COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மார்ச்-(1-15)~2

தலையங்கம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழக மக்களுக்குச் சொந்தமானது

பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொழுக்க தமிழக மக்கள் தினம் தினம் ரத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவர் துறையைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தம் கொடுத்தார்கள். ரத்தம் தருவதை விட, இனிப்பு விநியோகிப்பதை விட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதுதான் தனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என்றார் ஜெயலலிதா. அதன் தனது வாழ்நாள் சாதனை என்றும் சொல்லிக்கொண்டார். தனது 22 ஆண்டு காலப் போராட்டத்துக்கு, சமீபத்தில் எடுத்த விடாப்பிடியான முயற்சிகளுக்கு, தனது அறிவுரையின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு கிடைத்த வெற்றி என்று அறிவித்தார். மத்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தும், தீர்ப்பின் அமலாக்கத்திற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனக் வலியுறுத்தியும் கடிதம் எழுதினார்.

ரத்தத்தின் ரத்தங்களுக்கு தங்கள் அம்மா பக்தியை, விசுவாசத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. காவிரித் தாயே என்றும், நடந்தாய் வாழி காவிரி என்றும், நாளைய பாரதப் பிரதமரே என்றும் ஜெயலலிதாவை போற்றி வணங்கி போஸ்டர் ஒட்டி, 1993ல் ஜெயலலிதா நடத்திய பரபரப்பு உண்ணாவிரதப் படத்துடன் பத்திரிகை விளம்பரம் வெளியிட்டு, ஓடுகிற அரசுப் பேருந்துகளை நிறுத்தி பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து விதவிதமாக கொண்டாடினார்கள். பழ. நெடுமாறன் வகையினர் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க, நிலைநாட்ட, மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் செயல்படுகிற முதல் வருக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை என்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை பெரும்பிரச்சனையாகியுள்ள நேரத்தில் ஜெயலலிதா தனக்கு கிடைத்த ஒரே பந்தில் பல சிக்சர்கள் அடிக்கப் பார்க்கிறார்.

குடும்பப் பிரச்சனைகளையே சமாளிக்க முடியாமல் ஏற்கனவே காற்று போன பலூனாய் இருக்கிற கருணாநிதியின் குரல் இந்த வெற்றிக் கூச்சலில் எடுபடவில்லை. இருந்தாலும் சில விவரங்களைச் சொல்லிப் போகிறார்.

1991ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, 1998ல் (திமுக ஆட்சி இருந்தபோது) கர்நாடகத்தின் ஒப்புதலுடன், காவிரி ஆணையமும் காவிரி கண்காணிப்புக் குழுவும் உருவாக்கப்பட்டன. இவை இரண்டை யுமே ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார். பிரதமர் தலைமை யில் அமைக்கப்பட்ட காவிரி ஆணையம் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மோசடி என்றார். காவிரி ஆணையத்தை பல் இல்லாத, செயல்படாத ஆணையம் என்று விவரித்தார். 2007ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட போது அது தமிழக மக்களுக்கு விரோதமானது என்று சொன்னார். 

முதலமைச்சராக இருந்தபோது, காவிரி ஆணையக் கூட்டங்களில் கூட சரியாகக் கலந்து கொள்ளாத ஜெயலலிதா, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தாலும் கர்நாடகா மனது வைத்து அணையைத் திறந்தால்தான் தண்ணீர் என்றும், தீர்ப்பு பாதகமானது என்றும் 1991லும் 2007லும் சொன்ன ஜெயலலிதா, இன்று அதே தீர்ப்பு, உச்சநீதிமன்றம் வலியுறுத்திய பிறகு, அரசிதழில் வெளியிடப்பட்டதை வாழ்நாள் சாதனை என்கிறார். காவிரி ஆணையம் மற்றும் கண்கா ணிப்புக் குழு அமைக்கப்பட்டதற்கு தனது விடாமுயற்சிகள் காரணம் என்கிறார்.

