COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 2, 2017

விவசயாயத்தில்
முதல் அய்ந்தாண்டு திட்டத்தின்
நான்காண்டுகளில் ஏற்பட்ட விளைவுகள்

ஜனவரி 7 - 12, 1933 தேதிகளில் நடந்த மத்திய கமிட்டி மற்றும்
மத்திய கட்டுப்பாட்டு கமிசனின் கூட்டு கூட்டத்தில்
ஜனவரி 7, 1933 அன்று
முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தின் விளைவுகள்என்ற தலைப்பில்
தோழர் ஸ்டாலின் முன்வைத்த அறிக்கையில் இருந்து

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பவும் தொழில்மயமாக்கத்துடன் கூடவே, சிறுவீத, தனிப்பட்ட விவசாயத்தில் இருந்து, கிராமப்புறங்களில்
சோவியத் ஆட்சியின் உறுதியான ஒரே அடிப்படையாக, ட்ராக்டர்களும் நவீன விவசாய கருவிகளும் கொண்ட பெருவீத கூட்டு விவசாயத்துக்கு மாறிச் செல்வது அவசியம் என்ற யதார்த்தத்தில் இருந்து கட்சி துவங்கியது.
கூட்டு செயல்பாடுகள் இல்லாமல், சோசலிசத்தின் பொருளாதார அஸ்திவாரங்களை கட்டியெழுப்பும் உயர்பாதையில் நமது நாட்டை வழிநடத்திச் செல்வது சாத்தியமல்ல, வறுமையில் இருந்தும் அறியாமையில் இருந்தும் உழைக்கும் விவசாய பிரிவினரின் பரந்துபட்ட வெகுமக்களை விடுவிப்பது சாத்தியம் அல்ல என்ற யதார்த்தத்தில் இருந்து கட்சி துவங்கியது.
ட்ராக்டர்களை, நவீன விவசாய கருவிகளை பயன்படுத்தும் சாத்தியப்பாடு இல்லாத, சிதறிக் கிடக்கிற, சிறிய, தனித்தனி விவசாயப் பண்ணைகளை, மிகவும் வளர்ச்சியடைந்த விவசாயத்தின் நவீன கருவிகள் கொண்ட பெரிய கூட்டுறவு பண்ணைகளாக ஒன்றிணைப்பதும் யாரும் பயன்படுத்தாத நிலங்களில் மாதிரி அரசு பண்ணைகள் அமைப்பதும், விவசாயத்தில் அய்ந்தாண்டு திட்டத்தின் கடமையாக இருந்தது.
சோவியத் ரஷ்யாவை, ஒரு சிறுவீத விவசாய, பின்தங்கிய நாடு என்பதில் இருந்து, கூட்டு உழைப்பின் அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட பெருவீத விவசாயம் கொண்ட ஒரு நாடாக மாற்றி, சந்தைக்கு ஆகக்கூடுதல் உற்பத்தியை தருவது, விவசாயத்தில் அய்ந்தாண்டு திட்டத்தின் கடமையாக இருந்தது.
....மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுப் பண்ணைகளும் 5000க்கும் மேற்பட்ட அரசுப் பண்ணைகளும் தானிய உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்புக்கும் அர்ப்பணிக்கப்பட்டன; அதே நேரம் நான்கு ஆண்டுகளில் சாகுபடி பரப்பு 2,10,00,000 ஹெக்டேராக விரிவடைந்தது.
விவசாயிகள் சாகுபடி செய்த 70 சத நிலத்தை உள்ளடக்கிய, 60 சத விவசாயப் பண்ணைகளை கூட்டுறவுப் பண்ணைகளாக ஒன்றிணைப்பதில் கட்சி வெற்றி கண்டுள்ளது. அதாவது அய்ந்தாண்டு திட்ட இலக்கை மூன்று மடங்கு கூடுதலாக நாம் நிறைவேற்றியுள்ளோம்.
தனிப்பட்ட விவசாயப் பண்ணைகள் மேலோங்கி இருந்த காலத்தில் ஆண்டுக்கு 50 கோடி பூட் முதல் 60 கோடி பூட் வரைதான் தானிய கொள்முதல் செய்ய முடிந்தது; கட்சி, ஆண்டுக்கு 120 கோடி பூட் முதல் 140 கோடி பூட் வரை தானிய கொள்முதல் செய்தது. (36 பவுண்டு = 1 பூட்).
