தாமரை ரத்தக்
கறையுடன் மலர்ந்தது
புறப்பட்டு
விட்டது திரிசூலம்
ஸ்வஸ்திகாவும்
வெளியில் வந்துவிட்டது
எல்லாம் மூலதன
சேவைக்காக
எஸ்.குமாரசாமி
‘தேசப் பிரிவினை
இந்துக்களுக்கு மிகவும் நல்ல விஷயம். இந்துஸ்தானம் ஓர் இந்து நாடு என்றும் அதன்
அதிகாரபூர்வ மதம் இந்து மதம் என்றும் அறிவிக்க நேரம் வந்துவிட்டதுதானே?’
(05.06.1947 அன்று தொழில் அதிபர் பி.எம்.பிர்லா படேலுக்கு
எழுதிய கடிதத்தில் இருந்து)
‘இந்துஸ்தானத்தை
இந்து நாடு என்றும் இந்து மதத்தை அதன் அதிகாரபூர்வ மதம் என்றும் கருத முடியாது என
நான் நினைக்கிறேன். நாட்டில் இதர மதச் சிறுபான்மையினர் இருக்கின்றனர் என்பதையும்,
அவர்களைப் பாதுகாப்பது
நமது முதன்மைப் பொறுப்பு என்பதையும், நாம் மறந்துவிட முடியாது. அரசு, சாதி மத நம்பிக்கை வேறுபாடுகள் கடந்து அனைவருக்குமானதாக, இருக்க வேண்டும்’.
(பிர்லா
கடிதத்திற்கு படேல் 10.06.1947 அன்று எழுதிய
பதிலில் இருந்து)
‘அரசியலமைப்புச்
சட்ட அற உணர்வு/தார்மீக உணர்வு என்பது ஓர் இயற்கையான உணர்வு அல்ல. அது பேணி
வளர்க்கப்பட வேண்டும்’.
‘இந்தியாவில்
ஜனநாயகம் ஓர் அலங்கார மேல்பூச்சே ஆகும். அடிமண் ஜனநாயக விரோதமானது’.
‘அரசியலமைப்புச்
சட்டத்தின் வடிவத்தை மாற்றாமலே, நிர்வாக முறையை
மட்டும் மாற்றி, அரசியலமைப்புச்
சட்டத்திற்குப் பொருந்தாததாக, அதன் உணர்வுக்கு
எதிரானதாக, அரசியலமைப்புச்
சட்டத்தை சீர்குலைக்க முடியும்’. (04.01.1948)
‘இந்து ராஜ்ஜியம்
யதார்த்தமாகுமேயானால் அது இந்த நாட்டுக்கு நேரும் மிகப்பெரிய அழிவு என்பதில்
அய்யம் இல்லை. சுதந்திரத்துக்கு, சமத்துவத்துக்கு,
சகோதரத்துவத் துக்கு அது
ஒரு மிகப்பெரிய தீங்கு. அந்த வகையில் அது ஜனநாயகத்தோடு பொருந்திப் போகாதது. என்ன
விலை தந்தேனும் இந்து ராஜ்ஜியம் உருவாவதை தடுத்தாக வேண்டும்’ (1945)
‘இறந்துபோன
பசுக்கள் தொடர்பில்லாத தீண்டத்தகாத சமூகம் என்று ஒரு சமூகம் இல்லை. சிலர் அதன் கறியை
உண்கிறார்கள். சிலர் அதன் தோலை அகற்றுகிறார்கள். சிலர் அதன் தோலில் இருந்தும்
எலும்பில் இருந்தும் பொருட்கள் செய்கிறார்கள்’.
- டாக்டர் அம்பேத்கர்
‘இனி இந்து
நலன்களுக்காகப் போராடுபவர்களே, இந்தியாவை
ஆள்வார்கள்’. -எல்கே.அத்வானி,
19.11.1990
‘உத்தரபிரதேசத்தில்,
இந்தியாவில், இந்து ராஷ்டிரா வரும் வரை நாங்கள் ஓய மாட்டோம்’.
- யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதலமைச்சர்
தாமரை ரத்தக்
கறையுடன் மலர்ந்தது புறப்பட்டு விட்டது திரிசூலம்
சங் பரிவார்
மூலவர்கள், இந்துத்துவா
திரிசூலத்தின் மும்முனை, இசுலாமியர்களுக்கு,
கிறிஸ்தவர்களுக்கு,
கம்யூனிஸ்டுகளுக்கு
எதிராகப் பாயும் என அறைகூவல் விடுத்தனர். 2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு,
2017 உத்தரபிரதேச சட்டமன்றத்
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ‘திரிசூலம்’
வெறியாட்டம் போடுகிறது.
மனிதத் தாய்கள்,
இந்தியாவில், பெற்றெடுத்த பல கோடி குழந்தைகள் ஊட்டச்
சத்தில்லாமல், முடங்கிப் போய்,
உடல் வீணாய்ப்
போகிறார்கள். இந்துத்துவாவிற்கு சாமான்ய எளிய மனிதரைக் காட்டிலும் மாடு
மேலானதுதானே! குஜராத் பாஜக முதலமைச்சர், மாட்டைக் கொன்றால் ஆயுள் தண்டனை என்கிறார். மாநிலத்தை, ‘இறைச்சி உண்ணாதவர் மாநிலம் ஆக்குவேன்’ எனச் சூளுரைக்கிறார். சட்டிஸ்கார் முதலமைச்சர்
ராமன்சிங் மாட்டைக் கொன்றால் ‘மரண தண்டனை’ என முழங்குகிறார். உத்தரப்பிரதேச இறைச்சிக்
கூடங்கள் மூடப்படுகின்றன. ராஜஸ்தானத்தின் ஆல்வாரில், மாடு கடத்துவதாகச் சொல்லி இசுலாமியரைக் கொன்ற
காட்சி, நாடெங்கும்
பரவியது. உத்தரபிரதேச, ‘ரோமியோ எதிர்ப்பு’
குழுக்கள் செயல்படத்
துவங்கிவிட்டன. இந்துத்துவா கும்பலுக்கு, இந்தியப் பெயர் கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியர் நாடகக் காதலன் ரோமியோ பெயர் சூட்டி,
‘பெண்களின் மானம்’ காக்கப் புறப்பட்டுவிட்டது, சங்பரிவார். ஓர் இசுலாமியர் ஓர் இந்துப் பெண்ணை
அழைத்துச் சென்றால், இந்துக்கள் நூறு
இசுலாமியப் பெண்களை இழுத்துவர வேண்டும் என அழைப்பு விடுத்த முதலமைச்சர் உள்ள
மாநிலத்தில், ரோமியோ
எதிர்ப்புக் குழுக்கள், இசுலாமியர்க்கு
எதிராகவே இருக்கும். மெல்ல மெல்ல சமூக வாழ்வில் வரும் பெண்களை, திரும்பவும் வீட்டிற்குள், சமையலறைக்குள் தள்ளி கதவுக்குத் தாள் போடும்.
சங் பரிவார்
கூட்டத்தின் சுப்ரமண்ய சாமி, சரயு நதிக்
கரையின் அந்தப் பக்கம் மசூதி கட்டித் தருகிறோம்; பாப்ரி மசூதியை விட்டுக் கொடுத்து அங்கே ராமன்
கோவில் கட்ட இடம் தர வேண்டும் என்கிறார். மசூதியை இடித்த உமாபாரதி, இசுலாமியர்கள் இந்துக்களுக்கு இராமன் கோயில்
கட்ட இடம் தருவதுதான் சிறந்த பரிசு என்கிறார்; பாஜகவின் கோஷாமஹால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா
சிங், ராமன் கோவில் கட்டுவதை
எதிர்ப்பவர்கள் தலைகள் சீவப்படும் என்கிறார்.
நாடெங்கும்
இசுலாமிய வெறுப்பு பரவும்போது, காவல்துறை,
அரசு அதிகாரிகள், நீதி மன்றங்கள் எல்லாம் மிகவும் இயல்பாக,
இசுலாமிய விரோத நஞ்சால்
நெஞ்சங்களை நிரப்பி உள்ளனர்.
திரிசூலத்தின்
இரண்டாம் முனை, கிறிஸ்தவர்களுக்கு
எதிராகத் திரும்பி உள்ளது. யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூரில், இந்துத்துவா குண்டர்கள், மதமாற்றம் நடப்பதாகத் தங்கள் வழக்கமான பொய்க்
குற்றச்சாட்டைச் சுமத்தி, கிறிஸ்தவர்களைத்
தாக்கியுள்ளனர். ஒடிஷாவில், சட்டிஸ்கரில்,
மத்தியபிரதேசத்தில்,
ஜார்க்கண்டில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியினரை,
இந்து மதத்திற்குத்
திரும்பக் கொண்டு வர முயற்சிகள் முடுக்கி விடப்படுகின்றன.
