COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, February 2, 2018

அனைவருக்குமான அனைத்தும் தழுவிய
பொது விநியோகம் மீட்கப்பட வேண்டும்

சென்ற இதழ் தீப்பொறி தலையங்கத்தில், பழனிச்சாமி அரசு பொது விநியோகத்தை சீர்குலைக்க ஒரேயடியாக அல்லாமல்
ஒவ்வொன்றாக படிப்படியாக எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடும்போது அடுத்த மாதம் என்ன தாக்குதல் திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. மக்கள் விரோத பழனிச்சாமி அரசாங்கம் பொது விநியோகம் தொடர்பாக இந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மார்ச் 1 முதல் ஸ்மார்ட் அட்டை இல்லை என்றால் ரேசன் பொருட்கள் இல்லை என்கிறது. 1.94 கோடி ரேசன் அட்டைதாரர்களில் 1.88 கோடி அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன என்றும் இன்னும் 6 லட்சம் அட்டைகள் மட்டுமே ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்படவில்லை என்றும், அவற்றை உரிய விவரங்கள் தந்து பயனர்கள் மாற்ற வேண்டும் என்றும் உணவு அமைச்சர் சட்டமன்றத்தில் சொன்னார்.
ஆதார் அட்டை இல்லாததால் ரேசன் உணவுப் பொருள் கிடைக்காமல் சாமான்ய மக்கள் பட்டினியால் செத்துப்போகும் சம்பவங்கள் பாஜக ஆட்சி நடக்கிற மாநிலங்களில் நடக்கத் துவங்கிவிட்டன. வளர்ச்சி என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஓர் அரசாங்கம் நடக்கும்போது, செல்வக் குவிப்பு வெகு வேகமாக வளர ஓய்வின்றி பாடுபடும் ஓர் அரசாங்கம் நடக்கும் போது, பட்டினிச் சாவு, அதுவும், உணவுப் பொருள் இருந்தும் அது கைக்கு எட்டாததால் பட்டினிச் சாவு நடப்பது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனைதான். தமிழ்நாட்டின் அடிமை ஆட்சியாளர்கள் ரேசன் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் அட்டை கட்டாயம் என்று சொல்லும்போது, ஜார்க்கண்ட்டில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பட்டினிச் சாவுக்குப் பலியான சிறுமி சந்தோஷியின் முகம் கண்முன் வந்து போகிறது.
திறமையான நிர்வாகி என்று பல்லக்கு தூக்கி ஊடகங்கள் வரை பாராட்டுகள் பெற்ற ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த போது, ஸ்மார்ட் அட்டை பற்றி பேசப்பட்டது. ஸ்மார்ட் அட்டை வந்துவிடும் என்று சொல்லி 2005க்குப் பிறகு ரேசன் அட்டைகளை புதுப்பிக்காமல் கூடுதல் காகிதங்களை ஒட்டி ஒட்டி ஓட்டினார்கள். அந்த திறமையான நிர்வாகி ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ஸ்மார்ட் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கவே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பதவியேற்றவர்கள் ஏப்ரல் 1, 2017 முதல் ஸ்மார்ட் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று சொன்னார்கள். ஸ்மார்ட் அட்டை விநியோகமும் துவங்கியது.
ஸ்மார்ட் அட்டைகள் விநியோகத்துக்கு ஆதார் எண், கைபேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்றார்கள். கைபேசி இல்லாதவர் களும் அதை வாங்க நேர்ந்தது. அதில் வருகிற கடவுச்சொல் கொண்டுதான் அந்த ஸ்மார்ட் அட்டையை செயலுக்கு கொண்டு வர முடியும். சாமான்ய மக்கள் இணைய சேவை மய்யங்களுக்கு அலையாய் அலைந்தார்கள். காத்திருப்பு, கவலை, அச்சம் ஆகியவற்றுக்குப் பிறகு ஸ்மார்ட் அட்டைகள் கிடைத்தன. ஸ்மார்ட் அட்டைகள் கிடைக்கப் பெற்ற சிலருக்கு அதிர்ச்சியும் கூட சேர்ந்து வந்தது. சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அவரது படத்துக்குப் பதில் திரைப்பட நடிகர் காஜல் அகர்வால் படம் அவரது ஸ்மார்ட் அட்டை யில் இருந்தது. இன்னொருவருக்கு தேசியக் கொடி பறந்தது. இன்னும் ஒருவருக்கு அவர் படத்துக்குப் பதில் பிள்ளையார் படம் போட்டு ஸ்மார்ட் அட்டை வந்தது.
சாமான்ய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய அக்கறை, காட்டப்பட வேண்டிய கவனம், ஸ்மார்ட் அட்டை தரும் பணியில் அரசு தரப்பில் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற பணிகளில் அமர்த்தப்படும் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்கள் மீதான பணிச்சுமை பற்றியும் அரசுக்கு எந்த கவனமும் இல்லை.
