30.05.2012 கருத்தரங்கம் அமையும் விதம், தமிழகத்தின் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒத்துழைப்பு தர வேண்டுமென அழைக்கிறோம்.

சிறப்புக் கட்டுரை

எப்போது முடியும் இந்த மறைமுக யுத்தம்?
எப்போது நிற்கும் ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம்?


என்.கே.நடராஜன்

2008ல் இலங்கை கடற்படையிடம் சரணடைந்த தனது மகனை தேடுகிறார் முல்லைத்தீவைச் சேர்ந்த சரோஜாதேவி. கொழும்புவில் மே 19 அன்று மூன்றாவது வெற்றி தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, மே 18 அன்று, முன்னாள் விடுதலைப் புலிகளை மறுவாழ்வு மற்றும் பயிற்சிக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ராஜபக்சே ஒப்படைத்தார். அந்த காணொளிக் காட்சியில் தன் மகனைப் போன்ற ஒருவர் இருப்பதாக செய்தி கிடைக்க, ஓடோடிச் சென்ற சரோஜாதேவிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. சரத் பொன்சேகா விடுதலையாகிவிட்டார். ஆனால், சரோஜாதேவி போன்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களை இயங்க வைக்கிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. 30 ஆண்டு கால தீவிரவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக பேரினவாத சிங்கள அரசு கொண்டாடும் போது போரில் அனைத்தையும் இழந்த இலங்கை தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் போர் தடுப்பு முகாம்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் மீள்குடியேற்றம் நீள்கிறது. முட்சிறை வாழ்க்கை தொடர்கிறது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ‘இது ராணுவத்தின் பூமி’ எனப் பெயர்ப் பலகைகள் மாட்டப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. ராணுவ முகாம்கள் நிலை கொள்கின்றன. தமிழர்கள் அதிகம் இருந்தால்தானே தனிஈழம் கேட்பார்கள்? ராணுவம் கையகப்படுத்தும் இடங்களில் சிங்களர் குடியிருப்புகள் எளிதாக வந்து அமைகின்றன. சிங்கள குடும்பங்களின் எண்ணிக்கை தமிழர் வாழும் பகுதிகளில் அதிகரிக்கிறது.
உயிர்களை இழந்து உறவுகளை பறி கொடுத்து அங்கங்களை இழந்து சொந்த நிலத்திற்கு மீண்டவர்களின் வாழ்க்கை மிகவும் கொடூரமானது. அரசாங்கமும், ராணுவமும் நடத்துகிற பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள் இல்லை.  உலகம் முழுவதும், வடக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை உடனே வெளியேற்றக் கோரி, மீள்குடியேற்றம் கோரி ஜனநாயகக் குரல் மேலோங்கி வருகிறது.     
சில சர்வதேச சடங்குகள்
2005க்குப் பிறகு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் 5 கப்பல்கள் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளை அழிக்க வழங்கப்பட்ட ஆயுதங் களில் 40% அமெரிக்கா வழங்கியது என கியூபா குற்றம் சாட்டியது. 2009ல் மட்டும் பிரிட்டன் ரூ.700 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது என்று டாக்டர் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பிப்ரவரி 13, 2009ல் தெரிவித்தார். ஓர் இனப்படுகொலை நடக்க அனைத்து உதவிகளையும் செய்துவிட்டுத்தான் அய்நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் என்ற சடங்கு நடந்தேறியது.
போர் விமானம் பறக்க, ராணுவ வீரர்கள் அணி வகுக்க மகிந்த ராஜபக்சே வெற்றி விழா கொண்டாடுகிறார். விழாவில், ராஜபக்சே ஆணவமாக, ‘இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற முடியாது’ என்கிறார். கொழும்பு நகரில் வெற்றி விழா நடந்து கொண்டிருக்கும் போது, இலங்கை வெளி உறவு அமைச்சர் பெரீஸ் அமெரிக்க அரசின் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை வாஷிங்டனில் சந்திக்கிறார். வாஷிங்டனில், ஹிலாரி கிளிண்டன் ‘இலங்கை அரசின், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீள்இணக்க விசாரணைக் குழுவின் (ககதஇ) திட்டத்தை அமலாக்குவதற்கான விரிவான நடைமுறை மிகச் சிறந்தது’ என மகிழ்ச்சி அடைகிறார். நண்டுக்கு நரியை காவல் வைத்து எல்லாம் நலம் என்கிறார்கள். 1,46,679 தமிழர்கள் பற்றி எந்த விவரங்களும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று எல்எல்ஆர்சி முன்பு சான்று வழங்கிய மன்னார் ஆயர் சொல்கிறார். எல்எல்ஆர்சி எப்படி செயல்படும் என்பதை யாரும் விளக்க வேண்டியிருக்காது.
அமெரிக்கா, இந்தியா மூலம் இலங்கையை கட்டுக்குள் வைக்கப் பார்க்கிறது. அமெரிக்கா இந்தியாவை தெற்கு ஆசியாவின் பேட்டை ரவுடியாக்கப் பார்க்கிறது. ஒரு காலத்திலும், அமெரிக்கா, இந்தியா உதவி ஈழத் தமிழர்கள் விடுதலை பெற முடியாது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இலங்கை மீது யுத்த தந்திரரீதியான போட்டி இருக்கவே செய்யலாம். ராஜபக்சே அதைப் பயன்படுத்தலாம்.
இந்திய, தமிழக அரசுகளின் தொடர் துரோகம்
இந்திய அரசின் தொடர் நாடகத்தில் ஒரு காட்சியாக மீண்டும் ஒரு நாடாளுமன்ற குழு ஒன்று இலங்கைக்கு சென்றது. அதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பாஜகவின் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கினார். இடதுசாரித் தலைவர்களும் உடனிருந்தனர். பூச்செண்டுகள், புன்சிரிப்பு பரிமாற்றம், விருந்துகள், சில புகைப்படங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கையில் இருந்து திரும்பி வந்த நாடாளுமன்ற குழுவிடமிருந்து எதார்த்த விவரங்களை தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தனர். வந்தவர்கள் சொன்ன செய்திகளில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேறுவது, முட்சிறையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் மீள்குடியேற்றம், மறுவாழ்வு நடவடிக்கைகள், தமிழர்களின் சொந்த நிலங்களை மீட்பது போன்ற செய்தி களை விட, ‘தனிஈழத்தை இலங்கை தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை’ என்ற செய்தி தான் மேலோங்கியதாக இருந்தது. பாஜகவின் சுஷ்மா சுவராஜ் குரலும், மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் குரலும், காங்கிரஸ் குரல் போல் இருந்தன.
இந்திய, தமிழக அரசாங்கங்கள் இன்று வரை இலங்கைத் தமிழ்மக்களுக்கு துரோகத்தைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அன்று இலங்கை அரசாங்கத்துக்கு அதன் இடத்தைக் காட்ட வேண்டியிருந்தது. அதனால் புலிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் தந்தார்கள். சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ராணுவ எச்சரிக்கை வரை சென்றார்கள்.
