COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

Feb-1-8

கல்வி

என்ன செய்ய வேண்டும்?’

லெனின்

பல அம்சங்களில் நாம் -ஸ் யுடன் உடன்படவில்லை. குறிப்பாக நாம் வலியுறுத்தியுள்ளவையுடன் உடன்படவில்லை. இவை தெளிவாகக் காட்டுவதாவது: நமது தேர்ச்சிநயமின்மை குறித்து (சிந்திக்கும் ஒவ்வொருவரையும் போலவே) -ஸ் அலுத்துக் கொண்டாலும் இந்த சகிக்கவொண்ணாத நிலைமையிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை; காரணம்பொருளாதாரவாதம் அவரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

உண்மை என்னவென்றால்இலட்சியத்துக்குத் தகுதியுள்ள மிகப் பல நபர்களை சமுதாயம் உண்டாக்கித் தருகிறது, நாம்தான் அவர்கள் அனைவரையும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறோம். இவ்விசயத்தில் நம் இயக்கத்தின் நெருக்கடியான, பரிணமிப்பு நிலைக்குரிய கட்டத்தை பின்வருமாறு வரையறுக்கலாம்: அதாவது ஊழியர்களே இல்லை; எனினும் ஊழியர்கள் திரள்திரளாக இருக்கவே செய்கிறார்கள்.

ஊழியர்கள் திரள்திரளாக இருக்கக் காரணம், ஆண்டுதோறும் தொழிலாளி வர்க்கமும் மென்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையேயிருந்து அதிகரித்து வரும் எண்ணிக்கையில் அதிருப்தியடைந்த நபர்களை உண்டாக்கியவாறு இருக்கின்றன; இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள்; எதேச்சதிகார ஆட்சிமுறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவி அனைத்தும் அளித்திடத் தயாராய் இருக்கிறார்கள். இந்த எதேச்சதிகார ஆட்சி முறையை சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லையாயினும் மென்மேலும் அதிகமான மக்கள் திரள் தீவிரமாக உள்ளூற உணர்ந்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லா சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாகவும், அதே நேரம் சமச்சீராகவும், இசைவாகவும் வேலையை ஒழுங்குபடுத்தி சித்தம் செய்யத் திறமையுள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆற்றல் மிக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை.

புரட்சிகரமான அமைப்புகளின் வளர்ச்சியும் பெருக்கமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பின்னடைந்திருப்பது மட்டுமல்ல (இதை -ஸ் கூட ஒப்புக் கொள்கிறார்), எல்லா மக்கட் பிரிவுகளிடையேயும் உள்ள பொதுவான ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைந்திருக்கிறது.

(தமது முடிவுக்கு இணைப்பாக உள்ளதாக ஆ-ஸ் இன்று இதைப் பெரும்பாலும் கருதக்கூடும் என்று போகிறப் போக்கில் சொல்லி வைப்போம்.) இயக்கத்தின் தன்னியல்பான அடிப்படையின் விரிவுடன் ஒப்பிடுகையில் புரட்சி வேலையின் செயல்பரப்பு மிகக் குறுகியதாக உள்ளது. ‘முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான பொருளாதாரப் போராட்டம் எனும் படுமோசமான தத்துவம் இதை வேலி போட்டு மிகவும் குறுக்கிவிட்டுள்ளது. ஆனால், தற்சமயம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் சமூக - ஜனநாயகவாத அமைப்பாளர்களும்மக்களைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடையேயும் சென்று தீர வேண்டும்.

