COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

ஈரான் மீதான ஏகாதிபத்திய முற்றுகை மீது ஓர் அடி விழுந்துள்ளது - எஸ்.குமாரசாமி

ஏகாதிபத்திய சாத்தான்கள் வேதம் ஓதின. ஈரான் அணுகுண்டு தயாரிக்கப் பார்க்கிறது. ஈரானிடம் அணுகுண்டு வந்தால், இஸ்ரேலுக்கு ஆபத்து. மேற்கு ஆசியாவிற்கு ஆபத்து. உலக அமைதிக்கு ஆபத்து. இந்தப் பாட்டும் பல்லவியும் மாமூலானவை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என ஓர் எதிரியை அடையாளப்படுத்தி தேர்வு செய்த பிறகு, முல்லா ஓமரையும் பின்லேடனையும் தேடிப் பிடிக்கப் போகிறோம் எனச் சொல்லி, அய்க்கிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார்கள். இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கதை சொல்லி, சதாம் உசேனைக் கொன்றார்கள். இராக்கை ஆக்கிரமித்தார்கள். பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரால், எண்ணெய் எரிவாயு நிலக்கரி போன்ற வளங்களை விழுங்கவும் உலகளாவிய எரிசக்தி பொருளாதாரம் மீது ஓர் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை நிறுவவுமே முயற்சிக்கிறார்கள்.

ஈரான் என்பிடி- நான் பிராலிஃபிரேஷன் டிரீடி அதாவது அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல்  என்பிடி ஒப்பந்தத்தில் கையொப்ப மிடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், அணுகுண்டுகளையும் வைத்துள்ளது. அய்க்கிய அமெரிக்கா – இஸ்ரேல் அச்சுதான், அமைதி மற்றும் சுதந்திரத்தின் முதன்மையான எதிரிகளாக உள்ளன. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல்,ஏகாதிபத்திய உலகம் துணை இருக்கும் துணிச்சலில், ஈரானைத் தாக்குவேன், ஈரான் மீது குண்டு வீசி தரைமட்டமாக்குவேன் என மிரட்டி வந்தது.

 அய்க்கிய அமெரிக்கா ஆதரவு மன்னர் ஷா வீழ்த்தப்பட்ட காலத்திலிருந்தே (1979), ஏகாதிபத்திய உலகம் ஈரான் மீது பகைமை பாராட்டி வருகிறது. ஈரான் பொருளாதாரரீதி யாகவும் அரசியல்ரீதியாகவும் முற்றுகையிடப்பட்டது.

ஞாயிறு (24/11/2013) காலை 4.30 மணி அளவில், ஈரான் அணு ஆற்றல் திட்டம் தொடர்பாக ஓர் உடன்பாடு ஜெனிவா நகரில் கையொப்பமானது. அய்க்கிய அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா என்ற 6 நாடுகள் 2006 அய்நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஈரானுடன் பேசி வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக, முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் எண்ணெய் வருவாய் ரூ.20,000 கோடி ஈரான் கைகளுக்குக் கிடைக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல்ஸ், கார், விமான பாகங்கள் ஆகியவற்றில் ஈரானோடு வர்த்தகம் கூடாது என்ற தடையும் தற்காலிகமாக நீக்கப்படும். ஈரான், யுரேனியத்தை ரியாக்டர் தரம் 5% மேல் செறிவூட்டக்கூடாது.

ஈரான் தன் கைவசம் உள்ள தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகரிக்காது. ஈரான் புதிய சென்ட்ரிஃபியூகஸ் (மய்ய விலக்கிகள்) நிறுவாமலும், கைவசம் உள்ள 16000 சென்ட்ரிஃபியூகஸில் பாதிக்கு மேல் இயக்காமலும், தனது செறிவூட்டும் ஆற்றலை முடக்கிக் கொள்ளும். ஈரான், அராக்கில் கட்டும் தனது கன-நீர் ரியாக்டரை செயல்பாட்டிற்கு கொண்டு வராது; செலவழிக்கப்பட்ட எரி சக்தியிலிருந்து புளூட்டோனியம் தயாரிக்கும் ரீ பிராசசிங் பிளாண்ட் கட்டாது. ஈரான் தனது சில அணு நிலையங்கள் மீது அன்றாட சர்வதேச கண்காணிப்புக்கும் ஒப்புக் கொள்ளும்.