குலக்குகளுக்கு இறுதி அடி தரப்படவில்லை என்றாலும் ஒரு வர்க்கமாக அவர்களை அழித்துவிடுவதில் கட்சி வெற்றி பெற்றுள்ளது. குலக் அடிமைத்தனத்தில் இருந்து, சுரண்டலில் இருந்து உழைக்கும் விவசாயிகள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். சோவியத் ஆட்சிக்கு கிராமப்புறங்களில் ஒரு ஸ்திரமான பொரு ளாதார அடிப்படை, கூட்டுறவு விவசாயம் என்ற அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சோவியத் ரஷ்யாவை ஒரு சிறுவீத விவசாய நாடு என்பதில் இருந்து உலகின் மிகப்பெரிய பெருவீத விவசாய நாடாக மாற்றுவதில் கட்சி வெற்றி கண்டுள்ளது.
பொதுவாக, இவைதான் விவசாயத்தில் அய்ந்தாண்டு திட்டத்தின் நான்காண்டுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள்.
முதலாளித்துவ ஊடகங்கள், கூட்டுறவுமயமாக்கத்தின் வீழ்ச்சிபற்றி, விவசாயத்தில் அய்ந்தாண்டு திட்டத்தின் தோல்விபற்றி பேசுவதில் பொருள் இருக்கிறதா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
கடுமையான விவசாய நெருக்கடியைச் சந்திக்கிற முதலாளித்துவ நாடுகளில் விவசாயத்தின் நிலை என்ன?
பொதுவாக அறியப்படுகிற அதிகாரபூர்வ விவரங்களைப் பார்ப்போம்.
பிரதானமாக தானிய உற்பத்தி செய்யும் நாடுகளில் சாகுபடி பரப்பு 8% முதல் 10% வரை குறைந்துள்ளது. அய்க்கிய அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பரப்பு 15% குறைந்துள்ளது. ஜெர்மனியிலும் செக்கோஸ்லோவகியாவிலும் இனிப்புச் சாறு கொண்ட கிழங்கு உற்பத்தி நிலப் பரப்பு 22% முதல் 30% வரை குறைந்துள்ளது. லித்வேனியாவிலும் லத்வியாவிலும் ஆளிவிதை சாகுபடி நிலப்பரப்பு 25% முதல் 30% வரை குறைந்துள்ளது.
அய்க்கிய அமெரிக்க விவசாயத் துறை தரும் விவரங்கள் படி, அய்க்கிய அமெரிக்காவில் 1929ல் 11000 மில்லியன் டாலராக இருந்த மொத்த விவசாய உற்பத்தி மதிப்பு 1932ல் 5000 மில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அந்த நாட்டின் மொத்த தானிய உற்பத்தி மதிப்பு 1929ல் 1288 மில்லியன் டாலரில் இருந்து 1932ல் 391 மில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அந்த நாட்டின் பருத்தி உற்பத்தி மதிப்பு 1929ல் 1389 மில்லியன் டாலரில் இருந்து 1932ல் 397 மில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
சோவியத் விவசாய கட்டமைப்பு, முதலாளித்துவ விவசாய கட்டமைப்பை விட மேலானது என்று இந்த விவரங்கள் மெய்ப்பிக்கவில்லையா? கூட்டுப் பண்ணை முறை, தனிப்பட்ட விவசாயம் அல்லது முதலாளித்துவ விவசாய முறையை விட கூடுதல் திறன் வாய்ந்தது என்று இந்த விவரங்கள் காட்டவில்லையா?
கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணை களும் எப்போதும் லாபம் ஈட்டுவதில்லை என்றும் அவை பெருமளவு நிதியை விழுங்கிவிடு கின்றன என்றும் அதுபோன்ற முனைவுகளை பராமரிப்பதில் பொருளில்லை என்றும் லாபம் ஈட்டுபவை தவிர மற்றவற்றை கலைத்து விடுவது மிகவும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது. தேசப் பொருளாதாரம் பற்றி, பொருளாதாரம் பற்றி எதுவும் புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் இதுபோன்றவற்றைச் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமது ஜவுளி ஆலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை லாபம் ஈட்டவில்லை. அப்போது, அவற்றை மூடிவிட வேண்டும் என்று நமது தோழர்கள் சிலர் சொன்னார்கள். அவர்களது அறிவுரைப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? நம் நாட்டிற்கெதிராக, தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக நாம் மிகப் பெரிய குற்றத்தைச் செய்திருப்போம்; ஏனென்றால், அப்படிச் செய்திருந்தால் எழுந்து வருகிற ஒரு தொழிலை நாம் அழித்திருப்போம். நாம் அப்போது என்ன செய்தோம்? ஓராண்டுக்கும் சற்று கூடுதலாக நாம் தாக்குப் பிடித்தோம். இறுதியில் நமது மொத்த ஜவுளித் தொழிலும் லாபம் ஈட்டுவதை உறுதி செய்வதில் வெற்றி கண்டோம். கார்க்கியில் உள்ள நமது ஆட்டோமொபைல் ஆலை...? அது இன்னும் லாபம் ஈட்ட வில்லை. அதையும் மூடச் சொல்வீர்களா? அல்லது இன்னும் லாபம் ஈட்டாத நமது இரும்பு மற்றும் உருக்கு ஆலைகள்...? அவற்றையும் நாம் மூடிவிட வேண்டுமா தோழர்களே...? லாபம் என்ற வெளிச்சத்தில் பார்த்தால், இனிப்பு வகைகள், மாவு மில்கள், வாசனை திரவியங்கள் உற்பத்தி, பின்னலாடைகள், பொம்மைகள் உற்பத்தி, இன்ன பிற போன்ற மிகவும் லாபம் ஈட்டும் சில தொழில்களை மட்டும்தான் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இந்தத் தொழில்களை வளர்த்தெடுப்பதற்கு எதிராக நான் பேசவில்லை. அவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும். மக்களுக்கு அவையும் தேவை. ஆனால், முதலாவதாக, கனரக ஆலைகள் உற்பத்தி செய்யும் எந்திரங்கள், எரிபொருள் இல்லாமல் அவற்றை உற்பத்தி செய்ய முடியாது. இரண்டாவதாக, தொழில்மயமாக்கத்தின் அடிப்படையாக அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது. இதுதான் விசயம் தோழர்களே.
