கடலூர்
வெள்ளம் பேரிடர்
குற்றமய
அலட்சியத்தில் ஜெயா அரசாங்கம்
சந்திரமோகன்
சொத்துக்
குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, கர்நாடகாவில் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரம் சிறையில்
ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் இறந்து போனவர்களையெல்லாம் தனக்காக
உயிர்விட்டதாக கணக்கெடுத்து, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு
அஇஅதிமுக அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியது. ஆனால், நவம்பர் 8ந்தேதி
முதல் கடலூரைத் தாக்கிய புயல் மழை
வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிர் இழப்புகள்
சேதாரம் பற்றிய முழுமையான அறிக்கையை
இதுவரையிலும் அரசாங்கம் வெளியிடவில்லை; இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றதாகத்
தெரியவில்லை. நவம்பர் 15ந்தேதி மாவட்ட நிர்வாகம்
வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பேரிடர் இழப்புகள்
பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவரவில்லை. 32 பேர் இறந்ததாக ஒரு
பட்டியல் துவக்கத்தில் வெளியானது; ஆனால்,
நூறுக்கும் அதிகமானவர்களின் விபரங்களை செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
இதுவரையிலும், 270 பேர் வெள்ளம்-பேரிடருக்குப்
பலியாகியுள்ளனர். இறந்த வர்களில் கணிசமானோர்
தலித்துக்கள். நீர்வழித் தடங்களை, ஏரிகள் வாய்க்கால்களை ஒட்டிய
பகுதிகளில், தாழ்வான/பள்ளப்பகுதிகளில் வாழ்ந்த
தலித் மக்களின் குடிசைகள்/வீடுகள், கால்நடைகள், துண்டு
துக்காணி நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன.
மாவட்ட மக்கள் தொகையில் தலித்துகள்
30 சதவீதம் ஆவர். 2011 விவசாய சென்சஸ் அடிப்படையில்
மாவட்டத்தில் உள்ள மொத்த நில
உடமையாளர்கள் 3.10 லட்சம் பேர். அதிலும்,
சிறு, குறு விவசாயிகள், 1 ஹெக்டேருக்கு
(2.5 ஏக்கருக்கு) குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்
2.50 லட்சம் பேர். அவர்களிலும் தலித்துகள்
மட்டும் 50,067 பேர். மாவட்டத்தின் மொத்த
விவசாய நிலப்பரப்பில் தலித்துகளிடம் 10%, அதாவது 23,817 ஹெக்டேர் (சுமார் 60,000 ஏக்கர்) நிலம் உள்ளது.
நவம்பர்
8 முதல் டிசம்பர் 10 வரை தொடர்ந்து பெய்த
மழை, புயல், சூறாவளிக்காற்று ஆகியவற்றாலும்,
பரவனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கெடிலம் ஆறுகள் மற்றும்
வீராணம் ஏரி, வாலாஜா ஏரி,
பெருமாள் ஏரி மற்றும் பல்வேறு
வாய்க்கால்கள், வடிகால்களில் பெருக்கு எடுத்து ஓடிய வெள்ள
நீர் ஏற்படுத்திய பேரிடரால், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி,
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய தாலுக் காக்களில்/பகுதிகளில் 6 ஒன்றியங்கள், கடலூர், நெய்வேலி நகரங்கள்
மூழ்கின. நவம்பர் 24ந் தேதிய சாட்டிலைட்
(செனின்டெல்-1) படங்கள் கடலூர் மாவட்டத்தில்
வெள்ள நீர் மூழ்கிய பரப்பு
360 ச.கி.மீ. எனவும்,
விவசாய நிலங்கள் மட்டும் 307 ச.கி.மீ.
