COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மார்ச்-(1-15)~3

சிறப்புக் கட்டுரை

ஆணாதிக்கமும் பாலியல் வல்லுறவும்

தேவை ஒரு விடாப்பிடியான, அனைத்தும் தழுவிய ஜனநாயக நிலைப்பாடு

காம்ரேட்

கடந்த முப்பதாண்டுகளில், பாலியல் வல்லுறவு பிரச்சனையில் இந்தியா மூன்று பெரிய வெடிப்புக்களைக் கண்டது. அவற்றில் இரண்டு, காவல் துறையினர், படையினர் தொடர்பானவை. மகாராஷ்டிராவில் மதுரா என்ற பெண் காவலர்களால் பாலியல் வல்லுற வுக்கு ஆளாக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் குற்றம் புரிந்த காவலரைக் தண்டனையிலிருந்து விடுவித்து, குற்றத்திற்கு ஆளான மதுராவையும் அவரது ஒழுக்கத்தையும், குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. கீழ்மட்டக் காவலர் முதல் உச்சநீதி மன்றம் வரை, ஆணாதிக்கம் கோலோச்சுவது அம்பலமானது. மாற்றங்கள் வேண்டும் எனப் போராட்டங்கள் வெடிக்க, 1983ல் கடுமையான பாலியல் வல்லுறவு எதிர்ப்புப் சட்டங்கள் இயற்றப்பட்டன.

அடுத்த வெடிப்பு, 2000களின் முதல் பகுதியில் நிகழ்ந்தது. இந்த முறை, இந்திய இராணுவமும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டமும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டன. தங்ஜம் மனோரமா இராணு வத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்டார். கொல்வதும் பாலியல் வல்லுறவு கொள்வதும், எமது சிறப்பு அதிகா ரங்கள் எனச் சொன்ன இந்திய இராணுவம், சிறப்பு அதிகாரங்கள் சட்டப்படி தம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றது. குற்றம் புரிந்தவர்கள் படையினர் என்றால் தண்டனை பற்றிய கவலை இல்லை என்ற நிலையை, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ஏற்படுத்தியது. மணிப்பூர் பெண்கள், தங்கள் உடல்களையே ஆயுதங்களாக்கினர்; இந்திய இராணுவமே, வா, பாலியல் வல்லுறவு செய் என நிர்வணமாக நின்று பதாகை ஒன்றைப் பிடித்தனர். உலகத்தின், நாட்டின் மனச்சாட்சி உலுக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஒழிய வேண்டும் என அய்ரம் சர்மிளா சானு 12 வருடங்களாக ஒரு மகத்தான உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கிறார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, இச்சட்டத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்தது. ஜனநாயகம் மற்றும் முற்போக்கை உரசிப் பார்க்க, இந்தியாவில் இன்று அளவுகோல், ஒருவர் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்க்கிறாரா இல்லையா என்பதுதான். கடுமையான எதிர்ப் புக்கள், உச்சநீதிமன்றம் இச்சட்டம் பற்றி எழுப் பிய கேள்விக் கணைகள் எல்லாவற்றிற்கும் பிறகு, தமது அரசு இச்சட்டத்தை மாற்றி அமைக்க, இராணுவமும் இராணுவ அமைச்சக மும் முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்லி சிதம்பரம் நழுவிக் கொள்கிறார்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாடு தழுவிய மூன்றாம் சுற்றுப் போராட்டம், டிசம்பர் 2012ல் டெல்லியை மய்யங்கொண்டு எழுந்தது. கல்வி, வேறு வேறு வேலை வாய்ப்புக்கள், உள்ளாட்சி அமைப்புக்களில் இட ஒதுக்கீடு ஆகியவற்றால், பெண்களின் நடமாட்டமும் பொதுப் பாத்திரமும் அதிகரித் துள்ளன. இதனால் வீடுகளிலும் சமூகத்திலும் நிலவும் ஆணாதிக்க ஏற்பாடுகளும் அணுகு முறைகளும் ஆட்டம் காண்கின்றன. பால் தொடர்பான பாத்திரங்கள் மற்றும் கருத்திய லில், முற்போக்கு மாற்றங்கள் நிகழ்வதோடு கூடவே, புதிய ஆணாதிக்கக் கவலைகள் பதட்டங்களோடு வன்முறையும் ஆட்டம் போடுகிறது. மரபார்ந்த சாதீய ஆதிக்க சக்திகள் (நகர்ப்புற தொழில் முறை நடுத்தர வர்க்கத்தி னர் மத்தியிலும் கூட), புதுப்பிக்கப்பட்ட தாக்கும் தன்மையுடன், தம்மை அறுதியிட்டுக் கொண்டு, பெண்களின் பாலியல் தன்மை நடமாட்டம் மறுஉற்பத்தி ஆற்றல் மீது கட்டுப் பாட்டை நிறுவப் பார்க்கின்றன. கட்டுப் பாட்டை நிறுவ, முக்கியக் களம் பெண் உடல்.