இந்தக் குளறுபடிகள் பற்றிய செய்திகள் 2017 செப்டம்பர் மாதத்தில் வந்தன. அப்போது அமைச்சர்கள் யாரும் அது பற்றி விளக்கம் ஏதும் தரவில்லை. இப்போது, மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்ட பிறகு, இந்தக் குளறுபடிகளுக்கு காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள். தெர்ம கோல், வாளி, சாணி தெளிப்பது போன்ற அறிவியல் தொழில்நுட்ப வழிமுறைகளில் சிறந்து விளங்கும் ஆட்சியாளர்கள், ஸ்மார்ட் அட்டைகளில் தவறாக படங்கள் அச்சிடப்பட் டதற்கு அட்டைதாரர்கள் தவறான படத்தை பதிவேற்றம் செய்ததுதான் காரணம், நிர்வாகத் தரப்பில் குற்றமில்லை என்கிறார்கள். நிர்வாக குளறுபடிகளை, நிர்வாக சீர்கேடுகளை தங்கள் கையாலாகாத்தனத்தை, திறனின்மையை மறைக்க மக்கள் மீது பழி சொல்கிறார்கள். இப்படி குளறுபடி ஸ்மார்ட் அட்டைகள் விநி யோகிக்க ரூ.330 கோடி செலவிட்டுள்ளார்கள்.
குளறுபடிகள், இதுபோன்ற சில படங்கள் அச்சிடப்பட்டதுடன் நின்றுவிடவில்லை. பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களில் குளறு படி, எழுத்துப் பிழைகள், பெயர் பிழைகள், முகவரிகளில் பிழைகள், முழுவதுமாக வேறு முகவரிகள், குடும்பத்தினர் சிலர் பெயர்கள் விடுபட்டு, அவர்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படுவது, பொருட்கள் வாங்காமலே, வாங்கிவிட்டதாக வரும் குறுஞ்செய்திகள், ஏதோ சொந்தப் பிரச்சனையால் இரண்டு மாதங் கள் ஊரில் இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் போனதால் அட்டை முடக்கம், தவறான தகவல்கள் இருப்பதால் முடக்கம் என அட்டைதாரர்கள் பல பிரச்ச னைகளை சந்திக்கின்றனர். இவை துவக்ககட்ட பிரச்சனைகளா, படிப்படியாக தீர்க்கப்படுமா, இல்லை மேலும் சிக்கலாகுமா என்ற கேள்விக ளுக்கு, அச்சங்களுக்கு பொறுப்பான பதில் சொல்ல ஆட்சியாளர்கள் மத்தியில் யாரும் இல்லை.
கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டைகளில் உள்ள குளறுபடிகள் ரேசன் அட்டைதாரர்கள் உரிமைகளை மறுக்கிற அதே நேரம், ரேசன் அட்டை பெறும் உரிமையே லட்சக்கணக்கான வர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சொல்லும் விவரப்படி ஆதார் எண்ணை பதிவு செய்யாத 6 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டை கள் தரப்படவில்லை. அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யத் தவறினால், அவர்க ளுக்கு ஸ்மார்ட் அட்டைகள் கிடைக்காது. ஸ்மார்ட் அட்டைகள் கிடைக்கவில்லை என் றால் ரேசன் பொருட்கள் கிடைக்காது. ஆதார் எண்ணில் உள்ள பெயர் மற்றும் பிற விவரங் கள் ரேசன் அட்டைதாரர் ஏற்கனவே தந்துள்ள விவரங்களுடன் ஒத்துப்போக வேண்டும். ஆதார் அட்டைகளிலும் பல குளறுபடிகள் உள்ளன. அந்தக் குளறுபடிகளால், ஆதாரை இணைக்க முடியாமல் இருப்பவர்கள், ஆதார் வாங்க முடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இந்தப் பிரிவில் வரக்கூடும். அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு இந்த சாமான்ய மக்கள் தண் டனை பெறப் போகிறார்கள்.
2016 - 2017 விவரப்படி மொத்தமுள்ள குடும்ப அட்டைகள் 2,03,64,386. இவற்றில் 1,91,53,352 அட்டைகளுக்கு எல்லாப் பொருட் களும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 66,478 காவலர் அட்டைகளுக்கும் எல்லாப் பொருட் களும் வழங்கப்படுகிறது. 01.06.2011 முதல் 30.06.2016 வரை 4,85,123 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டதாகச் சொல் லப்படுகிறது. 2017 - 2018 நிலைமைகள் பற்றிய விவரங்கள் புதிதாக எதுவும் கருப்பு வெள்ளை யில் இல்லை. அதாவது, இந்த காலகட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பழனிச்சாமி அரசாங்கத்துக்கு கொள்கை எது வும் இல்லை என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
போலி அட்டைகள் நீக்கப்பட்டன என்று சொல்பவர்கள், இந்த போலி அட்டைகளை யார் வைத்திருந்தார்கள், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி சொல்வதில்லை. போலி அட்டைகள் மூலம் ரேசன் பொருட்களை வேறு பக்கங்களுக்கு யார் திருப்பி விடுவது என்பது பற்றி மட்டும் தமிழக மக்களுக்கு முழுமையான விவரம் ஒரு நாளும் தெரியப் போவதில்லை.
