டாக்டர் அம்பேத்கர் பக்கம்
தீண்டப்படாதவர்கள் மனித மாண்பைத் திரும்பப் பெறுகிற வரையில் ஓயமாட்டோம்
(ஜெய்பீம் வாசகர்களுக்கு
டாக்டர் அம்பேத்கரின் செய்தி)
ஜெய்பீம், சென்னை,
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு மலர்
ஏப்ரல் 13, 1947
பக்கம் 113 - 116, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
என்னுடைய 55வது பிறந்தநாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தீண்டப்படாதாருக்கு நான் என்ன நற்செய்தி கொடுக்க முடியும்? நான் அவர்களுக்கு ஒரு நற்செய்தி கொடுக்க இயலாது. ஆனால் கிரேக்க புராணத்திலி ருந்து ஒரு கதையை அவர்களுக்கு நான் சொல்லி, ஒரு நீதியை சுட்டிக்காட்ட முடியும். இந்த கதையானது கிரேக்க தேவதை டெமிடெருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஹோமரின் துதிப்பாடலில் அடங்கியிருக்கிறது. இந்த மகத்தான பெண் தெய்வம், தனது மகளை தேடி அலைந்தபோது, கெலி யோசின் தர்பாருக்கு எவ்வாறு வந்து சேர்ந்தார் என்பதை தமிழருக்கான இந்த துதிப்பாடல் எடுத்துக் கூறுகிறது. ஓர் அடக்கமான செவிலித்தாய் உருவத்தில் வந்த தேவதையை யாரும் அடையாளம் காணவில்லை.
மெடொனீரா அரசி தனக்கு புதிதாக பிறந்த குழந்தை டெமேஃபூனை (பின்னர் டிரிபிள்டோலெமஸ் என்று அறிவிக்கப்பட்டவர்) அந்த செவிலித்தாயின் பராமரிப்பில் ஒப்படைத்தாள்.
ஒவ்வொரு மாலையிலும் மூடிய கதவுகளுக்கு பின்னால் வீட்டிலுள்ள யாவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது டெமிடெர் இளம் சிசு டெமேஃபூனை குரூரமான எண்ணத்துடன் அவனது சௌகரியமான தொட்டிலில் இருந்து வெளியே எடுப்பாள். ஆனால் எதார்த்தத்தில் அவனை இறுதியில் கடவுள் தன்மை பெறச் செய்யும் விருப்பத்துடன் அவனிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள். பிறந்த மேனியுடன் கூடிய அந்த குழந்தையை கனல் வீசும் நெருப்பு கங்குகள் மீது கிடத்துவாள். இந்த டெமோஃபூன் குழந்தை அனல் வீசும் வெறுப்புகளின் வெப்பத்தை சமாளித்து இந்த வேள்வியில் இருந்து புதிய பலம் பெற்றது. அவனிடம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தி, வீறார்ந்தன்மை காணப்பட்டது. அனைத்து நம்பிக்கைக்கும் அப்பால் அதன் புகழ் ஓங்கியது. ஆனால் மெடொனீரா மிகவும் கவலையடைந்தாள். ஒரு நாள் மாலை அந்த பரிசோதனை நடைபெறும் அறைக்குள் திடுப்பிரவேசமாய் வேகமாய் புகுந்தாள்; தனது தவறான அச்சங்களினால் தூண்டப்பட்ட அவள் பணியாற்றிக் கொண்டிருந்த தேவதையை அப்பால் நெட்டித் தள்ளி குழந்தையை எடுத்துக் கொண்டு நடந்தாள். இதன் விளைவாக அவள் குழந்தையைக் காப்பாற்றினாள். ஆனால் அதி மனிதனை (சூப்பர்மேன்)யும் இறுதியாக கடவுளையும் இழந்தாள்.
இந்தக் கதை நமக்கு எதை போதிக்கிறது? போராட்டம் மற்றும் தியாகத்தின் மூலமாக மட்டுமே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்பதை போதிக்கிறது என்று நான் கருதுகிறேன். நெருப்பாற்றில் நீந்தாமல் மனித மாண்பு அல்லது கடவுள் தன்மையோ பெற முடியாது. தீ தூய்மைபடுத்தப்படுகிறது. தீ வலுப்படுத்தப்படுகிறது. அதுபோன்றுதான் போராட்டமும், துன்ப துயரம் அனுபவிப்பதும்.
