COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, April 30, 2021

மே தினம் வெல்லட்டும்

மூடத்தனமாகவும் குற்றமய அலட்சியத்தோடும்

மக்களை துன்புறுத்தும் மோடி அரசே பதவி விலகு!

இந்தியா சொல்கிறது: மோடியே பதவி விலகு! இந்திய மக்கள் சொல்கிறார்கள்: மோடியே, நீங்கள் இனியும் பிரதமராகத் தொடர்ந்தால் நாடு தாங்காது.

உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தைக்குச் சென்றுள்ளன. இருநூறு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுபூர்வ புரிதலும் அறிவியல் அணுகுமுறையும் ஆட்சியாளரிடம் இல்லை. தலைநகர் டில்லியின் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. உயிர் காக்கும் ஆக்சிஜன் இல்லை. போதுமான மருத்துவர், பணியாளர் இல்லை.

கவலை, அச்சம், கையறுநிலை, இயலாத கோபம், விரட்டும் மரணம், இடமில்லா சுடுகாடுகள், இடுகாடுகள், பிணங்கள் எரிக்கப்படும் புகை மூட்டம் என இந்தியா மூச்சுத் திணறுகிறது.

உயர்நீதிமன்றங்கள் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்கும்போது, மோடி பக்தர்கள், மரம் வளர்த்தால் ஆக்சிஜன் பிரச்சனை தீரும் என்று ஆணவத்துடன் ஆலோசனை சொல்கிறார்கள். அரச நீதிமன்றமாகிவிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற விமர்சனங்களை, கேள்விகளை மழுங்கடிக்கப் பார்க்கிறது. உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும் மாநில அரசும், விவரங்கள், தரவுகள் எதுவும் தராமல், கொரோனா, ஆக்சிஜன் என உணர்ச்சிமய வசனம் பேசி, எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என, ஆட்கொல்லி ஸ்டெர்லைட்டை திறக்கப் பார்க்கிறார்கள். கெடுவாய்ப்பாக, தேசத்தின் பிரச்சனை என்ற ஆளும் கூட்ட கருத்தொற்றுமையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணியும் சிக்கிக் கொண்டுவிட்டது.

குற்றவாளி கூண்டில் மோடியை நிறுத்துவோம்!

உரிய காலத்துக்கு முன்னரே அரித்துவார் கும்பமேளாவுக்கு அனுமதி, மேற்கு வங்கத் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பெரும் கூட்டம் சேர்ப்பது என கொரோனாவைப் பரப்பும் குற்றத்தை செய்தது நீங்கள்தான்.

கொரோனாவை வீழ்த்திவிட்டு, மானுடம் காப்பதில் உலகுக்கு உதவினோம் என்று வசனம் பேசிய மோடியும் கொரோனாவை வெற்றி கொண்ட வீரர் என்று மோடியை பாராட்டி தீர்மானம் போட்ட பாஜகவும்தான், மூடத்தனத்தால், முரட்டுத்தனத்தால், கொரோனா இரண்டாவது அலை மக்களை வேட்டையாட அனுமதித்த குற்றவாளிகள் ஆவீர்கள்.

கோவேக்சின், கோவிஷீல்ட் உற்பத்தியை நாட்டுடைமையாக்காமல், புனாவாலாவும் கிரண் மஜ÷ம்தாரும் ஆயிரம் ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க அனுமதித்ததும் நீங்கள் செய்த குற்றமே.

நூறு கோடி பேரை துன்பத்தில் தள்ளி, அம்பானியும் அதானியும் 3.75 லட்சம் கோடி கூடுதல் சொத்து சேர்க்க வழி செய்த குற்றத்துக்கும் நீங்களே பொறுப்பு.

மக்களை நிம்மதியாக வாழவிடாத 

விவசாயிகளை வாட்டி வதைக்கிற 

தொழிலாளர்களை தாக்குகிற

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிற

இளையோர் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிற

தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரை அச்சமூட்டுகிற

அவர்கள் சுதந்திரத்தைப் பறிக்கிற

மாநில உரிமைகளை விழுங்குகிற

பெரும்பஞ்சத்தில் உயிரிழந்தவர்களை விட

அதிக எண்ணிக்கையிலான மக்களை

கொரோனாவால் சாகவிட்டுள்ள

செயற்கைப் பேரிடரான முதலாளித்துவத்தை

இயற்கைப் பேரிடரில் வேட்டையாடவிட்ட

மோடி அரசை

மே நாளில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம்!

மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்

மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று

தண்டனை வழங்குவோம்!

கம்யூனிஸ்ட் கட்சி (CP)

இடது தொழிற்சங்க மய்யம் (LTUC)

தோழர் கூடம், 23 , மாரியம்மன் கோயில் தெரு, கல்யாணபுரம், அம்பத்தூர், சென்னை - 600053.   7358214170

 

 

Search