இஸ்ரேல் இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் தவறு என்கிறது. “இன்று உலகம் மேலும் கூடுதல் ஆபத்தானதாக மாறியுள்ளது; உலகிலேயே மிகவும் ஆபத்தான ஓர் ஆட்சி உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதத்தை அடைவதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, மேலை நாடுகள் குறிப்பாக அவரது கூட்டாளிகள், ஈரான் அணு குண்டு தயாரிக்க இடம் தந்து விட்டதாகச் சொல்கிறார். ஆபத்தான நாடான இஸ்ரேல் ஆபத்தான அணுகுண்டுகளை கைவசம் வைத்துக் கொண்டு, இவ்வளவும் பேசுகிறது!

ஈரான் குடியரசுத் தலைவர் ஹாசன் ரவுஹானி யுரேனியத்தை செறிவூட்டும் தமது உரிமையை கைவிட முடியாது என உறுதியாக இருந்த அதேநேரம், பேச்சுவார்த்தைகள் மூலம், தமது நாட்டை முடக்கிப்போடும் தண்டனைத் தன்மை வாய்ந்த தடைகளை அகற்ற முயன்றார்.

இஸ்ரேல் கையொப்பமிடாத, ஈரான் கையொப்பமிட்டுள்ள அணு ஆற்றல் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் ஷரத்து 4, “எந்த வேறுபடுத்தலுமின்றி, அமைதி நோக்கங்களுக்காக அணு ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சியை வளர்த்திட, அணு ஆற்றலை தயாரிக்க பயன்படுத்த, ஒப்பந்தத்தின் அனைத்து தரப்பினர்க்கும் உள்ளார்ந்த பறிக்க முடியாத உரிமைகளுண்டு” என்கிறது. ஒப்பந்தத்திற்குப் புறம்பாகத்தான் ஈரானை மிரட்டினார்கள். ஆனால், 2005லேயே, 3,000 சென்ட்ரிஃபியூகசுடன் தனது யுரேனிய செறிவூட்டும் ஆற்றலை நிறுத்திக் கொள்வதாக, ஜார்ஜ் புஷ்ஷிடம் ஈரான் சொன்னது. முடியாது கூடாது விடுவேனா பார் என, அய்க்கிய அமெரிக்கா மீசையை முறுக்கியது; முஷ்டியைத் தட்டியது. 2008லேயே ஈரானிடம் 7,221 சென்ட்ரிஃபியூஜஸ் (மய்ய விலக்கிகள்) இருந்தன. 2008ல் ஈரான் கைவசம் 1,000 கிலோகிராம் தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தது. இன்று 10,000 கிலோகிராம் உள்ளது. 

சிரியா, இரசாயன ஆயுதங்கள் விசயத்தில் சிவப்புக்கோடு தாண்டியதால், சிரியா மீது குண்டு வீச்சு, தாக்குதல் என உருட்டி மிரட்டிய அய்க்கிய அமெரிக்கா, கடைசியில், சிரியா சர்வதேச கண்காணிப்பிற்கு ஒப்புக் கொண்டதால்தான் தாக்குதல் கைவிடப்பட்டது எனச் சொல்லி, தன் மீசையில் மண் ஒட்டாததாகக் காட்டிக் கொண்டது. இப்போது ஈரானுடன் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு ஒபாமா சொல்கிறார்; “உலக பிரச்னைக்கு, அமைதி தீர்வு காணும் முயற்சிதான், ஈரானுடனான ஒப்பந்தம். இது தவிர்க்க முடியாதது. நாம், பேச்சு வார்த்தை ராஜதந்திரத்திற்கு, கதவுகளை மூட முடியாது. முடிவில்லா மோதலையும் அனுமதிக்க முடியாது. கடுமையாகப் பேசுவதோ கோபத்தில் முகம் சிவக்கக் கண்டிப்பதோ, அரசியல்ரீதியாக எளிதானது. ஆனால் இவை நம் பாதுகாப்பிற்கு ஏற்றவை அல்ல”.  ஆப்கா னிஸ்தானில் இராக்கில் சிக்கியுள்ள அய்க்கிய அமெரிக்காவிற்கு, லிபியாவில் செய்ததைப் போல், சிரியாவில் ஈரானில் செய்ய முடியவில்லை என்பது, மிகமிக நல்ல விசயம்.

