COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 17, 2018


மக்கள் நலனே கட்சியின் நலன்

- சாரு மஜும்தார், (12 மார்ச் 1918 - 28 ஜுலை 1972)

தற்போதைய சூழலில் நமது கடமைகள்
ஜனவரி 28, 1966

அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டு, உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற இந்திய முதலாளித்துவத்தால், ஜனநாயகத்தை படுகொலை செய்வதைத் தவிர வேறு எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தக் கைதுகளுக்குப் பின்னால் ஏகாதிபத்திய கட்டளைகள் இருந்தன. ஏனென்றால், கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டபோது அய்க்கிய அமெரிக்க காவல்துறை தலைவர்மேக்ப்ரைட்டில்லியில்தான் இருந்தார். அவருடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் பரவலான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனநாயகத்தை படுகொலை செய்வதால் இந்த நெருக்கடிக்கு தீர்வு கண்டுவிட முடியாது; இந்திய முதலாளித்துவத்தால் இந்தப் பிரச்சனையை தீர்க்கவும் முடியாது. அரசாங்கம் எந்த அளவுக்கு ஏகாதிபத்தியத்தின் மீது சார்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் உள்நாட்டு நெருக்கடியை தீர்ப்பதில் தோல்வியை தழுவும். ஒவ்வொரு நாளும் மக்களின் அதிருப்தி அதிகரிக்கும்; ஒவ்வொரு நாளும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த மோதல் அதிகரித்தே தீரும்.
எனவே நாளும் வளரும் மக்கள் சீற்றத்தை ஒடுக்க இந்திய அரசாங்கத்தால் முடியாது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், மக்கள் சீற்றத்தை தவிர்க்க முடியாமல் போராட்டங்களாக மாற்றும். நாளைய எதிர்ப்பு இயக்கம் என்ன வடிவம் எடுக்கும் என்பதற்கான அறிகுறிகளை மெட்ராசில் நடக்கும் மொழிப் போர் காட்டுகிறது. எனவே, வருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள் மட்டுமல்ல. பெரிய வெற்றிகளின் காலங்கள் கூட. எனவே வருகிற காலங்களில் மக்களின் புரட்சிகர போராட்டங்களை வழிநடத்தும் பொறுப்பை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க வேண்டியிருக்கும். நமது கட்சி அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக நாம் கட்டியெழுப்பினால்தான் அந்தப் பொறுப்பை நாம் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

நக்சல்பாரியின் ஓராண்டு
ஜுன், 1968

நக்சல்பாரியில் விவசாயிகள் புரட்சி துவங்கி முழுமையாக ஓராண்டு நிறைவுற்றுவிட்டது. இந்த போராட்டம் மற்ற விவசாய போராட்டங்களில் இருந்து வேறுபட்டது. என்ன வேறுபாடு? பல்வேறு அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விவசாயிகள் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுதான் முதல்முறையாக விவசாயிகள் தங்கள் பகுதி கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராடுகிறார்கள். இதுதான் நக்சல்பாரி விவசாய எழுச்சி நமக்குத் தரும் பாடம்: நிலம், விளைச்சல் ஆகியவற்றுக்காக மட்டுமின்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற போர்க்குணமிக்க போராட்டங்கள் முன்செலுத்தப்பட வேண்டும். நக்சல்பாரி எழுச்சிக்கு இதுதான் தனித்துவத்தை தருகிறது. வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள அரசு எந்திரத்தை செயலிழக்கச் செய்வதற்கு ஏதுவாக தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். இந்திய விவசாயப் போராட்டங்களின் வரலாற்றில் முதல்முறையாக நக்சல்பாரியில்தான் இந்தப் பாதை பின்பற்றப்பட்டது. வேறுவிதமாகச் சொல்வதானால், புரட்சிகர காலங்கள் முன்னகர்த்தப்பட்டுவிட்டன; இந்த ஆண்டு அதன் முதல் ஆண்டு. அதனால்தான் எல்லா நாடுகளிலும் உள்ள புரட்சியாளர்கள் நக்சல்பாரி எழுச்சியை மனப்பூர்வமாக வரவேற்கிறார்கள்.

Search