இந்தச் சமூகச் சூழலில்தான், டிசம்பர் 16, 2012 அன்று ஓடும் பேருந்தில் ஒரு பெண் மாணவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கும் கொடூரமான வன்முறைக்கும் ஆளானார். நாடு, முன் உதாரணத் தன்மை கொண்ட ஒரு போராட்டத்தைக் கண்டது. கடும் குளிர், உறைய வைக்கும் பனி, தண்ணீர் பீரங்கிகள் பாய்ச்சும் தண்ணீர் குண்டுகள், மெட்ரோ ரயில் முடக்கம், ராஜ்பாத் சுற்றி முற்றி உள்ள சாலைகளை எல்லாம் காவலர் கைப்பற்றுதல் ஆகிய அனைத்தையும் தாண்டி, முறியடித்து, இந்தியாவின் இளம் ஆண்களும் பெண்களும் ராஜ்பாத்தைக் கைப்பற்றினர். தலைநகர் சில நாட்கள் இளையவர்கள் கைகளில் இருந்தது. இந்தப் போராட்டம்தான், பொருளுள்ள நீதிபதி வர்மா குழு அறிக்கை பிறக்கக் காரணமாய் இருந்தது. பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் என்ற முழக்கம் விவாதத் தளத்தில் பொது வெளியில் நுழைந்தது.

வர்மா குழு அறிக்கை பெண்கள் இயக்கத் திற்கு ஜனநாயக இயக்கத்திற்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகும். (இந்தப் பரிந்துரை களை ஒதுக்கித் தள்ள மத்திய அரசு ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகு, முறையான சட்டம் வரும் போது, பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் சிதம்பரம்). வர்மா குழு அறிக்கை, பெண்ணின் கவுரவம் பெண்ணுக்கு நேரும் அவமானம் என்ற ஆணாதிக்கப் பொதுப் புத்தி நிலையிலிருந்து, பெண்கள் மீதான வன்முறை என்ற பிரச்சனையை அணுகாததே, மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும். பெண்களின் சுதந்திரம், உடல்ரீதியான ஓர்மை மற்றும் கவுர வம் ஆகியவற்றின் அடிப்படையில், பெண்கள் மீதான வன்முறை என்ற பிரச்சனை அணுகப் பட்டது. கடுமையான சட்டம் உச்சபட்சத் தண்டனை என்ற அணுகு முறையை வர்மா குழு எடுக்கவில்லை. திருமண உறவிற்குள் பாலியல் உறவு வல்லுறவாக இருந்தால் அதுவும் குற்றமே என வர்மா குழு அறிக்கை சொன்னது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இராணுவப் படையினரும் பாலியல் குற்றங்களுக்கு, பொதுவான நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க வேண்டும் என்கிறது. டிசம்பர் போராட்டங்கள், வர்மா குழு பரிந்து ரைகள், பெண்களின் சுதந்திரம், சுயவிருப்பம், உரிமை ஆகியவற்றை மய்யமாகக் கொண்டுள்ள முன்நிறுத்துகின்ற, பெண்கள் இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கங்களுக்கு, மைல் கற்களாகும்.

