COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 15, 2017

களச் செய்திகள்

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா கூடாது!
தாமிரபரணித் தண்ணீரை விற்காதே!

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா கூடாது, தாமிரபரணித் தண்ணீரை விற்காதே என வலியுறுத்தி மே 13 அன்று நெல்லையில் மக்கள் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுகூட்டத்திற்கு அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சு.ப.உதயகுமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி துவக்கி வைத்துப் பேசினார். அகில இந்திய மக்கள் மேடை தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஅய் கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காசிவிஸ்வநாதன், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ஆ.நாகராசன்தமிழப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமுமுக மாநில ஊடக அணிச் செயலாளர் உஸ்மான்கான், மதிமுகவின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்தேச விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் வே. பாரதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், தமிழ்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன், தமிழர் தேசிய முன்னணி இளஞ்செழியன், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு  பி.ஆர்.பாண்டியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன், பச்சைத் தமிழகம் யா.அருள்தாஸ், சுயராஜ் இந்தியா கே.பாலகிருஷ்ணன், இனையம் மாற்று முனையம் எதிர்ப்பு இயக்கம் குறும்பனை பெர்லின், பெண்கள் அமைப்புக்குழு பொன்னுதாய், தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு ஸ்டீபன், மக்கள் நல்வாழ்வு இயக்கம் கண.குறிஞ்சி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு செல்வராசன் விளக்கவுரையாற்றினார்கள். அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மை.பா.ஜேசுராஜ் நன்றி கூறினார்.

அம்பத்தூரில் டாஸ்மாக் கடை முற்றுகை
கடையை மூடக் கோரி காலவரையற்ற  பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் - அயப்பாக்கம் சாலையில், டி.ஜி.அண்ணாநகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படவிருந்ததை அறிந்து இகக மாலெ தலைமையில் டி.ஜி.அண்ணாநகர் மற்றும் கே.கே.நகர் பகுதி மக்கள் கடை முன் திரண்டு ஏப்ரல் 25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு கடை திறக்கப்பட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் என எச்சரித்தனர்.
பகுதி பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்தன. இதனால் அந்தக் கடையை முற்றுகையிட்டு இகக மாலெ தலைமை மாநகரக் குழு உறுப்பினர் தோழர் தேவகி தலைமையில் பகுதியின் பொது மக்கள் போராட்டம் நடத்தினர். மே 10 அன்று நடந்த இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அந்தக் கடை திறக்கப்பட மாட்டாது என்று காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் எழுத்துபூர்வமாக தங்களுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது, தங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் மே 12 அன்று மீண்டும் கடை திறக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது. அந்தக் கடை அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கோரி மே 15 முதல் இகக மாலெ  மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வீரப்பன்  மற்றும் தோழர் புகழ்வேந்தன் ஆகியோர் கால வரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், சேந்தநாட்டில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் கோரிக்கை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மே 5 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்கொலை செய்து கொண்ட, அதிர்ச்சி மரணம் அடைந்த, விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புனரமைத்து பராமரிக்க வேண்டும், சர்க்கரை ஆலைகள், ஒழுங்குமுறைக் கூடங்களில் உள்ள விவசாயிகளின் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க, ஊராட்சி, பேரூராட்சி பகுதியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், நாள் கூலி ரூ.500 வழங்கிட வேண்டும், பாக்கி கூலி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட அமைப்பாளர் தோழர் வீரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவிகிதொச மாநில தலைவர் தோழர் பாலசுந்தரம், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலியமூர்த்தி, சி.கொளஞ்சிநாதன் செண்பகவள்ளி ஆகியோர் உரையாற்றினர்.

நீட் தேர்வை ரத்து செய்!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதைக் கண்டித்தும் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகயை முன்னிறுத்தியும் விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் மே 9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் வெற்றிவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் கொளஞ்சிநாதன் உரையாற்றினர்.

முற்போக்கு பெண்கள் கழகம் முற்றுகை போராட்டம்


விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் இயங்காததைக் கண்டித்து மே 11 அன்று முற்போக்கு பெண்கள் கழகத்தின் தோழர் கவிதா தலைமையில் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த அடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

(மாலெ தீப்பொறி 2017 மே 16 – 31)

Search