ஏசியன் பெயின்ட்ஸ், டைமன்ட், ரூபி, எமரால்ட்
என்ஜினியரிங் தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையகத்தில் போராட்டம்
தூங்குதா? தூங்குதா? தொழிலாளர் துறை தூங்குதா?
திருபெரும்புதூரில்
உள்ள ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் பழிவாங்கும்
நடவடிக்கைகளை திரும்பப் பெறவும் தொழிலாளர் துறை தலையிட்டு தொழிலாளர்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி, மே 29 அன்று ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் சென்னை, தேனாம்பேட்டையில்
உள்ள தொழிலாளர் ஆணையகத்தை முற்றுகையிட்டு தூங்குதா, தூங்குதா, தொழிலாளர் துறை தூங்குதா என்று முழக்கமிட்டனர்.
காஞ்சிபுரம்
மாவட்டம், மாம்பாக்கத்தில்
உள்ள டைமன்ட் இஞ்சினியரிங், ரூபி இஞ்சினியரிங், எமரால்ட் இஞ்சினியரிங் ஆலைகளில் சங்கம்
துவங்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில்
அமர்த்தக் கோரியும், சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் மே 29 அன்று
ஆலைவாயிலில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட பட்டினிப் போராட்டம்
நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலத் துணைப்
பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் சொ.இரணியப்பன், ஆர்.மோகன், ஜி.முனுசாமி
புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் கே.பாரதி ஆகியோர் உரையாற்றினர்.
பட்டினிப் போரட்டத்தின் தொடர்ச்சியாக தொழிலாளர்
துறை முன் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 8 அன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையகத்தை
தொழிலாளர்கள் போராடினர். நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஆணையர் ஜூன் 9 அன்று நிர்வாகம்
பேச்சுவார்த்தைக்கு வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார். 3.30 மணிக்கு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் சொ.இரணியப்பன், ஜி.முனுசாமி, கிளை சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜூன் 9 அன்றும்
நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. மீண்டும் போராட்டம், மீண்டும்
வாக்குறுதி ஆகியவற்றுக்குப் பிறகு கலைந்து சென்ற தொழிலாளர்கள் அடுத்தக் கட்டப்
போராட்டத்துக்குத் தயாராகிறார்கள்.