COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 15, 2017

மத்தியபிரதேசத்தில் போராடுகிற விவசாயிகள்
படுகொலை செய்யப்பட்டதை இகக மாலெ கண்டிக்கிறது

ஜுன் 6, 2017 அன்று மத்தியபிரதேசத்தின் மன்சார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்ந்து விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதற்கும் பலர் படுகாயம் அடைந்ததற்கும் மத்தியபிரதேச அரசை இகக மாலெ கண்டிக்கிறது. நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடன் தள்ளுபடி, செலவுகளுக்கு மேல் 50 சதம் லாபம் கிடைப்பதை உறுதி செய்யும் குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய கோரிக்கைகள் மீது மத்தியபிரதேசத்திலும் மகாராஷ்டிராவிலும் கடந்த ஒரு வாரமாக வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கும்போது, பாதுகாப்புப் படைகள் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் சமூகவிரோத சக்திகள்தான் அப்படிச் செய்தன என்றும் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் அவரது அமைச்சர்களும் சொல்வது குற்றத்தன்மை கொண்டது. அதுபோன்ற பொய்களும் ஏமாற்று அறிக்கைகளும் ஆர்எஸ்எஸ் வகை பிரச்சாரத்தின் தனிஇயல்பு கொண்டவை. மன்சார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இணையத்துக்கும் சமூக ஊடகங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை என, மத்தியபிரதேச அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அதே போல் கண்டனத்துக்குரியவை.
போராடுகிற விவசாயிகள் மீது நடக்கிற ஒடுக்குமுறைகளுக்கு முன்பு, ஆழமடைந்துவரும் விவசாய நெருக்கடியின் விளைவாக விவசாயிகள் எழுப்புகிற கோரிக்கைகளை பாஜக அரசு பிடிவாதமாக பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட விவசாய அமைப்பை தன்பக்கம் இழுத்து, போராடுகிற விவசாயிகள் அமைப்புக்கு எதிராக நிறுத்தி, இரண்டு மாநிலங்களிலும் எழுந்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்தது. சமரச உடன்பாடு ஒன்று ஏற்பட்டுவிட்டது, போராட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்று மத்தியபிரதேச, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்கள் அறிவித்தபோதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தை கைவிடாமல் இருப்பதன் மூலம் விவசாயிகளின் ஒற்றுமையைச் சிதைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்என்று வெளியிடப்பட்ட பாஜக மத்திய தலைவர்களின் அறிக்கைகளும் பலன் தரவில்லை. நாட்டில் உள்ள விவசாயிகளின் அதிகரித்து வரும் சீற்றத்தை, விவசாயிகளை படுகொலை செய்யும் பாஜக அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்திவிட முடியாது.
குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை அமலாக்கம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகிற விவசாயிகளுக்கு இககமாலெ தனது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறது. கார்ப்பரேட் ஆதரவு, விவசாய விரோத விவசாய கொள்கைகளால் விவசாய நெருக்கடியும் விவசாயிகள் தற்கொலையும் அதிகமாக காணப்படுகிற மாநிலம் மகாராஷ்டிரா. மத்தியபிரதேசத்தில் கடந்த சில பருவங்களில் நல்ல விளைச்சல் இருந்தபோதும் தங்கள் விலை பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்க விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் துன்பங்களை ஓரளவாவது குறைக்க ஓர் அரசாங்கம் எடுக்கக்கூடிய குறைந்த பட்ச நடவடிக்கை, அனைத்தும் தழுவிய கடன் தள்ளுபடி என்பதுதான். பல ஆயிரம் கோடிக் கணக்கில் கார்ப்பரேட் கடன்களையும் வரிகளையும் தள்ளுபடி செய்யும் மத்திய மாநில அரசாங்கங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு அதுபோன்ற தள்ளுபடி தர மறுக்கின்றன. போராடுகிற விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பது, விவசாயிகளின் துன்பங்களை துடைப்பது, விவசாயக் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்வது ஆகியவை மத்திய மாநில அரசாங்கங்க ளின் முன்னுரிமைகளாக ஆக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Search