COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 3, 2016

தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம்

அக்டோபர் 27 தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் அவர்கள் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் அம்பத்தூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் டி.கே.எஸ்.ஜெ பணிகளை, நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தோழர் எஸ்.கே. பேசும்போது, கட்சி துவங்கிய காலத்தில் கிராமங்களில் புரட்சிகர வேலையை செய்ய மாணவர்கள், தொழிலாளர்கள் அழைக்கப்பட்டபோது சிம்சன் தொழிலாளியாக இருந்த தோழர் டிகேஎஸ்ஜெவும் புறப்பட்டார். அந்த நாள் முதல் கிராமப்புற வேலைகளைச் செய்து வந்தார். 2014ல் உடல் நிலையை கவனித்துக் கொள்ள சென்னையில் தங்கி இருக்க கட்சி முடிவு எடுத்தும், வர மறுத்துவிட்டார். 2002, 2004, 2006, 2010, 2012 என பல காலகட்டங்களில் அவிதொச உறுப்பினர் சேர்ப்பு, பிரச்சார இயக்கங்களில் நகர்ப்புற பாட்டாளிகள், கிராமங்களில் போய் பணியாற்றுவது என்ற நக்சல்பாரி இயக்க பாரம்பரியத்தை தோழர் டிகேஎஸ் வழியில் தொடர்ந்து வருவதுடன், இப்போதும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டின் துவக்க நிகழ்ச்சிகளை தஞ்சாவூரில் துவங்குகிறோம் என்றும் டிகேஎஸ்ஜெ பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தோழர் .எஸ்.குமார், மாநிலக் குழு உறுப்பினர்: கருப்பையா விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலான பணியை தனது வாழ்நாள் பணியாக மேற்கொண்டார். அர்ப்பணிப்பு, விடாப்பிடி யான சமரசமற்ற போராட்ட குணம் படைத்த தோழர் டிகேஎஸ்ஜெ, இறுதிவரை தொழிலாளர் வர்க்கப் பண்புகளை யதார்த்தத்தில் வாழ்ந்து காட்டியவர். டிகேஎஸ் சிம்சன் தொழிலாளியாக இருந்தபோது அவர் முழு நேர ஊழியராக வேண்டும் என்று தோழர் சுவதேஷ் சொன்னதும் அவருடைய துணைவியார் மற்றும் குழந்தையை எப்படி பராமரிப்பது என்று கேள்வி எழுந்தது. கோடிக்கணக்கான மக்கள் வேலை வருமானம் வாழ்க்கை இல்லாமல் இருக்கும் நிலையில் உள்ளனர், அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வரும்போது தான் நம் நிலையும் மாறும் என அவருக்கு சொல்லப்பட்டது. பிறகு தொழிலாளி டிகேஎஸ் விவசாய தொழிலாளர் தலைவரானார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மகள் அவரது பொது வாழ்க்கையை புரிந்து கொண்டார்.
தோழர் குப்பாபாய் பேசும்போது, கிராமப்புறங்களில் உறுப்பினர் சேர்ப்பு இயக்க வேலைகளைச் செய்ய தஞ்சை, நாகை போனபோது தோழர் கருப்பையாவின் பணிகளை புரிந்து கொண்டோம், ஆனால் அவரது மனைவி மகளுக்கு அவர் மரணத்துக்கு பிறகுதான் கட்சி பற்றியும் டிகேஎஸ் தியாகம், மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதை தெரிகிறது, அவர்களுக்கு இப்போதும் கட்சி மருத்துவ உதவிகள் செய்து வருகிறது.