திரிசூலத்தின்
மூன்றாம் முனை, கம்யூனிஸ்டுகளுக்கு
எதிரானது. மத்தியபிரதேச சங்பரிவார் பிரமுகர், கேரள இடது முன்னணி அரசாங்க முதல்வர் தலைக்கு,
கோடியில் விலை வைத்தார்.
முந்நூறு இந்து வீரர்கள் இறந்தால், மூன்று லட்சம்
கம்யூனிஸ்ட்களின் தலைகள் மண்ணில் உருள வேண்டும் என்றார். கம்யூனிஸ்டுகளுக்கு
மட்டுமல்ல, வேற்றுமைகளில்
ஒற்றுமை வேண்டும், பன்மைத்துவம்
நிலவ வேண்டும், மதச்சார்பின்மை
வேண்டும் என்பவர்களுக்கெல்லாம், இந்தியாவில் இடம்
இல்லை என்கிறார்கள். ‘கருத்து
சுதந்திரம்’ தலை
அறுக்கப்பட்டு, மதவெறி சாதி
ஆதிக்கக் கும்பல்களால் உதைத்து ஆடப்படுகிறது.
கடவுளரைக் கேலி
செய்வது, காலாகாலமாக
இந்தியாவில் இருந்துள்ளது. பெரியார், மதம் என்ற பெயரால் பரப்பப்படும் மூடப் பழக்கவழங்கங்களை, ஆபாசக் குப்பைகளை, ஆதிக்கத்தை கடுமையாகச் சாட முடிந்தது. ஆனால்
இன்று, பிரபல உச்சநீதிமன்ற
வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், கிருஷ்ணன்
பெண்களைக் சீண்டவில்லையா என்று கேட்டு விட்டு, சங்பரிவார் வெறுப்பு வெறியாட்டத்தால், தன் கருத்தை திரும்பப் பெறும் கட்டாயம்
வந்துள்ளது. படேல் சுதந்திரத்திற்கு முன் சொன்ன, இந்து ராஜ்யம் முடியாது, கூடாது என்ற வாக்குறுதி மீறப்பட்டு, பிர்லா கேட்ட இந்து ராஜ்ஜியம் உருவாக்கத்
தயாராகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க விவாதங்கள் நடந்தபோது அம்பேத்கர்
சொன்னபடி, அரசியலமைப்புச்
சட்டத்தைத் திருத்தாமலே, முக்கியப்
பதவிகளைக் கைப்பற்றி, கருத்து பரப்பி,
கொள்கைகளைத் திணித்து,
அதிகாரத்தை வளைத்து,
இந்து ராஷ்டிரா நோக்கி
நகரப் பார்க்கிறார்கள்.
ஸ்வஸ்திகாவும்
வெளியில் வந்துவிட்டது
தமிழ்நாட்டில்
நெடுஞ்சாலைகளில் வழி சொல்லும் கற்களில் இந்தி நுழைந்து விட்டது. சமஸ்கிருதம் புகுத்தப்படுகிறது.
