COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

மக்களை வஞ்சிக்கும் திறமை விரைவில் தண்டிக்கப்படும்

தமிழ்நாட்டில் சில சிலைகள் கொடுத்து வைத்தவை. விலை ஏறிய தங்கத்தை வாங்க முடியாமல், கடன் வாங்கி மகளுக்கு திருமணம் செய்து, கடனை அடைக்க கிட்னி விற்பதுவரை செல்லும் மக்கள் வாழும் மாநிலத்தில், ஒரு சிலைக்கு 13 கிலோ தங்கமா? பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒருவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்து, பூஜை செய்வது அவருக்கு மரியாதை செய்வதாகுமா? ஜெயலலிதா ஏன் அப்படிச் செய்தார் என்று விளக்குவாரா?

தங்கக் கவசம் அணிவித்தது அஇஅதிமுக, தமிழக அரசாங்கம் அல்ல என்பதுதான் இதில் தமிழக மக்கள் ஆறுதல் அடையக்கூடிய ஒரே விசயம்.
ஆனால், அஇஅதிமுக சார்பாக அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தை தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் 24 மணி நேர பணி பார்த்து பாதுகாப்பார்கள்.

பிறகு, அது தேசியமயமாக்கப்பட்ட வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். பெட்டக சாவியை அஇஅதிமுகவினரா, தேவர் நினைவில்ல பாதுகாவலர்களா, யார் வைத்துக் கொள்வது என ஜெயலலிதா முடிவு செய்வார். ஜெயலலிதாவும் சசிகலாவும் நகைக் கடைகளாக ஊர்வலம் வந்தது, எவ்வளவு தடுத்தாலும், கண்முன் தோன்றுகிறது. அவர்கள் தங்கம். அவர்கள் உரிமை.

ரூ.5 கோடிக்கு தங்கக் கவசம் செய்து அதை பிறகு வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்போகும் அஇஅதிமுகவினர் இந்த விசயத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம்: 2013 செப்டம்பரில் அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இன்று வரை சப்பாத்தி கிடைப்பதில்லை. அதற்கான சோதனை ஓட்டம் இன்னும் முடிவு பெறவில்லை என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

ஏன் சோதனை ஓட்டம் முடிவு பெறவில்லை என்றால், போதுமான சப்பாத்தி எந்திரங்கள் இல்லை என்றும் ஓர் எந்திரம் பழுதானால் உடனடியாக மாற்று எந்திரம் இல்லை என்றும் இந்த சிலபல காரணங்களால் சப்பாத்தி தருவதில் தாமதம் என்றும் சொல்கின்றனர். அஇஅதிமுககாரர்கள் அரசு உணவகங்களுக்கு சப்பாத்தி எந்திரம் வாங்கித் தந்தால் தமிழக மக்கள் மத்தியில் அம்மா புகழ் கொடிகட்டிப் பறக்காதா?

இதையொட்டி இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை கூட்டணி கட்சியினர் கூட மெச்சிப் பாராட்டுகின்றனர். ஒரு சப்பாத்தி எந்திரம் வாங்க முடியாத திறமை என்ன திறமை? இன்று சப்பாத்திக்கு ஏற்பட்ட நிலை மக்களவை தேர்தல் முடிந்த பிறகு ஒட்டுமொத்த மலிவு விலை உணவகத்துக்கும் ஏற்படாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

இன்னொரு தொடர் கேள்வி. சென்னையில் கொசுத் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க சென்னை மாநகராட்சி கட்டணமில்லா கொசுவலை தருகிறது. கொசு ஒழிப்புக்கு கழிவுநீர் குழாய்கள் பொருத்துவது போன்ற சாதாரண வழி கூட கண்டுபிடிக்க முடியாத திறமை என்ன திறமை?

இது போன்ற சாதாரண திறமைகள் கூட இல்லாத தமிழக ஆட்சியாளர்கள் அரசுப் பணிகளில் தகுதி, திறமை, தேர்வு என்று பந்தல் கட்டுகிறார்கள். தகுதித் தேர்வின் பெயரால் தமிழ்நாட்டின் செவிலியர் மாணவர் மத்தியில் பிளவை ஏற்படுத்தியவர்களின் அடுத்த இலக்கு, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் பணிக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்.