இலங்கைத் தமிழர்கள் சார்பாக நிற்பதாகச் சொல்லி இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டார்கள். 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அந்த மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு அந்த பிராந்தியத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ், இலங்கையின் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவற்றில் எதுவும் நடக்காதபோது, புலிகள் ஆயுதங்களை துறக்க வேண்டும் என்பதும் நடக்கவில்லை. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை எந்த விதத்திலும் அமலாக்காத இலங்கை அரசாங்கம் பற்றி எந்தக் குரலும் எழுப்பாத இந்திய அரசாங்கம், எந்தப் புலிகளை தானே வளர்த்ததோ அதே புலிகள் மேல் பாய்ந்து தமிழர்களை சூறையாடியதைத் தானே உலகம் பார்த்தது.
2002ல் புலிகள் தனிஈழம் என்பதல்லாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் சுயாட்சி பற்றி பேசினர். போர் நிறுத்தமும் செய்தனர். தமிழ் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக வைத்திருப்பது, புலிகளை ஒழிப்பது என்பவற்றில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கும்போது, புலிகளின் விட்டுக் கொடுத்தல்கள் புறந்தள்ளப்பட்டன.
இந்தியாதான் பிராந்திய மேலாதிக்க சக்தி என்று இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது தெரிந்த பிறகு அந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவது இந்திய ஆட்சியாளர்களுக்கு இயல்பான முன்னுரிமையானது. ராஜீவ் காந்தி படுகொலை என்ற வசதியான காரணமும் கிடைக்க, அமெரிக்காவின் ஆசியும் துணைநிற்க, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க வெறிக்கு இலங்கை தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதம் பேயாட்டம் போடுகிறது.
கடைசியாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற குழு நாடகத்தில் அஇஅதிமுகவும் திமுகவும் இடம் பெற மறுத்துவிட்டார்கள். அதனால் அவர்கள் இலங்கைத் தமிழர் நலன் காப்பவர்கள் என்று தமிழ்நாட்டின், இலங்கையின் தமிழ் மக்கள் யாரும் நம்பவில்லை. நாடாளுமன்றக் குழு இலங்கை செல்வது ஒரு நாடகம் என்பதால் அதில் பங்கு கொள்ளவில்லை என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் சொல்வதும் ஒரு நாடகம்.
சிதைக்கப்பட்ட மார்புகள்... கொத்து குண்டுகளால் துண்டாகித் தெறித்துவிழுந்த கால்கள்... சில முண்டங்கள்... இலங்கை தெருக்களில் இறைந்து கிடக்கின்றன. ரத்த வாடை விலக இன்னும் பல தலைமுறை காலம் ஆகும். கருணாநிதி அந்தப் பிணங்களின் மீது அரசியல் நடத்தப் பார்க்கிறார். இரங்கற்பா ஏதும் இல்லாமல் தமிழின விடுதலை இயக்கத் தலைவனின் மரணம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, திமுக அங்கம் வகிக்கிற அய்முகூ தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உறுதியான ஆதரவு பெற்ற இலங்கையின் ராணுவத்தால், இலங்கை தமிழர்களுக்கென போராடிக் கொண்டிருந்த இயக்கம் ரத்த வெள்ளத்தில்  மூழ்கடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருப்பவர்கள் மீது மறைமுகப் போர் நடக்கும் போது, இனஅழிப்பு திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறபோது, கருணாநிதி தமிழ்நாட்டில் ‘தனிஈழம்’ கோரும் அமைப்பைக் கூட்டுகிறார்.
எப்போது முடியும் இந்த மறைமுக யுத்தம்?
எப்போது நிற்கும் ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம்?
‘முள்ளிவாய்க்கால் படுகொலையும் இந்தியாவின் மத்திய மாநிலங்களின் பழங்குடி மக்கள் வேட்டையும் இம்மாதிரியான போராட்டங்களை அடக்குவதற்கான வெளிப்படையான சாட்சியங்கள்... அதுபோலவே கூடங்குளத்தின் சுற்றி வளைப்பையும் காண முடியும்.... சுருங்கச் சொன்னால் மக்கள் எழுச்சிகள் உருவாகக் காரணமாக இருந்து, ஓர் எல்லை வரை வளர்ச்சிக்கு கொண்டு செல்வது, பின்னர் அதை அரச பயங்கரவாதம் வழியாக உள்ளடங்கச் செய்வது என எல்லாம் உலகமயம்.’ (காலச்சுவடு இதழில் பா.செயப்பிரகாசம்). எழுச்சி உள்ளடக்கப்படுவதும் தற்காலிகமானதே. தற்காலிகம் என்பதன் கால அளவு, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சற்று நீண்டதாகக் கூட இருக்கலாம். எந்த ஓர் இனமும் அடிமையாக தொடர உறுதி பூண்டு விடுவதில்லை.
புலிகளை விமர்சிக்கிறவர்கள் இன்னும் தங்கள் வாதங்களை நிறுத்திக் கொள்ளவில்லை. சாகடிக்கப்பட்டுவிட்ட பாம்பை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரசு தன்னை பாதுகாத்துக் கொள்ளப் போர் நடத்தும்போது அது எப்படி நியாயமற்றது ஆகும் என்ற வாதங்கள் எழும்போது, இது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைமைகளுக்கு சிங்களப் பேரினவாதம் முழுப்பொறுப்பு ஏற்பதில் இருந்து தள்ளுபடி அளிப்பதாகவே இருக்கும்.
சானல் 4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ (நழ்ண்ப்ஹய்ந்ஹ’ள் ந்ண்ப்ப்ண்ய்ஞ் ச்ண்ங்ப்க்ள்) காணொளி ஒளிபரப்பு உலகெங்கும் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சீற்றம் உருவாக்கியது. இனவாத ஒற்றைப் பரிமாணம் கொண்டுள்ள சிங்கள மக்களின் ஒரு சிறிய பிரிவினர் மத்தியில் கூட இது அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ காணொளி சானல் 4 தொலைக்காட்சி மூலம் அம்பலம் ஏறியதில் சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு பெரிய பங்கு உண்டு.
‘1987 - 1990 காலகட்டத்தில் ஏறத்தாழ 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன. டயர் போட்டு எரிக்கப்பட்டன. எங்களுக்கெனவும் மனிதப் புதைகுழிகள். கடத்தல்கள்’ என்கிறார் நாடு கடத்தப்பட்ட சிங்கள எழுத்தாளர் பாஷண அபேவர்த்தன. இலங்கை அரசாங்கம் எப்படியெல்லாம் போராட்டத்தை ஒடுக்கும் என்று சிங்கள மக்களும் அனுபவித்தவர்கள்தான். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் இன்று எழுவதுபோல், சிங்கள பேரினவாத அரசாங்கம் நடத்தும் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான கேள்வி சிங்களர் மத்தியில் இருந்தும் எழும். ஏற்கனவே எழுந்தும் உள்ளது.
தோற்றத்துக்குக் கூட எந்தப் பாசாங்கும் இன்றி பேரினவாத ஒடுக்குமுறை அரசியல் நடத்துகிற இலங்கை அரசாங்கத்திடம் எதிர்ப் பார்க்க ஈழத்தமிழர்க்கு இனி ஏதுமில்லை.  இரண்டாம்தர வாழ்வை விட எதிர்ப்பும் மரணமும் மேல் என்று அவர்கள் தீர்மானிக்கும் கணம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். அதுவரை, அவர்கள் கால் பதித்து நின்ற சொந்த நிலம் வேண்டும். வாழ்ந்த வீடு வேண்டும். சுவாசிக்க ராணுவம் படாத சுதந்திரக் காற்று வேண்டும். செய்த தொழில் வேண்டும். பிள்ளைகளுக்கு பள்ளிகள் வேண்டும். கும்பிடக் கோயில்கள் வேண்டும்.
‘தனி ஈழமா’ ‘ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் சம உரிமையா’ என்பது பற்றி வாக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தலாம். அதற்கெல்லாம் முன்பாக முள்வேலி முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்த உட னடி அவசிய முன்னகர்த்தல்கள் சக்தி வாய்ந்த இயக்கங்களை கோருகின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இது விசயத்தில், அமெரிக்க, இந்திய, தமிழக ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து விலகி சுதந்திரமாக இயக்கம் காண வேண்டும்.

