தொழில் தடைக்கு
எதிராக வழக்கறிஞர்கள் கருத்தரங்கம்
நீதித் துறையில்
ஜனநாயகம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 25 வழக்கறிஞர்கள் 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை என தொழில் செய்ய
தடை விதிக்கப்பட்டு அகில இந்திய பார் கவுன்சிலால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வழக்கறிஞர் சட்ட விதி 34(1)ல் வழக்கறிஞர்களுக்கு
வாய்ப்பூட்டு போடும் நோக்கத்தோடு திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும்
எழுந்த போராட்டத்தின் விளைவாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது
. இருந்த போதிலும்
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை, நீதித்துறையில் ஊழல், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் என
பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய 25 வழக்கறிஞர்கள் இப்போது தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டு
தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் யாரையும் எந்த விசயத்துக்கும் இனி போராட
முன்வராமல் தடுத்து விடலாம் என நீதித்துறையில் ஜனநாயகத்தை விரும்பாதவர்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இருந்த போதிலும் தமிழகம் முழுவதும் நீதிக்கான கலகக் குரல்கள்
எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
17.03.2017 அன்று
சென்னையில் தொழில் தடைக்கு எதிரான வழக்கறிஞர்கள் என்ற பதாகையில் கருத்தரங்கம்
நடத்தப்பட்டது. நீதித்துறையில் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக, நீதிபதி பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை
வேண்டும் என்று கோரியதற்காக, வாய் திறந்து
பேசினால், முழக்கம்
எழுப்பினால் குற்றம் என்று சொல்லப்படுவதற்கு எதிராக போராடியதற்காக வழங்கப்பட்டுள்ள
இந்த அநீதியான தண்டனைக்கு எதிராகவும்,
25 வழக்கறிஞர்களின் தொழில்
தடையை நீக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் சமூகத்திடம் கையெழுத்து
இயக்கம் நடத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில
அமைப்பாளர் தோழர் பாரதி உரையாற்றினார். கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதிலும்
இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற
உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, விஜயகுமார், சென்னை உயர்நீதிமன்ற
வழக்கறிஞர் சங்கத் நிர்வாகிகள் மோகனகிருஷ்ணன், நளினி ஆகியோர் இந்த கருத்தரங்கில்
கலந்துகொண்டனர்.
பின் குறிப்பு:
நீதிபதி சஞ்சய் கவுலுக்குப் பின்னர் வந்துள்ள உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு,
ரூ.64 கோடி மாநில நிதிச் செலவில், உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு
படை பாதுகாப்பு எதற்கு என கேள்வி கேட்டிருக்கிறது. இது இராணுவ நீதிமன்றம் அல்ல என்றும்
சுட்டிக்காட்டியிருக்கிறது. மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்.
அகில இந்திய மக்கள் மேடை முன்முயற்சியில் கக்கூஸ் ஆவணப்படம் வெளியீடு
மனிதக் கழிவை மனிதர் அகற்றும் முக்கியமான ஆனால், ஆபத்தான பணிகளில் உள்ள, மத்திய மாநில அரசாங்கங்களாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகிற, துப்புரவு தொழிலாளர்கள் என்ற அந்தஸ்து கூட மறுக்கப்படுகிற தொழிலாளர்கள் வாழ்நிலைமைகள், வேலை நிலைமைகள் பற்றி இடப்பக்க ஊடகத்தின் தோழர் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப்படம் அகில இந்திய மக்கள் மேடை ஏற்பாட்டில் மார்ச் 19 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அகில இந்திய மக்கள் மேடையின் தமிழ்நாடு பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், துப்புரவு தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுகிற, மகசேசே விருது பெற்ற பெஜவாடா வில்சன், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிற, மகசேசே விருது பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் அவலம் பற்றிய தவிர்க்கப்பட்டவர்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் பாஷா சிங் ஆகியோர் இந்தத் திரையிடலில் கலந்து கொண்டு உரையாற்றினர். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன், எழுத்தாளர், நாடக ஆசிரியர் ஞானி ஆகியோருடன் இககமாலெ தோழர்கள், சென்னையின் முற்போக்கு ஜனநாயகப் பிரிவினர் கலந்துகொண்டனர்.