ஹிட்லர், இனத் தூய்மையில்
நம்பிக்கை வைத்திருந்த அரசியல்வாதி. இந்துத்துவா மூலவர்களின் நம்பிக்கை
நட்சத்திரம். ஜெர்மானிய இனம் ஆர்ய இனம், அதுவே ஆளப் பிறந்த இனம் என்றவர் ஹிட்லர். இரத்தக் கலப்பு கூடாது இனத் தூய்மை
வேண்டும் என பல லட்சம் யூதர்களை, கணிசமான
ஜிப்சிக்களைக் கொன்றார் ஹிட்லர். ஸ்வஸ்திகாவை முன்நிறுத்தியது ஹிட்லர். அது
இந்துத்துவா சின்னம். சங்பரிவார், ‘இந்து இந்தி
இந்தியா’ எனச் சொல்லும்
போதே, ஆரிய மேன்மையில்
நம்பிக்கை கொண்டுள்ளது தெளிவாகும். இப்போது, ‘தமிழ்ப் பற்றாளர்’, ‘தமிழரின் தலைசிறந்த நண்பர்’ என தமிழ்நாட்டில் சில கூட்டங்களால் போற்றிப்
புகழப்பட்ட, பாஜகவின் தருண்
விஜய், சங்பரிவாரின் உண்மை
முகத்தைக் காட்டி விட்டார். ஆப்பிரிக்க மக்கள் மீது நோய்டாவில் நடந்த
இனவெறி/நிறவெறி தாக்குதல்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘நாங்கள், கருப்பு நிறத்தவர்களை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாகாரர்களைச்
சகித்துக் கொண்டு வாழவில்லையா’ என்கிறார். ‘நாங்கள்’ வட மாநிலத்தவர்கள், வெள்ளைத் தோல் உடையவர்கள், இந்தி பேசுபவர்கள், ஆர்யர்கள் என்றும், அந்த ‘நாங்களுக்குள்’ வராத கருப்பு
நிறத்தவர்களை, ‘ஆர்யர்கள்’
சகித்துக் கொண்டு வாழ்வது
எவ்வளவு பெரிய விஷயம் என்றும் சொல்கிறார். சங்பரிவார் கூட்டத்தினர், கேரளாவை சோமாலியாவோடு ஒப்பிட்டதை நினைவில்
கொள்ள வேண்டி உள்ளது. அவர்களுக்கு ஆப்பிரிக்கர், கருப்பு நிறத்தவர் இழிவானவர்கள். தென்
இந்தியர்கள், கருப்பு
நிறத்தவர்கள். ஆப்பிரிக்கர்கள் போல் இழிவானவர்கள்.
ஸ்வஸ்திகாவுக்கு,
சங்பரிவாருக்கு கருப்பு
நிறத்தவர் வேண்டாம், இசுலாமியர்
வேண்டாம், கிறிஸ்துவர்
வேண்டாம், தலித்துகள்
வேண்டாம், கம்யூனிஸ்டுகள்
வேண்டாம் எனும்போது, பன்மைத்துவ
இந்தியாவுக்கு சங் பரிவார் வேண்டவே வேண்டாம் என்ற பதில் வராமலே போய்விடுமா?
டாக்டர்
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, என்ன விலை கொடுத்தாவது, இந்து ராஜ்ஜியம் வருவதை தடுப்போம் என்ற அவரது
அறைகூவலை ஏற்றுச் செயல்பட தலித் மக்கள், சிறுபான்மையினர், அனைத்து தரப்பு
உழைக்கும் மக்களும் உறுதியேற்போம்.
எல்லாம் மூலதன
சேவைக்காக
மோடியைப் புரிந்து
கொள்ள, டிரம்பின் கதையையும்
கொஞ்சம் பார்க்க வேண்டும். வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக, ஆப்கனிஸ்தான், இராக் போர்களுக்கெதிராக, நேட்டோ படைகளுக்குப் பணம் ஒதுக்குவதற்கெதிராக,
‘மறக்கப்பட்ட அய்க்கிய
அமெரிக்கர்களுக்காக’ ‘குரல்’ கொடுத்து, ஆட்சியைக்
கைப்பற்றியவர் டிரம்ப். ‘அய்க்கிய
அமெரிக்கா முதலில்’ என்றார். இப்போது
தமது பட்ஜெட் முன்னுரையில், ‘அய்க்கிய
அமெரிக்காதான் முதலில் என்று முன்வைக்கும் ஒரு பட்ஜெட், தன் மக்களின் பாதுகாப்பையே முதலில் வைக்க
வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் வளமை இல்லை’ என்கிறார். சீனா, சவுதி அரேபியா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா என்ற 9 நாடுகளின் இராணுவ பட்ஜெட்டுகளுக்கும் கூடுதலாக,
641 பில்லியன் டாலர்
இராணுவத்திற்கு ஒதுக்கி உள்ளார். (41 லட்சத்து 66 ஆயிரத்து 500 கோடி). ஏப்ரல் 7 அன்று சிரியா மீது 59 டோமோஹாக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி
உள்ளார். வடகொரியாவை அச்சுறுத்துகிறார். சிஅய்ஏ உளவு நிறுவனத்துடன், நிதி மூலதனத்துடன், போர்த் தொழிலுடன் சமாதானம் செய்து கொண்டு
விட்டார். ‘மறக்கப்பட்ட
அய்க்கிய அமெரிக்கர்களை’ கைவிட்டுவிட்டார்.
