COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டை ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்

சென்னை காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குற்றவாளிகள் என்ற பூதத்தை கிளப்புகிறார்.

காவலாளிகளாக வேலையில் அமர்த்தப்பட்ட இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் வன்முறை குற்றத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

வீடுகளை வாடகைக்கு தருபவர்கள் வாடகைக்கு வருபவர்கள் முழு
விவரங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். வேளச்சேரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று சுட்டுக்கொன்றபோதும் இதே போன்ற முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

நவம்பர் 16 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி அருகில் சின்னப்புலியூர் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆறு பேர் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செத்துப்போனார்கள். இன்னும் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குக் காரணமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.1.50 லட்சம் நட்டஈடு தந்ததாக தெரிவித்தார்.

மறுநாள், இககமாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் மற்றும் தமிழ்நாடு ஜனநாயகக் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றபோது அங்கு காவலாளியைத் தவிர யாரும் இல்லை. அங்கு வேலை பார்த்த 26 வெளிமாநிலத் தொழிலாளர்களும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்த விவரமும் அந்தக் காவலாளியிடம் இல்லை. வேறு பொறுப்பான எந்த நபரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விபத்துக்குக் பொறுப்பேற்க வேண்டியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். தொழிலாளி உயிர்விட்டான்.

தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், சென்னையைச் சுற்றி மூலதனம் குவிகிற பகுதிகளில் பணியிட விபத்துக்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் உறுப்புக்கள் இழப்பதும் கூட அன்றாடச் செய்திகள்தான்.

தமிழ்நாடு மற்றும் சென்னை காவல்துறையினர் இதுவரை இந்த விபத்துக்களுக்கு உயிரிழப்புக்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சில விதிவிலக்குகள் தவிர எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதில் நடக்கும் சட்டமீறல்கள் என்றாவது இவர்கள் கண்ணில் பட்டிருக்கிறதா? அந்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒரு வகையில் வெளிமாநிலத் தொழிலாளர் கணக்கெடுப்பு அவசியம். அவர்கள் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்கள் உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்த அது அவசியம்.

தமிழ்நாட்டுத் தொழிலாளி விபத்துக்குள்ளானாலும் இதே போன்ற விசயங்கள்தான் நடக்கின்றன. நவம்பர் 24 அன்று திண்டுக்கல்லில் அப்பள நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ஒரு பெண் தொழிலாளியின் வலதுகை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டாகிப் போனது.

உள்ளூர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டதால் துண்டான கையோடு அவர் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். துண்டான கையை சேர்க்க முடியாது என்று அங்கு சொல்லப்பட்டது. விபத்துக்குக் காரணம் அந்தத் தொழிலாளியின் கவனக்குறைவே என்று நிர்வாகம் சொல்கிறது.

விபத்துக்கு பொறுப்பேற்று நிர்வாகத் தரப்பில் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையும் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாளொன்றுக்கு ரூ.100 கூலியில் அந்த ஆபத்தான வேலையில் இன்னும் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடந்தால் பொதுவாக ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவது அந்த நிறுவனத்தின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது. நிறுவனச் சொந்தக்காரருக்கு விபத்து நேர்ந்து தொழிலாளி எல்லாம் சேர்ந்து ஒரு மாதச்சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் சட்டம் பார்த்துக் கொண்டிருக்குமா என்று சென்னை தொழிலாளி ஒருவர் கேட்டார்.

தமிழ்நாட்டில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் சொல்லிக் கொண்டு இருக்க ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாட்டை சுபிட்சமாக்கியே தீருவேன் என்று சூளுரைக்கிறார். இதே நிலை மைகள் தொடர அனுமதிக்கப்பட்டால் அவர் சொல்லும் சுபிட்சம் வரும்போது மொத்த தமிழ்நாடும் இடுகாடாகிவிடும்.

ஜெயலலிதாவின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற் படுத்திக் கொண்டிருக்கும்போது அவர் தப்பித்துக்கொள்ள காமன்வெல்த் போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது உதவிவிடுகின்றன.

முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்ததால், கைது செய்யப்படுபவர்கள் கூட தங்களுக்கு ஓய்வு தர ஜெயலலிதா கைது செய்தார் என்று சொல்லி விமர்சனத்தின் கூர்மையை மழுங்கடிக்கின்றனர். அந்த மழுங்கடிப்புக்கு மறுபுறம் எல்லாப் புகழும் எனக்கே என்ற ஜெயலலிதாவின் பாட்டு ஒலிக்கிறது. அதில் பங்குபோட வந்தால் ஒடுக்குமுறை என்ற தாளம் தெறிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஅய் குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்பி தியாகராஜன், தான் பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றும், பணிமூப்புக்குப் பின் அந்தத் தவறு தன்னை வாட்டுவதாகவும் அதனால் விசயத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று சொன்னதாகவும் வெளியாகியுள்ள செய்தி மொத்த வழக்கு விசாரணையின் முன்முடிவையும் முன்முடிவோடு விசாரணை நடத்தப்பட்டதையும் தெளிவாகக் காட்டுகிறது.

பேரறிவாளன் தண்டனையே அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தரப்பட்டது என்றால் சரியாக பதிவு செய்யப்படாத வாக்குமூலத்தின் அடிப்படையில் தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியுள்ளது.

கொலைக்குப் பின் இருக்கிற சதி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிற பேரறிவாளன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு டிசம்பர் 10க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இன்னும் இந்தப் பிரச்சனையில் தனது மேலான தலையீட்டைச் செய்யவில்லை. உடனடியாக ஏற்காடு தேர்தலுக்கு அது தேவைப்படவில்லை. மக்களவை தேர்தலுக்காக அதை இருப்பில் வைக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக்கலாம்.

தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது என்று வந்த விவாதத்தை ஒரு முறை சமாளித்ததுபோல் மறுமுறையும் சமாளிக்க முடியாது. ஏமாற்று அம்பலம் ஏறும். அமைச்சர்கள் இல்லத் திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா நாளைய பாரதம் நம் கையில் என்றார். என்னவாகும் இந்தியா? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என யாரோ சொன்னார்கள்.

கடவுளால் காப்பாற்ற முடியாதுதான். உழைக்கும் மக்கள் அந்தப் பொறுப்பை  எப்போதும் எடுத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டை மட்டுமின்றி மொத்த நாட்டையும் ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்.

Search