இவ்வளவுக்குப் பிறகும், அருந்ததி ராய் போன்றவர்கள், தமிழகத்தின் சில அறிவாளி கள், இந்தப் போராட்டத்தைப் பற்றிய ஓர் எதிர்மறைச் சித்திரம் தீட்டுகின்றனர். டெல்லி சம்பவம், நடுத்தர வர்க்கம் எதிர் வறியவர்கள், அதிலும் குறிப்பாக, உதிரிப் பாட்டாளிகள் தொடர்பானது என்பதாலேயே ஊடங்கள், இதனை ஊதிப் பெரிதாக்குகின்றனர்; ஆணா திக்க நஞ்சு பரப்பும் வன்முறைக்கு வழிவகை செய்யும் திரை உலகம், வறியவர்களைக் குற்ற வாளிகளாகக் காட்டவே முயற்சிக்கும்; பழங் குடியினர், ஒடுக்கப்படுவோர் மீதான தாக்குதல் கள் மீது, இப்போது போராட்டம் நடத்துபவர் களுக்கும் ஊடகங்களுக்கும் அக்கறை இல்லை; போராட்டத்தின் முடிவு இன்னமும் வன்மை யான கடுமையான சட்டங்கள் என்றுதான் அமையும், அவையும் நடுத்தர வர்க்கத்தின ருக்கே பாதுகாப்பு தரும் என்பதாக இவர்கள் வாதங்கள் அமைகின்றன. இந்த நடுத்தர வர்க்க அறிவாளிகளுக்கு, நடுத்தர வர்க்கங்கள் தொடர் பான ஆழமான சந்தேகமும் ஒரு விதமான நவீன தீண்டாமை அணுகுமுறையும் உள்ளன. திரைப்படங்களின் ஆபாசக் குப்பைகளிலிருந்து பரவும் ஆணாதிக்க நஞ்சு வன்முறைக்குத் தூண் டுகிறது என்பதும், திரைப்படங்கள் பொதுவா கவே வறியவர்களையும் சிறுபான்மையினரை யும் ஒடுக்கப்பட்டவர்களையும் குற்றவாளி களாகக் காட்டுகின்றன என்பதும், நிச்சயம் சரிதான். அதனால் திரைப் படத்துறையினர், சமூக அநீதிகள் பற்றிக் கண்டனம் தெரிவிக்கத் தகுதியில்லாதவர்கள் என்றாகிவிடுமா? பெரும் தொழில்குழும ஊடகங்கள் சாமான்ய மக்கள் பால் பரிவு கொண்டிருக்காது என்பதும் பகை மையே கொண்டிருக்கும் என்பதும் கூட நிச்சயம் சரிதான். அதனாலேயே, ஊடகக் கவனம் பெறுகிற எல்லாப் போராட்டங்களும் சந்தேகத்துக்குரியவை என்றாகி விடுமா?

சட்டங்கள் முதலாவதாகவும் முழுமை யானவையாகவும் சாமான்ய மக்களைச் சென்று சேர்வதில்லை என்றாலும், நாம் கோருகிற முற்போக்கு சட்டங்களை அப்படியே கொண்டு வராமல் சமூகம் சார்ந்த அணுகுமுறைக்கு மாறாக தண்டனை சார்ந்த அணுகுமுறையே மேலோங்குகிறது என்றாலும், ஒவ்வோர் அடி மாற்றத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது என்பதும், முற்போக்கு சட்டங்கள் கோரி போராடியே ஆக வேண்டும் என்பதும் அவசியம் இல்லையா?

இந்தியாவில் அனைத்தும் தழுவிய விடாப் பிடியான ஜனநாயக நிலைப்பாடு எடுப்பது அரிதானதாகவே உள்ளது. இதனால் பல அறிவாளிகள், ஒரு போராட்டத்தை மற்றொரு போராட்டத்திற்கு எதிராக நிறுத்தும் அணுகு முறையை எடுக்கிறார்கள். எல்லாப் போராட்டங்களையும் ஒன்றிணைப்பது, அதற்கான ஓர் அனைத்தும் தழுவிய பார்வையைப் பெறுவது என்ற பாட்டாளி வர்க்க அணுகுமுறையைக் காட்டிலும், பிரித்துப் பிளந்து எதிரெதிராய் நிறுத்தும் குட்டி முதலாளித்துவ அணுகுமுறை யும் சவடாலாகப் பவனி வருகிறது.