காவிரிப் பிரச்சனையில் 1991 முதல் வெவ்வேறு கட்டங்களில் ஜெயலலிதா ஆற்றியி ருக்கிற பதில்வினை ஜெயலலிதாவின் வெற்றிப் பேச்சுக்களின் வெற்றுத்தன்மையை போதுமான அளவுக்கு வெளிப்படுத்திவிட்டன. ஆயினும், ஜெயலலிதாவின் வெற்றிப் பேச்சுக்கள் நம் முன் சில அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன. ஜெயலலிதா இதைத்தான் வாழ்நாள் சாதனை என்று சொல்வார் என்றால், இதுவரை சாதனை என்று சொல்லப்பட்டவை எல்லாம் என்ன? மக்கள் அனுபவித்த வேதனைகள்தானே? இதற்கு முன் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த போதும், இப்போது நடத்துகிற ஆட்சியில் பிப்ரவரி 19 வரையிலும் மக்கள் நலனுக்கான நடவடிக்கை எதுவும் எடுக்க அவர் அக்கறை காட்டவில்லை என்றுதானே பொருள்? வறட்சி பாதித்த டெல்டா மாவட்டங்களை பார்வையிட தமிழக அரசாங்கம் அமைத்த அமைச்சர்கள் குழுவும் அந்தக் குழு டெல்டா விவசாயிகளை சந்தித்ததும் நாடகம்தானே? ஆளுநர் அறிக்கை சொல்லாத நிவாரணங்களை பதிலுரையில் அறிவித்தது ஒப்புக்குத்தானே? இது வாழ்நாள் சாதனை என்றால், டெல்டா விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக உறுப்பினர்களும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசும் சொன்னதும் பதிலுரையில் ஜெயலலிதா சொன்னதும் பொய்தானே? டெல்டா விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட பிரச்சனை யில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது உண்மைதானே? தனக்கு நாற்பதுக்கு நாற்பது கிடைக்காவிட்டால் டெல்டா பாலைவனமாக மாறும் என்று சொன்னது தமிழக மக்களின் பிணங்களின் மேல் அரசியல் நடத்தத்தானே? ஜெயலலிதாவும் ரத்தத்தின் ரத்தங்களும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் இவை.

மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் விவகாரங்கள் சட்டம் 1956ன்படி அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உச்சநீதிமன்ற ஆணையை ஒத்தது. இப்போது தீர்ப்பின்படி காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைக்கப் பட வேண்டும். அதன் பிறகு அவற்றின் அறிவு ரையின் பேரில் தண்ணீரை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். நெருக்கடி காலங்களில் நெருக்கடிக்கேற்றாற்போல் பகிர்ந்து கொள்ள வேண்டும். தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது அமலாவதற்கு இன்னும் கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு ஆறு ஆண்டு காலம் என்றால் அமலாக்கம் எத்தனை காலம் எடுக்கும் என பார்க்க வேண்டியுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் டெல்டா விவசா யிகள் நலன் காப்பது, விவசாயம் இல்லாததால் வேலை இழந்த விவசாயத் தொழிலாளர் நலன் காப்பது முன்னிற்கிற பிரச்சனை. ஜெயலலிதா அறிவித்துள்ள அரைகுறை நிவாரணம் டெல்டா விவசாயிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை. நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பில் வேலை இழந்த டெல்டா மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா அரசாங்கம் முற்றிலுமாக துரோகம் இழைத்துள் ளது. விவசாயிகள் தற்கொலை டெல்டா மட்டுமின்றி நெல்லையில் வெள்ளப்பனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் தற் கொலை செய்து கொண்டார். மழை பொய்க்கும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் நலன்காப்பது போல பிற மாவட்ட விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.

