COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 15, 2013

அடுத்தச் சுற்று அலைக்கற்றை விற்பனை. இதுவும் கரைந்து போகும் - மஞ்சுளா

அய்முகூ அரசாங்கம் அறிவிப்பு

இன்று முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.5. ஒரு கிலோ அரிசி ரூ.5. 4 பேர் குடியிருக்கக் கூடிய அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு வீட்டின் வாடகை நகரத்தில் ரூ.2000. ஒரு பேண்ட் சர்ட் ரூ.50க்கு மிகாது. ஒரு சேலையோ, சுடிதாரோ ரூ.25தான்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்த விலையை விட சற்று கூடுதலாக அரசு நிர்ணயித்த விலைப் பட்டியல் இது. இது சென்ற ஆண்டு இருந்த விலையை விட 50% குறைவு.
இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் வெளியானால் யாராவது நம்புவார்களா?

அய்முகூ ஆட்சியில் இப்படி வெளியாகாது. ஏனென்றால் அந்த அறிவிப்பு சாமான்ய மக்களுக்கு ஆதரவானது. ஆனால், அய்முகூ அரசாங்கம் அலைக்கற்றை தொடர்பான கட்டணங்களை இப்படித்தான் குறைத்துள்ளது. வோடாஃபோன், ரிலையன்ஸ், டாடா, அய்டியா, பார்தி ஆகியோர் அலைக்கற்றை வாங்கப் போகிறார்கள்.

அலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகள் சிறைக்குச் சென்றார்கள்; தரகர்கள் விசாரிக்கப் பட்டார்கள்; சில முதலாளிகள் கூட நீதிக்கு முன் நிறுத்தப்பட்டார்கள்; ஆனால், நாடு இழந்துவிட்ட ரூ.1.76 லட்சம் கோடியில் ஒரு ரூபாய் கூட இன்னும் நாட்டுக்கு திரும்பவே இல்லை. அது யானை வாய்க்குள் போன கரும்பு.

ஊழலில் விசாரணை, கைது, சிறைவாசம்  என நடந்துகொண்டிருக்க, ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிறகு ரத்து செய்யப்பட்ட பின் நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013 என இரண்டு முறை 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. 2010ல் நடந்த 3 ஜி மற்றும் 4 ஜி அலைக்கற்றை விற்பனையில் ரூ.1,06,262 கோடி வருவாய் வந்தது.

நவம்பர் 2012 விற்பனை எதிர்ப்பார்த்தது போல் இல்லை என்றாலும் ரூ.9,407 கோடி கருவூலத்துக்கு வந்தது. மார்ச் 2013 விற்பனையில் சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் (எம்டிஎஸ்) மட்டும் பங்கேற்று வெறும் ரூ.3600 கோடி வருவாய் வந்தது. விற்பனை என்று வரும் போது கூடுதல் விலை நிர்ணயிப்பதில் கார்ட்டல்கள் அமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அலைக்கற்றை வாங்குவது என்று வந்த போது, விலையைக் குறைக்க கார்ட்டல்கள் அமைத்து வாங்குவதைக் குறைத்தன.

ரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு எதிராக நாடு கிளர்ந்தெழுந்தபோது, நட்டமே ஏற்பட வில்லை என்று கபில் சிபல் சொன்னதை உறுதிப் படுத்தவும் இந்த நடவடிக்கை பயன்பட்டது. இப்போது அதே அலைக்கற்றைக்கு ரூ.9,407 கோடிதான் வந்துள்ளது, எங்கே அந்த ரூ.1.76 லட்சம் கோடி என்று கபில் சிபல் கேட்டார். மறுபுறம், முதல் முறை குறைவருவாயும், அடுத்த முறை விற்பனையில் ஒரு நிறுவனம் தவிர யாரும் வாங்க வராததும் சேர்ந்து அலைக்கற்றை விலைக் குறைப்புக்கு சூழல் உருவாக்கின.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை யாரும் வாங்கவில்லை என்றால் கெட்டுப்போகும், அதனால், கடைசி நேரத்திலாவது விலையை குறைத்து விற்க வேண்டியிருக்கும். அலைக்கற்றை கெட்டுப் போகப் போவதில்லை.

அரசுக்கு, தன் கருவூலத்துக்கு நல்ல வருவாய் வர வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால் இந்த விலைதான், வாங்கினால் வாங்கு இல்லை என்றால் போ என்று சொல்ல வேண்டும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடு போட்டால் அதை கோலமாக்கிவிடும் அய்முகூ அரசு இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டது.

ட்ராய் நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக நிர்ணயித்து, அய்முகூ அமைச்சரவை, அதனால் தனக்கு நாட்டின் செல்வத்தின் மீது அக்கறை அதிகம் என்று சொல்கிறது.

2014 ஜனவரியில் நடக்கவுள்ள அலைக்கற்றை விற்பனையின்போது,
2013 மார்ச்சில் இருந்ததை விட 37% முதல் 53% சதம் விலை குறைவாக இருக்கும்.

பயன்பாட்டு கட்டணம் நிறுவனம் வைத்திருக்கும் அலைக்கற்றை அளவுக்கேற்ப அல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் சீராக 3% என்று இருக்கும். (கூடுதல் அலைக்கற்றை வாங்குபவருக்கு என்ன ஊக்கம் இருக்க முடியும்? அவர் கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே என்று வோடாஃபோன் சொன்னதை அப்படியே சொல்லி கபில் சிபல் கவலைப்படுகிறார்).