சட்டம் சார்ந்த, கடுமையான தண்டனை சார்ந்த, ஆண்மை அழிப்பு, மரண தண்டனை எனப் பேசும் ஜெயலலிதா, இருளர் பெண் களைப் பாலியல் வன்முறை செய்தவர்களைத் தண்டனையின்றித் தப்ப விடுகிறார்; தாலிக்குத் தங்கம், திருமாங்கல்யத் திட்டம் போன்ற ஆணாதிக்க முறைகளை ஊக்குவிக்கிறார்; கட்சிப் பொதுக்குழுவிற்கு, இளம்பெண்களின் ரிக்கார்ட் டான்ஸ் ஏற்பாடு செய்வதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் பாலியல் வல்லுற வுக்கு எதிரானவர் எனச் சவடால் அடிக்கிறார்.

சுகாசினிக்கும் திரைத்துறையினருக்கும் பாலியல் வன்முறை பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா எனக் கேட்கும் பத்தி எழுத்தாளர் குரல், மை பூசிய, ஒப்பனை அணிந்த டிஸ்கொதே செல்லும் பெண்கள் போராட வரலாமா என்ற அபிஜித் முகர்ஜியின் குரலோடு சேர்ந்து கொள்கிறது. அடுப்படியை, வீட்டின் மூலையை, புனிதக் குடும்பத்தை உனக்கான லட்சுமணக் கோடுகளை மீறாதே என்ற வாதமும், பெண்களில் சிலர் சமூக அரசியல் வெளியில் நுழையக்கூடாது என்ற வாதமும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

ஒரு காலத்தில், யார் முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற சக்திகள் என்ற சான்றிதழ் தரும் வேலையை அதிகாரபூர்வ இடதுசாரிகள் செய்தனர். இன்று இகக, இகக(மா)வை கடுமையாக விமர்சிக்கும் சில அறிவாளிகள், யார் முற்போக்காளர்களாக ஜனநாயக சக்திகளாக இருக்க முடியாது, எந்தப் போராட்டங்கள் ஜனநாயகப் போராட்டங்கள் ஆக முடியாது எனச் சொல்லும் தூய்மைக் கோட்பாட்டை, நவீன தீண்டாமையைப் பின் பற்றுகிறார்கள். டெல்லி போராட்டத்தை விமர்சிப்பதாகத் துவங்கிய ஒருவர், சாமான்ய மக்கள் சார்பாக நடுத்தர மக்களுக்கெதிராக வாளேந்திப் புறப்பட்ட ஒருவர், இனி டெல்லி அல்லாத வேறிடங்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்கள், பாலியல் வல்லுறவாளர் களிடம், தம்மையும் தமது ஆண் நண்பர்களை யும், தம் சொந்தச் செலவில், டெல்லிக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு மேற் கொள்ளுமாறு கெஞ்சும் நிலை வரலாம் என்கி றார். (ஊடகக் கவனம், சிங்கப்பூர் சிகிச்சை ஆகியவற்றை விமர்ச்சிக்கிறாராம்.) பாலியல் வல்லுறவு என்ற பிரச்சன  ொடர்பான காத்திரமான அணுகுமுறையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி விடுகிறார்!

வண்டியில், சுமை அது தாங்கும் அளவுக்கு ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு மேல் ஒரு மயிலிறகு ஏற்றப்பட்டாலும், அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும் என வள்ளுவர் எழுது கிறார். தம் மீது இழைக்கப்படும் கொடுமைகள் விஷயத்திலும் மக்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். டெல்லி போராட்டமும் இத்தகையதே.

எல்லா எதிர்ப்புக்களையும் ஒன்றிணைப் போம்!

உழைக்கும் மக்கள் எதிர்ப்பை அடிப்ப டையாக்குவோம்!

நடுத்தர மக்கள்பால் நேசக்கரம் நீட்டு வோம்!

டெல்லி போராட்டத்தை அச்சமற்ற சுதந்திரத்துடன் உயர்த்திப் பிடிப்போம்!

*********************************************************************************************

Search