எனவும் தெரிவித்தன. 60,000 ஹெக்டேர் விவசாயத்திற்கு (சுமார் 1.50 இலட்சம் ஏக்கர்) சாகுபடி
செய்யப்பட்ட பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30,000 மக்கள் தற்காலிகமாக நிவாரண
முகாம்களுக்கு (பள்ளிகள், சமூக கூடங்கள் போன்ற
தங்குமிடங்களுக்கு) அனுப்பப்பட்டனர். நவம்பர் 9 அன்று பரவனாறு கரை
புரண்டு ஓடியதால் மட்டும் நெய்வேலி நிலக்கரி
நிறுவனத்தை சுற்றியுள்ள 40 கிராமங்கள் நீரில் மூழ்கின. என்எல்சி
சாம்பல் ஏரி உடைந்து ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கால், பண்ருட்டி தாலுகா பெரியகாட்டுப் பாளையத்தில்
மட்டும் 10 தலித்துகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள்
நீரில் மூழ்கின. மொத்த மக்கள் தொகையான
26 லட்சத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தின் தாக்குதலுக்கு
நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்பட்டனர். (எனவேதான், தன்னார்வலர்கள் நிவாரணங்களை வழங்கச் சென்றபோது பொருட்களை
ஆங்காங்கு கைப்பற்றுகின்றனர் என்ற செய்தி ஊடகங்களில்
பரவலாக வெளியானது). ஆடு, மாடுகள், கோழிகள்
உயிரிழப்பு, ஒரு இலட்சம் குடிசைகள்/வீடுகள் சேதாரம், வீட்டிலிருந்த
உடமைகள், பொருட்கள் இழப்பு, படகுகள்-மீனவர்களுக்கு
பாதிப்பு, சிறிய தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு
என ரூ.10,000 கோடிக்கும் அதிகமான சொத்து இழப்பு,
வெள்ளம்-பேரிடரால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இயற்கை
சீற்றங்களுக்கு பூகோள ரீதியாக இலக்காகும்
வகையில் கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது.
2004ல் சுனாமி தாக்குதல், 2005ல்
மழை, வெள்ளம், 2008ல் நிஷா புயல்,
2009ல் நீலம் புயல், 2011ல் தானேப் புயல்
எனத் தொடர்ந்து கோரத் தாண்டவங்களை சந்தித்து
வருகிறது. 2015ல் வரலாறு காணா
மழை, புயல், வெள்ளம் பேரிடரை
சந்தித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இதுவரையிலும் வந்து பார்க்கவில்லை. மாவட்ட
ஆட்சியர்/மாவட்ட நிர்வாகம் எங்கேயுள்ளது
எனத் தெரியவில்லை. கடலூரில் அரசு நிவாரண முகாம்களில்
குவிந்துவிட்டப் பொருட்களை வழங்கிட டிசம்பர் 24 அன்றுதான்,
காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் (எஸ்.பி) வேலையை துவக்குகிறார்.
மாவட்ட அரசு அதிகாரிகளின் பணிகள்
என்ன, மாவட்ட பேரிடர் மேலாளுமை
நிறுவனம் எதுவும் உள்ளதா எனத்
தெரியவில்லை. மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு
ஆகியவற்றில் எந்த வகையிலும் கடலூர்
மாவட்டம் தமிழக அரசாங்கத்தின் பரிசீலனையில்
இருப்பதாகத் தெரியவில்லை. இது குற்றமய அலட்சியம்.
பேரிடரும்,
அரசாங்கத்தின் கடமைகளும்
எந்தவொரு
பேரிடர் சூழலும் மீட்பு, நிவாரணம்,
மறுவாழ்வு என்ற மூன்று விதமான
கடமைகளை அரசாங்கத்திடம் இருந்து கோருகிறது. அவை,
உடனடியாக உயிர்களை காப்பாற்றுவது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குவது/பாதுகாப்பது மற்றும் புதியதொரு வாழ்வைத்
துவங்குவதற்கும், பேரிடர் தடுப்பு/எதிர்கொள்வதற்கான
நடவடிக்கைகள் உள்ளடக்கிய மறுவாழ்வுத் திட்டத்தை மேற்கொள்வது ஆகியவை. கடலூர் மாவட்டத்தில்,
தமிழக அரசாங்கம்/மாவட்ட நிர்வாகம் இந்த
வகையில் செய்தவை, செய்ய வேண்டியவற்றைப் பரிசீலனை
செய்ய வேண்டியுள்ளது.