இப்போதும், சட்ட விரோதமாகக்
குடியேறியவர்கள், பயங்கரவாதிகள்,
வேலைகளைத்
திருடுபவர்களிடம் இருந்து, ஆசியர்களிடமிருந்து,
ஆப்பிரிக்க
வம்சாவழியினரிடமிருந்து, இசுலாமியர்களிடம்
இருந்து, மெக்சிகர்களிடமிருந்து,
அய்க்கிய அமெரிக்காவை,
‘வெள்ளை அமெரிக்காவை’
பாதுகாக்கும்
வாய்வீச்சைத் தொடர்கிறார்.
மோடியும்,
பாகிஸ்தானுக்கு எதிரான
துல்லியத் தாக்குதல், 1000 ஆண்டு அந்நியர்
ஆட்சிக்கு முடிவு கட்டுவது, இசுலாமியர்க்கு
ஆதரவான பாகுபாட்டை எதிர்ப்பது என்றுதான், தம் அரசியலை வடிவமைத்துள்ளார்.
மோடி
அரசாங்கத்தின் 2016 - 2017 பொருளாதார
ஆய்வறிக்கை பகிரங்கமாகப் பிரகடனம் செய்கிறது; ‘இந்தியா தனது ‘சோசலிச பார்வையை’ கைவிட்டுவிட்டது. அதற்கு பதில், தடையற்ற வர்த்தகம், தடையற்ற மூலதன நுழைவு, தனியார் துறை மீது சார்பு என்ற ‘வாஷிங்டன் கருத்தொற்றுமையை’ ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டாக,
இருந்துவரும் ஒவ்வொரு
இந்திய அரசாங்கமுமே இந்த வழியிலான சீர்திருத்தங்களைத்தான் அமல்படுத்துகின்றன. இந்த
25 ஆண்டுகால
சீர்திருத்தங்களின் விளைவாக, மூடுண்ட திசை
தெரியாத ஒரு பொருளாதாரம் என்பதிலிருந்து, இன்று நாம் காணும் தடையற்ற செழிப்பான பொருளாதாரத்திற்கு மாறும் ஒரு
குறிப்பிடத்தக்க அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளது’. இது தேவபாஷை. சாமான்யர் புரிந்து கொள்ள
முடியாது. மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது
இவைதான்:
ஸ் பாஜக
அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, காங்கிரஸ் அய்க்கிய முன்னணி அரசாங்கங்கள்
பின்பற்றிய அதே கொள்கைதான்.
ஸ் அதாவது, பொதுத் துறையை ஒழித்துக் கட்டுவது, முதலீட்டாளர்க்கு எந்த தடையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, மக்கள் நலப் பணிகளிலிருந்து அரசு பின்வாங்குவது,
எல்லாம் தனியார்மயம்,
அரசு கஜானா
வசதியானவர்களுக்கு மட்டுமே திறந்துவிடப்படும் என்பவைதான், அந்தக் கொள்கைகள் ஆகும்.
ஸ் இந்தக் கொள்கைகளில், பாஜகவுக்கும் பாஜக எதிர்ப்பு கட்சிகளுக்கும்
கருத்தொற்றுமை உண்டு.
உத்தரபிரதேச
சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு திரும்பவும் மோடி ‘தேவ பாஷை’ பேசி உள்ளார். ‘வறியவர்கள் சலுகைகளை, சில்லறைப் பயன்களை விரும்புவதில்லை. அவர்கள்
வாய்ப்புக்களை, அதிகாரம்
பெறுதலையே விரும்புகிறார்கள்’. ‘இனி நடுத்தர
வர்க்கம், வறியவர் பளுவை
சுமக்க வேண்டியதில்லை’.