2012 நவம்பரில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்ட போது, அதைத் தடுத்திருக்க முடியும் என்றார் கருன்கணி ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன். வெள்ளையாற்றில் தடுப்பணை கட்டி மழை காலத்தில் வீணாகும் வெள்ள நீரை சேமித்தாலே விவசாயத்துக்குப் போதும், அதைச் செய்ய அரசுகள் தவறுகின்றன என்கிறார். இதுவரையில் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்து விவசாயிகளின் அடிப்படை தேவையான நீர்ப்பாசனம் பற்றி, அதை உறுதிப்படுத்த மாற்று ஏற்பாடுகள், தடுப்பு நடவடிக் கைகள் எடுக்காமல், கர்நாடகத்தைக் காட்டி வாக்குவங்கி அரசியல் நடத்துகிற ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே குற்றவாளிகள். நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்த மாற்றுப் பாசன முறைகள் என்று அடிக்கடி பேசினாலும், கூடுதல் நீராதாரங்கள் உருவாக்கி, பாசனத்தை மேம்படுத்தும், பயிர் காக்கும் நடவடிக்கை பற்றி இதுவரையிலும், இப்போதும் ஏதும் செய்யாத ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதை சொந்தம் கொண்டாட தகுதி ஏதும் இல்லை. இந்தக் கட்டத்திலும் டெல்டா மற்றும் பிற மாவட்ட பாசனத்துக்கு காவிரி  மட்டுமின்றி கூடுதல் ஏற்பாடுகள் செய்வது என்று கருணாநிதி வாயைத் திறக்கவில்லை. காவிரி வெற்றியை ஜெயலலிதா கைப்பற்றி விட்டதால் இப்போது சேது பற்றி பேசத் துவங்கிவிட்டார். மதவாத சக்திகள் சேதுவைத் தடுப்பதாகவும் ஜெயலலிதா சேதுவுக்கு எதிரா னவர் என்றும் அடுத்த நாடகத்துக்கு வசனம் எழுதத் துவங்கிவிட்டார்.

காவிரி நீரில் தமிழக விவசாயிகள் உரிமை பாதுகாக்கப்படுவதில் ஒரு கட்டமாக இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்தை, தங்கள் உயிரையும் கொடுத்து உருவாக்கியவர்கள் தமிழக விவசாயிகள். பலர் சாகும் வரை வேடிக்கைப் பார்த்துவிட்டு கடிதம் எழுதியவர்களையும் வழக்கு போட்டவர்களையும் அறிக்கை வாசித்தவர்களையும் ஓரமாக தள்ளி நிறுத்திவிட்டு அடுத்தச் சுற்று பாசன நெருக்கடி ஏற்படுவதற்குள், அதைத் தடுக்கும் நடவடிக்கை களை அரசாங்கம் எடுக்கவும் நிர்ப்பந்திக்கும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இறுதித் தீர்ப்பில் சொல்லியுள்ளபடி, நெருக்கடி காலங்களிலும் நெருக்கடி அல்லாத காலங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைக்குரிய காவிரி நீர் வர வேண்டும். அதற்கான நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். அது வரை டெல்டா மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்யும் சூழ்நிலை, விவசாயத் தொழிலாளர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேச் சென்று பிழைக்க வேண்டிய நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாசன வசதிகளை மேம்படுத்த கருன்கணி ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் சொல்வது போன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத் தப்பட வேண்டும். உடனடியாக அரசாங்கம் அறிவித்த அரைகுறை நிவாரணம் விவசாயிகளைச் சென்று சேர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அதிகப்படியான நிவாரணம் தரப்பட வேண்டும். வேலை இழந்து, வாழும் இடத்தை விட்டு வெளியேறும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நிர்ப்பந் திக்கும் போராட்டங்கள் நடத்தப்பட வேண் டும். இந்த குறைந்தபட்ச உடனடி நடவடிக்கை கள் கூட எடுக்காத ஜெயலலிதா அரசாங்கத் துக்கு பாடம் புகட்டத் தயாராக வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும் அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முன்னேற்ற மும் வெற்றியும் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சொந்தமானதல்ல. அது தமிழக உழைக்கும் விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது.

