COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 3, 2012

Mar-1-8

கருத்து

என்ன வாழ்க்கை இது?

(பிப்ரவரி 15 - 17 தேதிகளில் சென்னையில் நடந்த கட்சி மாநிலக் குழு கூட்டத்தில் கிராமப்புற ஆய்வின் அவசியத்தை வலியுறுத்தி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி பேசியதில் இருந்து)

விவசாய நெருக்கடி என்றால் என்ன? அது எப்படி மக்கள் வாழ்க்கையை பாதிக்கிறது?

தொழிலாளர்கள் மிகவும் சோம்பேறிகளாகி விட்டார்கள், வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை, கூலி மிகவும் அதிகம் தர வேண்டியுள்ளது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் சொல்பவர் வேலைக்கு வரும் தொழிலாளிக்கு 10 நாட்கள் கூட வேலை தர முடியாது. நான் உங்களுக்கு வேலைக்கு ஆள் தருகிறேன். நீங்கள் எத்தனை நாட்கள் வேலை தருகிறீர்கள் என்று நிலம் வைத்துள்ள ஒருவரிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. யோசிக்கிறார். 4 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை வேலை தர முடிந்தால் பெரிய விசயம். அனைவரும் நூறு நாள் வேலைக்குச் சென்று விடுகிறார்கள் என்கிறார். நூறு நாள் வேலை மட்டும் கிடைத்து விடுமா? அதுவும் இல்லை. அது ஆண்டில் 60 முதல் 70 நாட்கள்தான். அதற்கு மேல் கிடைப்பதில்லை. ஆனால், தொழிலாளர்கள் நூறு நாட்கள் வேலைக்குச் சென்று விடுவதால்தான் வேறு விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

உங்களுக்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? விவசாய நிலம் முழுக்க கருவேலம் போட்டு விவசாயமே இல்லாமல் செய்துவிட வேண்டும். பிறகு வேலைக்கு என்ன செய்வீர்கள்? அப்போதுதான் உங்களுக்கு புத்தி வரும் என்று கொஞ்சம் நிலம் வைத்திருக்கும் ஒருவர் சொல்கிறார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு நிலமற்ற விவசாய தொழிலாளி, கருவேலம்தானே, உன் நிலத்தில் தானே, தாராளமாகப் போடு. அதைத்தான் நானும் எதிர்ப்பார்க்கிறேன். போட்டால் உனக்குத்தான் நஷ்டம். உன் பிழைப்புதான் பாழாய்ப் போகும். நான் வேறு ஊருக்குப் போய், வேறு நிலத்தில் போய் வேலை செய்துகொள்வேன் என்றார் அவர். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏதும் தெரியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் தனக்குத் தெரிந்த விதத்தில் மார்க்சியம் பேசுகிறார்.

யாரும் எந்த வேலையும் செய்வதில்லை. எல்லாரும் தண்ணி போட்டுவிட்டு ஆடுகிறார்கள் என்கிறார்கள். சரி. ஒருவரும் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள், எப்படி குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று கேட்டால், அது எப்படியோ நடக்கிறது. ஆனால் வேலை பார்ப்பதில்லை என்கிறார்கள்.

நம்மைச் சுற்றி இருக்கிற கிராமப்புற வறியவர்களைப் பற்றி நாம் எவ்வளவு தூரம் சரியாக புரிந்து கொண்டுள்ளோம்? அவருக்கு என்ன, நிலம் இருக்கிறது, அவர் மிகவும் வசதியானவர் என்பார்கள். நெருங்கி விசாரித்துப் பார்த்தால் அவருக்கு இருப்பது வெறும் ஓர் ஏக்கர் நிலம் என்பதும், அதுவும் அவருக்கு விவசாயம் செய்ய தேவையான வசதி இல்லாததால் தரிசாகக் கிடப்பதும் தெரிய வரும். விவசாயமே செய்ய முடியாமல் துண்டு நிலம் மட்டுமே வைத்திருப்பதனால் எப்படி வசதியானவர் ஆவார்?

எந்திரத்தை வைத்து வேலை செய்தால்தான் சமாளிக்க முடியும். இந்த தொழிலாளி உணவு கேட்கிறான், தேநீர் கேட்கிறான் என்று புகார் சொல்கிறார்கள். அவருக்கு கூலி எவ்வளவு தெரியுமா வாங்குகிறார்? 300 ரூபாய், 400 ரூபாய் வாங்குகிறார். ஜாலியாக இருக்கிறார் என்கிறார்கள்.

என்ன ஜாலியாக இருந்துவிடுவார்கள்? ஒரு விவசாயத் தொழிலாளியை சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன விசயங்கள் அதிர்ச்சி தருகின்றன.

