COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

வெண்மணி தியாகிகள் நினைவு கூட்டங்கள்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

வெண்மணி தியாகிகள் தினமான 25.12.2016 அன்று கோவை கட்சி அலுவலகத்தில் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலிக் கூட்டம் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், கிளைச் செயலாளர்கள், உள்ளூர் கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
25.12.2016 அன்று விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்திலும், கச்சிராபாளையத்திலும் தியாகிகள் 44 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஸ்தூபி வடிவமைக்கப்பட்டு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மருதூர் ஊராட்சியில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து இகக(மாலெ) கிளைச் செயலாளர் தோழர் சுலோச்சனா தலைமையில் 12.12.2016 அன்று
மருதூர் - பண்ருட்டி சாலையை மறித்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அவிகிதொச தோழர்கள் கலியமூர்த்தி, ஏழுமலை, கந்தசாமி, பாபு, கலாமணி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க அளிக்கப்பட்ட உத்தரவாதத்திற்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணிகள் 16 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர், இந்தியன் வங்கி கிளையில் நாணய மதிப்பகற்றும் பிரச்சனையில் ஏடிஎம் தொடர்ந்து செயல்படாததைக் கண்டித்து இகக(மாலெ) வட்டச் செயலாளர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் 15.12.2016 அன்று திருநாவலூரில் நடைபெற்றது. இதில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் செண்பகவள்ளி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் ராஜசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்திற்கு பிறகு மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
19.12.2016 அன்று திருநாவலூர் இந்தியன் வங்கி முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் வங்கியில் நடைபெறும் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு ஜன்தன் கணக்கிலும் மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் போட வேண்டும், பல லட்சம் கோடி கார்ப்பரேட் கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், தோழர்கள் செண்பகவள்ளி, ராஜசங்கர், கணேசன், பாபு, கந்தசாமி, சுலோச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
29.12.2016 அன்று கள்ளக்குறிச்சியில் மத்திய மோடி அரசையும் இதற்கு துணை போகும் ஒபிஎஸ் அதிமுக அரசையும் கண்டித்தும், வீட்டுமனை, ஓய்வூதியம், குடிநீர் பிரச்சனை, விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகள் மீதும் நாணய மதிப்பகற்றும் மோசடி திட்டத்தை அம்பலப்படுத்தியும் அவிகிதொச மாவட்டச் செயலாளர் தோழர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக்குழு தோழர்கள் கலியமூர்த்தி, செண்பகவள்ளி, அவிகிதொச ஒன்றிய செயலாளர் தோழர் ஜான்பாட்சா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் ஜோசப்புக்கு செவ்வணக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டான்கொளத்தூர் ஒன்றியம் அஸ்தினாபுரத்தில் பிறந்த தோழர் ஜோசப் தனது 70வது வயதில் இயற்கை எய்தினார். அவர் பிரசிடென்சி கிட் லெதர்  கம்பெனியில் ஒரு தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் துவங்கினார். 1985ல் உயிரியல் பூங்காவில் ஏஅய்சிசிடியு சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் எஸ்.ராமமூர்த்தி மூலம் தொழிற்சங்க இயக்கத்துக்கு வந்தார். தான் வேலை செய்யும் தொழிற்சாலைத் தாண்டி பகுதியின் பல்வேறு ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தோடு  இணைந்து நின்றார். சிறை சென்றார். தொழிற்சங்கப் பணிகளோடு பகுதி மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான பேருந்து வசதி, கள்ளச்சாராய ஒழிப்பு, நில உரிமை என கடந்த 25 ஆண்டுகளாக தொழிலாளர் நலன், மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளானார். அதிலிருந்து மீண்டு வந்த போதிலும் அதன் விளைவுகளை அனுபவித்து வந்தார். 15.12.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் வார்தா புயலால் தாக்கப்பட்ட பின்னணியில் அவர் மரணம் நிகழ்ந்தது. ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவராக இருந்தார். கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலும் 3 முறை திருப்போரூர் சட்டமன்றத் தேர்தலிலும் அளப்பரிய பணியாற்றினார். கூடுவாஞ்சேரி பகுதியில் கட்சிக்கு சமூக அடித்தளம் அமைவதில் அவர் பங்கு மகத்தானது. தோழர் ஜோசப்புக்கு செவ்வணக்கம்.
29.12.2016 அன்று அவரது சொந்த ஊரான அஸ்தினாபுரத்தில் மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராமமூர்த்தி தலைமை யில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் .எஸ்.குமார், இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாரதி, இரணியப்பன், மற்றும் கோபால், ஞானப்பிரகாசம் உட்பட காஞ்சி மாவட்டத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Search