தோழர் முனுசாமி, எனது சொந்த ஊரான சீர்காழியில், தோழர் கருப்பையா தலைமையில் இரால் பண்ணை எதிர்ப்பு போராட்டம், சட்டக்கூலி கேட்டு போராட்டம் நடத்தியதை மக்கள் இன்னும் பேசுகிறார்கள், அவரோடு 2009ல் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பும் கிடைத்தது, அவர் மரணச் செய்தி கேட்ட உடன் ஊர்ஊராக திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர், இதில் இருந்து அவர் மீது மக்கள் கொண்ட நேசத்தை புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
தோழர் மோகன் பேசும்போது தோழர் டிகேஎஸ் சென்னையில் தங்கி இருப்பார், மருத்துவம் பார்த்துக் கொள்வார் என எதிர் பார்த்தோம், அவரிடம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என நினைத்தோம், அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது, அவர் சிவப்புத் துண்டும் கட்சியும் அவரது இறுதி நிகழ்ச்சியில் கூட அவரிடமிருந்து பிரியவில்லை, அவரது மகள் அந்த நேரத்தில் அவருக்கு சிவப்பு துண்டை அணிவித்தார் என்றார்.
தோழர் பாலசுப்பிரமணியம் எங்கள் சீர்காழி தஞ்சையில் இவ்வளவு பெரிய தியாகி/தலைவர் சென்னையில் இருந்து வந்து கட்சி, இயக்க வேலை பார்த்துள்ளார் என்பதை, அங்கே இருந்து இங்கே வந்து கட்சியில் சேர்ந்துள்ள நாங்கள் நீண்ட காலம் கழித்து தெரிந்துகொண்டோம், அவர் பணிகளை நாம் தொடர வேண்டும் என்றார்.
தோழர் பாலகிருஷ்ணன், அவருடைய உடல் நிலை பிரச்சனைகள் தாண்டி கிராமங்களில் டிகேஎஸ் இயக்க வேலைகள் பார்த்தார், நகரத்தில் கேஆர்பி தோழரும் இறுதிவரை சங்க வேலை பார்த்தார், இதெல்லாம் பார்த்து பார்த்து நமக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வந்துவிடுகிறோம், இது மாதிரி தோழர்களால் நமக்கு உணர்வு வருகிறது என்றார். தோழர் வேணுகோபால் பேசும்போது டிகேஎஸ், டிவிஎஸ் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் ஆலை வாயிலில் உடன் நின்று போராடினார் என அவருடன் பேசும்போது தெரிந்து கொண்டேன், கிராமத்தில் போய் பணியாற்றி சென்னையில் 1995 ஏப்ரல் 10ல் தோழர் வி.எம். கலந்துகொண்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி வந்தார், அந்த பொதுக் கூட்டத்திலும் தலைமை தாங்கினார், எளிமை உண்மை அவர் தோற்றம் என்றார்.
தோழர் கே.பழனிவேல், எனது கட்சி வாழ்க்கையில் டிகேஎஸ் தோழருடன் இருந்து பணி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் சில முறை நகர்ப்புற தொழிலாளர்கள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் போய் தங்கி இருந்து வேலை செய்தபோது அவர் பணிகளின் பதிவுகளைப் பார்க்க முடிந்தது என்றார்.
மாநகரச் செயலாளர் தோழர் சேகர்: 1993லிருந்து தோழர் டிகேஎஸ்û தெரியும். அவரை அவர் பணிகளை கஷ்டங்களை போராட்டங்களை பார்த்து வருகிறேன். காவல்துறை பிணை கஸ்டடியிலிருந்தது முதல் பல காலகட்டத்தில் கிராமப்புற வறியவர் போராட்டத்திலும் மாநாடுகள், அணிதிரட்டல் பணிகளில் அவருடன் பல நாள் வேலை செய்துள்ளேன். மருத்துவமனையில் உயிருக்காக போராடியபோதும் நேரில் உடனிருந்து பார்த்துள்ளேன். நான் கிளைச் செயலாளர் நிலையில் இருந்து மாநிலக் நிலைக்குழு வரை போய் அவருடன் மாநில கமிட்டி கூட்டங்கள் வரை அவருடைய பணிகளை பார்த்திருக்கிறேன். அவரிடம் பாட்டாளி வர்க்க உணர்வு, அர்ப்பணிப்பு, விடாப்பிடித்தன்மை, கடுமையான வேலை, உண்மை, தியாகம், எளிமை, கட்சி விசுவாசம், மக்களின் மீது அவர் கொண்ட நேசம், கற்பதில் உற்சாகம் ஒருநாளும் குறைந்து நான் பார்க்கவில்லை. டிகேஎஸ் தோழரின் விருப்பங்களை கனவுகளை நிறைவேற்ற நகர்ப்புற பாட்டாளிகள் கிராமப்புற வறியவருடன் கரம் கோர்த்து பாடுபடவேண்டும் என்று கருதுகிற தோழர்களின் மனங்களில் தோழர் டிகேஎஸ் இருந்து கொண்டே இருக்கிறார்.