மாதத்தில் 20 நாட்கள் வேலை இருக்கும். 3 மணிக்கு எழுந்துவிடுவோம். உணவு தயாரிப்பு அப்போதே நடக்கும். 4 மணிக்கு பேருந்து வரும். அங்கிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வேலை செய்யும் இடத்துக்குச் செல்வோம். அங்கு காலை 6 மணிக்கு வேலையைத் துவங்கி விடுவோம். அங்கே இரவு ஏழரை மணி வரை வேலை செய்துவிட்டு பிறகு, எட்டரை மணி பஸ் பிடித்து 10 மணிக்கு வீட்டு வருவோம். பிறகு சமைத்து சாப்பிட்டுவிட்டு 11, 11 அரைக்குப் படுத்தால், அடுத்த நாள் வேலைக்கு மீண்டும் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பிறகு மீண்டும் அதேச் சுற்று. இவர் வாழ்க்கையில் அந்த 400 ரூபாய் சம்பளத்துக்கு எத்தனை துன்பம்? மொத்த நாளுமே துன்பத்தில் கடந்து போகிறது. உணவு இழக்கிறார். தூக்கம் இழக்கிறார். குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை. குழந்தைகளை எப்போது பார்ப்பீர்கள் என்று கேட்டால் எங்கே பார்ப்பது, நான் புறப்படும்போது தூங்கிக் கொண்டிருப்பார்கள், நான் வரும் போது தூங்கிவிடுவார்கள் என்றார்.

ஒரு கட்டுமான தொழிலாளியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். பெண் தொழிலாளி. 150 ரூபாய் சம்பளமாம். காலை 6 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வேலைக்குப் புறப்பட்டால் பிறகு மாலை 7 மணிக்கு மேல்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும். இரண்டு கைக் குழந்தைகள். இவர் வீட்டிலும் வேலை செய்துவிட்டு வெளியிலும் வேலை செய்ய வேண்டும். என்ன வாழ்க்கை இது?

ஒரு கிராமப்புற தொழிலாளி ஏதோ சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்துக்குச் செல்கிறார். அந்த அலுவலர் அவரிடம் என்ன மாதச் சம்பளம் என்று கேட்கிறார். அந்த கிராமப்புற தொழிலாளிக்குச் சொல்லத் தெரியவில்லை. என்ன சம்பளம் என்று எப்படிச் சொல்வது என்று அவர் திருப்பிக் கேட்கிறார். மாதம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் கிடைத்த வேலைக்குச் செல்கிறேன். கொடுக்கிற கூலியை வாங்குகிறேன். இதில் மாதச் சம்பளம் என்று எதைச் சொல்வது?

வாழ்வதற்காக, பிழைத்திருப்பதற்காக என்னென்னவோ துன்பத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள். அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆய்வு என்பது புத்தகங்களைப் படிப்பது அல்ல. நம்மைச் சுற்றி வாழும் உழைக்கும் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது. ஆடு மாடு மேய்ப்பது கிராமப்புறங்களில் முக்கியமான தொழிலாக இருக்கிறது. அவர்களுக்கு அவர்களுடைய வலியைச் சொல்லத் தெரியவில்லை. அந்த வலி மரத்துப் போய்விட்டது. உங்களுக்கு வீடில்லையா, நிலமில்லையா, வருமானமில்லையா என்று கேட்டால், என்ன புதிதாகக் கேட்கிறீர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு அந்தத் துன்பமான வாழ்க்கைப் பழகிப் போய்விடுகிறது.

அவர்கள் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களை போராடுபவர்களாக உருவாக்க முடியாது. தொழிலாளியின் வலியை உணர்ந்தால் ஒழிய நம்மால் அவர்களுக்கு தலைமை தாங்க முடியாது.

 

அறிவிச்சுட்டாய்ங்கய்யா.....

அறிவிச்சுட்டாய்ங்க.....!

அணுக்கழிவு கூடங்குளத்தில் வைக்கப்பட மாட்டாது. அது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பில் வைக்கப்படும். பிறகு வேறொரு இடத்தில் கட்டப்படவுள்ள வேறொரு ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மறுசுழற்சி செய்யப்படும்.

-         தமிழக அரசு நியமித்துள்ள கூடங்குளம் அணூலை ஆய்வுக்குழு உறுப்பினர் எம். ஆர். சீனிவாசன்.

கல்லூரி நாட்களில் நான் டென்னிஸ் நன்றாக விளையாடுவேன். நான் அந்தத்துறையிலேயே இருந்திருக்க வேண்டும். அரசியலை தேர்ந்தெடுத்து பெயிய தவறு செய்துவிட்டேன்

-         திரிபுராவில் ந்டந்த ஒரு கூட்டத்தில் மத்திய எள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்

சங்கரங்கோயில் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தேமுதிகவை ஆதரிக்கும். எங்கள் கட்சித் தைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வார்கள்

-         மார்க்சிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாநாட்டில் மீண்டும் கட்சியின் மநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி. ராமகிருஷ்ணன்.

Search