நவம்பர்
9 அன்று வெள்ளம் பெருக்கெடுத்து, மனித
உயிர்கள் அடித்துச் சென்றபோது, அரசாங்கமே இல்லை என்றளவில் மாவட்ட
நிர்வாகம் செத்துப்போய் இருந்தது. வரலாறு காணாத மழையை,
வெள்ளத்தை எதிர்பாராத ஏழைகள் நூற்றுக்கும் அதிகமானோர்
இறந்து போயினர். ஆங்காங்கு கிராமங்கள், வீடுகள்/குடிசைகள் நீரில்
மூழ்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளத் தில் சிக்கிக்
கொண்டிருந்த மக்களை மீட்க அரசாங்கமோ,
மீட்பு படைகளோ வரவில்லை. மீனவர்கள்
உதவியுடன், படகுகளை வாடகைக்கு எடுத்துவந்து,
ஒவ்வொரு கிராமமும், குடியிருப்பும் தங்களைத் தாங்களே மீட்டுக் கொண்டனர்;
பாதுகாத்துக் கொண்டனர். மிகத் தாமதமாக டிசம்பரில்
வந்த மீட்பு படையினர், இராணுவத்தினர்
மருத் துவ முகாம்கள் போன்ற
பணிகளில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உயிர்கள்
பறிபோய்க் கொண்டிருந்த தருணத்தில், தேசிய பேரிடர் மேலாளுமைச்
சட்டம் 2005, அதன் வழிகாட்டுதல்கள் இருப்பது
பற்றி மாவட்ட ஆட்சியர் துவங்கி
எவருக்கும், எதுவும் தெரியவில்லை. தமிழக
முதல்வர் தலைமையிலான மாநிலப் பேரிடர் மேலாளுமை
நிறுவனமோ அதன் மாவட்ட முகமையோ
செயல்படவே இல்லை.
நிவாரணத்தில்
அலட்சியமும், ஊழலும்
கடலூர்
மாவட்டத்தில் வெள்ளம் பேரிடர் பாதித்த
பகுதிகளுக்கு சில நாட்கள் கழித்து
பயணம் செய்த அதிகாரிகள், ஆளும்
கட்சியின் அமைச்சர்கள், அடையாளபூர்வமான நிவாரணங்களை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரசி, வேட்டி,
சேலை, ரூ.5000 அல்லது ரூ.4000
என குடிசை/வீடுகள் சேதமுற்றதற்கான
நிவாரணம் ஆகியவற்றை வழங்கினர். அவையும், பாதிக்கப்பட்ட கிராமங்களின் அனைத்து குடிசைகளுக்கும்/வீடுகளுக்கும்
வழங்கப்படாததால், அவரவர் கிராமத்திற்கு கிடைத்த
தொகையை ஊராட்சி தலைவர்கள் வகுத்து
சராசரியாக ரூ.2800, ரூ.3000 என்று கூட
வழங்கினர். ஒரு சில இடங்களில்
அமைச்சர்கள் பிஸ்கட்டுக்களை வழங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புப்படி,
ரூ.100 கோடி ரூபாய்க்கு நிவாரணப்
பணிகள் நடைபெறுவதாகவும், ரூ.40 கோடி உணவுக்கு
மட்டும் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தெரிவித்துள்ள விவரப்படி முகாம்களுக்கு அனுப்பப்பட்ட 30,000 பேருக்கு ஒரு நாள் உணவு
வழங்க அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் செலவு
செய்யப்பட்டதாக மதிப்பிட்டு, அதிகபட்சமாக ஒருமாத காலம் அவர்களுக்கு
உணவு வழங்கியதாக கணக்கிட்டாலும் நான்கரை கோடி ரூபாய்க்கு
மேல் செல வாக வாய்ப்பில்லை.
ஊழல் உணவிலிருந்து துவங்குகிறது. உண்மையிலேயே, ஏராளமான அமைப்புகள், தன்னார்வலர்கள்
ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு
மாத காலமும் உணவுகளை வாரி
வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கு நிவாரணம்
வழங்குவது துவங்கப்படவே இல்லை. கணக்கெடுப்புதான் துவங்கியுள்ளது.
மானாவரிப் பயிர் இழப்பீடு ஏக்கருக்கு
ரூ.4000 என அறிவிப்பு மட்டும்
செய்யப்பட்டுள்ளது.