விலை உயர்வுப் பிரச்சனையை மலிவு விலை உணவகம் மட்டுப்படுத்தி விடாது

ஜெயலலிதாவின் சமீபத்திய அரசியல் சாகசம் என்று சொல்லப்படுவது, அம்மா உணவகம் என்று சென்னை மாநகராட்சி பெயரிட்டுள்ள மலிவு விலை உணவகங்கள். கருணாநிதி இந்த விசயத்தில் வாயடைத்துப் போய் இருக்கிறார். மலிவு விலை உணவகங் களின் அருமைபெருமைகளை சொல்லும்முன் அஇஅதிமுககாரர்களுக்கும், இது ஏதோ மாபெரும் கொடை என்று நம்புபவர்களுக்கும் முதலில் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அரசாங்கங்கள் அறிவிக்கும் அமல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான் அமலாகின்றன.  ஜெயலலி தாவோ, கருணாநிதியோ, சோனியாவோ, மன்மோகனோ, சிதம்பரமோ தங்கள் சொத்தில் இருந்து எடுத்துத் தந்து அந்தப் பணத்தில் அமலாகும் திட்டங்கள் அல்ல. அப்படி எந்தத் திட்டமும் அமலாக்கப்படவும் இல்லை. அறிவிக்கப்படும், அமலாக்கப்படும் திட்டங்களில் கொள்ளையடிப்பது எவ்வளவு என்றுதான் முதல் கணக்கு போடுகிறார்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். மக்கள் வரிப்பணத்தை பெரு மளவில் கொள்ளையடித்து விட்டு, முதலாளிக ளுக்கு வாரி வழங்கிவிட்டு, பாவமன்னிப்பு நடவடிக்கையாக, அடுத்த முறை வாக்கு வாங்க ஒப்புக்கு கொஞ்சம் வறிய மக்கள் திட்டங்களுக்கு செலவிடுகிறார்கள். மலிவு விலை உணவகங்களும் ஜெயலலிதாவின் கருணையினால் அவர் சொந்தப் பணத்தில் அமைக்கப்பட்டவை அல்ல. அவை மக்கள் பணத்தில் உருவானவை. இதில் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல, அவரைப் போற்றிப் பாராட்ட ஏதுமில்லை.

தமிழக உழைக்கும் மக்கள் மூன்று வேளை உணவு கூட கிடைக்காமல் துன்புறுகிறார்கள் என்று ஜெயலலிதா பகிரங்கமாக ஒப்புக்கொள் வதன் வெளிப்பாடுதான், மலிவு விலை உணவகங்கள். திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்த அன்று 5000 பிளேட் இட்டிலி பறந்து விட்டது என்கிறார்கள். 2 மணி நேரத்தில் 2000 இட்டிலிகள் விற்றுவிடுவது, விலைஉயர்வுச் சுமை எந்த அளவுக்கு மக்களை வாட்டி வதைக்கிறது என்பதற்கு உரைகல். ஒரே கடையில் 3000 பேருக்கு தயாரித்த உணவு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தீர்ந்துவிடுகிறது என்றால், தமிழ்நாட்டு மக்கள் தலைகாய்ந்து போயிருப்பதற்கு அது சாட்சி.