ஸ்மார்ட் அட்டைகளால் இதுபோன்ற ஓட்டைகள் அடைக்கப்படும் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், ரேசன் அட்டை கள், ஸ்மார்ட் அட்டைகள் பற்றி தமிழக அரசின் கொள்கை அறிக்கை, பொது விநியோகத் துறையின் இணையதளம் ஆகிய இரண்டும் வெவ்வேறு தகவல்கள் தருகின்றன. ஜனவரி 28 அன்று நிலவரப்படி ரேசன் அட்டைகள் 1,98,88,263, இவற்றில் ஆதார் பதிவு செய்யப் பட்டவை 63,14,396, கைபேசி பதிவு செய் யப்பட்டவை 1,92,15,560, என்றும் மொத்த அட்டைகள் என்று சொல்லப்பட்டுள்ள விவரத் தின் கீழே தரப்பட்டுள்ள மாவட்ட வாரியான விவரங்கள், மொத்தம் 1,98,88,612 என்றும் காட்டுகின்றன. இது தவிர முகப்பு பக்கத்தில் 1,98,88,596 என்று ஒரு விவரமும் உள்ளது.
எத்தனை ரேசன் அட்டைகள் உள்ளன என்பது பற்றியே விதவிதமான விவரங்கள் தரும் இந்த அரசு நிர்வாகம் ஸ்மார்ட் அட்டை கட் டாயம், ஆதார் அட்டை கட்டாயம் என்று சாமான்ய மக்களை அலைகழிக்கிறது. கைபேசி எண் பதிவு செய்யப்பட்ட அட்டைகளின் எண் ணிக்கைதான், இன்னும் 6 லட்சம் அட்டைக ளுக்கு ஸ்மார்ட் அட்டைகள் தரப்படவில்லை என்று அமைச்சர் தரும் விவரத்துடன் ஒத்துப் போகிறது. ஸ்மார்ட் அட்டை கட்டாயம் என்ற அறிவிப்பு எதிர்ப்பு சந்தித்த நிலையில் ஸ்மார்ட் அட்டை இல்லை என்றாலும் ரேசன் பொருட் கள் வழங்கப்படும், விரைவில் ஸ்மார்ட் அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சொல்கிறார். இது புதிய விசயமல்ல. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் அட்டை தருவது, ஆதாருடன் இணைப்பது என்ற பெயரில் லட்சக்கணக்கான வறிய குடும்பங்கள் பொது விநியோகத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. ஸ்மார்ட் அட்டைகள் தரும்போது, முன்னுரிமை, முன்னு ரிமை அற்றவை, முன்னுரிமை அற்றவற்றில் சர்க்கரை மட்டும், முன்னுரிமை அற்றவற்றில் எந்தப் பொருளும் பெறாதவை என்று அட்டை கள் தரம் பிரிக்கப்பட்டுவிட்டன. அமைச்சர் சொல்கிற 6 லட்சம் அட்டைகள் ஒரு வேளை ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்பட்டாலும் அவற்றில் பாதி எண்ணிக்கையிலான அட்டை கள் முன்னுரிமையற்றவையாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. 1.98 கோடி மொத்த அட்டை கள் என்று எடுத்துக்கொண்டாலும் அவற்றில் முன்னுரிமை அட்டைகள் 95,25,744 மட்டுமே. மீதமுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் முன்னுரிமையற்றவை.

குற்றவாளி தப்பிவிடலாம், நிரபராதி தண் டிக்கப்படக் கூடாது என்று சொல்லப்படுவது போல், முறைகேடாக வாங்குபவர்கள் பெயர் (அது மிகமிக சொற்பம், அது நிர்வாக சீர்கேடு தொடர்பானது) இருக்கலாம், ஆனால் ரேசன் பொருட்கள் போய்ச் சேர வேண்டியவர்கள் ஒருவர் பெயர் கூட விடுபட்டு விடக்கூடாது. ஏற்கனவே, ரேசன் கடை பொருட்கள், அவற் றின் அளவு வெட்டப்பட்டுவிட்டது. உளுத்தம் பருப்பும் துவரம் பருப்பும் இன்று விநியோகப் பட்டியலில் இல்லை. மோடி அரசின் உணவுப் பறிப்புச் சட்டத்தை அமல்படுத்தி, பாதிக்கும் மேல் வறிய குடும்பங்கள் பெற்று வந்த உணவுப் பொருட்களை வெட்டிச் சுருக்க ஸ்மார்ட் அட்டை என்ற வடிவத்தை தமிழக அரசு பயன்படுத்துகிறது. சட்டம், அட்டை என எதுவும் இல்லாமல் பழைய முறையில் தமிழ்நாட்டின் பொது விநியோகம் இயங்க வேண்டும். தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

Search