லாபம் என்று ஒரு வணிகரின் பார்வையில் இருந்து, உடனடி நிகழ்கால நோக்கில் இருந்து நாம் பார்க்க முடியாது. பல ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த தேசப் பொருளாதாரம் என்ற நோக்கில் இருந்து நாம் இதை அணுக வேண்டும். அது போன்ற பார்வை மட்டுமே ஓர் உண்மையான லெனினியப் பார்வையாக, ஓர் உண்மையான மார்க்சியப் பார்வையாக இருக்க முடியும். இந்தப் பார்வை தொழில் தொடர்பாக மட்டுமின்றி, கூட்டுப் பண்ணைகள் மற்றும் அரசுப் பண்ணைகள் தொடர்பாக, இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும். சிந்தித்துப் பாருங்கள்: மூன்று ஆண்டுகளில் நாம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுப் பண்ணைகளையும் 5000 அரசுப் பண்ணைகளையும் உருவாக்கி உள்ளோம். அதாவது, தொழிலுக்கு பெரிய மில்களும் ஆலைகளும் எந்த அளவு முக்கியமானவையோ, விவசாயத்துக்கு அந்த அளவுக்கு முக்கியமான புதிய பெரிய திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். மூன்று ஆண்டுகளில் 2,05,000 அல்ல, 25000 நிறுவனங்களாவது உருவாக்கியுள்ள ஏதாவது ஒரு நாட்டின் பெயர் சொல்ல முடியுமா? உங்களால் முடியாது. ஏனென்றால் அப்படி ஒரு நாடு இல்லை. இதற்கு முன்பும் இருந்ததில்லை. ஆனால் விவசாயத்தில் நாம் 2,05,000 நிறுவனங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆயினும் அவை, உடனடியாக லாபகரமானவையாக ஆக வேண்டும், அப்படி உடனடியாக ஆகவில்லை என்றால், அவற்றை அழித்துவிட வேண்டும், கலைத்து விட வேண்டும் என்று கேட்பவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஹீரோஸ்டேடசின் வெற்றி மாலைகள் மீது பொறாமை கொண்ட வினோதமான மனிதர்கள் அல்லவா இவர்கள்?
கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் லாபமீட்டவில்லை என்று சொல்வதால், அவை லாபம் ஈட்ட வேண்டாம் என்று சொல்வதாக ஆகாது. அப்படி எதுவும் இல்லை. இப்போதும் மிகவும் லாபகரமாக இயங்கும் கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது கூட முழுவதும் லாபகரமான ஆயிரக்கணக்கான கூட்டுப் பண்ணைகள், பெரிய எண்ணிக்கையிலான அரசுப் பண்ணைகள் உள்ளன. இந்த கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் நமது கட்சியின் பெருமிதங்கள். சோவியத் ஆட்சியின் பெருமிதங்கள். எல்லா கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் ஒரே மாதிரி இல்லை என்பது உண்மைதான். சில கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் பழையவை. சில புதியவை. சில மிக இளையவை. இவை இன்னும் பலவீனமான பொருளாதார உயிரிகளே. அவை இன்னும் முழுமையாக வளரவில்லை. 1920 - 1921ல் நமது ஆலைகளும் மில்களும் கடந்து வந்த அமைப்புரீதியான வளர்ச்சி கட்டத்தின் ஊடாகத்தான் அவையும் சென்றுகொண்டிருக்கின்றன. இயல்பாக, அவற்றில் பெரும்பாலானவை இன்னும் லாபம் ஈட்ட முடியாது. ஆனால் 1921க்குப் பிறகு நமது ஆலைகளும் மில்களும் லாபம் ஈட்டத் துவங்கியதுபோல், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவையும் லாபம் ஈட்டத் துவங்கும் என்பதில் எந்த அய்யமும் தேவையில்லை. தற்போது அவை அனைத்தும் லாபம் ஈட்டவில்லை என்ற அடிப்படையில் அவற்றுக்கும் உதவியும் ஆதரவும் தர மறுப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கும் விவசாய சமூகத்துக்கும் இழைக்கும் மிகப்பெரிய குற்றமாகும். கூட்டுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் அவசியமற்றவை என்று மக்களின் எதிரிகளும் எதிர்ப்புரட்சியாளர்களும் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும்.
