COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 15, 2013

இடிந்தகரை, சுனாமி காலனி வெடிகுண்டு சம்பவத்துக்கும் அப்பாவிகள் 6 பேர் உயிரிழப்புக்கும் மாநிலக் காவல்துறையும் மாநில மத்திய அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்!

கூடங்குளம் அணுஉலைக்கும், அணுஉலை எதிர்ப்பு இயக்கம் இரண்டாண்டுக்கு மேலாக நடந்துகொண்டிருக்கும் இடிந்தகரைக்கும், சமதூரத்திலுள்ள  சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவிகள் 6 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது.

சர்வதேசக் கவனத்தைப் பெற்றதும் மாநில, மத்திய அரசுகளின் 24 மணி நேர இடைவிடாத நேரடிக் கவனத்திலிருக்கும் கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தாராளமாக புழங்குவதும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் இப்போது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதும் அனைவருக்கும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட விபரீத சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பு கின்றன.

அமைதியான முறையில் இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போராடிவரும் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், அதன் தலைவர்கள், மக்கள் மீது 2 லட்சத்துக்கு மேலான பொய் வழக்குகள், சிறை, போராடும் மக்களைக் காணவரும் தலைவர்களுக்குத் தடை என இடிந்தகரை, கூடங்குளம் பகுதிகளை போலீஸ் முற்றுகைப் பகுதியாக கடந்த இரண்டாண்டுக்கு மேலாக வைத்துள்ள ஒரு பகுதியில் நடந்துள்ள இத்தகைய வெடிகுண்டு சம்பவங்கள் காவல்துறை, மாநில அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுனருக்கு முதல்வர் அறிக்கை அளித்ததாகச் சொல்லப்படும் அன்று இரவே நடந்துள்ள சுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவம் சட்டம் ஒழுங்கின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் உள்ளது.

அமைதியாகப் போராடி வருகிற மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிற மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தை உடைக்கும் நோக்கத்துடன், தாதுமணல் கொள்ளையர்களின் முழு ஆசியுடன் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரிக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. மீனவர் சமூகத்து மக்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள மோதல் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் காவல்துறை ஆதரவின்றி பெருமளவில் வெடிகுண்டுகள் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் நடப்பதில்லை.

மீனவர்கள் தாதுமணல் கொள்ளைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ள நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு பெற்று வரும் மீனவர்கள் மத்தியில் பிளவைக் கொண்டுவரும் நோக்கத்துடன், இத்தகைய சம்பவங்கள் நடக்க மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசின் ஆதரவுடன் காவல்துறை இவ்வாறு செயல் படுகிறதோ என்ற வலுவான அய்யத்தையும் எழுப்புகின்றன.

இந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பயன்படுத்தி அணுஉலைக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவரும் தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் மீண்டும் பல பொய் வழக்குகளைப்போட மாநில அரசும் காவல்துறையும் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

போராட்டக்காரர்களுக்கும் வெடிகுண்டுச் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கூறிய பின்னரும் அணுசக்திக்கெதிரான தலைவர்கள்தான் இதற்குக் காரணம் என்று அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரச்செய்ததும் இப்போது காவல்துறை கண்காணிப்பாளர் இடம் மாற்றப்பட்டிருப்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

  • சுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவத்தை தடுக்கத் தவறிய காவல்துறையின் தோல்வி குறித்து நேர்மையான நீதி வசாரணை நடத்த வேண்டும்.
  • உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சையும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
  • அந்தப் பகுதியில் நிரந்தரமான அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்.
  • போராட்டக்காரர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
  • தாது மணல் அள்ளுவதை முழுமையாக தடைசெய்ய வேண்டும். தாது மணல் கொள் ளையர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

Search