பட்டினியாய் வளர்ச்சி குன்றியவர்களாய் மன்மோகனின் இந்தியாவில் குழந்தைகள்
தாராளவாத கொள்கைகளை பின்பற்றியது, சர்வதேச வல்லரசாக மாறுவதை நோக்கிய துரித
ஓடுகளத்தில் இந்தியாவை நிறுத்தியுள்ளது என்று
பிரதமர் மன்மோகன் நம்மை நம்பச் சொல்கிறார். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவர் சொல்வது
பொய் என்று சொல்கின்றன; பசி, அடிப்படைக் கல்வி
ஆகிய விசயங்களில் இந்தியாவின் நிலை உலகிலேயே
மிகவும் மோசமானதாக உள்ளதாகச் சொல்கின்றன.
சர்வதேச பட்டினிக் குறியீடு 2011ன்படி, 81 நாடுகளில் இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், சிறிலங்கா போன்ற தெற்காசிய அண்டை
நாடுகள் மற்றும் சூடான் போன்ற மிகவும் வறிய, பின்தங்கிய நாடுகளுக்கும் பின்னால் இந்தியா
இருப்பது அதிர்ச்சி தருகிறது. 21% இந்தியர்கள் ஊட்டச்
சத்துணவின்றியும், 5 வயதுக்கும் குறைவான இந்திய
குழந்தைகளில் 44% எடை குன்றியவர்களாகவும் 5 வயது எட்டுவதற்குள் 7% குழந்தைகள் இறந்து
விடுவதாகவும் சர்வதேச பட்டினிக் குறியீடு அறிக்கை
சொல்கிறது.
மறுபுறம், அடிப்படை வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகியவற்றில் 15 வயது மாணவர்களின்
ஆற்றலை மதிப்பிட்ட சர்வதேச மாணவர் மதிப்பீட்டு
திட்டம் நடத்திய தேர்வில் இந்திய மாணவர்கள்
மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளனர். இந்திய மாநிலங்களில் மனித வளர்ச்சி குறியீட்டில்
ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் இருக்கிற தமிழ்நாடு
மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் 400 பள்ளிகளின் 16,000 மாணவர்கள் சர்வதேச மாணவர்
மதிப்பீட்டு திட்டம் நடத்திய தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண்களே பெற்றனர். கிர்கிஸ்தான் மாணவர்களுக்கும் அடுத்த இடத்தில்
தான் அவர்கள் இருந்தனர். இந்த மாநிலங்களின் மிகக்
குறைந்த சதவீதத்தினரே வாசிப்பு, கணிதம், அறிவியல்
ஆகியவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருந்தனர்.
உணவுப் பாதுகாப்பு, பள்ளிக் கல்வி ஆகியவற்றில் உள்ள படுமோசமான நிலைமைகளுக்கு காரணமான அய்முகூ அரசாங்கம், இந்தப் பிரச்சனைகளில்
அக்கறை காட்டுவதாக ‘மனித முகம்’ காட்ட முயற்சி
செய்கிறது. வெவ்வெறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெருநிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் தயாரித்த சமீபத்திய
‘ஹங்காமா‘ (பட்டினி மற்றும் ஊட்ட உணவின்மை) அறிக்கையை வெளியிட்ட பிரதமர், ஆய்வு, கவனம்
குவித்த 100 மாவட்டங்களில் 5 வயதுக்கும் குறைந்த
குழந்தைகளில் 42% குழந்தைகள் எடை குன்றியவையாகவும், 59% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவையாகவும் இருப்பது ‘தேச அவமானம்’ என்றார். பிரதம்
என்கிற தொண்டு நிறுவனம் தயாரித்த கல்வி
ஆய்வறிக்கையை மனித வள அமைச்சர் கபில்சிபல்
வெளியிட்டார். இதன்படி பள்ளிகளில் சேர்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பள்ளி
வருகை குறைந்து, தனியாக வகுப்புகள் வைத்துக்
கொள்வதை சார்ந்திருப்பதாகவும் 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் வாசிப்பு மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஆற்றல் குறைந்துள்ளதாகவும் அறிக்கை
சொல்கிறது.
