‘என்ன செய்ய வேண்டும்?’
லெனின்
‘முழுவிரிவான அரசியல் அம்பலப்படுத்தலை
ஒழுங்கமைத்து நடத்துவது அரசியல் கிளர்ச்சியை
அவசியமாக விரிவாக்குவதற்கு ஓர் அடிப்படை நிபந்தனை. இப்படிப்பட்ட அம்பலப்படுத்தலை கொண்டல்லாமல் வேறெந்த வழியிலும் அரசியல் உணர்விலும்
புரட்சி நடவடிக்கையிலும் மக்களுக்கு பயிற்சியளிக்க
முடியாது. எனவே சர்வதேச சமூக-ஜனநாயகவாதம்
முழுவதற்கும் உள்ள மிக முக்கியமான வேலைகளில்
இவ்வகைப்பட்ட நடவடிக்கையும் ஒன்றாகும். ஏனெனில் அரசியல் சுதந்திரம் கூட அம்பலப்படுத்தல்களை
எவ்விதத்திலும் விலக்குகிறதில்லை: அவற்றில் திசை
சம்பந்தப்பட்ட துறையைத்தான் கொஞ்சம் மாற்றுகிறது. இப்படித்தான், ஜெர்மன் கட்சி தமது அரசியல்
அம்பலப்படுத்தல் இயக்கத்தை நடத்துவதில் காட்டுகிற அயராத ஆற்றலின் சிறப்பால் தனது நிலைகளை
குறிப்பாக பலப்படுத்திக்கொண்டும் செல்வாக்கை
விரிவுபடுத்திக் கொண்டும் வருகிறது. எந்த வர்க்கம்
பாதிக்கப்படுகிறதாயினும் சரி, கொடுங்கோன்மை
ஒடுக்குமுறை வன்முறை அநீதி சம்பந்தப்பட்ட எல்லா
வழக்குகளிலும் பதில் நடவடிக்கை எடுக்க தொழிலாளிகள் பயிற்றுவிக்கப்படாவிட்டால் - மேலும், வேறெந்த பார்வை நிலையிலிருந்தும் அல்லாமல்
சமூக ஜனநாயகவாத பார்வை நிலையிலிருந்து அவர்கள் பதில் நடவடிக்கை எடுக்க பயிற்றுவிக்கப்படாவிட்டால் - பாட்டாளிவர்க்க உணர்வு உண்மையான
அரசியல் உணர்வாக இருக்கமுடியாது. ஸ்தூலமான, எல்லாவற்றிற்கும் மேலாக நடப்பில் முக்கியமாக உள்ள
அரசியல் விஷயங்களிலிருந்தும் நிகழ்ச்சிகளிலிருந்தும்
மற்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் அதனதன் அறிவுத்
துறை ஒழுக்கத்துறை அரசியல் துறை வாழ்க்கையில்
உள்ள எல்லா வெளிப்பாடுகளையும் வைத்து உற்றுக்
கவனிக்க தொழிலாளிகள் கற்றுக்கொள்ளாவிட்டால், மக்கள் தொகையின் எல்லா வர்க்கங்களின், பகுதிகளின் குழுக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களைப் பற்றிய
பொருள்முதல்வாத பகுப்பாய்வையும் மதிப்பீட்டையும் நடைமுறையில் செயற்படுத்த தொழிலாளிகள்
கற்றுக்கொள்ளாவிட்டால், உழைக்கும் மக்களின்
உணர்வு உண்மையான வர்க்க உணர்வாக இருக்க
முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தையும் நுண்
நோக்கையும் உணர்வையும் முற்றாகவோ முக்கியமாகவோ அதன் மீது மட்டுமே ஒருமுனைப்படுத்தி
செலுத்துகிறவர்கள் சமூக ஜனநாயகவாதிகள் ஆகமாட்டார்கள். ஏனெனில், தற்கால சமுதாயத்தின் பல்வேறான எல்லா வர்க்கங்களிடையே உள்ள உறவுமுறைகளைப் பற்றி அரசியல் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட முற்றும் தெளிந்த ஒரு தத்துவார்த்த ஞானத்தோடு மட்டும் - தத்துவார்த்த ஞானத்தோடு என்று சொல்வதைவிட நடைமுறை ஞானத்தோடு என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும் - பாட்டாளி வர்க்கத்தின் தன்னைப் பற்றிய அறிவு
பிரிக்கவொண்ணாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது. இக்காரணத்தால்தான் அரசியல் இயக்கத்தில் மக்களை
ஈடுபடுத்துவதற்கு பொருளாதார போராட்டந்தான் மிக
விரிவான செயற்பாட்டுத் திறமுள்ள சாதனம் எனும்
கருத்தோட்டம் - ‘பொருளாதாரவாதிகள்’ போதிக்கும்
கருத்தோட்டம் - அதன் நடைமுறை குறிப்பொருளிலே
மிகவும் தீங்கானது, பிற்போக்கானது. சமூக – ஜனநாயகவாதியாக ஆவதற்கு நிலப்பிரபு, புரோகிதம், உயர்நிலை
அரசாங்க அலுவலர், விவசாயி, மாணவன், நாடோடி
ஆகியோரின் பொருளாதார இயல்பு பற்றியும் சமுதாய, அரசியல் பண்புக்கூறுகள் பற்றியும் தொழிலாளியின்
மனத்தில் ஒரு தெளிவான சித்திரம் பெற்றிருக்க
வேண்டும். ஒவ்வொரு வர்க்கமும் ஒவ்வொரு மக்கள்
பகுதியும் தன்னுடைய சுயநலஞ்சார்ந்த முயற்சிகளையும் தன்னுடைய உண்மையான ‘உள்வினைபாடுகளையும்’ மறைக்கப் பயன்படுத்தும் எல்லாக்
கவர்ச்சிச் சொற்களின் போலி வாதங்களின் பொருளை
அவன் புரிந்திருக்க வேண்டும்: சில அமைப்பு சில
சட்டங்களும் என்னென்ன நலன்களைப் பிரதிபலிக்கின்றன, எப்படி பிரதிபலிக்கின்றன என்றும் அவன்
புரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்தத் ‘தெளிவான
சித்திரத்தை’ எந்தப் புத்தகத்திலிருந்தும் பெற
முடியாது. உயிர்த் துடிப்புள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்தும் அந்தந்த தருணத்தில் நிலவும் நடப்புகளையும் ‘அவனவன் அவனவனுடைய வழியிலே, ஒருவேளை காதோடு காது வைத்தாற்போலவுங்கூட, விவாதிக்கிற விஷயங்களையும்’ இன்னின்ன நிகழ்ச்சிகளில், இன்னின்ன புள்ளிவிபரங்களில், இன்னின்ன
நீதிமன்றத் தீர்ப்புகள் முதலியவற்றில் வெளிப்படுகிற
விஷயங்களையும் நெருங்கித் தொடர்ந்து வரும்
அம்பலப்படுத்தல்களில் இருந்தும் மட்டுமே அதைப்பெற முடியும். மக்களை புரட்சி நடவடிக்கையில் பயிற்றுவிப்பதற்கு இந்த முழுவிரிவான அரசியல் அம்பலப்படுத்தல்கள் அவசியமான, அடிப்படையான
நிபந்தனையாகும்.
தொடரும்…