மூன்றாவது முறையாக
மூர்ச்சித்து தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளை கண்டுபிடிக்க இயலவில்லை
அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்
அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.
எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொளுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது நிறைந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.
வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’
விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.
இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.
தமிழ்நதி
நன்றி: தீராநதி மே 2012


அமைப்பு

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுவோம்

மாவோ, 1937 செப்டம்பர் 7

நாம் செயலூக்கமான கருத்தியல் போராட்டத்திற்காக நிற்கிறோம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு புரட்சியாளரும் இந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும். ஆனால், தாராளவாதம் கருத்தியல் போராட்டத்தை நிராகரிக்கிறது. கோட்பாடற்ற அமைதிக்காக நிற்கிறது. இவ்வாறு அழுகிப்போன, வாடிக்கையான அணுகுமுறை ஒன்றைத் தோற்றுவித்து, கட்சியிலும் புரட்சிகர அமைப்புக்களிலுமுள்ள சில குழுக்களிடத்திலும் தனி நபர்களிடத்திலும் அரசியல் சீரழிவை ஏற்படுத்துகிறது.
தாராளவாதம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.
ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவானபோதும், நீண்டகாலம் பழகியவர், ஒரே ஊரைச் சேர்ந்தவர், ஒரே பாடசாலையில் படித்தவர், நெருங்கிய நண்பர், அன்புக்குரியவர், பழைய கூட்டாளி அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால், அவருடன் கோட்பாட்டுரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும், நட்புறவுக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது; அல்லது நல்ல உறவுகளை வைத்திருப்பதற்காக, விஷயங்களுக்கு முழுமையான தீர்வு காண்பதற்குப் பதில் அவற்றை லேசாகத் தொட்டுவிட்டு விட்டுவிடுவது. இதன் விளைவாக அமைப்புக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகிறது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.
அமைப்பில் தனது யோசனைகளை ஊக்கமாய் முன்வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது, மக்களின் முகத்திற்கு நேராக ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் பேசுவது. இது இரண்டாவது வகை.
விஷயங்களை, தன்னை நேரடியாகப் பாதிக்காவிட்டால், அவற்றை நழுவிச் செல்லவிடுவது; ஒரு விஷயம் தவறு என்பது முழுமையாகத் தெரிந்திருந்தும் அதைப்பற்றி முடிந்த அளவு சொற்பமாகப் பேசுவது, குறை கூறப்படாமல் தப்புவதற்காக ஆபத்தில்லாத முறையில் பாதுகாப்பாய், உலகமறிந்தவர் போல நடந்து கொள்வது, இது மூன்றாவது வகை.
கட்டளைகளுக்குப் பணிந்து ஒழுகாமல் தமது சொந்த அபிப்ராயங்களுக்கு பெருமைப்படத்தக்க இடத்தைக் கொடுப்பது, அமைப்பிடமிருந்து தனிச்சிறப்புமிக்க சலுகை கோருவது, ஆனால் அதன் கட்டுப்பாட்டைப் புறக்கணிப்பது. இது நாலாவது வகை.
ஒற்றுமைக்காக அல்லது முன்னேற்றதுக்காக அல்லது வேலையை முறையாகச் செய்து முடிப்பதற்காக அல்ல. மாறாக, தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பதற்காக, சண்டைகள் பிடிப்பதற்காக, சொந்த விரோதங்களைக் கொட்டித் தீர்ப்பதற்காக, அல்லது பழிவாங்குவதற்காக மட்டுமே தவறான கருத்துக்களுக்கெதிரான போராட்டத்திலும் விவாதத்திலும் ஈடுபடுவது, ஐந்தாவது வகை.
தவறான கருத்துக்களை மறுத்துரைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பது, எதிர்ப்புரட்சியாளர்கள் குறிப்பிட்டுச் சொல்வதைக் கூட அமைப்பிற்கு அறிவிக்காமல் கேட்டுக் கொண்டிருப்பது. ஆனால் மாறாக ஒன்றுமே நடக்காததுபோல் அவற்றை அமைதியாக எடுத்துக் கொள்வது, இது ஆறாவது வகை.
பரந்துப்பட்ட மக்களிடையே இருந்தும், பிரச்சாரம் செய்யாமலும் கிளர்ச்சியில் ஈடுபடாமலும் இருப்பது; அல்லது கூட்டங்களில் பேசாமல் அல்லது அவர்கள் மத்தியில் ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது; மக்கள் மீது பாராமுகமாகவும், அவர்கள் நல்வாழ்வில் அக்கறை இல்லாமலும், தான் ஒரு சாதாரண ஆள்போல நடந்து கொள்வது. இது ஏழாவது வகை.
ஒருவர் மக்களின் நலன்களை ஊறுபடுத்தக் கண்டும், ஆத்திரம் அடையாமல், அல்லது அவருக்கு அறிவுரை கூறாமல், அல்லது அவரைத் தடுக்காமல், அல்லது அவரிடம் நியாயம் காட்டி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது. இது எட்டாவது வகை.
ஒரு தெளிவான திட்டமோ அல்லது திசையோ இல்லாமல், அரைமனதுடன் வேலை செய்வது, கவனக் குறைவாகவும் தாறுமாறாகவும் வேலை செய்வது, ஒரு பூசாரியாய் இருக்கும் வரை மணியடித்துக் கொண்டே இருப்பது. இது ஒன்பதாவது வகை.
புரட்சிக்குத் தான் பெருஞ்சேவை செய்துவிட்டதாகத் தானே நினைத்துக் கொள்வது. பெரும் அனுபவசாலி எனத் தனக்குத் தானே பெருமைப்படுவது. உயர்ந்த கடமைகளுக்குத் தகுதியில்லாமல் இருக்கும் அதே வேளையில், சிறிய பணிகளை அவமதிப்பது, வேலையில் ஆர்வமின்றியும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது. இது பத்தாவது வகை.
தன் சொந்தத் தவறுகளை அறிந்தும் அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன் மீது தாராள மனோபாவத்தை மேற்கொள்வது. இது பதினோராவது வகை.
நாம் இதற்கு மேலும் குறிப்பிட முடியும். ஆனால் இந்தப் பதினொன்றும் பிரதான வகைகள். இவைகள் அனைத்தும், தாராளவாதத்தின் வெளிப்பாடுகள், ஒரு புரட்சிகரக் கூட்டு வாழ்வில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் ஒன்று. இது ஒற்றுமையை அரித்துத் தின்னுகின்ற, ஒன்றிணைப்பைச் சீர்குலைக்கின்ற, வேலையில் பாராமுகத்தை உண்டாக்குகின்ற, வேற்றுமையை விதைக்கின்ற, ஓர் அரித்துத் தின்னும் விஷயமாகும். அது புரட்சிகர அணிகளிலுள்ள கட்டுக்கோப்பான அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடுகிறது. கொள்கைகள் முழுமையாய் அமல்படுத்தப்படுவதை அது தடுக்கிறது. கட்சியின் தலைமையிலுள்ள மக்களிடமிருந்து கட்சி அமைப்புக்களைப் பிரித்துவிடுகிறது. இது மிகத் தீமையான ஒரு போக்காகும்.
குட்டி முதலாளித்துவக் சுயநல மனோபாவத்திலிருந்து தாராளவாதம் தோன்றுகிறது. அது சொந்த நலனை முதலாவது இடத்திலும் புரட்சியின் நலனை இரண்டாவது இடத்திலும் வைக்கிறது. இதுவே அரசியல் அமைப்பு துறைகளில் தாராளவாதத்தைத் தோற்றுவிக்கிறது.
தாராளவாதிகள் மார்க்சீயக் கோட்பாடுகளை வெறும் வறட்டுத் தத்துவமாகக் கருதுகிறார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த அல்லது முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லை. தமது தாராளவாதத்திற்குப் பதிலாக, அதன் இடத்தில் மார்க்சீயத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை. இந்த நபர்களிடம் மார்க்சீயம் இருக்கும் அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சீயம் பேசுகின்றனர். ஆனால் தாராளவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். பிறருக்கு மார்க்சீயத்தையும் தமக்கு தாராளவாதத்தையும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்து இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.
தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு. அது மார்க்சீயத்துடன் அடிப்படையில் மோதுகிறது. அது எதிர்மறைத் தன்மையுடையது என்பதோடு விரோதிக்கு உதவி செய்யும் புறநிலையான விளைவையும் கொண்டிருக்கிறது. இதனால்தான் நமக்கிடையில் தாராளவாதம் நிலைநிறுத்தப்படுவதை விரோதி வரவேற்கிறான். இத்தகைய இயல்புடையதாக இருப்பதால், புரட்சியின் அணிகளில் தாராளவாதத்திற்கு இடமிருக்கக் கூடாது.
எதிர்மறை உணர்வைக் கொண்ட தாராளவாதத்தை வெற்றி கொள்ள, நாம் ஆக்கபூர்வமான உணர்வைக் கொண்ட மார்க்சீயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கம்யூனிஸ்ட் ஒருவர் பரந்த மனம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் உறுதியும் ஊக்கமும் உடையவராக இருக்க தனது சொந்த நலன்களைப் புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராகச் சளையாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு, கட்சியின் கூட்டு வாழ்க்கையை உறுதிப்படுத்தி, கட்சிக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலுள்ள பிணைப்பைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனி நபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும் தன்னை விடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருத முடியும்.
நம்மிடையே சிலர் காட்டும் தாராளவாதப் போக்கை எதிர்க்க, விசுவாசமிக்க, நேர்மையான, ஊக்கம் நிறைந்த, நெஞ்சு நிமிர்ந்த கம்யூனிஸ்ட்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமது கருத்தியல் அரங்கிலுள்ள கடமைகளில் இதுவும் ஒன்று.