மோடி
அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். இது வரை வறியவர்களின் சுமையை நடுத்தர வர்க்கம்
சுமந்ததாக அவர் சொல்வது உண்மை அல்ல. அவர் சொல்வது இதுதான்: ‘வறியவர்க்கு தரும் சலுகைகளை சில்லறைப் பயன்களை
எடுத்துவிட்டால், பொருளாதாரத்தின்
மீதான சுமை நீங்கும். அப்போது பொருளாதாரம் முன்னேறும். நடுத்தர வர்க்கம் மேலே
செல்லும்’. அம்பானி, அதானிக்கு, மிட்டல், ஜிண்டலுக்கு வாரித் தந்தால், அது பொருளாதாரத்துக்கு நல்லது. வறியவர்க்குத்
தந்தால், அது
பொருளாதாரத்தை அழுத்தும் சுமையாகும். ‘வாய்ப்புக்கள்’ ‘அதிகாரம்
வழங்குதல்’ என்பவை மாய்மாலச்
சொற்கள். அம்பானி, அதானி, அய்க்கிய அமெரிக்காவின் ஆட்சி நடத்துபவர்,
‘ஏழைகளுக்கு அதிகாரம்
வழங்குதல்’ பற்றிப் பேசுவது
மோசடி. குறை கூலி, சிறுவீத விவசாய
ஒழிப்பு, நலப்பயன்கள்
அரிப்பு, பறிப்பு
நடவடிக்கைகளை முடுக்கி விடுபவர்கள், ‘வாய்ப்புக்கள்’ பற்றிப் பேசுவது
ஏமாற்று. ரூ.1000, ரூ.500 நோட்டுக்களின் மதிப்பகற்றி மக்கள் மீது போர்
தொடுத்த மோடி, நிதி
மூலதனத்திற்கு புதிய தொழில்களுக்கு பிரும்மாண்டமான வாய்ப்புக்கள் வழங்கிய மோடி,
மக்களைப் பிளவுபடுத்தி,
அவர்கள் ஒற்றுமையைச்
சிதைத்து, மக்களை
ஒட்டாண்டியாக்கி மூலதனத்தைக் கொழிக்க வைக்கவே திட்டமிடுகிறார்.
2000ஆவது ஆண்டில்
இந்தியாவின் மேல் அடுக்கு 10% பேர் கைகளில்,
இந்தியாவின் சொத்துக்கள் 36.8% இருந்தன. 2016ல் அந்த 10% பேரிடம் 58.4% சொத்துக்கள் இருந்தன.
மோடியை, சங்பரிவாரை எதிர்கொள்வது
எப்படி?
இந்து நாளேட்டில்
நிஸ்ஸிம் மன்னத்துகரேன் சிந்தனையைத் தூண்டும் ஒரு கட்டுரையை எழுதி உள்ளார். 2017 உத்தரபிரதேச தேர்தல் முடிவு, பலரைச் சோர்வுற வைத்துள்ளது; கவலையில் ஆழ்த்தி உள்ளது. 2019, 2024 என அடுத்தடுத்து சங்பரிவார் வென்று, இந்து ராஷ்டிரா வந்துவிடும் என்று கூட கவலைப்பட
வைத்துள்ளது. நிஸ்ஸிம், ஒரு கேள்வியை
எழுப்புகிறார். 2014 மோடியின் வெற்றி,
2017 பாஜகவின் உத்தரபிரதேச
வெற்றி, இந்துத்துவாவின்
வெற்றி, மதச்சார்பின்மையின்
தோல்வி என்றோ, டெல்லி, பீகாரில் பாஜக தோற்றதை இந்துத்துவாவின் தோல்வி
மதச் சார்பின்மையின் வெற்றி என்றோ அழைக்க முடியுமா என்று கேட்கிறார். இந்த
அணுகுமுறை, ‘ஜனநாயகத்தை
தேர்தல்மயமாக்குவது’ எனச் சரியாகவே
விமர்சிக்கிறார். அதாவது, தேர்தல்
பெரும்பான்மைகள், சரி தவறு எவை
என்பவற்றையோ, உண்மையான
ஜனநாயகத்தையோ மக்களாட்சியையோ கொண்டு வராது என்றும், மக்கள் தமது சமூக நிலைமைகளை தாமாகவே
உணர்வுபூர்வமாக மாற்றும் போதே ஜனநாயகம் வரும் என்றும் வாதாடுகிறார்.