புனர்வாழ்விற்கான
முக்கிய பிரச்சனைகள்
மின்விநியோகத்தை
மீட்டெடுத்தல், சாலைகளை சீரமைத்தல், ஏரி
வாய்க்கால்களை தூர்வாரி ஆழ, அகலப்படுத்துதல், என்எல்சி
நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்றுத் திட்டங்கள், கடலூரில் பேரிடர் மேலாளுமை நிறுவனத்தை
செயல்பாட்டுக்கு கொண்டு வருதல்-போன்றவை
உடனடி கவனத்தைக் கோரும் பிரச்சனைகளாகும். டிசம்பர்
23 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற வெள்ள நிவாரண ஆலோசனைக்
கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்களை சீரமைப்பதுப்
பற்றி மட்டும் பேசப்பட்டதாக செய்தி
வெளியாகி உள்ளது. புனர்வாழ்விற்கான அடிப்படைப்
பிரச்சனைகளில், தமிழக அரசின் சிந்தனையும்,
செயல்பாடும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
கடலூர்
மாவட்டத்தில், 1000 கி.மீ. நீளத்திற்கானச்
சாலைகள் மாவட்ட, மாநில, தேசிய
நெடுஞ்சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளன. கடலூரிலிருந்து விருதாச்சலம்,
பண்ருட்டி, விழுப்புரம் செல்லும் சாலை வழிகளில் தார்
ரோடுகளே இல்லை; அடித்து, அரித்துச்
சென்றுவிட்டன. தமிழ்நாடு முழுவதுமான சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை/குழிகளை
அடைப்பதற்காகவென்று, தற்காலிக சீரமைப்பிற்காக மாநிலப் பேரிடர் நிவாரண
நிதி (எஸ்டிஆர்எஃப்)லிருந்து ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
ரூ.129.17 கோடி செலவு செய்யப்படுவதாகவும்
தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால்,
கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கடலூர்
மாவட்டச் சாலைகளை சீரமைக்க வேண்டும்
என்ற கோரிக்கையுடன், தனியார் பேருந்துகள், வாகனங்கள்
டிசம்பர் 30 அன்று வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டன.
நவம்பர்
8, 9 புயல் மழைக் காற்றால் மின்
இணைப்புகள் கடுமையாக துண்டிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பல
பகுதிகள், சில நாட்கள் மின்சார
இணைப்பு இல்லாமலிருந்தன. பிற மாவட்டங்களிலிருந்தும் மின்வாரியப் பணியாளர்களை
வரவழைத்து மின்சாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; மின்சார
வாரியம் ஒரு வார காலம்
பணியாற்றி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியது. ஆனால், சென்னையை மழைத்
தாக்கத் துவங்கியவுடன், கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய
மின் வாரியப் பணியாளர்கள் அனைவரும்
சென்னைக்குச் சென்றுவிட்டனர். கடலூர் மின்சார சீரமைப்பிற்கு
ஆள் பலம் இல்லாமல் வேலைகள்
மந்தமாக நடைபெறுகின்றன. மழை வெள்ளத்தால், சரிந்து
போன டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் இன்னமும்
ஆங்காங்கு அப்படியே கிடக்கின்றன. 10% விவசாய மின் இணைப்புகள்
கூட இதுவரை மீட்கப்படவில்லை. இந்த
நிலை நீடித்தால், முழுமையாக விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க சில மாதங்கள்
ஆகும்.
பராமரிப்பே
நடைபெறாத ஏரிகள், வாய்க்கால்கள்
வீராணம்
ஏரி, காவிரியின் மிகை நீரைப் பெறுகிற,
1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள விரிந்து
பரந்துள்ள ஏரியாகும். காட்டுமன்னார்குடியில் துவங்கி, சேத்தியா தோப்பு வரையிலும் நீண்டிருக்கிற
பழம்பெரும் நீர்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு 14,650 இலட்சம்
கன அடியாகும். 1851ல் கட்டப்பட்ட சேத்தியாதோப்பு
அணைப்பகுதியிலிருந்துதான்,
சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது;
தினசரி 1800 இலட்சம் லிட்டர் வரை
சென்னைக்கு தண்ணீர் செல்கிறது; பொதுப்
பணித் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாக
சொல்லப்பட்டிருந்தாலும், வீராணம் ஏரி, சென்னை
குடிநீர் வழங்கும் வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் நடைமுறையிலிருப்பதாகத் தெரிகிறது. பல்லாண்டு காலம் தூர் வாரப்படாத
தால், தூர் வாரி முழுமையான
தண்ணீர் பிடிப்பைக் கொண்டு வருவதற்காக, ரூ.40
கோடி வழங்கியிருப்பதாக, 2013 ஏப்ரலில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்
தெரிவித்தார். ஆனால், வீராணம் ஏரி
முழுமையாக ஆழப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஏரியின் பல இடங்கள்
மண்மேடுகளாக இருக்கின்றன. எனவேதான், ஒரு நாள் பெருமழையையேத்
தாக்குப் பிடிக்காமல், வீராணம் ஏரி திறந்துவிடப்பட்டு,
அதன் வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து, காட்டுமன்னார்குடி,
சிதம்பரம் தாலுக்காக்களின் பல கிராமங்களையும் மூழ்கடித்தது.
வீராணம் ஏரியின் பராமரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட
நிதி, தூர் வாருதல் பணிகள்
போன்றவற்றைப் பற்றிய விசாரணை, பெருமாள்
ஏரியிலும் பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகள் பற்றியும் வெளிப்படையான
அறிக்கைத் தேவைப்படுகிறது.
