COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

அம்பத்தூரில் உழைக்கும் மக்களின் முன்னேற்றம், அமைதி, வளர்ச்சி கோரி மாலெ கட்சி தலைவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

பிப்ரவரி 9 அன்று காலை பட்டினிப் போராட்டம் துவங்கியது. மாலெ கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளருமான தோழர் பாரதி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமையில் சுமார் 200 பேர் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை ஏஅய்சிசிடியு கோவை மாவட்ட சிறப்புத் தலைவர் தோழர் சந்திரன் துவக்கி வைத்து உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவஹர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

60 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிற மதராஸ் ஜிம்கானா கிளப் சங்கத்தின் தலைவர்கள் ஜேம்ஸ், உசேன், மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டேவிட் மோசஸ் ராஜ், ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் ராஜேஷ், மகேஷ், தினகர், குணா உள்ளிட்ட முன்னோடிகள் தொடர்ந்து போராட்டப் பந்தலில் ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

 அம்பத்தூரின் மக்கள் நலன் விரும்பும் மருத்துவர் ராமநாதன் நேரில் வந்து தோழர்களை வாழ்த்தினார்.

கட்சியின் சென்னை மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் மக்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசியதுடன் 2 மாத காலமாக கையெழுத்து இயக்கம் நடத்தியபோது மக்கள் தெரிவித்தக் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி நிறைவாக சிறப்புரையாற்றினார். தோழர்கள் பாரதி மற்றும் பழனிவேல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை 12.02.2014 அன்றும் நான்காவது நாளாக தொடர்கின்றனர்.

பகுதி மக்கள், பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு வாழ்த்தும் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். நீதிக்கான போராட்டத்துக்கு நிதியும் தரப்படுகிறது.

எம்ஆர்எப் தொழிலாளர் சங்கத் தோழர்கள், சீரமைப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் மா.சேகர் மற்றும் முன்னோடிகள், அகில இந்திய தரைவழி போக்குவரத்து ஓட்டுநர் சங்கத் தோழர்கள், மாலெ கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் ஜானகிராமன், இரணியப்பன் ஆகியோர் பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

•    உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும்.

•    வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் வீட்டு மனைப்பட்டா, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1000 படுக்கைகளும் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அரசு பொது மருத்துவமனை வேண்டும்.

•    அம்பத்தூரில் கலை, மருத்துவம், பொறியியல், அரசு கல்லூரிகள்
கூடுதலாக ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் வேண்டும்.

•    அம்பத்தூரின் வானகரம் ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கு அப்புறப்படுத்தப் பட வேண்டும்.

•    சகல விளையாட்டுக்களுக்கான நவீன வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானம் வேண்டும்.

•    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

Search