திரைப்படம்

வழக்கு எண். 18/9
கதை உணர்த்தும் நிஜ வாழ்க்கை


ஜெயசிறீ

வழக்கு எண். 18/9 திரைப்படத்திற்கு ஆனந்தவிகடன் 55/100 மதிப்பெண் தருகிறது. குழுதம் புகழ்கிறது. தீக்கதிர், கற்பனையில்லை நிஜம் என்கிறது. ஆங்கிலப் பத்திரிகைகள் 5 நட்சத்திர மதிப்பு அளிக்கின்றன. ஜோதி காவல் ஆய்வாளரின் முகத்தில் ஆசிட் ஊற்றும் காட்சியில், திரையரங்கப் பார்வையாளர்கள், நீதி வழங்கப்பட்டதாகக் கை தட்டுகிறார்கள். ஏதோ ஒரு வகை நிம்மதி அடைகிறார்கள்.
கோடி கோடியாய்க் கொட்டி எடுக்கப் படாத படம். எந்திரத்தனமான விளம்பரம் ஏதுமில்லாத படம். சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி போன்றவர்கள் நடிக்காத படம். ஆனால், தமிழ்த் திரை உலகில் அலை அடிக்க வைத்துள்ளது. இது எப்படி நடந்தது? எதனால் நடந்தது? இதற்கும் சமகாலத் தமிழக அரசியல் பொருளாதாரத் திற்கும் என்ன தொடர்பு உள்ளது?
கதையும், கதையில் வருபவர்களும், பின்னணிச் சம்பவங்களும், நமக்குப் பக்கத்தில் நெருக்கமாய் உள்ளன. பார்க்க முடியும். கேட்க முடியும். உணர முடியும். ரத்தமும் சதையுமாய் மக்கள் தமது துயரக் கதைகளுடன் சீற்றத் துடன் விருப்பங்களுடன் நடமாடுகிறார்கள்.
வீட்டு வேலை பார்க்கும் பெண் ஜோதி. கிட்டத்தட்ட வசனமே பேசாமல், பெரும்பான்மைக் காட்சிகளில் ஒரு சாதாரண பாவாடை சட்டையுடன் வலம் வருகிறார். கந்துவட்டிக் கொடுமை, மூலதன ஊடுருவலால் விவசாய விளைநிலங்கள் சுருங்குவது, கொத்தடிமை முறை ஆகியவற்றைக் கொடுங்கனவுகளில் அல்லாமல், சிறுவனிலிருந்து  இளைஞனாக மாறும்போது நிஜ வாழ்க்கையில் அனுபவித்த வேலுச்சாமி, சாலையோர உணவகத்தின் ஒரு பணியாளராக, எப்போதும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் திரைப்படம் நெடுக நடமாடுகிறார். ஜோதியின் தாயும் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண். கழுகிடம் இருந்து குஞ்சைக் காக்கும் தாய்க் கோழியாக, சென்னையின் அடித்தட்டு மக்கள் மொழியில் தன் வலிகளை வேதனைகளை சவால்களைப் பேசுகிறார்.
வேலுச்சாமி என்ற சாதாரண இளைஞன் ஜோதி என்ற சாதாரண இளம் பெண்ணை நேசிக்கிறான். அரசியல், சாதி தொடர்புடைய ஒரு கல்வி முதலாளியின் மகன், தீய செயல்களுக்கு இயல்பாகப் பழக்கமான பின், ஆணாதிக்க வக்கிரத்துடன், தான் பழகிய ஒரு நடுத்தர வர்க்கப் பெண் முகத்தின் மீது ஆசிட் ஊற்ற முயற்சிக்கிறான். எதிர்பாரா விபத்தாக ஜோதியின் முகம் சிக்கித் தீய்ந்து போகிறது. அரசியல், சாதி செல்வாக்கில் செயல்படும் காவல் ஆய்வாளர் குமாரவேல், குற்றம் செய்தது யார் எனத் தெரிந்தும், வேலுச்சாமியிடம் நயவஞ்சகமாகப் பேசி, ஜோதியின் சிதைந்த முகத்தைக் குணப்படுத்தலாம் என நம்ப வைத்து, குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து தண்டனை பெற வைக்கிறார். குமாரவேலின் வஞ்சகம், வேலுச்சாமியின் நேசம் பற்றிய உண்மை தெரிந்த ஜோதி, குமாரவேல் முகத்தில் ஆசிட் ஊற்றுகிறார்.
பீகாரின் ரூபம் பதக் என்ற பெண் தன்னைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினரை அவரது வீட்டிலேயே பலர் முன் கொன்ற சம்பவம் உடனடித் தூண்டுதலாகவும், இடதுசாரி இயக்கப் பற்று, தனது தந்தை, ஏழைகளைப் பணக்காரர் கள் அவமரியாதை செய்வதை சும்மா விடக் கூடாது என்று போதித்தது, ஜோதி தானே நீதி வழங்கியதற்கு உந்துதல் எனவும் திரைப்படம் சுட்டுகிறது. தந்தை பெயர் பாலன், அவர் வீட்டில் லெனின் பகத்சிங் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் இருப்பது போன்றவை போகிற போக்கில் வருகிற செய்திகள்.
மாபெரும் கலைஞரான பீத்தோவனே, ‘இந்த உலகில் கலைக்கான ஒரு மாபெரும் களஞ்சியம் இருக்க வேண்டும். படைப்பாளி அங்கு சென்று தனது படைப்புக்களைச் சேர்க்க வேண்டும். பிறகு, தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இப்போதோ, படைப்பாளி பாதி வர்த்தகராகவும் இருக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?’ என எழுதினார்.
தமிழக அறிவுலகில் நிலவும் அவலச் சூழலில், வழக்கு எண் 18/9, சமகாலச் சமுதாயம் அறிவுக்கு மாறானது, ஒழுக்கக் கேடானது எனச் சொல்வது ஆரோக்கியமானதே.
அநீதி கண்டு அறச்சீற்றம், வாழ்க்கை மீது சாமான்ய மனிதர்கள் மீது பற்று, பரிவு, அக்கறை, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ள படம், நிச்சயமாய், வரலாறு நெடுகத் தொடரும் அடக்குமுறை நிரந்தர வெற்றி பெற முடியாது, அவற்றையும் தாண்டி, சாமான்ய மக்கள் வாழ்வார்கள், உயிர்த்துடிப்புடன் இருக்கும் மானுடம் வெல்லும் என, உரத்த பிரச்சாரமாக இல்லாமல், உள்ளீடான செய்தியாகச் சொல்கிறது.
அந்த வகையில், தமிழ்த் திரைப்படங்களில், இது ஒரு மாறுபட்ட நல்ல முயற்சியாகும். திரைப்படம் திரைக்கதை, தமிழக மக்களின் நிஜ வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள தால்தான், அலைகளை உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள், ஜோதியாக வேலுச்சாமியாக சென்னையில், கோவையில், மதுரையில், திருச்சியில், திருப்பூரில், கரூரில், ஈரோட்டில், தமிழகத்தின் சிறு பெரு மற்றும் அரை நகரங்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்காலத் தமிழ் சமூகத்தை அதன் அரசியல் பொருளாதாரத்தை வழக்கு எண். 18/9 மூலம் நாம் காண முடிகிறது. ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் 2023படி, 2023ல் 2 கோடி தமிழர்கள் வேலை செய்து பிழைப்பார்கள். அவர்கள் ஒரு திறன் பிரமிட்டில் (ஸ்கில் பிரமிட்) மூன்று அடுக்குகளாக இருப்பார்கள்.
திரைப்படத்தில் வருகிற ஆர்த்தி போன்ற மேல் நோக்கி முன்னேறும் நடுத்தர வர்க்க, கான்வென்ட் படிப்பு இளம் பெண்கள், 2023ல் அதிஉயர் திறன் பெற்றவர்களாக 20 முதல் 40 லட்சம் பேர் இருப்பார்கள். நடுநிலை, இளநிலை கல்வி பெற்றவர்கள் 68 முதல் 78 லட்சம் பேர் இருப்பார்கள். கடைசி அடுக்கில் திறன் ஏதும் இல்லாதவர்கள் (அன்ஸ்கில்ட்) 1.2 முதல் 1.3 கோடி வரை இருப்பார்கள். புரட்சித் தலைவியின் கனவில் ஜோதி, வேலுச்சாமி போன்றவர்கள் 2023ல் 1.3 கோடி பேர் வரை தமிழகத்தில் இருப்பார்கள். இப்போது தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி. 2023ல் 8 கோடி என்றால், இல்லப் பணியாளர்கள், சாலையோர கடைப் பணியாளர்கள், அங்காடித் தெருக்களில், வேலை செய்பவர்கள், முறைசாரா சேவைத் தொழில்கள் வர்த்தகத்தில் இருப்பவர்கள் 2 கோடியைத் தாண்டுவார்கள். (முதல்வர் கணக்குப்படி) எவ்வளவு மோசமான கொடுங்கனவு?
இன்றைய தமிழகத்தில் எவ்வளவு ஜோதி எவ்வளவு வேலுச்சாமி இருப்பார்கள்? 2009ல் வெளியான ஆய்வொன்றின்படி நாடெங்கும் 9 கோடி இல்லப் பணியாளர்கள் உள்ளனர். (தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2004 - 2005 47.5 லட்சம் என்கிறது). தமிழ்நாட்டில் அவர்கள் எண்ணிக்கை 22 லட்சம் என்றும் சென்னையில் 7 லட்சம் என்றும் விவரங்கள் சொல்கின்றன. நடைபாதை வியாபாரத்தின் மூலம் பிழைப்பவர்கள் 3 கோடியே 95 லட்சம் பேர் நாடெங்கும் உள்ளனர் என்றும் ஆய்வறிக்கைகள் சொல்லும் போது அரசு 1 கோடி பேர் என்கிறது. தமிழகத்தில் 50 லட்சம் பேர் நடைபாதை வியாபாரத்தின் மூலம் பிழைக்கிறார்கள்.
வேலுச்சாமி நடைபாதையில் உறங்கி, கட்டணக் கழிப்பிடம், குளியலறையைப் பயன்படுத்துகிறார். நடைபாதையில் வாழவும், தள்ளுவண்டி உணவக உரிமையாளர் காவல் துறைக்கு மாமூல் தர வேண்டும். ஜோதியும் நெஞ்சில் ஈரமுள்ள ரோசியும் எங்கு வாழ்கிறார்கள்? சென்னை சேரிகளின் பொந்து வீடுகளில். இந்த பூமியும் அந்த சாமியும் சிரிக்கும் விதம், அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசை வைத்து, பொன்னான உலகென்றும், நூறாண்டு சாத னைகளை ஓராண்டில் முடித்துவிட்டதாகவும் துதிபாடுகிறார்கள். ஜோதியின் வேலுச்சாமியின் சிருங்காரச் சென்னை பற்றி, சேரிகளின் சவால் என்ற தலைப்பில் அய்நாவின் மனிதக் குடியிருப்புக்கள் திட்டம் சொல்வதில் இருந்து பார்ப்பது பொருத்தமானது. ‘நகரங்கள், வளர்ச்சி மற்றும் வளமையின் குவிமய்யமாக இருப்பதற்கு மாறாக, திறன்கள் இல்லாத, பாதுகாக்கப்படாத, குறைந்த கூலி பெறும், முறைசாரா சேவைத் தொழில்கள் வியாபாரம் ஆகியவற்றில் பணியாற்றும் ஓர் உபரி மக்கள் தொகைக்கான குப்பைக் கூடங்களாக உள்ளன’.