கடலூர்
முதுநகர் அருகேயுள்ள உப்பனாறு, கெடிலம் இரண்டு முகத்துவாரங்கள்தான்,
கடலோரமுள்ள 108 கிராமங்களுக்கும் வெள்ளநீர் வடிகால்களாகும். இவைத் தூர் வாரப்பட்டு
6 ஆண்டுகள் ஆகின்றன. எனவேதான், வெள்ளம் பேரிடரின் பொழுது,
வெள்ளநீர் விரைந்து கடலுக்குச் சென்று கலக்காமல், கடலூர்
நகரமே தண்ணீரில் மூழ்கியது. சிப்காட், காரைக்காடு போன்ற மீனவர் கிராமங்களும்
வெள்ளத்தில் மிதந்தது. மீனவர்களின் படகுகள், வலைகள், உடமைகள் கூட
அடித்துச் செல்லப்பட்டது. சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள்,
நிறுவனங்களும் மூழ்கின.
என்எல்சி
நிறுவனம் ஏற்படுத்தும் சுற்றுச்
சூழல் கேடுகள்
கடலூர்
மாவட்ட பேரிடரின் ஒரு ஊற்றுக் கண்ணாக,
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இருக்கிறது. என்எல்சி சுரங்கங்களின் பரப்பளவு 60 ச.கி.மீ.க்கு கூடுதலானதாகும். (முதல்
சுரங்கம் 24.69 ச.சி.மீ.,
இரண்டாவது சுரங்கம் 8.36 ச.கி.மீ.,
மூன்றாவது சுரங்கம் 27 ச.கி.மீ)
தினசரி 24 மெட்ரிக் டன் நிலக்கரி வெட்டி
எடுக்கப்படுகிறது. சுரங்கங்களிலிருந்து பெருமளவுத் தண்ணீர் தினசரி வெளியேற்றப்படுகிறது.
தண்ணீரோடு மண்ணும் கலந்து வெளியேறி
ஏரிகள், வாய்க்கால்களில் சேறு சகதி நிறைந்து
தூர்ந்து போகின்றன. நீர்நிலைகள் மண்மேடுகளாக, செடி கொடி புதர்கள்
நிறைந்த காடுகளாக மாறுகின்றன. தண்ணீர் போவதற்கு வழி,
வடிகால்கள் இல்லை என்ற நிலை
உருவாகிவிட்டது. எனவேதான், நவம்பர் 8ல் பெய்த பெருமழையால்
நெய்வேலி டவுன்சிப் நகரியமே மூழ்கிப் போனது.
சுரங்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. எனவே, ராட்சச பம்புகள்
மூலம், உடனடியாக நீர் இறைக்கப்பட்டு பரவனாற்றுக்கு
கொண்டு செல்லப்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால்
கரிவெட்டி கிராமம் மூழ்கியது. மற்றொரு
புறம், முதல் சுரங்கத்தில் இருந்த
சாம்பல் ஏரி உடைந்து, பண்ருட்டி
தாலுகா, பெரிய காட்டுப்பாளையம், விசூர்
பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து
ஓடிச் சென்று, 10 தலித்துகளை உயிரோடு இழுத்துச் சென்றது.
நெய்வேலி
பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால், நாசமாகிப் போனது வாலாஜா ஏரிதான்.
1851ல், முகமது அலிதான் வாலாஜா
நவாப் நினைவாக பெயரிடப்பட்டதாக சொல்லப்படும்,
வாலாஜா ஏரி 1664 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் மிகப்
பெரிய பாசனப் பரப்பை கொண்டதாகவும்
திகழ்ந்திருந்தது. ஆனால், 1956 க்குப் பின்னர், என்எல்சி
சுரங்க செயல்பாடுகள் படிப்படியாக விரிவடையத் துவங்கியவுடன், நெய்வேலி சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் சேறு கலந்த நீர்
வாலாஜா ஏரியை நிறைத்து தூர்ந்து
போனது. முந்தைய கடலூர் மாவட்ட
ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி மேற்கொண்ட
முயற்சியால், மிகத் தாமதமாக மார்ச்,
2014ல் என்எல்சி நிறுவனம் ரூ.13.72 கோடி செலவில், ஏரியில்
இருந்து 21 இலட்சம் கன மீட்டர்
மண் நீக்கத் திட்டமிட்டது. என்எல்சி
திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு தலைமையில், 15 கிராம மக்கள் உதவியுடன்
ஓரளவு ஏரியை மீட்கும் திட்டம்
மேற்கொள்ளப்பட்டது. ஓரளவு ஏரி மீட்கப்பட்டது.
