COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் யார்? - காம்ரேட்

டெல்லியில் இககமா, இகக  முன்முயற்சியில் 30.10.2013 அன்று மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இகக, இககமா தலைவர்கள், அய்க்கிய ஜனதாதளம், அஇஅதிமுக, அஸ்ஸாம் கனபரிஷத் போன்ற கட்சிகளின் தலைவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

“வகுப்புவாத சக்திகளை முறியடிக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், நம் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்தவும், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் தங்களது முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்”.

தீர்மானத்தில் இடதுசாரி சக்திகள் பற்றி குறிப்பிடாததால், இகக, இககமா தம்மை இடதுசாரி சக்திகள் எனக் கருதிக் கொள்ளவில்லை என, நாம் முடிவு செய்ய வேண்டாம். பரந்த ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுபடுத்த முயற்சிக்கும்போது, சுதந்திர இடதுசாரி அரசியலை வலியுறுத்தாமல் இருக்கும் அரசியல்ரீதியான பரந்த மனதும் புத்தி சாதுரிய நெளிவு சுளிவும் தேவை என, இகக இககமா தலைவர்கள் எப்போதுமே கருதுவார்கள்!

மதவெறி சக்திகளுக்கு எதிராக உறுதியாக விடாப்பிடியாகப் போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் ஜனநாயகத்தின் பாதுகாவலாளியுமான இககமாலெயை அவர்கள் மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாட்டிற்கு அழைக்கவில்லை. இகக, இககமா போராடும் இடதுசாரி கட்சிகளுடன் ஒற்றுமை என்பதில் நாட்டமின்றி, முதலாளித்துவக் கட்சிகளோடு வேறுவேறு காரணங்கள் சொல்லி ஒற்றுமையைக் கட்டுவதற்கு முன்னுரிமை தருவதே, இடதுசாரி ஒற்றுமைக்குப் பெரும் தடையாகும்.

இகக, இககமா தங்கள் மாநாட்டிற்கு நேற்று வரை பீகாரில் பாஜகவோடு அதிகாரத்தைக் பகிர்ந்து கொண்ட நிதிஷ்குமாரின் ஜனதாதளத்தை அழைத்திருந்தனர். பல அடிப்படையான சிக்கல்கள் இருந்தாலும், பாஜகவோடு எந்தக் கட்டத்திலும் உறவாடாத லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் அழைக்கப்படவில்லை.

குஜராத்தில் நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நர வேட்டையாடியதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேஜமு அரசிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வான் அழைக்கப்படவில்லை. மசூதி இடிப்பு கர சேவைக்கு கல் அனுப்பிய ஜெயலலிதா போன்றவர்கள்தான் அழைக்கப்பட்டனர்.

30.10.2013 தங்கள் அழைப்புப்படி டெல்லிக்கு வந்த கட்சிகளை எந்த அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எனச் சொல்கிறார்கள் என்பதற்கு இகக, இககமா கட்சிகள் நாட்டிற்கும் பரந்த இடதுசாரி இயக்க தொண்டர்களுக்கும் விளக்கம் தர வேண்டும். 

விவாதத்தில் நெருக்கும்போது, நாங்கள் அவர்களோடு தேர்தலுக்கான மூன்றவது அணி கட்டவில்லை என்றோ, அல்லது நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் எனப் பொதுவாகத்தான் சென்னோமே தவிர, நிதிஷ் முலாயம் ஜெயலலிதா போன்றவர்களை ஜனநாயக சக்திகள் என்று சொல்லவில்லை என்றோ சொல்லி நழுவ முயற்சிக்கக் கூடாது.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் என அவர்களைக் கருதவில்லை என்றால், அவர்களை அழைத்து அவர்கள் ஒப்புதலோடு அவர்களோடும் சேர்ந்து, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை எனப் பேசுவது அரசியல் மோசடி அல்லவா?

அய்க்கிய அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இலக்காக இசுலாமியர்களை நிறுத்தியுள்ளபோது, இனி மதவெறி எதிர்ப்பு மதச்சார்பின்மை ஆதரவு என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்போடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் மதவெறி எதிர்ப்பு கிடையாது. அதேபோல் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஜனநாயகத்திற்காக நிற்பதோடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும்.

ஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்பது என்பது பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்ப்பது, அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்பது, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக நிற்பது ஆகியவற்றோடு தொடர்புடையது. ஆக, இன்றைய சர்வதேச தேசிய சூழலில், மதச்சார்பின்மை என்பது ஜனநாயகத்தோடும் ஏகாதிபத்திய எதிர்ப்போடும் தொடர்புடையது.

 இககவும் இககமாவும், மதச்சார்பற்ற சக்திகள் ஜனநாயக சக்திகள் என அழைப்பதற்கு என்ன இலக்கணம் வைத்துள்ளனர், என்ன தகுதியுடையவர்கள் இத்தகைய சக்திகள் ஆவார்கள் என விளக்க வேண்டும்.

Search