அரசியல் பொருளாதாரத்தில், உபரி மக்கள் தொகை, உபரி மதிப்பு என்ற சொற்களுக்கு அடிப்படையான முக்கியத்துவம் உண்டு. உபரி மதிப்பு என்பது முதலாளித்துவச் சுரண்டலால் உறிஞ்சப்படும் லாபம். உபரி மதிப்பு - லாபம் குறையாமல் கிடைக்க, முதலாளித்துவம் பண்டங்களையும் சேவைகளையும் பிரும்மாண்டமாய் மறுஉற்பத்தி செய்வது போல், உபரி மக்கள் தொகையையும் பிரும்மாண்டமாய் மறுஉற்பத்தி செய்கிறது.
சில விவரங்களை முதலில் பார்த்துவிட்டு இது பற்றி மார்க்ஸ் சொன்ன விஷயங்களைக் காணலாம். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (அய்எல்ஓ) கணக்குப்படி 1980ல் இருந்து 2007 வரை உலகளாவிய தொழிலாளர் எண்ணிக்கை 193 கோடியில் இருந்து 310 கோடியாக உயர்ந்துள்ளது. 73% தொழிலாளர்கள் வளரும் நாடுகளில் உள்ளனர். 40% பேர் சீனாவில், இந்தியாவில் உள்ளனர். எண்ணிக்கை பெருக்கத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. விவசாயிகளாக இல்லாமல் செய்தல். சிறு வீத விவசாய அழிப்பு. விளை நிலங்கள் சுருங்குவது. (வேலுச்சாமியின் பூர்வ கதை) முதலாளித்துவ வளர்ச்சியால், முதலாளித்துவ வளர்ச்சிக்காக நகர்ப்புற சேரிகள் பெருக்கம்.
2. முதலாளித்துவ முகாமில் சிதைவுண்ட (முன்னாள்) சோசலிச முகாம் இணைவு.
அய்எல்ஓவின் 2011 கணக்குப்படி, உலகின் செயலூக்கமான தொழிலாளர் பட்டாளம் 140 கோடி. சேமப்பட்டாளம், உபரி மக்கள் தொகை 240 கோடி பேர்.
முதலாளிகளும் தொழிலாளிளும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலாளிகள் தமக்குள் நடக்கும் போட்டியில் வெற்றி பெற புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பார்கள். மறுபுறம், தொழிலாளர் கால்களில், வேலையில்லாதோர், தொழில்துறை சேமப்பட்டாளம், உபரி மக்கள் தொகை என்ற இரும்புக் குண்டைக் கட்டி விடுகிறார்கள்.
ஜெயலலிதா, தமிழ்நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு 2023ல் ஜோதி, வேலுச்சாமி போன்ற 2 கோடி பேர் வேண்டும் என ஏன் சொல்கிறார் என்பதற்கு, மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ள விளக்கத்தில் பதில் இருக்கிறது.
‘ஆனால் ஓர் உபரி உழைக்கும் மக்கள் தொகை, ஒரு முதலாளித்துவ அடிப்படையில் செல்வத்தின் வளர்ச்சி அல்லது திரட்சியின் ஓர் அவசியமான விளைபொருளாக இருக்குமானால், எதிர்மறையாக இந்த உபரி மக்கள் தொகை முதலாளித்துவ திரட்சியின் நெம்புகோலாக இருக்கும், இல்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் இருத்தலுக்கான ஒரு நிபந்தனையாக இருக்கும். மூலதனம் தன் சொந்த செலவில் ஊட்டி வளர்த்ததுபோல், முழுமுற்றூடாக மூலதனத்திற்கு சொந்தமான, ஒரு தூக்கி எறியக்கூடிய தொழிற்துறை சேமப்பட்டாளத்தை அது உருவாக்குகிறது. மக்கள் தொகையின் நிஜமான அதிகரிப்பின் எல்லைகளில் இருந்து சுதந்திரமாக, அது, மூலதனத்தின் சுயவிரிவாக்கத்தின் மாறும் தேவைகளுக்காக, எப்போதும், சுரண்டலுக்கு தயாரான ஒரு மக்கள் திரளைப் படைக்கிறது’.
‘ஒப்பீட்டுரீதியான உபரி மக்கள் தொகை சாத்தியமான எல்லா வடிவத்திலும் தன் இருத்தலைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி வேலை வாய்ப்பு மட்டுமே பெற்றிருக்கிற அல்லது முழுமையாக வேலை இல்லாமல் இருக்கிற காலத்தில் ஒவ்வொரு தொழிலாளியும் உபரி மக்கள் தொகையை சேர்ந்தவராக உள்ளார். அதற்கு, எப்போதும் மிதக்கிற, உள்உறைகிற (மறைந்துள்ள) அல்லது தேங்கியுள்ள என்ற மூன்று வடிவங்கள் உண்டு.’
‘நகரத்தை நோக்கிய இடைவிடாத ஓட்டம் என்பது கிராமப்புறத்தில் ஓர் இடைவிடாத உள்உறையும் (மறைந்துள்ள) உபரி மக்கள் தொகை இருக்கிறது என்பதை முன் அனுமானம் செய்கிறது. ஆகவே, விவசாயத் தொழிலாளி மிகக் குறைந்த கூலிக்கு தள்ளப்படுகிறார். எப்போதும் அவருடைய ஒரு கால் ஓட்டாண்டித்தனம் என்ற புதைச்சேற்றில் ஏற்கனவே நிற்கிறது.’
‘இறுதியில் ஒப்பீட்டு உபரி மக்கள் தொகையின் கடைசி வண்டல் ஓட்டாண்டித்தனம் என்ற வரம்பிலேயே வாழ்கிறது. ‘ஆபத்தான’ வர்க்கங்களை நாடோடிகள், குற்றவாளிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை நீக்கிவிட்டால் இந்த அடுக்கு மூன்று வகையினங்களை கொண்டுள்ளது. முதலடுக்கில் வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்களும் இரண்டாம் அடுக்கில் அநாதைகளும் ஓட்டாண்டி குழந்தைகளும் உள்ளனர். மூன்றாம் அடுக்கில் மனோதிடம் இழந்தவர்கள், உடைந்து போனவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் உடலுறுப்புக்களை இழந்தவர்கள், நோயுற்றவர்கள், விதவைகள் போன்றோர் உள்ளனர். ஒட்டாண்டித்தனம் செயலூக்கமான தொழிலாளர் வர்க்கப் பட்டாளத்தின் மருத்துவமனையாகவும் தொழில்துறை சேமப்பட்டாளத்தின் பிணச் சுமையாகவும் உள்ளது.’
‘சமூக செல்வம், செயல்படும் மூலதனம், அதன் வளர்ச்சியின் வீச்சும் சக்தியும் எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அதனாலேயே கூடவே முழு மூச்சூடான பாட்டாளி வர்க்க திரளும் உழைப்பின் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. அதனாலேயே தொழில்துறை சேமப்பட்டாளமும் அதிகரிக்கிறது. ஆனால், செயலூக்கமான தொழிலாளர் பட்டாளத்தின் அளவோடு ஒப்பிடுகையில் சேமப்பட்டாளம் அதிகரிக்கும்போது, ஓர் உறுதிப்படுத்தப்பட்ட உபரி மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. அதன் துயரம் அதன் உழைப்பின் சித்தரவதைக்கு தலைகீழ் விகிதத்தில் உள்ளது’.
‘ஒரு துருவத்தில் செல்வக் குவிப்பு என்பதனாலேயே, அதே நேரத்தில் அதன் எதிர் துருவத்தில், துயரத்தின், பாடுபடுதலின் வலியின், அடிமைத்தனத்தின், அறியாமையின், மிருகத்தனத்தின், மனஇழிவின் திரட்சியும் நிகழ்கின்றன’.
சமகாலச் சமூகத்தின் இந்த முரண்பாடுகளை, வழக்கு எண் 18/9 உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெளிப்படுத்துகிறது. திரைப்படம் எல்லாக் காலங்களுக்குமான முழுமுற்றூடான உண்மைகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது சமகால உணர்வை ஆழமாக வெளிப்படுத்தியதால், அடுத்து வரும் படைப்பு தலைமுறையினரின் உள்உந்துதல்களுக்கு நிரந்தர ஊற்றுக்கண்ணாக இருக்கும்.
சென்னையில், தமிழ்நாட்டில், இந்தியாவில் இந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைதான் அதிகாரத்தில், ஆணையில் உள்ளது. அதற்கு நாளும் பலியாகும் கோடிக்கணக்கானவர்களில்தான் ஜோதியும், வேலுச்சாமியும், உள்ளனர். காவல் ஆய்வாளர் குமாரவேல் போல் வஞ்சகமாக உதவுவதாக நடித்து தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து பெரு முதலாளிகளுக்கும் வசதிபடைத்தவர்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சேவை செய்பவர்கள்தான் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள். ஓநாய்கள் ஆடுகளின் நல்மேய்ப்பர்களாக நாடகமாட உதவுவதே, முதலாளித்துவ அரசியல்.
வருங்கால மானுடம் பற்றி, ‘தளைகளற்ற பிரமோதியஸ்’ என்ற ஷெல்லியின் கவிதை தரும் நம்பிக்கையோடு நம்மை இறுகப் பிணைத்துக் கொள்வோம்.
அருவருப்பூட்டும் முகத்திரை விழுந்துவிட்டது
மனிதன் இருக்கிறான்
செங்கோல் இன்றி
விட்டு விடுதலையாகி
வரம்புகள் இன்றி
ஆனால் மனிதனாக.
அவனோ சமத்துவமானவன்,
வர்க்கம், இனம், தேசம் ஏதுமற்றவன்.
பயபக்தி, வழிபாடு, ஆணை
இவற்றிலிருந்து விடுபட்டவன்
அவனே
தன்னை ஆளவல்ல அரசன்.