அதுவும் நடைபெறவில்லையெனில், தற்போதைய பேரிடர் சூழலில் இன்னும்
கூடுதலான உயிர் இழப்புகள், சேதாரங்கள்
ஏற்பட்டிருக்கும். கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்
அடிப்படையில், விதிப்படி என்எல்சி நிறுவனம் தனது வருமானத்தில் 10% சுற்றுச்
சூழல் பாதிக்கப்படும் பகுதிக்கு, மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால்,
வழங்குவதில்லை. கோடி கோடியாக கொள்ளையடிக்கும்
என்எல்சி அதிகாரிகளுடன் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடும் ஆளும் கட்சியினர், பிற
அரசியல் கட்சியினர், என்எல்சி நிறுவன
சுற்றுச் சூழல் கேடிற்கு எதிராகப்
போராடுவதில்லை. கடலூர் வெள்ளப் பேரிடருக்கு
ஒரு முக்கிய காரணமாக இருந்த
என்எல்சி நிறுவனம் தற்போது வெறும் ரூ.50
கோடியைத்தான் நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட
பேரிடர்
மேலாளுமைக் கட்டமைப்பு
2004 சுனாமி
தாக்குதலுக்குப் பிறகுதான், 2005ல் தேசியப் பேரிடர்
மேலாளுமைச் சட்டம் உருவானது. தேசியப்
பேரிடர் மேலாளுமை நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் பேரிடர் தாக்கும் மாவட்டங்களாக
கடலூர், சென்னை, காஞ்சிபுரம் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், 2008ல்தான், தமிழக முதல்வரை
தலைவராகக் கொண்ட மாநில பேரிடர்
மேலாளுமை நிறுவனம் (எஸ்டிஎம்ஏ) உருவாக்கப்பட்டது. 2005 மத்திய சட்டத்தை அமல்படுத்தும்
வகையில், மாநில பேரிடர் மேலாளுமை
நிறுவனத்திற்கு, தமிழகத்தில் நடைமுறை செயல்பாட்டு விதிமுறைகளை
உருவாக்க வேண்டும்; இதுவரை உருவாக்கப்படவில்லை. ஜெயா
ஆட்சியில், 2013ல் மாநில பேரிடர்
மேலாளுமை நிறுவனம் (எஸ்டிஎம்ஏ) புதிதாக உருவாக்கப்பட்டது. அதற்கு
தனி ஆணையர் கூட கிடையாது.
முதன்மைச் செயலர் தகுதியிலிருக்கும் வருவாய்
நிர்வாகத்துறை ஆணையரே அதற்கும் பொறுப்பாளர்
ஆவார். ஆனால், ஜனவரி 8, 2015ல்
மீண்டும் புதிதாக மாநில பேரிடர்
மேலாளுமை நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டது. இதுவரை ஒரு கூட்டமும்
நடைபெறவில்லை. 2014ல் கடலூர் மாவட்டத்தில்,
தாசில்தார் தலைமையில் அவசரக் குழுக்களை அமைக்கச்
சொல்லி, ஒரு சுற்றறிக்கையை விட்டதோடு
சரி; ஜெயா ஆட்சியில் பேரிடர்
மேலாளுமை நிறுவனத்தின் கீழ் எந்த செயல்பாடும்
இல்லை; வெற்றுத்தாள் அமைப்பாக மாற்றப்பட்டதுதான், ஜெயா அரசாங்கத்தின் குற்றமய
அலட்சியத்தின் உச்சகட்டமாகும். பேரிடர் மேலாளுமைக் கட்டமைப்பு,
பணியாளர்கள், மீட்பு பொருட்கள், நிதி
என முழுமையானத் திட்டமாகும். இதைப் புறக்கணிக்கும் ஜெயா
அரசாங்கத்தின் மகா அலட்சியம், மக்களை
மீண்டும் மீண்டும் பேரழிவிற்கே இட்டுச் செல்லும்.