பட்டினியும் ஊட்ட உணவின்மையும் உண்மையில் ‘தேச அவமானம்’ என்றால் இந்தப் பிரச்சனையில் பிரதமர் ஏன் வெறும் வாய்வார்த்தை மட்டும்
பேசுகிறார்? உணவுப் பொருட்களின் கடுமையான
விலைஉயர்வு சர்வதேச பட்டினிக்குக் காரணம் என்று
சர்வதேச பட்டினிக் குறியீடு அறிக்கை சொல்கிறது. உணவுப் பொருட்கள் விலையைக் குறைப்பதில்
இந்திய அரசாங்கம் முழுவதும் தோல்வியடைந்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட
உணவுப் பாதுகாப்பு மசோதா பட்டினியோடு போராடுபவர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. அனைத்தும் தழுவிய அளவில் விநியோகம்
என்பதற்கு பதில் ‘குறிவைக்கப்பட்ட’ வழிமுறையில்
தான் அது தொடர்கிறது. ரூ.26/ரூ.32 வரையறை
விசயத்தில் பின்வாங்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது; ஆயினும் மசோதாவின் ‘முன்னுரிமை’ பிரிவு, இந்த பாதகமான வறுமைக் கோட்டுக்கு அப்பால்
உள்ள மிகச்சிறிய பிரிவினருக்கு மட்டுமே பொருந்துகிறது. மாநிலவாரியாக ‘முன்னுரிமை’ (வறுமைக்
கோட்டுக்குக் கீழ் உள்ளோர்) பிரிவினர் எண்ணிக்கையை மேல் இருந்து தன்னிச்சையாக முடிவு செய்ய
மசோதா முன்வைக்கிறது. மசோதா செயலுக்கு வரும்போது, ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும் உணவுப்
பொருள் ஒதுக்கீடு குறைந்துவிடும். உணவு தானியங்களின் மானிய விலை, பல மாநிலங்களிலும் தற்போது
இருப்பதை விட அதிகம். மசோதா செயலுக்கு
வரும்போது, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர்,
தற்போது பெற்று வருவதை இழப்பார்கள். மேலும்,
அவர்களுக்கு உணவுப் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படுவதற்கு பதிலாக அது அதிகபட்ச சில்லறை
விற்பனை விலையுடன் இணைக்கப்படும். எனவே
ஏற்றஇறக்கங்களுக்கு அவர்கள் உட்பட வேண்டியிருக்கும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் கணக்கீட்டுக்கான வரையறைகள் பெரும்பாலான வறிய மக்களை வெளியே நிறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேல், உணவுப் பொருட்களுக்கு பதில் பணம் வழங்குவது என அறிவிக்க
மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் உள்ளது. மட்டுமின்றி மொத்த பொதுவிநியோக திட்டமும் சர்ச்சைக்
குரிய ஆதார் திட்டத்துடன் இணைக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கும்போதும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்ட உணவு
மற்றும் பிழைத்திருத்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட முக்கியமான திட்டமான ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை அரசாங்கம்
இன்னும் அனைத்தும் தழுவியதாக்கவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மிகவும்
குறைவு. விளைவாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் இயங்கவில்லை. இயங்குபவற்றிலும்
அடிப்படை வசதிகள் கூட இல்லை. அங்கன்வாடி ஊழியர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வேலைப் பளுவும் அதிகம். இப்போது, ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள்
வளர்ச்சித் திட்டத்தை உலகவங்கியின் பரிந்துரைகளின் பேரில் ‘மறுகட்டமைப்பு’ செய்யப் போவதாக
அரசாங்கம் சொல்கிறது. மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை ‘தனியார் - அரசு பங்கேற்பு’ மாதிரியின் அடிப்படையில்
தனியார்மயமாக்கப் போவதாகச் சொல்கிறது. இது
போன்ற நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்துணவின்மையை பயன்படுத்தி