சமூக - ஜனநாயகவாதிகள் தங்கள் அமைப்புத் துறை வேலையைச் சேர்ந்த ஆயிரத்தொன்று சிறுசிறு செயற்கூறுகளை மிகவும் வேறுபட்ட வர்க்கங்களின் தனித்தனி பிரதிநிதிகளிடையே விநியோகிக்க முடிகிறதைப் பற்றி ஒரு நடைமுறை ஊழியனுக்கும் அய்யமிராது. நம் தொழில் நுணுக்கத்தின் மிக மோசமான குறைபாடுகளில் தனித்தேர்ச்சியின்மையும் ஒன்றாகும்;

........நம் பொது இலட்சியப் பணியில் ஒவ்வொரு தனித்தனிசெயற்கூறும் எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அப்படிப்பட்ட செயற்கூறுகளைச் செய்து முடிக்கத் திறமையுள்ள நபர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள் (இவர்களில் பெரும்பாலோர் முழுநேரப் புரட்சியாளர்களாகும் திறமை சிறிதும் இராதவர்களே); அவ்வளவுக்கவ்வளவு பொலீசுக்கும் இந்த நுணுக்கப் பிரிவு ஊழியர்கள் அனைவரையும் பிடிப்பது அதிகக் கஷ்டமாயிருக்கும்; ‘பாதுகாப்பிற்காக’ அரசாங்கம் செலவழிப்பதை நியாயப்படுத்தும் அளவிற்கு ஒரு சில்லறை விவகாரத்திற்காகக் கைது செய்துவழக்கு ஜோடிப்பதும் அதிகக் கடினமாகிவிடும். நமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சென்ற அய்ந்தாண்டு வாக்கில் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றத்தை முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

மறுபுறத்தில், இந்தச் சின்னஞ்சிறு கூறுகளை ஒரு முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கும், இயக்கத்தின் செயற்கூறுகளைப் பிரிக்கும் அதே நேரத்தில் இயக்கத்தையே உடைத்தெறியாமல் இருப்பதற்கும், இந்தச் சின்னஞ்சிறு செயற்கூறுகளை நிறைவேற்றிவரும் நபர்கள் தாங்கள் செய்யும் வேலை அவசியமானதென்றும் முக்கியமானதென்றும் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதற்கும் (இந்த நம்பிக்கை இல்லையேல் அவர்கள் என்றைக்கும் வேலை செய்யமாட்டார்கள்) புடம்போட்ட புரட்சியாளர்களைக் கொண்ட வலுவான அமைப்பு இருத்தல் அவசியம்.

இவ்வகை அமைப்பு எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலாகக் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை பலமாகவும், பரவலாகவும் இருக்கும். போர்க்காலத்தில், நம் சொந்த ராணுவம் தன் பலத்தில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வது மட்டுமின்றி அந்தப் பலத்தைப் பற்றி எதிரிக்கும் எல்லா நடுநிலைச் சக்திகளுக்கும் உறுதியாக உணர்த்துவதும் மிகமிக முக்கியம். நேசமுள்ள நடுநிலை சில சமயம் விவகாரத்தையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும்; இதை நாம் அறிவோம். உறுதியான தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்டும் சமூக - ஜனநாயகவாதப் பத்திரிகை ஒன்று வைத்துக் கொண்டும் இருக்கிற இவ்வகை அமைப்பு இருக்குமேயானால், இயக்கத்தின்பால் ஈர்க்கப்படும் எண்ணற்றஅன்னிய நபர்கள் இயக்கத்தைத் தடம்புரளச் செய்வார்கள் எனும் பயம் நமக்கு ஏற்படக் காரணமிராது.

(மாறாக, தேர்ச்சி நயமின்மை நிலவும் இந்தக் காலத்தில்தான் பல சமூக - ஜனநாயகவாதிகள்இழ்ங்க்ர்பால் சாய்வதையும் வெறுமே தங்களைச் சமூக - ஜனநாயகவாதிகள் என்று கற்பனை செய்து கொள்வதையும் காண்கிறோம்). சுருங்கச் சொன்னால், தனித்தேர்ச்சி, மய்யப்படுத்துதலின் அவசியத்தை முன்னுணர்கிறது; அதே நேரம், அதை நிச்சயமாகக் கோருகிறது.

தொடரும்

Search