COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 20, 2019

மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 16 - 30

தலையங்கம்

மத்திய, மாநில அரசுகளின் குற்றமய அலட்சியத்தால்
செத்துப் போகும் தமிழக விவசாயிகள்

ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதாகச் சொல்லப்படுகிற நேரத்தில் அவரது தலைமையிலான ஆட்சி நடக்கிற தமிழ்நாடு, விவசாயிகள் சாவுகளில் முதலிடத்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருக்கிறது.
அக்டோபர் இறுதி வாரம் முதல் நவம்பர் இரண்டாவது வாரத்தின் முதல் பகுதிக்குள் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அய்ந்து விவசாயிகள் இறந்துவிட்டார்கள். இந்தச் சாவுகளில் சில தற்கொலைகள். சில மாரடைப்பால் ஏற்பட்டவை. மாரடைப்புக்கு காரணம் காவிரி நீரோ, வேறெந்த நீரோ கிடைக்காமல் காய்ந்து போகும் பயிர்கள். குடும்பப் பிரச்சனை எதுவும் இல்லை. வயிற்று வலியும் இல்லை. விவசாயம் செய்ய முடியாததால், விவசாயம் செய்ய முயற்சி செய்து ஏற்பட்ட தோல்வியால், கடன் சுமையால், பிள்ளை போல் பாதுகாக்கப்பட வேண்டிய பயிர் கண் முன்னால் கருகிப் போவதைப் பார்த்தும் எதுவுமே செய்ய முடியாமல் போனதால், இப்படி, வைத்த பயிர் வாடுவதை ஒட்டிய காரணங்களால் அவர்கள் செத்துப் போய்விட்டார்கள்.
ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று சொல்லும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் ராணுவ வீரர்களை பாதுகாக்கத் தவறி, அவசியமற்ற போர் வெறிக் கூச்சலுக்கு பலி கொடுத்து ராணுவ வீரர்கள் உயிர் விட காரணமாக இருக்கிறார்கள். விவசாயத்துக்கு தேவையான உள்கட்டுமான வசதிகள், வேறு பல வசதிகளும் செய்யாமல் விவசாயிகளை சாகடிக்கிறார்கள்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகில், கீழகாவலகுடி கிராமத்தில் நவநீதிகிருஷ்ணன் என்ற 65 வயது விவசாயி தனது பயிர் கருகுவதைப் பார்த்து மனம் நொந்து அந்த வருத்தத்தில்  மாரடைப்பு வந்து செத்துப் போனார். அவரது உறவினரைச் சந்தித்து ஆறுதல் சொல்ல, ஆதரவு தெரிவிக்க இகக மாலெ நாகை - தஞ்சை செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வீரச்செல்வன், புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் நீதி மற்றும் விஜய் ஆகியோர் கொண்ட குழு நவம்பர் 11 அன்று கீழகாவலகுடிக்குச் சென்றது. அங்கு உள்ள வேறு ஒரு விவசாயியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் தீபாவளியெல்லாம் ஏன்தான் வருதோ, எழவு என்றாராம். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, விவசாயம் இல்லை, கையில் கொஞ்சமும் காசு இல்லை, குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்பதை தீபாவளியின்போது கூட வாங்கித் தர முடியவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார். ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடச் சொல்லும் மோடி, இது போல் நொடிந்து போயுள்ள விவசாயிகளுடன் தீபாவளி கொண்டாட முன்வருவாரா?
கீழகாவலகுடியில் நவநீதகிருஷ்ணன் உறவினரைச் சந்திக்கச் சென்ற குழுவால் அவர்கள் திட்டமிட்ட நேரத்தில் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. காரணம் மிகவும் கொடுமையானது. கீழகாவலகுடி அருகில் உள்ள பரங்கிநல்லூர் என்ற கிராமத்தில் 60 வயது விவசாயி ஒருவர் நவம்பர் 10 அன்று இரவு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.
அவர் பெயர் ஜெயபால். படிக்கிற வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நீர் இல்லாமல் அவர் வைத்த பயிர் கருகிவிட்ட தால் மாத்திரைகள் சாப்பிட்டு தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார். முதல் நாள் வயல் பக்கம் போனவர் மாலையில், பிறகு இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், வந்துவிடுவார் என அவரது மகள்களும் மனைவியும் காத்திருந்தனர். காலையில் அவரது வயலில் அவரது உயிரற்ற உடலைத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