இந்த உணவகங்கள் சென்னையில் முதல் கட்டமாக 15ம் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி இன்னுமொரு 24ம் திறக்கப்பட்டன. (அறுபத்தைந்து கிலோ கேக் வெட்டியவர்கள் ஏன் 65 உணவகங்கள் திறந்திருக்கக் கூடாது? இந்த உணவகங்களுக்கு அம்மா பெயர் வைத்த சென்னை மேயர் சென்னையில் நிறைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் வைப்பாரா?). சென்னையில் 1000 கடைகள் திறக்கப்படும் என்று ஜெயலலிதாவும் மார்ச் 31க் குள் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மேயரும் அறிவித்துள்ளனர். மேயர் சொல்வது படி பார்த்தால் சென்னையில் உள்ள 1 கோடி பேரின் உணவுத் தேவையை வார்டுக்கு ஒன்று என திறக்கப்படும் உணவகங்கள் எப்படி பூர்த்தி செய்யும்? மொத்தம் 1000 கடைகள் சென்னை யில் உள்ள 1 கோடி பேரின் பசிக்கு என்ன பதில் சொல்லும்? சென்னை வறியவர்கள் உணவுத் தேவை மலிவு விலை உணவகங்களில் தீரும் என்றால், தமிழ்நாட்டின் பிற மாவட்ட மக்களின் உணவுத் தேவைக்கு ஜெயலலிதா என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

சத்துணவுத் திட்டம் எம்ஜிஆருக்கு வாக்கு களாக மாறியதுபோல், மலிவு விலை உணவகங் கள் 2014க்கு உதவும் என்று ஜெயலலிதா திட்ட மிடுகிறார். மறுபுறம், டாஸ்மாக் கடைகளுக்கு அதிகரித்து வருகிற எதிர்ப்பை மட்டுப்படுத்த மலிவு விலை உணவகங்கள் உதவும் என்று எதிர் பார்க்கிறார். தமிழ்நாடு முழுவதும் 6800 டாஸ் மாக் கடைகள் உள்ளன. இரவு பகல் பாராமல் தமிழக மக்களுக்கு இந்தக் கடைகள் மூலம் தமிழக அரசு சேவை செய்கிறது. மலிவு விலை உணவகங்களில் இருப்பதுபோல், பெரிய ஜெய லலிதா படங்களை இந்தக் கடைகளில் காண முடியாது என்பதுதான் தமிழக குடிமக்களின் குறை.

மலிவு விலை உணவகங்களில் தயிர் சாதத் துக்கு ஊறுகாயும், சாம்பார் சாதத்துக்கு அப்பள மும் இட்டிலிக்கு சட்னியும் வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகச் சொல்லப்படுகிறது. மலிவு விலை உணவகங்கள் மேம்படுத்தப்பட வேண் டும்தான். மலிவு விலை உணவகங்கள் அமைக்க மாநகராட்சி கட்டிடங்களில் இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இருக்கிற இடங்களை செப்பனிட சென்னை மாநகராட்சி ரூ.75 லட்சம் ஒதுக்கியுள்ளதாகவும் மேயர் சொல்கிறார். சென் னையில் பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அரசுக் கணக்குப்படி 6800 கடைகள். இங்கு பார் வசதியும் உண்டு. இந்தக் கடைக ளில் சாராயம் விற்பதற்கு பதில் அவற்றை மலிவு விலை உணவகங்களாக மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இப்போது தமிழக மக்க ளுக்கு சாராயத்தை விட உணவுதான் அவசியம். வருமானம் அடிபடுமே என்று தமிழக அரசு கவலைப்பட வேண்டியதில்லை. டாஸ்மாக் நடத்தும் பாணியில் மலிவு விலை உணவகங்க ளையும் அரசு நடத்தட்டும். இதன் வருமானம் சாராயத்தில் கிடைக்கும் வருமானத்தை விடக் குறைவாக இருந்தாலும் அரசு அதை மக்கள் வரிப்பணத்தில் சமாளிக்கட்டும்.

பால், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு தனியார் வைத் துள்ள விலை, மின்கட்டணம், பேருந்து கட்ட ணம் என பெருந்துன்பம், வேலையின்மை, கொத்தடிமை வாழ்க்கை போன்றவற்றைக் கட்டுப்படுத்தாமல் மலிவு விலை உணவகம் மட்டும் வறிய மக்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வராது.

*********************************************************************************************

Search