கீழே அழுத்தப்பட்ட மனிதன் போராட்டத்திற்கும் கஷ்டப்படுவதற்கும் தயாராக இருந்தால் ஒழிய அவன் மேன்மை அடைய முடியாது. தனது வருங்காலத்தை கட்டியமைப்பதற்கு அவன் வாழ்க்கையை சௌகரியங்களையும் தற்கால தேவைகளையும் கூட தியாகம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். பைபிளின் (விவிலியத்தின்) மொழியை உபயோகிப்பது எனில், வாழ்க்கையின் ஓட்டத்திற்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்; ஆனால் ஒரு சிலரே தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன்? இதற்கு காரணம் தெளிவு. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையின் இந்த ஓட்டத்தில் பெருமிதம் அடையத் தவறுகிறார்கள். ஏனெனில் அவர்களின் எதிர்கால தேவைகளுக்காக தற்காலத்தில் இன்பங்களை தியாகம் செய்வதற்கு உரிய துணிவோ உறுதியும் அவர்களிடத்தில் இல்லை.
இந்தக் கதையில் அடங்கியுள்ளது காட்டிலும் கூடுதல் மேலான மற்றும் மகத்தான செய்தி வேறு இருக்க முடியுமா? நான் ஒன்றை குறிப்பிட்டு குறிப்பிட முடியும். தீண்டப்படாதவர்களுக்கு என்னால் சிந்தித்துப் பார்க்க முடிகின்ற சிறப்பும் பொருத்தமானதுமான செய்தி அதுதான். அவர்களது போராட்டத்தையும் துன்ப துயரங்களையும் நானறிவேன். விடுதலைக்கான தமது போராட்டத்தில் அவர்கள் என்னைக் காட்டிலும் கூடுதல் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இவ்வளவிருந்தும் வேறு எந்த நற்செய்தியும் அவர்களுக்கு நான் வழங்க முடியாது. என்னுடைய செய்தி போராட்டம், கூடுதல் போராட்டம், தியாகம், கூடுதல் தியாகம் என்பதேயாகும். தியாகங்களை அல்லது கஷ்ட நஷ்டங்களை எண்ணாமல் போராடுவது மட்டுமே அவர்களுக்கு விடுதலை கொண்டு வரும். வேறு எதுவும் அல்ல.
தீண்டப்படாதவர்கள் எழுதுவதற்கும் எதிர்ப்பதற்கும் ஒரு கூட்டு சித்தத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமது பணியின் புனிதத் தன்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்து தமது லட்சியத்தை அடைவதற்கு ஆணை பூர்வமான உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் கடமை மகத்தானது. நோக்கம் மிகவும் உன்னதமானது. எனவே தீண்டப்படாதவர்கள் ஒன்றுதிரண்டு பின்வருமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் எந்த மக்களிடையில் பிறந்துள்ளார்களோ அவர்களை உயர்த்தும் கடமையை உணர்ந்துள்ளவர்களே மேன்மையடைவார்கள். தமது பொன்னான நாட்களை, தமது சக்தியை, ஆன்மாவையும் உடலையும் தமது பலத்தையும் அடிமைத்தனத்தை எதிர்க்கும் இயக்கத்தை முன்கொண்டு செல்ல அர்ப்பணிப்பதற்க்கு சபதம் மேற்கொள்பவர்களே மேன்மையடைவார்கள். நல்லது கெட்டது வந்தாலும், சூரிய ஒளி வீசினாலும், புயல் வீசினாலும், கவுரவம் வந்தாலும், அவமரியாதை ஏற்பட்டாலும், தீண்டத்தகாதவர்கள் தமது மனித மாண்பை பூரணமாக திரும்ப பெறுகின்ற வரையில் போராட்டத்தை நிறுத்துவதில்லை என்ற சபதமேற்பவர்களே மேன்மையடைவார்கள்.