இந்தியாவில்
புதிய ஆயிரமாவதாண்டில், பெரும்பான்மையினரின்
தேசியவாதம் பரவிப் படர்ந்துள்ளது. சங்பரிவார் முன்வைக்கும் தேசபக்தி, பாகிஸ்தான் எதிர்ப்பு, இசுலாமியர் மீது வெறுப்பு, வன்மையான அரசு, கடுமை யான சட்டங்கள் என்பவற்றில், முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் உடன்பட்டு
சரணடைந்து விட்டன. இந்திய பொருளாதார வளர்ச்சிப் பாதையின் நெருக்கடி, நிலவும் அரசியல் நிறுவனங்கள் மீது மக்கள்
திரளின் கடுமையான அதிருப்தி என்ற பின்னணியில், மோடி, ஒரு ஜனரஞ்சகமான யதேச்சாதிகார தேசிய தீர்வை முன்வைக்கிறார். டிரம்ப், எர்டோகன், மோடி போன்ற சக்திகள், உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைபொருட்கள்.
முதலாளித்துவ அரசியல் முன்வைத்துள்ள ஆபத்தான தீர்வுகள்.
மோடி பெற்றுள்ள
வெற்றிகளின் பிரம்மாண்டம், நிச்சயம்
அவருக்கே பெரும் சுமையாக மாறும். சாமான்ய மக்களுக்கானவர், நம்மவர் என்ற தோற்றம், யதார்த்தத்தைச் சந்தித்துதானே ஆக வேண்டும்.
மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள், அவர்கள்
கண்களுக்கெதிரில் செல்வங்களும் வருமானங்களும் சிலர் கையில் குவியும்போது, நிச்சயமாய் பெரிய அளவுக்கு அதிகரிக்கும். மோடி
அரசால் அவற்றை நிறைவேற்ற முடியாது.
இப்போதே, சாமான்யர்களின், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ஆட்சி என்று
சொல்லப்பட்ட உத்தரபிரதேச ஆட்சி, 47 அமைச்சர்களில் 26 உயர் சாதியினர் கொண்ட உயர்சாதி ஆட்சி என
மக்களால் காணப்படுவதில் இருந்து, தப்பிக்க
முடியவில்லை. அனைத்தும் தழுவிய, நாடெங்கும் சீரான,
ஏகப்பெரும்பான்மை மக்கள்
பயன்பெறும், நீதி நிறைந்த,
கவுரவமான வேலைகளும்
வாய்ப்புக்களும் உள்ள வளர்ச்சியை மோடி
அரசால் ஏற்படுத்த முடியாது. பிராந்தியங்களுக்குள்ளும், பிராந்தியங்களுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வு
பெருகும். சிலர் இன்புற்று இருக்க பலர் துயர் அடைவது நடக்கும். தொழில்நுட்ப
பொருளாதார மேம்பாடு, மக்களுக்குச்
சீரழிவையும் சிதைவையுமே கொண்டுவரும்.
சங்பரிவார்
ஆபத்து, பெரும்தொழில்
குழும மதவாத ஆபத்து, பேராபத்துதான்.
அந்த சவால்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. பாதிக்கப்படும் சக்திகள் எல்லாம்
போராட்டங்களில் ஒன்றுபட வேண்டும்.
அதே நேரம்,
பாஜக ஆட்சி, போராட்ட இயக்கங்களுக்கு வாய்ப்புக்களையும்
வழங்குகிறது. கடந்த சில வருடங்களில் எழுந்த, விவசாயிகள், மாணவர்கள், இளைஞர், அறிவாளிகள், தொழிலாளர் எதிர்ப்பு ஆகியவற்றைக் காணத்
தவறக்கூடாது. எதிரியை, மிகைமதிப்பீடு
செய்து, மக்களின் போராட்ட
ஆற்றலை வாய்ப்புக்களை குறை மதிப்பீடு செய்தால், போர்த்தந்திரரீதியில் தோல்வி மனப்பான்மைக்கு
ஆளாவோம். செயல்தந்திரரீதியில், அரசியல்
முன்முயற்சிகளுக்கான ஆற்றலை இழப்போம்.
மோடி ஆட்சி
அடிப்படையில், பெரும் பான்மை
மக்களின் நலன்களுக்கு விரோதமா னது. மக்கள் நலன்களுக்காக, மக்களின் ஒன்று பட்ட போராட்டங்கள், ஜனநாயகத்திற்கான போராட்டங்கள், மக்கள் நலன்கள் மீது அக் கறை கொண்ட ஏகாதிபத்திய
எதிர்ப்பு தேச பக்த போராட்டங்களுக்காக, கருத்துக்கள் அளவிலும் களத்திலும் துணிந்து நிற்போம்.