உணவு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவே உதவும்.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்டம் மற்றும்
கல்வி ஆய்வறிக்கை ஆகியவற்றை எதிர்கொண்ட
மனித வள அமைச்சர் கபில்சிபல், மோசமான பள்ளிக்கல்வி தரங்களுக்கு மாநில அரசுகள் மேல் பழி
போட்டார். ஆயினும் நிஜம் நம் முகத்தில் அறைகிறது. பெரிதும் பேசப்பட்ட கபிலின் ‘கல்வி உரிமைச்
சட்டம்’ இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரத்தை
உயர்த்த ஏதும் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில்
நிலவுகிற பாரபட்சத்துக்கு முடிவு கட்ட கல்வி உரிமைச் சட்டம் ஏதும் செய்யவில்லை. மிகச்சிறிய
எண்ணிக்கையிலான பணக்கார குழந்தைகள்தான்
தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் மிக
உயர்ந்த கட்டணம் செலுத்தி தரமான பள்ளிக் கல்வி
பெறுகிறார்கள். மிகப்பெரும் எண்ணிக்கையிலான
மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத
பள்ளிகளில் படிக்க நேர்கிறது. மாணவர்கள் தனியார்
பள்ளிகளுக்கு மாறுகிறார்கள் என்று சொல்லும் கல்வி
ஆய்வறிக்கை பல தனியார் பள்ளிகளில் கூட கல்வி
உரிமைச் சட்டப்படியான குறைந்தபட்ச கல்வி மற்றும்
உள்கட்டுமான வசதிகள் இல்லை என்று சொல்கிறது. தனியார் பள்ளி மாணவர்களின் திறனும் போதுமானதாக இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது நாடு முழுவதும் கல்விக்கான பசியை
பயன்படுத்தி அதிகமாக கட்டணம் வசூலிக்கும்
காளான் போல் அதிகரித்து வரும் தனியார் கல்வி
தொழிலிலும் அடிப்படை கல்வித் தரங்கள் இல்லை.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்டத்தின் மதிப்பீட்டின்படி சீனாதான் கணிதம் மற்றும் அறிவியலில்
உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. அரசாங்கம்
பள்ளிக் கல்வியை முன்னுரிமையாகக் கொண்டால்
தான் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கல்வி சாத்தியம் என்பதை இது இந்தியாவுக்கு நினைவூட்டுகிறது. கல்வி தனியார்மயம் விதியாக இருக்கும் வரை, அதிக
கட்டணம் செலுத்தும் ஆற்றலே கல்வி பெறுவதற்கான
வழியாக இருக்கும் வரை, அரசாங்கப் பள்ளிகள்
அழிய, தனியார் பள்ளிகள், மாணவர்கள் மேல் பாய்ந்து
கல்வி மூலம் லாபம் ஈட்டும் வரை, இந்தியாவில் உள்ள
மாணவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே
இருப்பார்கள்.
இந்திய அரசாங்கத்தின் நவதாராளவாத கொள்கைகளால், இந்தியாவின் எதிர்கால தலைமுறை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு, கல்வி ஆகியவை
மறுக்கப்படுகிறது; அவர்கள் உடல்ரீதியாகவும்
அறிவாற்றல்ரீதியாகவும் வளர்ச்சி குன்றியவர்களாக
இருக்கிறார்கள்.
‘கல்வி உரிமை’, ‘உணவு உரிமை’
ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகச் சொல்லும்
ஒப்பனை நடவடிக்கைகள், இந்த உரிமைகள் அனைவருக்குமானதாக ஆக்கப்படாமல், காத்திரமான
கொள்கை மாற்றங்கள் இல்லாமல், நம்பகத்தன்மை
கொண்டவையாக இருக்க முடியாது.
எம்எல் அப்டேட் தலையங்கம்
தொகுப்பு 15, எண் 4, 2012, ஜனவரி 17 – 23
ஆதிதிராவிடர் நலத்துறை முறைகேடுகளைக் கண்டித்தும் தலித் மக்களுக்கு வீட்டுமனை கிடைக்கும்
வகையில் சட்டத்திருத்தம் கோரியும் ஜனவரி 10 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சண்முகம், குண்டுமலை, முருகேசன், பேச்சியம்மாள், மதிவாணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர். பட்டா அளிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களுக்குள் நிலம் அளந்தளிக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.