இவ்வளவு நெருக்கடியான கட்டத்திலும், ஈரானோடு சவுதி அரேபியா, கத்தார் அய்க்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் குளிர் காய்ந்து கொண்டு, அரபு நாடுகளில் (யுஏஈ) அணு உலை கட்டவும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் தளவாடங்கள் வழங்கவும் பிரான்ஸ் தயாராகிறது. வரலாற்றின் விந்தை முரணாக இப்போது இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியா- கத்தார்  - அய்க்கிய அரபு குடியரசுக்கும் பொது எதிரிகள், சிரியாவும் ஈரானும்; பொது நண்பன் பாதுகாவலன் அய்க்கிய அமெரிக்க நாடுகள். அய்க்கிய அரபு குடியரசில் கட்டப்படும் அணு உலையில் அணுகுண்டு ஆபத்து என பூச்சாண்டி காட்ட இஸ்ரேலோ அய்க்கிய அமெரிக்காவோ தயாராக இல்லை.

குற்றவாளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்

அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பவர்கள், அணு ஆற்றல் பரவல் தடை (என்பிடி), அனைத்தும் தழுவிய அணு சோதனை தடை ஒப்பந்தம் (சி டி பி டி) பற்றிப் பேசுகிறார்கள். நியுக்ளியர் கிளப்  அதாவது அணு ஆயுத கிளப் உறுப்பினர்கள் வேறு யாரும் உள்ளே வரக் கூடாது என்கிறார்கள்.

1985ல் உலகில் 68,000 அணு ஆயுதங்கள் இருந்தன. 2013ல் செயல்படும் நிலையில் 17,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அய்க்கிய அமெரிக்கா 7,700, ரஷ்யா 8,420, இங்கிலாந்து 225, பிரான்ஸ் 300, சீனா 250, இந்தியா 100, பாகிஸ்தான் 110, வடகொரியா 10க்கும் கீழே அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன எனச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல், தன்னிடம் இல்லை ஆனால் இருக்கிறது எனப் பேசுகிறது. அய்க்கிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்கிறார். (பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 11/11/2004 அன்று இறந்ததற்குக் காரணம் போலோனியம் நஞ்சு தான் என சுவிட்சர்லாந்து விசாரணைக் குழு நவம்பர் 7, 2013 அன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் டிமோனா அணு உலையிலிருந்து போலோனியம் தயாரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் சந்தேகத்தின் ஊசிமுனை இஸ்ரேல் நோக்கி திரும்பி உள்ளது). 

ஈரான் இந்தியா நல்லுறவு
இந்திய மக்களுக்கு நல்லது

இந்தியாவுக்கு டாலர்/யூரோ போன்றவற்றில் அல்லாமல் ரூபாயில் மலிவு விலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கவும், ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆழ்குழாய்கள் மூலம் மலிவான விலையில் இயற்கை எரிவாயு பெறவும் சிறந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா தன் மீது மேலை நாடுகள் விதித்த தடைகளை நீக்கக்கோரி, முயற்சிகள் எடுத்த போது, அய்க்கிய அமெரிக்காவின் போர்த்தந்திர சங்கிலியில் கட்டப்பட்டது.

அவர்களின் அணு ஆற்றல் சட்டத்தின் 123 பிரிவின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கை அய்க்கிய அமெரிக்க அயல் விவகாரக் கொள்கையுடன் முற்றிலும் இசைவானதாக இருக்க வேண்டும். 110 கோடி மக்கள் கொண்ட, இறையாளுமை உடைய(?) இந்தியாவை, ஈரான் விசயத்தில் சொன்னதைக் கேள் என, அய்க்கிய அமெரிக்க அயல் விவகார அமைச்சர் கோண்ட லிசா ரைசால் மிரட்ட முடிந்தது. 

இந்தியா இப்போதாவது ஈரான் மீதான தடைகளுக்கு துணை போகாமல், ஈரானோடு சுமுக உறவுகள் மேற்கொண்டால், ரூபாய் தந்து எண்ணெய் பெறவும், மலிவாக எண்ணெய் பெறவும், பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை ஈரானிலிருந்து மலிவு விலையில் பெறவும் வாய்ப்பு உண்டு. நடப்புக் கணக்கு பற்றாக்குறை விலை உயர்வு ஆகிய சுமைகளிலிருந்து ஓரளவாவது நாடும் நாட்டு மக்களும் நிவாரணம் பெற முடியும். இது சாத்தியமாக, சுதந்திரமான அயல் விவகாரக் கொள்கை தேவை.

Search