விண்ணில் பாதி மண்ணில் பாதி

காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் பெண்கள் விரோத பாகுபாட்டுக்கு எதிராக
முற்போக்கு பெண்கள் கழகம் நாடு தழுவிய இயக்கம்


மே 21 முதல் ஜுன் 5 வரை

அன்பு சகோதரிகளே,
நமது சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து அனைத்துவிதமான வன்முறையையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறார்கள். ஆனால், நாம் நீதி கேட்கும்போது, அரசுகளோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ, நமது உரிமைகளை பாதுகாக்கின்றனவா? பெண்களுக்கு நீதி வழங்குகின்றனவா? அல்லது, அவை எப்போதும், நமது சமூகத்தில் மேலோங்கியிருக்கிற பெண்களுக்கு எதிரான தப்பெண்ணங்களை பிரதிபலிக்கின்றனவா? பெண்கள் காவல்துறையை, அரசாங்கங்களை நீதிமன்றங்களை உதவி நாடி அணுகும்போது, அவர்களுக்கு கிடைப்பது ஆழமான அநீதியே என்பது உண்மையல்லவா?
• சமீபத்தில், பாலியல் வன்முறை பற்றி புகார் செய்யும் ஒரு பெண் பாலியல் தொழிலாளி; ஏனென்றால், நன்னடத்தை கொண்ட பெண்கள், பாலியல் வன்முறைக்கு உண்மையிலேயே உள்ளாகியிருந்தால் வெளிப்படையாக புகார் செய்யமாட்டார்கள் என்று டில்லி - தேசிய தலைநகர பிராந்தியம் பகுதியின் 17 மூத்த காவல்துறை அதிகாரிகள் சொன்னது காமிராவில் சிக்கியது.
• சில மாதங்கள் முன்பு, ஆந்திராவில் காவல்துறை துணைத் தலைவர் பெண்கள் ஆண்களைத் தூண்டும்படி உடையணிவதுதான் பாலியல் வன்முறைக்குக் காரணம் என்றார்.
• மேற்குவங்கத்தில், பாலியல் வன்முறை புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசினர்; பிறகு, மாநில முதலமைச்சரும், ஒரு மூத்த அமைச்சரும் அந்தப் பெண் பொய் சொல்வதாகச் சொன்னதுடன் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றியும் கேள்வி எழுப்பினர்.
• உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர், தனது தங்கை ஓடிவிட்டதாக புகார் கொடுத்த ஒருவரிடம், அவர் இடத்தில் தாம் இருந்தால், அவர் தனது தங்கையை சுட்டுக் கொன்றிருப்பார் அல்லது தூக்குப் போட்டு செத்திருப்பார் என்று சொன்னார். காவல்துறை அதிகாரி ஒருவரே கவுரவக் கொலையை ஊக்குவிப்பதன் அதிர்ச்சி தரும் சம்பவம் இது! உத்தரபிரதேசத்தின் சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பொது நிகழ்ச்சியில், காணாமல் போகும் பெண்கள் எல்லாம் ‘ஓடிப்போனவர்கள்’ என்று முத்திரை குத்தி, ‘திருடர்களையும் ஓடிப்போனவர்களையும் பிடிப்பதுதான் காவல்துறையின் வேலையா’ என்று கேட்டார். மாவட்ட நீதிபதி அவர் பேசுவதைக் கேட்டு கைத்தட்டி சிரித்தார்.
• சோனி சோரி என்ற பழங்குடிப் பெண்ணை சட்டிஸ்கர் காவல்துறையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்; அவர் பிறப்புறுப்பில் கற்களை செலுத்தினர். இந்தக் குற்றத்தை செய்த காவல்துறை அதிகாரி அங்கித் கார்குக்கு கடுமையான தண்டனை தருவதற்குப் பதிலாக குடியரசு தலைவர் விருது அளிக்கப்பட்டது!
• தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் இருளர் பெண்கள் 4 பேரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய காவல்துறையினர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சஹரன்பூர் மற்றும் சந்த் கபீர் நகர் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்; ஆனால் பெண்களுக்கு எதிராகப் பேசியதற்காக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. ஆந்திராவில் காவல்துறை துணைத் தலைவர் மீதோ, டில்லி - தேசிய தலைநகர பிராந்தியத்தின் 17 காவல்துறை அதிகாரிகள் மீதோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்றங்களும் பெண்கள் உரிமைகள் தொடர்பான தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டன.
• சஹரன்பூர் சம்பவத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த தனது காதலனும் ஓடிப்போன பெண், நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார். அந்தப் பெண்ணுடைய வாக்காளர் அடையாள அட்டை அந்தப் பெண்ணின் வயது 19 என்று காட்டியபோதும், அந்தப் பெண், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் பாதுகாப்பில் விடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதிருந்து அந்தப் பெண்ணைக் காணவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பம் காவல்துறை துணைத் தலைவரின் அழைப்பால், நீதிமன்றத்தின் அணுகுமுறையால் ஊக்குவிக்கப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு தீங்கிழைத்துவிட்டதா?
• கர்நாடகாவில், தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் பாதுகாப்பில் விடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்டப்படி பெண்ணின் மணவயது 18 என்றாலும், 21 வயதுக்கு குறைவான பெண்கள் திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் அனுமதி வேண்டும் என்றது! நீதிமன்றங்கள், காப் பஞ்சாயத்துகளின் மனநிலையை ஏன் ஆதரிக்கின்றன? தங்கள் குடும்பங்களின் விருப்பங்கள் எப்படியிருப்பினும், தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை பெண்களுக்கு ஏன் மறுக்கின்றன?
• 1996ல், ரன்வீர் சேனா என்கிற மேல்சாதி நிலப்பிரபுக்களின் தனியார் படை, பீகாரில் உள்ள பதானி தோலாவில் 11 பெண்கள், 3 சிறுமிகள், 2 பச்சிளம் பெண் குழந்தைகள், 4 சிறுவர்கள் உட்பட 21 சாதாரண மக்களை வேட்டையாடி படுகொலை செய்தது. சமீபத்தில், பீகார் உயர்நீதிமன்றம், அதிர்ச்சி தரும் விதத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. அதற்கு முன்பு, இந்தப் படுகொலையை திட்டமிட்ட, ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் சிங் பிணை மனுவை எதிர்த்து வழக்காட பீகார் அரசாங்கம் தவறியது. ஆக, பீகார் அரசாங்கமும், நீதிமன்றமும் பதானியின் பெண்களை, குழந்தைகளை கைவிட்டுவிட்டன. ஆனால், அவர்களை படுகொலை செய்தவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்.
• பீகாரின் பள்ளி ஆசிரியை ரூபம் பதக், தன்னை பாலியல்ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு, அவரது உதவியாளருக்கு எதிராக நீதி வேண்டி எடுத்த முயற்சிகளை காவல்துறை அலட்சியம் செய்தது. வேறு வழியின்றி, அவர் தன்னை பாதுகாத்துக் கொண்டார்; அதன் விளைவாக, அந்த சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். சம்பவம் பற்றி மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய புலனாய்வு நீதிமன்றம் ரூபம் பதக்குக்கு ஆயுள்தண்டனை வழங்கியது. ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்கள் மீது குற்றம் சுமத்தாமல், பாலியல் வன்முறைக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்த அந்தப் பெண்ணுக்கு ஆயுள்தண்டனை வழங்குவது, பயங்ரமான அநீதி அல்லவா?
அனைத்துவிதமான அரசாங்கங்களும் பெண்கள் விரோத அரசுகளாகவே இருக்கின்றன. மேற்குவங்கத்தில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அரசியல்ரீதியான நோக்கம் கொண்ட பொய்யர்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். பீகாரில், பதானி தோலாவில் படுகொலை செய்தவர்களையும் ரூபம் பதக் சம்பவத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களையும் அரசாங்கம் பாதுகாக்கிறது. அரியானாவில், சமீபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், அலுவலகங்களுக்கு பெண்கள் மேற்கத்திய ஆடைகள் அணிந்து செல்வதற்கு தடை விதித்தார்!
சகோதரிகளே, நண்பர்களே,
நாடாளுமன்றம் தனது அறுபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஆனால், இன்றும் கூட, நாடாளுமன்றத்தில் வெறும் 10% பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் தவறியிருப்பதும் வெட்கக் கேடல்லவா?
சமூகத்தில், அனைத்துக்கும் மேலாக, ஜனநாயகம், உரிமைகள் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் பொறுப்புள்ள காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான, ஆழப்புதைந்துள்ள பாகுபாடுகளை நாம் எதிர்க்க வேண்டும். பெண்கள், தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பெண்களுக்கு எதிரான பாகுபாடான கருத்துக்களை வெளியிடும், சமத்துவத்துக்கான பெண்களின் உரிமைகளை மீறும் காவல்துறை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதிபதிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின்
சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள்