புதியதாக கட்சியில் இணைந்துள்ள தோழர்கள் கோகுல், சுகுமார், இப்படிப் பட்ட தோழர் இப்போது நம்முடன் இல்லை, அவர் பணியாற்றிய இடத்தில் மாநில ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்றனர்.

இறுதியாக தஞ்சாவூரில் நடக்கிற கட்சி மாநில ஊழியர் கூட்டத்தில் 700 தீப்பொறி சந்தாக்களுக்கான நிதி, 30,000 கையெழுத்துக்கள், ரூ.30,000 ஆகியவற்றுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என முடிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் மீதான ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது வழக்கறிஞர்கள் நலன் காக்க முழக்கம் எழுப்பிய வழக்கறிஞர்கள் சிலர் மீது பார் கவுன்சில் தற்காலிக தடை விதித்து விசாரணை நடத்தியது. விசாரணை நடத்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் குழு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. வேறு சிலருக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டது.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து 18.10.2016 அன்று சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர்கள் கார்வேந்தன், சுதா, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கறிஞர் தோழர் மில்டன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி
இடத்தை பயன்படுத்தி மேல்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்தக் கோரி தொடர் போராட்டம்

அம்பத்தூர் பகுதி காமராஜபுரத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சொந்தமாக இடம் இருக்கிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வருகிறார்கள். இப்போது அந்த இடத்தில் காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை அரசு துவங்கியது. இதற்கு எதிராக பகுதி மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி வருகின்றனர். அரசின் இந்த முயற்சியைக் கண்டித்து ஏற்கனவே இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாரதி உட்பட பலர் பட்டினிப் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். பின்னர் பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக 15.10.2016 அன்று, காவல்துறை அனுமதி பெற்று தோழர் பாரதி தலைமையில் அனைத்து கட்சியினர், மக்கள் இயக்கங்கள் பங்கேற்கும் பட்டினிப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னணியில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பட்டினிப் போராட்டம் துவங்கும் முன்பே பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து ஆவன செய்ய நடவடிக்கை எடுப்பதாக பேசினார். அரசாங்கத்தின் ஒரு குழுவினர் இடத்தையும் பார்வையிட்டனர். ஆயினும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி தலைமையில் திட்டமிட்டபடி பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இகக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் .எஸ்.கண்ணன், பாமக மாவட்டத் துணைத் தலைவர் கே.எம்.சேகர், மதிமுக நகரச் செயலாளர் தாமோதரன், தமாக நகரச் செயலாளர் ராம்சேகர், புரட்சி பாரதம் கட்சியின் நகரச் செயலாளர் கண்ணன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை  நிலைய ஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத் தலைவர் ஜோசப் சாமுவேல் (திமுக) பிஎஸ்பி நகரச் செயலாளர் ராஜ்மோகன், ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் சிவராமன், அகில இந்திய மாணவர் கழக தோழர்கள் சீதா, கோகுல், சுகுமார், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு முன்னணிகள் தோழர்கள் முனுசாமி, மோகன், குப்பாபாய், தேவகி, லில்லி உட்பட பகுதி மக்கள் 500 பேருக்கு மேல் கலந்துகொண்டனர்.
இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர்.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினர். பத்திரிகையாளர் சங்கம், தையல் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Search