விவசாயத்தில் அய்ந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதில், கூட்டுறவுமயமாக்கத்தை கட்சி கூடுதல் விசையுடன் செலுத்தியது. கூட்டுறவுமயமாக்கத்தை கூடுதல் விசையுடன் செலுத்தும் கொள்கையை பின்பற்றியதில் கட்சி செய்தது சரியா? ஆம். மிகவும் சரி. அதைச் செய்யும் போக்கில் சில அத்துமீறல்கள் இருந்தன என்றாலும் அது சரி. குலக்குகளை, ஒரு வர்க்கமாக அழிக்கும் கொள்கையை பின்பற்றுவதில், குலக் திரள்களை அழிப்பதில், கட்சி பாதியில் நின்று விட முடியாது. கட்சி அதை முழுவதுமாகச் செய்ய வேண்டும்.
இது முதல் விசயம்.
இரண்டாவதாக, ஒருபுறம் ட்ராக்டர்களும் விவசாயத்துக்கான எந்திரங்களும் இருக்கும் போது, நிலத்தில் தனியுடைமை இல்லை என்ற நிலையை பயன்படுத்திக்கொள்ளும்போது (நில தேசியமயமாக்கம்!) மறுபுறம் கட்சிக்கு கூட்டுறவுமயமாக்கத்தை உந்திச் செலுத்துவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருந்தன. உண்மையில் இந்த விசயத்தில் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஏனென்றால், கூட்டுறவுமயமாக்கத்தின் அய்ந்தாண்டு திட்டத்தை மூன்று மடங்கு கூடுதலாக நிறைவேற்றியுள்ளது.
அப்படியானால், இரண்டாவது அய்ந்தாண்டு திட்ட காலத்துக்கும் கூட்டுறவுமயமாக்கத்தை உந்திச் செலுத்துவது என்ற கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் என்று பொருளாகுமா? இல்லை. இதற்கு அப்படி பொருள் இல்லை. சோவியத் ரஷ்யாவின் பிரதான பிராந்தியங்களின் கூட்டுறவுமயமாக்கத்தை நாம் ஏற்கனவே நிறைவு செய்துவிட்டோம். எனவே இந்த விசயத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே நாம் நிறைவேற்றிவிட்டோம். கூட்டுறவுமயமாக்கத்தை நிறைவு செய்தது மட்டும் அல்ல, கூட்டுப் பண்ணை முறைதான் மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விவசாய முறை என்று ஏகபெரும்பான்மை விவசாயிகள் கருதுவதை உறுதி செய்வதில் வெற்றி கண்டிருக்கிறோம். இது மிகப்பெரிய வெற்றி தோழர்களே. இதற்குப் பிறகும் கூட்டுறவுமயமாக்கத்தை உந்திச் செலுத்துவது அவசியமா? நிச்சயம் இல்லை.

இப்போது இது கூட்டுறவுமயமாக்கத்தை உந்திச் செலுத்துவது பற்றிய பிரச்சனை அல்ல. கூட்டுப் பண்ணைகள் இருக்க வேண்டுமா, கூடாதா என்ற பிரச்சனை இது. இது பற்றி ஏற்கனவே, வேண்டும் என்று பதில் சொல்லியாகிவிட்டது. கூட்டுப் பண்ணைகள்தான் இனி எப்போதும் இருக்கும். பழைய, தனிப்பட்ட விவசாயத்துக்கான பாதை என்றென்றைக்குமாக மூடப்பட்டுவிட்டது. கூட்டுப் பண்ணைகளை அமைப்புரீதியாக வலுப்படுத்துவதுதான், அவற்றில் உள்ள சீர்குலைவு சக்திகளை வெளியேற்றுவதுதான், கூட்டுப் பண்ணைகளுக்கு உண்மையான, பரிசோதிக்கப்பட்ட போல்ஷ்விக் ஊழியர்களை அமர்த்துவதுதான், அவற்றை உண்மையில் போல்ஷ்விக் கூட்டுப் பண்ணைகளாக மாற்றுவதுதான் இப்போதுள்ள கடமை.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)

Search