பழ.ஆசைத்தம்பி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க போகிறோமா? மீண்டும் பழைமைக்குத் திரும்பி மன்னர் பரம்பரையிடம் ஒப்படைக்க போகிறோமா?
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ஒருவர் கூட தலித் அல்ல. 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை மக்கள் கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுத்தனர்.
எதிர்வரவுள்ள இடைத்தேர்தலில், உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, ஏழைகளின் பிரதிநிதியாக தலித் மக்களின் பிரதிநிதியாக மாலெ கட்சி களம் காண்கிறது. இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், அறிவாளி பிரிவினர் ஆதரவு கொடுங்கள் என மாலெ கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
180, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டை தொகுதி ஒன்று. புதுக்கோட்டை தொகுதி 1952 முதல் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி புதுக்கோட்டை ஒன்றியம் (26 ஊராட்சிகள்) கரம்பக்குடி ஒன்றியம் (20 ஊராட்சிகள்) மூன்றும் இணைந்தது புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி.
மார்ச் 2012 வரை மொத்த வாக்காளர்கள் 1,92,362. ஆண் வாக்காளர்கள் 96,167. பெண் வாக்காளர்கள் 96,255. 25.05.2012ல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,94,980.
மொத்த வாக்குச் சாவடிகள் 224. புதுக்கோட்டை ஒன்றியத்தில் 74 வாக்குச் சாவடிகள். கரம்பக்குடி ஒன்றியத்தில் 47 வாக்குச் சாவடிகள். புதுகை நகராட்சியில் 103 வாக்குச் சாவடிகள்
சமூகம்
தொகுதியில் பெரும்பான்மை தலித் மக்கள்.  முத்தரையர் சமூகம், முக்குலத்தோர் (மறவர் இல்லை), பிற சமூகத்தினர் என அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளனர்.
வர்க்கம்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஏழை, சிறு, குறு விவசாயிகள் நிறைந்த பகுதி. நிலவுடைமையாளர்கள் சிறிய பிரிவினரே. சிறுவிகித விவசாய உற்பத்தியை கொண்ட பகுதி. மிகவும் பின்தங்கிய, வறட்சியான பகுதி.
மன்னர் ஆட்சியின் மிச்சசொச்சம்
1948ல் மன்னர் ஆட்சி ஒழித்து கட்டப்பட்டது. ஆனால் அதன் மிச்சசொச்சம் பெயர்களில் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெயர் தொண்டைமான் மாளிகை. அரசு மருத்துவமனை, ராணியார் மருத்துவமனை. அரசுப் பள்ளி, ராணியார் மேல்நிலை பள்ளி. அரசுக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி.
நாட்டு கூட்டமைப்பு முறை
தொகுதியில் இன்னும் நாட்டு அம்பலம் முறை, சாதிய மிச்சசொச்சங்களுடன் உயிர் வாழ்கிறது. கவி நாடு, வடவாளம் நாடு, வாராப்பூர் நாடு, கோத்துபனை நாடு வீரக்குடி நாடு, ஈ சங்க நாடு என பல நாடு முறை இருக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை
தலித் மக்கள், முத்தரையர் மக்கள் கோவிலில் நுழைய தடை துவங்கி, தனிக் குவளை, தனி சுடுகாடு, முடித்திருத்த தடை, உள்ளூர் அதிகாரத்தில் பங்கு மறுப்பு, உரிமை மறுப்பு, தலித் தலைவர் கருக்கள குறிச்சியில் தேசிய கொடி ஏற்ற தடை என சாதிய ஒடுக்குமுறை தொடர்கிறது.
வரலாறு நெடுக வறட்சி, பஞ்சம் தொடர்கிறது. புதுகை தொகுதியில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் துவங்கி 1708, 1709, 1733, 1837, 1866, 1868, 1879, 1884, 1889, 1893, 1895, 1904 - 05, 1907, 1909, 1921, 1925, 1926 - 30, 1945, 1969, 1974 - 75 என தொகுதி மக்களை வாட்டி வதைத்த வறட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம்.
பஞ்சத்தை போக்க மாவட்டம் முழுவதும் 6000 குளங்கள் வெட்டப்பட்டன. புதுக்கோட்டை நகரத்தில் மட்டும், புதுகுளம், பல்லவன்குளம் துவங்கி 66 குளங்கள் வெட்டப்பட்டது.
குளங்கள் பராமரிக்கப்படாமல் பல காணாமல் போயின. சில சென்னை கூவம் போல் ஆயின. சிலவற்றை அரசாங்கமே அங்கீகரித்து கட்டிடங்கள் கட்டுவது என ஆரம்பித்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் யூனியன் ஆபீஸ், கல்லூரி, கல்லூரி விடுதி என குளத்தை தூற்றுவிட்டனர். இதனால் தண்ணீர் பிரச்சனை தொகுதி மக்களின் பிரதான பிரச்சனை.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது, ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது மிகமிக அவசியம்.
விவசாயம்
தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த மக்கள் பெரும்பான்மை. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 466329 ஹெக்டேர். அதில் சாகுபடி நிலம் 32 சதவீதம் மட்டும். மீதி புறம்போக்கு வகையினம் 143895 ஹெக்டேர். ஓரளவு வன நிலம் உள்ளது. 2010ல் நிகர சாகுபடி 150671 ஹெக்டேர். 2011ல் நிகர சாகுபடி 149367 ஹெக்டேர். 2011ல் சாகுபடி பரப்பு குறைந்துதுள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி, நீர் ஆதாரம் இல்லாமை, மின் தட்டுப்பாடு, இடுபொருள் விலை உயர்வு, விளைச்சலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, சிறு விகித உற்பத்தி என விவசாயத்தை விட்டு மக்கள் விரட்டப்படுவதும், விளை நிலம் சுருங்கி போவதும் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
தொகுதியில் சிப்காட் மற்றும் முந்திரி தொழிற்சாலை தவிர இதர தொழிற் சாலைகள் இல்லை. விவசாய வேலைகளும் இல்லை. (மேலே உள்ள விபரம் இதை காட்டும்). 100 நாள் வேலையில் இது வரை ஒரு நாள் கூட, 80, 100, 119, 132 கூலி வழங்கியதும் இல்லை. 100 நாள் வேலையும் தரப்படுவது இல்லை.
புலம் பெயர்தல்
வேலை இல்லை. போதுமான கூலி இல்லை. வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. மக்கள் திருப்பூர், கோவை சென்னை என பெருநகரங்களுக்கு புலம் பெயர்வதும், உடல் உழைப்பு தொழிலாளர் களாக வெளிநாடு செல்வதும் தொடர்கிறது.
மன்னராட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும்
புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல்களில் 2004 வரை வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தரப்படுகின்றன.
1951 கே.எம்.வல்லதரசு, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி.
1957 ராமநாதன் செட்டியார், இந்திய தேசிய காங்கிரஸ்.
1962 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 வீரையா, திமுக
1977 இளஞ்செழியன், அதிமுக
1980 சுவாமிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் (தி)
1984 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1991 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1996 திருச்சி சிவா, திமுக
1998 ராஜா பரமசிவம், அதிமுக
1999 திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர்.அதிமுக
2004 ரகுபதி, திமுக
2009 தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. 14 முறை நாடாளுமன்ற தொகுதியாக இருந்து 2009ல் தொகுதியாக இல்லாமல் போனது தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே. தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கோட்டை தொகுதியில் மட்டும் 12,326 வாக்குகள் 49 ஓவுக்கு போடப்பட்டன.
சட்டமன்ற தேர்தல்களில் 2011 தேர்தல்களில் தான் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். மத்திய, மாநில அரசுகளின் முதலாளித்துவ ஆதரவு நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக மக்கள் ஆதரவு நிகழ்ச்சிநிரலை முன்னிறுத்த இடதுசாரி இருத்தல் அவசியம். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். மன்னராட்சி அல்லாமல் மக்களாட்சி வேண்டும்.

புதுக்கோட்டை நகரில், நகர மக்களை குடிமனை, வீட்டு வாடகை குடிநீர், வேலையின்மை நகரத்தைவிட்டு துரத்துகிறது. கிராமத்தில், விவசாய நெருக்கடி, வேலையின்மை, சாதிய ஒடுக்குமுறை சொந்த ஊரைவிட்டு பெரும்நகரத்தை நோக்கி, வெளிநாட்டை நோக்கி விரட்டுகிறது.
புதுக்கோட்டை தொகுதி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கு பின்வரும் அம்சங்கள் அவசியம்.
தொகுதியில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம்.
நகரத்தில், கிராமத்தில் வீட்டுமனை இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனை.
100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை, 300 ரூபாய் கூலி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை.
தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது. நீராதாரத்தை பெருக்குவது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது.
மத்திய, ரிசர்வ் பாரஸ்ட் இடத்தை மாநில அரசு அரசின் கீழ் கொண்டு வந்து, விவசாய பண்ணைகளாக, பழந்தோட்டங் களாக அமைத்து மக்களுக்கு வேலை தருவது, அல்லது மக்களுக்கு பிரித்து வழங்குவது.
ஆர்.எஸ்.பதி மரங்களை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது. மக்களை, விவசாயத்தை, நிலத்தடி நீரை பாதுகாப்பது.
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் மருத்துவக் கல்லூரி
அரசு கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவ கல்லூரி.
வம்பன விதைப் பண்ணை, வெள்ளான் விடுதி எண்ணெய் வித்து பண்ணை, அண்ணா பண்ணை, அரிமளம் பண்ணை, கால்நடை பண்ணை ஆகியவற்றை மய்யப்படுத்தி விவசாயக் கல்லூரி.
 மாவட்ட தலைநகரம் என்பதால் அரசு பொறியியல் கல்லூரி.
 அரசு முந்திரி தொழிற்சாலை.
 விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்.
 அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலை, கூடுதல் பேருந்து இயக்கி பேருந்து வசதி இல்லா கிராமம் இல்லை என்கிற நிலை.
 அரசு பள்ளிகளையும், ஆதிதிராவிடர் பள்ளிகளையும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்துவது.
 கிராமப்புறங்களில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உடனே அப்புறப்படுத்துவது.
 துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்குதல்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகப்படுத்துதல். அரசு மருத்துவமனைகளை உயிர்காக்கும் மருத்துகளை கொண்டு, கூடுதல் கட்டிட வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளாக மாற்றுதல்.
இன்னும் பல. . .

தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்பார்ந்த புதுக்கோட்டை தொகுதியில் வசித்து வரும் கிராமப்புற தொழிலாளர்களே,
ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளே,
சமூகரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படுகிற தலித் மற்றும் முத்தரையர் சமூக மக்களே,
அனைத்து சமூக உழைக்கும் மக்களே.
வர்க்கமாக, சாதியாக, பெண் என்பதாலும் சுரண்டப்படும் மண்ணின்பாதி, விண்ணில் பாதியாக உள்ள பெண்கள் சமூகமே,
சமூக மாற்றத்தை, சமத்துவத்தை விரும்பும், தலித் அமைப்பு தோழர்களே,
பாட்டாளிகளின் கரத்தை வலுப்படுத்த, இடதுசாரி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தம்மை அர்ப்பணித்துள்ள இடதுசாரி இயக்க தோழர்களே,
அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அங்கன் வாடி பணியாளர்களே, சத்துணவுப் பணியாளர்களே, மக்கள்நலப் பணியாளர்களே, சாலைப் பணியாளர்களே,
துப்புரவுத் தொழிலாளர்களே, சுமைதூக்கும் தொழிலாளர்களே, தரைக் கடை வியாபாரிகளே.
ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, அறிவாளி பிரிவினரே, சமூகத்தை புரட்டி போடும் தொழிலாளர் வர்க்கமே.
உங்கள் பிரதிநிதியாய் தேர்தல்களத்தில் சிபிஅய் (எம்.எல்).
உங்கள் சின்னம் மூன்று நட்சத்திரக்கொடி.
உங்கள் வேட்பாளர் தோழர் ம.விஜயன்.


களம்

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

அய்முகூ அரசு 23.05.2012 அன்று இரவு பெட்ரோல் விலை ரூ.7.50 என உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களை மேலும் பொருளாதாரரீதியாக ஒடுக்குகிறது. சமையல் எரிவாயு மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும், அடுத்த வாரத்தில் டீசல் விலையும், உயர்த்தப் படும் என மத்திய அமைச்சர்கள் ஆணவத்துடன் அறிவிப்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு, பிற வெகுஜன அமைப்புக்கள் முழுமையாக விலை உயர்வையை குறைக்க வேண்டுமென கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

கோவையில் பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் தோழர்கள் பிரிக்கால் பிளான்ட் 1, பிளான்ட் 3 ஆலைவாயில்களில் மே 24 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மே 26 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் எம்.குருசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி கலந்து கொண்டனர்.
மே 24 அன்று கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, வளத்தான் உட்பட மாவட்டத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
மே 25 அன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ், மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.புகழேந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கே.ஆர்.குமாரசாமி கண்டன உரையாற்றினர்.  
மே 25 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
மே 25 அன்று அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர் தோழர் சேகர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாவட்ட தலைவர்கள் தோழர் குமரேஷ், தோழர் பழனிவேல் உட்பட பலரும் கண்டனம் முழங்கினார்கள். இதே நாள் டிஅய்டைமண்ட் செயின் ஆலைவாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் பழனிவேல், எ.சேகர், சாதிக்பாஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பட்டா இங்கே. நிலம் எங்கே?
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஊராட்சியில் இலவச மனைப் பட்டா வழங்கிவிட்டு இடம் அளந்து கொடுக்காமல் தாலுக்கா நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் காலம் கடத்துவதைக் கண்டித்து ஏற்கனவே வட்டாட்சியர் அலுவலகத்தில் அவிதொச தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. விரைவில் அளந்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதை காற்றில் பறக்கவிட்டனர். இதை கண்டித்து திருநாவலூர் ஊராட்சியில் மனைப்பட்டா வைத்திருக்கும் கிராமப்புற வறியவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மே 24 அன்று சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அளந்து இடம் காட்டாமல் போராட்டத்தை முடிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். சில நாட்களுக்குள்  நிலத்தை அளந்து வழங்குவதாக வாக்குறுதி மீண்டும் அளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலியமூர்த்தி, செண்பகவள்ளி பங்கேற்றனர்.

வேலை உறுதித் திட்டத்தில் சட்டக்கூலி ரூ.132 வழங்கு
!21.05.2012 அன்று தர்மபுரியில் தர்மபுரி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.132 தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய பொறி யாளர் மற்றும் பணியாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் முருகன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், அவிதொச துணை பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.
மே 28 அன்று ஊத்துக்கோட்டை ஒன்றியம் தாராட்சி ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் சட்டக்கூலி ரூ.132, நாள்கூலி ரூ.200 என உயர்த்துவது, குடும்பத்திற்கு 2 பேருக்கு, ஆண்டுக்கு 200 நாள் வேலை, மணல் கொள்ளையை தடுப்பது, பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை, பட்டா இருந்தும், ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்துள்ளதை மீட்டு மக்களுக்கு வழங்குவது போன்ற கோரிக்கைகள் மீது நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எ.எஸ்.குமார், கே.பாரதி கலந்து கொண்டனர்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகராட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களில் வசிக்கும் மக்களின் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை கண்டு கொள்ளாததைக் கண்டித்து ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏஅய்சிசி டியு மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதி பாசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் மோகனசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திர மோகன், சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் தோழர்கள் அய்யந்துரை, வேல்முருகன் உரையாற்றினர்.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக
மே 22 அன்று மணலூர் திருவிழாவில் அர்ச்ச னைத்தட்டு வியாபாரம் செய்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் தாக்கிவிட்டனர். இதைக் கண்டித்து மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கண்ணையன் தலைமையில் அனைத்து கட்சியிலும் உள்ள தலித் முன்னோடிகள் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை ஆர்ப்பாட்டமும் அன்றே நடைபெற்றது.

வைப்புநிதி மோசடிக்கு எதிராக
துப்பாக்கித் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதியை மோசடி செய்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைக் கோரியும், முதன்மை வேலை அளிப்பவரான துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அம்பத்தூரில் 30 ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கும் உப்புகாரமேடு பகுதியில் மின்இணைப்பு தரப்படவில்லை. பலமுறை மனு அனுப்பியும், மனுக்களை திருப்பி அனுப்ப சாக்குபோக்கு சொல்லப்படுகின்றது. 22.05.2012 அன்று  உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட தலைவர்கள் தோழர்கள் மோகன், புகழ்வேந்தன், லில்லி, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் முனுசாமி ஆகியோர் தலைமையில் பகுதி மக்கள், மனு கொடுக்க செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றனர். மனு கொடுக்க செல்லும் மக்களை உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்ததால் அலுவலக வாயிலில் மக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வேறு வழியின்றி செயற்பொறியாளர் அனைவரையும் அழைத்து தனது அலுவலக அறையில் அமர வைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மனுவை பெற்றுக் கொண்டார்.

மே தினம்
மே 1 அன்று சீர்காழி நகராட்சியில் உள்ள துப்புரவுக் தொழிலாளர்கள் மே தின கொடியேற்று நிகழ்ச்சியும் சங்க பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடத்தினர். மே நாள் அன்று துப்புரவுத் தொழிலாளர்க்கு விடுமுறை இல்லை. பல்வேறு இன்னல்களுக்கு இடையே தோழர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் சிறப்புரையாற்றினர்.

சமையல் எரிவாயு விநியோக முறைகேட்டுக்கு எதிராக
வண்டலூர் ஸ்ரீ மூகாம்பிகை கேஸ் ஏஜென்சியின், சமையல் எரிவாயு விநியோக முறைகேட்டை கண்டித்து 15.05.2012 அன்று ஸ்ரீ மூகாம்பிகை கேஸ் ஏஜென்சிஸ் அலுவலகம் முன்பு 150க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தோழர் கோபால் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் கண்டன உரையாற்றினார். கேஸ் விநியோகத்தை சீராக்கு, கூடுதல் விலைக்கு விற்கிற, புதிய இணைப்புக்கு கட்டாயமாக குக்கர் அல்லது அடுப்பை திணிக்கிற மூகாம்பிகை கேஸ் ஏஜென்சி மீது நடவடிக்கை எடு, 30 நாட்களுக்குள் உருளை கிடைக்க நடவடிக்கை எடு, சமையல் வாயுவுக்கு மானியத்தை ரத்து செய்த அய்முகூ அரசை கண்டிக்கிறோம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முற்போக்கு பெண்கள் கழக தலையீடு
வாடிப்பட்டியில் ஆதரவற்ற ஏழைப் பெண்ணின் சொத்தைப் பறிக்க அவரது அண்ணன் எடுத்த முயற்சியை முற்போக்கு பெண்கள் கழகம் முறியடித்தது. தோழர் பெரியக்காள் தலைமையில் முற்போக்கு பெண்கள் கழகத்தின் தலையீட்டில் மே 13 அன்று அந்தப் பெண் இடிக்கப்பட்ட வீட்டுச் சுவற்றைக் கட்டி முடித்தார். அந்தப் பெண் கட்டிய சுவற்றை இடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களச்செயதிகள் தொகுப்பு: எஸ்.சேகர்

Search