நவநீதகிருஷ்ணன் உறவினரைச் சந்திக்கச் சென்ற குழு ஜெயபால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பியது.
விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் காவிரி தனபாலன், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதாகவும், தற்கொலை செய்துகொள்ளக் கூடாது, போராட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் சொல்கிறார். தற்கொலைகள் இந்த முயற்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்று விடுகின்றன. காலா உனை சிறு புல்லென மதிக் கின்றேன், எனதருகே வாடா, சற்றே உனை மிதிக்கின்றேன் என்று துன்பப்படும் விவசாயிகளின் காதில் பாரதி நேரில் வந்து பாடினாலும் அவனும் கூட தோற்றுப் போகவே வாய்ப்புகள் அதிகம். விவசாயிகள் எதிர்கொள்ளும் துன்பங்கள் அத்தகையவை. தீபாவளி ஏன் வருகிறது என்று நோகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
இந்தச் சாவுகளுக்கு கர்நாடகாவை மட்டும் காரணமாக காட்டிவிட முடியாது என்பதை நவநீதகிருஷ்ணனின் சாவு எடுத்துச் சொல்கிறது. நவநீதிகிருஷ்ணன் வாழ்ந்த கீழகாவலகுடி வெண்மணியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள 40 குடும்பங்களுக்குச் சொந்தமாக 120 ஏக்கர் நிலம் உள்ளது. 2 ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை நிலம் கொண்டவர்கள் இங்கு இருக்கிறார்கள். நவநீதகிருஷ்ணன் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அவரது இரண்டு மகன்களில் ஒருவர் இப்போதுதான் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கோவில்பட்டியில் அவருக்கு வேலை. இரண்டாவது மகன் என்ன வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறார். மணமாகிவிட்ட மகள் ஒருவர் உள்ளார்.
சுனாமிக்குப் பிறகு கடலுக்குள் செல்ல மீனவர்கள் அஞ்சுவதுபோல், இப்போது விவசாயம் செய்ய விவசாயிகள் அஞ்சுகிறார்கள். விவசாயம்தான் தனது தந்தையை கொன்று விட்டதாக மூத்த மகன் ராஜ÷ உறுதியாக நம்புகிறார். தனது தம்பியோ, இதற்குப் பிறகு யாருமோ, தனது குடும்பத்தில் விவசாயத்தில் ஈடுபட மாட்டார்கள் என்கிறார். இருக்கிற நிலத்தையும் மாடுகளையும் விற்றுவிட திட்டமிட்டிருக்கிறார். அவர் பேசும் போது, தண்ணீர் இல்லாததால் பொய்த்துப் போகும் விவசாயம் அவருக்குத் தந்துள்ள வலி, வேதனை வெளிப்பட்டது.
இந்த அளவுக்கு அவர் வெறுத்துப் போய் பேச காரணம் இல்லாமல் இல்லை. நான் சேற்றில் கால் வைத்தால்தான், நீ சோற்றில் கை வைக்க முடியும் என்றெல்லாம் அவருக்கு அறிவு சொல்ல வேண்டியதில்லை. தனது தந்தையை ஒரு தீவிரமான விவசாயி என்கிறார் அவர். விவசாயத்தின் மீது நவநீதகிருஷ்ணன் கொண்டி ருந்த பற்றும் பாசமும் அவரை அப்படி விவரிக்க வைத்துள்ளது.
நாத்து விட்டுட்டா அதை சாகடிக்க விடக் கூடாது என்று நவநீதகிருஷ்ணன் அடிக்கடி சொல்வதுண்டாம். அப்படி சாகடிக்க விடுகிறவன் விவசாயி அல்ல என்றும் சொல்வாராம். விவசாயம் அவரது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. கூலியடிமைச் சமூகத்தில் கூலி அடிமை, தான் உற்பத்தி செய்கிற பண்டத்தில் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். அவனுக்கு அதில் எந்த பாத்தியதையும் இல்லை. அதனால் அவனது உழைப்பு அவனுக்கு சுமையே. விவசாயம் செய்து வாழ்கிற விவசாயி, தனது உற்பத்தி பொருளிலிருந்து அந்நியப்படுத்தப்படுவதில்லை. அவருக்கு அதன் மீது பாத்தியதை இருக்கிறது. எனவே, விவசாயம் செய்ய அவர் செலுத்தும் உழைப்பு அவரது வாழ்வின் வெளிப்பாடாகவே இருக்கிறது. அந்த உழைப்பு அவருக்கு சலிப்பு தருவதில்லை. துன்பமாக இருப்பதில்லை. மகிழ்ச்சி தருகிறது. அது அவரது வாழ்வாகிறது.
நவநீதகிருஷ்ணன் இந்த வகை விவசாயி. ஒவ்வோர் ஆண்டும் விவசாயத்தில் நட்டமே ஏற்படுகிறது. நட்டம் ஏற்படுத்தும் விவசாயம் வேண்டாம் என்று பெற்ற பிள்ளை ஒவ்வோர் ஆண்டும் சொல்லிப் பார்க்கிறது. அந்த விவசாயி காதுகளில் இது விழுவதில்லை. அவரது வீட்டைச் சுற்றிலும், மா, மாதுளை, நெல்லி, நார்த்தங்காய் என மரங்கள், விதவிதமான பூச்செடிகள், புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் உள்ளன. அவை அனைத்தும் அவரது அன்புக்குரியவை.