இந்தப் படையில் சேர 1,49,488 பேர் விண்ணப்பித்தார்கள். 23,865 பேர் தகுதி பெற்றார்கள். அவர்களில் 10,099 பேர், உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ந்தெடுக்கப் படை உருவாகிவிட்டது. மாதம் ரூ.7,500 ஊதியம். ஓராண்டுக்குப் பிறகு தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தகுதி தேர்வு எழுதி காவல்துறையில் பணி. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் நிற்பதுபோல் தெருவில் நிற்பார்களா?

ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்போல் தமிழக அரசு அவர்களை பயிற்சியாளர்களாக இன்னும் சில வருடங்கள் வைத்துக்கொள்ளுமா? காவல்துறையில் ஆள்பற்றாக்குறை என்று காரணம் சொல்லி இளைஞர் படைக்கு ஆள் எடுப்பவர்கள், அவர்களை பணிக்கு அமர்த்துவதில் ஏன் சூதாட்டம் நடத்துகிறார்கள்?

தேசிய அளவில் பின்னர் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னரே செயல்படுத்தி தேசிய திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என்று ஆளுநர் ரோசய்யா தனது சட்டமன்ற உரையில் குறிப்பிட்டார். ரோசய்யா உண்மையைச் சொல்லிவிட்டார். தேசிய அளவில் மக்களை எப்படி விதவிதமாக வஞ்சிக்க முடியும் என்பதை முன்னரே செயல்படுத்தும் தமிழக அரசு மக்களை வஞ்சிப்பதில் நிச்சயம் முன்னோடிதான்.

ஜெயா தொலைக்காட்சியில் மட்டும்தான் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறதே தவிர, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரிவு மக்களும் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக, தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக, வீதிகளில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை, கூலி, கவுரவம் வேண்டும், வீடற்றவர்களுக்கு வீட்டு மனை வேண்டும்,
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வேண்டும், சாதி ஆதிக்க சக்திகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும், அணுஉலை ஆபத்துக்கு முடிவுகட்ட  வேண்டும் என ஒவ்வொரு நாளும் பல பிரிவு உழைக்கும் மக்களும் குரல் எழுப்புகின்றனர். ஜெயலலிதா என்னிடம் இப்போது இருப்பதெல்லாம் அறிவிப்பு ஒன்றுதான், மற்றதெல்லாம் மத்தியில் ஆட்சி மாறிய பிறகு என்கிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதிகாரபூர்வ இடதுசாரிகளுடன் கூட்டணி அறிவித்த பிறகு, ஜெயலலிதா, துணிச்சலாக பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பதங்களை எல்லாம், தன்னை, தனது ஆட்சியை விவரித்துக் கொள்ள பயன்படுத்துகிறார். தடி எடுத்தவர் தண்டல்காரராக முடியாது.

இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதால் பொதுவுடைமைவாதி ஆகிவிட முடியாது. எந்த வேடமும் ஜெயலலிதாவின் நவதாராளவாத முகத்தை மறைத்துவிட முடியாது.

தமிழக மக்களுக்கு சோதனை மேல் சோதனை. தமிழ் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைச் சொல்லி வண்டலூர் பொதுக் கூட்டத்தில் தனது உரையை துவங்கினார் மோடி. நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று அங்கு கூடியுள்ள கூட்டமே சொல்வதாக மோடி சொன்னார். மோடி பொதுவாக குறுகிய பார்வை கொண்டவர். வேற்று மதத்தினரை விலக்கி வைத்துப் பார்த்துப் பழக்கப்பட்டவர். அதனால், வண்டலூருக்கு வந்தவர்கள்தான் தமிழக வாக்காளர்கள் என்று குறுகிய கருத்துக்கு வந்துவிட்டார்.

தமிழகம் மிகப்பெரியது மோடி அவர்களே. இது பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட மாநிலம். மனுதர்மம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்கிற மக்கள் இருக்கிற மாநிலம். உங்கள் ஆர்எஸ்எஸ் அடையாளத்தை மறைத்து, உங்கள் வளர்ச்சி, நல்லாட்சி கதைகளை இங்கே விற்க முடியாது.

 கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், கூட்டம் முடிந்த பிறகு, மோடியை அவர் தங்கியிருந்த அய்ந்து நட்சத்திர விடுதியில் சந்தித்த வைகோ இந்தியாவை மோடிதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மோடியிடம் இருந்து குஜராத்தை மட்டுமின்றி நாட்டை  காப்பாற்ற வேண்டிய அவசிய கடமை எதிர் வருகிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற தயாராகும் உழைக்கும் மக்கள் மோடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் கூட சேர்த்து, அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக தண்டிப்பார்கள்.

Search