போராட்டப்
பாதையே தீர்வாகும்
வெள்ளம்
பேரிடர் தாக்கிய காலகட்டத்தையும், அதற்குப்
பிந்தைய நிலைமைகளையும் பரிசீலித்தால், செயல்படாத குற்றமய அலட்சிய ஜெயா
அரசாங்கத்திடம் போராட்டங்கள் மூலமாக மட்டுமே வாழ்வுரிமையை
பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத்
தெளிவாகத் தெரிகிறது. புறக்கணிக்கப்பட்டுள்ள
விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டுவர வேண்டும். பயிர் இழப்பீடு (நெல்,
சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.25,000, பருத்தி, கரும்பு, மரவள்ளிக்கு ரூ.50,000, வழங்கப்படுதல்), பயிர் கடன்களை ரத்து
செய்தல், ஆடு, மாடு, கோழி
இழப்பிற்கு நிவாரணம் வழங்கப்படுதல், சேதமுற்ற 1 இலட்சம் குடிசை/வீடுகளுக்கு
மாற்றாக கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தருதல், குடிசை இழந்தவர்களுக்கு ரூ.25,000,
வீடு சேதமுற்றவர்களுக்கு ரூ.50,000, வேலை இழந்த விவசாய/கட்டுமான/அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 இழப்பீடு,
மற்றும் மாதம் 50 கிலோ அரிசி, பருப்பு,
மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை
வழங்குதல் போன்றவற்றைப் பெற்றிட உள்ளூர்மட்ட போராட்டங்கள்
தேவைப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தேசிய ஊரக வேலையுறுதித்
திட்டம் உட்பட உடனடி வேலை
வாய்புக்களை கோருதல், ஏரிகள், வாய்க்கால்களை தூர்
வாருதல், அகலப்படுத்துதல் என்எல்சி நிறுவனத்திடமி ருந்து ரூ.1000 கோடி
இழப்பீடு கோருதல், பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகத்தில் நிலவும்
ஊழல் போன்ற வற்றிற்கு எதிரான
தொடர் இயக்கங்கள் தேவைப்படு கிறது. போராட்டங்கள், தொடர்
இயக்கங்கள் இல்லாமல் மக்கள் பேரிடரிலிருந்து மீண்டெழ
முடியாது. கட்சியானது அமைப்பானது மக்கள் போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு
தலைமைத் தாங்கிட தன்னை கட்டமைத்துக்
கொள்ள வேண்டும்.
இரட்டை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
8 பிரிக்கால்
தொழிலாளர் விடுதலைக்கான பிரச்சார
இயக்கம் துவக்கம்
ஜனவரி
6 அன்று சென்னை அம்பத்தூரில் ‘8 பிரிக்கால்
தொழிலாளர்களை விடுதலை செய்க’ இயக்கம்
துவங்கப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர்
பழனிவேல் தலைமை வகித்தார். கூட்ட
அரங்கில் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக்கும் விதமாக
வைக்கப்பட்டிருந்த பதாகையில் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தோழர் சுப.உதயகுமார் கையெழுத்திட்டு
துவக்கி வைத்தார்.
அம்பத்தூர்,
திருபெரும்புதூர், திருவெற்றியூர் பகுதிகளின் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த
தொழிலாளர் முன்னணிகள் கலந்து கொண்டார்கள். ஏஅய்சிசிடியு
அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி,
மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவகர்,
துணைத் தலைவர் தோழர் ராதாகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர் தோழர் இரணியப்பன், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர்
தோழர் சேகர், புரட்சிகர இளைஞர்
கழகத்தின் அகில இந்தியச் செயலாளர்
தோழர் பாரதி, மாநிலத் தலைவர்
தோழர் ராஜகுரு, மாநிலக் குழு உறுப்பினர்
தோழர் ராஜேஷ், அகில இந்திய
மக்கள் மேடையின் தோழர் வித்யாசாகர் ஆகியோர்
கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8 பிரிக்கால் தோழர்கள் விடுதலைக்கான பிரச்சாரம் செய்வது, நிதி திரட்டுவது, 15,000 ஸ்டிக்கர்களை
ஒட்டுவது, வெளியீட்டை பரவலாக எடுத்துச் செல்வது
ஆகியவை திட்டமிடப்பட்டன. திருபெரும்புதூர் முதல் திருவெற்றியூர் வரை
100 ஆலைகளிலுள்ள தொழிலாளர்களை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள
டன்லப் மைதான ஆக்கிரமிப்புக்கு எதிரான
போராட்டம் வெற்றி
டன்லப்
ஆலைக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி
மதிப்புள்ள மைதானம் அப்பகுதி விளையாட்டு
வீரர்களின் மைதானமாக பல ஆண்டு காலமாக
பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆலை
மூடப்பட்டு கலைப்புக்கான (லிக்விடேசன்) வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து
வருகிறது. இந்தக் காலத்தில் 500 தொழிலாளர்கள்
ஓய்வு பெற்றுவிட்டனர். இன்னும் 250 பேர் பணியாளர்களாக தொடர்கின்றனர்.