அபராதத் தொகை குறைக்கப்படும். (சாதாரண செயல்முறை தவறுகள் மட்டுமே ஏற்படுவதால் தவறுகளுக்கான அபராதத் தொகை குறைக்கப்படும் - கபில் சிபல். இதை அவரே சொன்னார்).

1800 மெ.ஹெ அலைக்கற்றையை விட 900 மெ.ஹெ அலைக்கற்றை விலை இரண்டு மடங்கு கூடுதலாக இருந்தது. இப்போது அது 1.6 மடங்கு முதல் 1.7 மடங்கு வரை மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி சேவையில் முன்னணி இடங்களில் இருக்கிற பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களின் உரிமங்கள் டில்லி மற்றும் மும்பையில் நவம்பர் 2014ல் காலாவதியாகிவிடும். ஒழுங்குமுறை ஆணையம் குறைக்கப்பட்ட விலைகளை அறிவித்ததை ஒட்டி, அய்டியா செல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வைத்துள்ளன. இந்த அலைக்கற்றை விலை இப்போது 53% குறைக்கப்பட்டுள்ளது. ட்ராய் 60% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விலையை 37% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

அலைக்கற்றை உபயோகக் கட்டணத்தையும் தற்போது வைத்துள்ள அலைக்கற்றை அளவுக் கேற்ப, வருவாயில் 3% முதல் 8% என்பதை, எவ்வளவு அலைக்கற்றை வைத்திருந்தாலும் 3% என்று குறைத்து பரிந்துரைத்துள்ளது. இதனால், நிறுவனங்கள் கூடுதல் அலைக்கற்றை வாங்குவார்கள் என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி இன்னும் அமைச்சரவைக் குழு முடிவெடுக்கவில்லை.

இந்த மூன்று நிறுவனங்கள்தான் பெரிய அளவில் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வைத்துள்ளன. இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வாங்கும். அய்முகூ தன் சட்டைப் பைக்குள் இருப்பதாக முகேஷ் அம்பானி சொன்னார்.

அப்படிப்பட்ட அரசாங்கத்தின் விலைக்குறைப்பு அறிவிப்பு ஏன் என்பதற்கு இதைவிட சிறப்பான காரணம் வேறென்ன இருக்க முடியும்?

அலைக்கற்றை விலை குறைப்பால் நாட்டின் கருவூலத்துக்கு ரூ.35,000 கோடி இழப்பு ஏற்படும் என்று முன்னாள் நிதியமைச்சரான பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா சொல்கிறார். (கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது வேறு பிரச்சனை). இப்போது, அரசாங்கம் எதிர்ப்பார்க் கும் ரூ.33,000 கோடி வருமானம் வந்து விட்டால், யஷ்வந்த சின்ஹா சொல்லும் கணக்கையும் சேர்த்துக் கொண்டால் ரூ.1.76 லட்சம் கோடிக்கு நியாயம் கிடைக்கலாம்.

முன்பு முறைகேடாக நடந்தது இப்போது முறையாக நடக்கிறது. இரண்டிலும் விளைவு ஒன்றுதான். நாட்டுக்கு இழப்பு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.

இதற்கு கூட வோடாஃபோன் நிறுவனம் தயாராக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்தி ருக்கிற அலைக்கற்றையை ஏன் ஒப்படைக்க வேண்டும், அந்த உரிமங்களை நீட்டித்தால் போதாதா என்று கேட்கிறது. தன்னிடம் இப்போதுள்ள அலைக்கற்றைக்கு முன்பு கொடுத்ததுபோல் 1.6 மடங்கு கூடுதலாக தருவதாகச் சொல்கிறது.

20 ஆண்டுகளுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.4000 கோடி தருவதாகவும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி முதல் ரூ.7000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் வோடாஃபோன் சொல்லியுள்ளது. இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய ரூ.11,200 கோடியை செலுத்த வேண்டியதில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம் இருக்கிற ஒரு நாட் டில் முதலீடு செய்ய எந்த நிறுவனத்துக்குத்தான் ஆர்வம் இருக்காது?

தனியார் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை செல்வத்தை குறைந்த விலையில் வாங்கி லாபம் ஈட்டும்போது, அரசு நிறுவனங்களான பிஎஸ் என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் நட்டம் காட்டுகின்றன. திட்டமிட்டு நட்டத்தில் தள்ளப்படுகின்றன.

இப்போது பயன்பாட்டு கட்டணம் என்ன, உரிம விற்பனைக்கான செயல்முறை என்ன என்று இந்திய அரசாங்கத்துக்குச் கட்டளையிடப் பார்க்கிறது வோடாஃபோன் நிறுவனம்.

அலைபேசியில் பேசப்பேச வயிறு நிரம்பும் மந்திரத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து வோடாஃபோனும் ரிலையன்ஸ் ஜியோவும் இன்ன பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் தந்தால் அய்முகூ அரசாங்கம் உணவுப் பாதுகாப்பு என்று ‘கவலைப்பட’ வேண்டியதில்லை.

Search