அவரது பூமி வானம் பார்த்தது. காவிரி நீர் வந்தாலோ, மழை வந்தாலோ முளைத்து விடும் என்று விதைத்திருக்கிறார். முதல் முறை முளைக்கவே இல்லை. இரண்டாவது முறை விதைத்திருக்கிறார். இந்த முறை வந்த காவிரி நீர் வாய்க்காலை நனைக்கும் அளவுக்கு மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. அவரது நிலத்துக்கு அருகில் ஒரு குளம் இருக்கிறது. அதிலும் தண்ணீர் இல்லை. தனது நிலத்தில் ஊருணி ஒன்று வைத்திருக்கிறார். அதில் இருந்து மோட்டார் மூலம் நீர் இறைக்க எஞ்ஜின் வாடகையில் பெற தேடி அன்று மதியம் 3 மணி வரை அலைந்திருக்கிறார். அதுவும் கிடைக்கவில்லை. மனஉளைச்சலில் வந்தவர், நாத்து நட முடியல, வெதப்பை காப்பாத்த முடியல என்ற கவலையிலேயே இருந்தவர், இரவு 8 மணிக்கு மாரடைப்பு வந்து இறந்து போயிருக்கிறார்.
பசுமை வீடு கட்ட அரசு தந்த உதவியுடன் சேர்த்து சற்று பெரிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் ஏற்கனவே பெரும்துன்பத்தை சந்தித்துக் கொண்டிருந்த நவநீதகிருஷ்ணனை மத்திய, மாநில, அண்டை மாநில ஆட்சியாளர்களின் குற்றமய அலட்சியம் கொன்றுவிட்டது. அவரது மகன் ராஜ÷ சொல்வதுபோல் அவரைக் கொன்றது விவசாயம் அல்ல. அந்தக் குளத்தில் நீர் இருந்திருந்தால், உரிய காலத்தில் எஞ்ஜின் கிடைத்திருந்தால், இன்று நவநீதகிருஷ்ணன் உயிருடன் இருந்திருக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் மழை காலத்தில் வீணாய் வங்கக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்திருந்தால், அந்த விவசாயியின் வாய்க்கால், நனைந்ததற்குப் பதில் நிறைந்திருக்கும். அந்தக் குளத்திலும் நீர் சேர்ந்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மாநில அரசாங்கம் செய்திருக்க முடியும். அருகில் இருப்பதில் பயன் இருந்திருந்தால் வராத காவிரி நீரை எதிர்ப்பார்த்து அவர் காத்திருக்க நேர்ந்திருக்காது.
தற்கொலை செய்துகொள்ளும், விவசாயம் பொய்த்துப் போனதால் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டு உயிர்விட்டுவிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கக் கூடும். தீபாவளி வேண்டாம் என்று சொன்ன விவசாயி 20 ஏக்கருக்குச் சொந்தக்காரர். வாழவே முடியவில்லை என்று அவர் சொல்கிறார். தனது குடும்பம் உயிர் வாழ மாதம் ரூ.10,000 வேண்டும் என்றும், ஏக்கருக்கு ரூ.3,000 என்றாலும் ஆண்டுக்கு ரூ.60,000 கிடைக்கும், இதில் ஆறு மாதங்கள் பிழைக்கலாம், அடுத்த ஆறு மாதங்களுக்கு பிழைக்க வழியில்லை என்கிறார்.
கீழகாவலகுடியில் 20 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயி முதல் மற்ற அனைத்து விவசாயிகளுமே தலை காய்ந்தவர்களாகவே தோற்றம் தருகிறார்கள். வளம் எனச் சொல்லிக் கொள்ள யாரிடமும் தோற்றத்தில் எதுவும் இல்லை. பகுதியிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர் காய்ந்து, நிலம் காய்ந்து கிடக்கும் காட்சியே காணக் கிடைக்கிறது.
காவிரி வரவில்லை. இதற்கு முன்பு இது போல் பல ஆண்டுகள் வரவில்லை. பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர். பல விவசாயிகள் இறந்துவிட்டனர். இனியாவது, இந்த அரசாங்கம், காவிரியில் தமிழக விவசாயிகளின் உரிமையை போராடிப் பெறுகிற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே, மறுபக்கம், கடலில் வீணாகக் கலக்கும் நீரைச் சேமிக்க, வேறு நீராதாரங்களைப் பாதுகாக்க, மேம்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அடுத்து இன்னொரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளும், மனஉளைச்சலால் உயிர் விடும் சூழலை இந்த அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும், தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போய் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் அனைவருக்கும் உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் மன்தீப் சிங்குக்கு அரியானா அரசாங்கம் வழங்கியது போல், இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் இகக மாலெ கோருகிறது.

Search