நீதிமன்றம்
டன்லப் ஆலைக்கு சொத்தில் உரிமையில்லை
என்று அறிவித்திருக்கிற நிலையில் மைதானத்தை கண்காட்சிக்கு லீசுக்கு விட முயற்சித்தது. இந்த
முயற்சி துவக்க நிலையிலேயே அகில
இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர்
தோழர் பாரதி, செயலாளர் தோழர்
டேவிட் ராஜ், ஏஅய்சிசிடியு மாநிலச்
செயலாளர் தோழர் மோகன் ஆகியோர்
முயற்சியால் முறியடிக்கப்பட்டது. டிசம்பர் 30 அன்று ஆக்கிரமிப்புக்கு எதிராக
சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட முன்னணிகளை காவல்துறை
கைது செய்தது.
ஜனவரி
1 அன்று அம்பத்தூர் காவல்நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு முற்றுகையிட்டனர். டன்லப் தொழிற்சங்கமும் போராட்டத்திற்கு
ஆதரவு கொடுத்தது.
ஜனவரி
5 அன்று ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உண்ணாவிரதப்
போராட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மைதானத்தில் நடைபெறவிருந்த
கண்காட்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தத்
தொடர் போராட்டத்தில் இகக (மாலெ), ஏஅய்சிசிடியு
முன்னணிகள் தோழர்கள் மோகன், பசுபதி, பழனிவேல்,
சேகர், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர்கள்
கண்ணன், சங்கர், அகில இந்திய
மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர்
சீதா, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின
தோழர்கள் அதியமான், சங்கர், புகழ்வேந்தன் கலந்துகொண்டனர்.
ஜனவரி
8 , சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவேந்தல்
ஜனவரி
8 அன்று கோவை சின்னியம்பாளையம் தியாகிகள்
ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நினைவிடத்தில் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர்
தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலத்
தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாநிலச் செயலாளர் தோழர்
தாமோதரன், இகக(மாலெ) கோவை
மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், பிரிக்கால்
தொழிற்சங்க நிர்வாகி தோழர் ஜானகிராமன், இகக(மாலெ) மாநகரச் செயலாளர்
தோழர் வேல்முருகன், ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் சந்திரன்
மற்றும் பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள்
மலர் வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார்கள்.
அதே நாளன்று திருவள்ளூர் மாவட்டம்
காரனோடையில் இகக(மாலெ) மற்றும்
ஏஅய்சிசிடியு முன்னணிகள் கூட்டத்தில் சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பிரிக்கால்
தொழிலாளர்கள் 8 பேரின் விடுதலைக்கு பிரச்சாரம்
செய்ய திட்டமிடப்பட்டது.
விழுப்புரத்தில்
ஜனநாயகம் காப்போம் மக்களைக் காப்போம் இயக்கம்
விழுப்புரத்தில்
இகக (மாலெ) மற்றும் அனைத்திந்திய
விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்
சங்கம் சார்பில் 23 ஊராட்சிகளில் ஜனநாயகம் காப்போம், மக்களைக் காப்போம் இயக்கப் பிரச்சாரம் நடைபெற்றது.
பிரிக்கால் தொழிலாளர் முன்னணிகள் 8 பேருக்கு நியாயம் கேட்டு பிரச்சார
ஸ்டிக்கர் வேலைப் பகுதிகள் முழுக்க
ஒட்டப்பட்டன.
உளுந்தூர்பேட்டை
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, கள்ளக்குறிச்சி - சின்னசேலம் உள்ளூர் கமிட்டி மாநாடுகள்
நடத்தப்பட்டன.
மாவட்டச்
செயலாளர் தோழர் வெங்கடேசன் மற்றும்
தோழர்கள் கலியமூர்த்தி, கஜேந்திரன்,
சுசீலா, பாபு, ஏழுமலை, கலாமணி
மற்றும் பாவாடை ஆகியோர் வாகனப்
பிரச்சாரமாக சென்று மக்களை சந்தித்துத்
துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். பிரிக்கால் தோழர்களுக்கு நியாயம் கேட்டு ஜனவரி
22 முதல் ஜனவரி 30 வரை தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு
திட்டமிடப்பட்டுள்ளது.