COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 7, 2013

1

அஞ்சலி

தோழர் சங்கர் மித்ராவுக்கு செவ்வஞ்சலி

2012 டிசம்பர் 18 அன்று தோழர் வினோத் மிஸ்ரா 14ஆவது நினைவு தினத்தை கட்சி அனுசரித்துக் கொண்டிருந்த போது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தோழர் சங்கர் மித்ரா மறைவுச் செய்தி வந்தது. மாலெ கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சங்கர் மித்ரா அன்று பிற்பகல் 2 மணி அளவில் தனது கல்கத்தா இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. 1990களில் இதய அறுவை சிகிச்சை (பைபாஸ்) செய்து கொண்ட தோழர் மித்ராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிறுநீரக புற்று நோய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் மாரடைப்பினால் காலமானார். தோழர் மித்ரா தனது துணைவியார் அனு, மகன் அர்னாப் மற்றும் நாடு முழுவதும் உள்ள எண்ணிலடங்கா தோழர்களையும், நண்பர்களையும் துயரத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

1940ல் பிறந்தவர் தோழர் சங்கர் மித்ரா. அவரது மூத்த அண்ணன் பபித்ர மித்ரா பிரபலமான வங்காளிப் பாடலாசிரியரும், நவீன வங்காளிப் பாடல்களின் இசையமைப்பாளரும் ஆவார். கொந்தளிப்பு மிக்க 1960களில் தோழர் சங்கர் மித்ரா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். நக்சல்பாரியில் போராட்டம் நடைபெற்ற போது, அப்போது எல்அய்சி ஊழியர்களின் போர்க்குணமிக்க தலைவராக இருந்த தோழர் மித்ரா, புரட்சிகர அறைகூவலுக்கு உடனடியாக செவிமடுத்து, இகக மாலெயின் முழுநேர ஊழியரானார்.

சித்தார்த்த சங்கர் ரேயின் அபகீர்த்தி மிக்க ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு மிதினிபூர் சிறையில் நீண்டகாலம் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அரசு அடக்குமுறைக்கு அடங்காது எதிர்த்து நின்றார். 1970களின் இறுதியில் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, மேற்கு வங்கத்தில் கட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதிலும் மறுகட்டமைப்பு செய்வதிலும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக மிதினிபூர், பங்குரா மற்றும் வடக்கு வங்காளம் ஆகிய பிரதேசங்களில் நமது கிராமப்புற செல்வாக்குப் பகுதிகளில் கடுமையாகப் பணியாற்றினார். 1980களின் பிற்பகுதியில், டெல்லி கட்சி அமைப்பிற்கு பொறுப்பாளராய் இருந்தார். அதன்பின் தமிழ்நாட்டில் கட்சி பொறுப்பாளராக இருந்தார். ஜனவரி 2007ல் நந்திகிராமில் விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் அடையாளங்கள் வந்தவுடன் நந்திகிராமுக்குச் சென்ற முதல் உண்மையறியும் குழுவுக்கு அவர் தலைமை தாங்கிச் சென்றார். மிதினிபூர் காவல்துறை அவரையும் உண்மையறியும் குழுவின் இதர உறுப்பினர்களையும் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளியது. சிங்கூர், நந்திகிராம் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வெகுஜன எழுச்சி அலைகளின் மீது சவாரி செய்து அதிகாரத்தைப் பிடித்த மம்தாவின் ஆட்சியிலும் அப்பொய் வழக்குகள் இப்போதும் திரும்பப் பெறப்படவில்லை.

கட்சியின் 3ஆவது காங்கிரஸில் தோழர் சங்கர் மித்ரா மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் 4ஆவது மற்றும் 5ஆவது காங்கிரஸ்களுக்கு இடையே அவர் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிலும் பணியாற்றினார். கட்சி வெளிப்படை நிலைக்கு மாறுவதற்கு முந்தைய இடைநிலைக் காலகட்டத்தின் போது, கட்சியின் மத்திய செய்தித் தொடர்பாளராகவும் இந்திய மக்கள் முன்னணியின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைவராகவும் இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு பற்றி ஆவணம் உருவாக்க அமைக்கப்பட்ட கட்சிக் குழுவில் உறுப்பினராய் இருந்தார். அய்ந்தாவது மற்றும் ஏழாவது கட்சிக் காங்கிரஸ்களுக்கு இடையே கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தலைமை வகித்தார்.

எளிமை, பணிவு மற்றும் மானுட நேயத்திற்காக நன்கு அறியப்பட்ட தோழர் சங்கர் மித்ரா கடின உழைப்புமிக்க ஒரு கம்யூனிஸ்ட். மார்க்சியத்தின் அடிப்படைகளில் மிக்க உறுதிப்பாடு கொண்ட தோழர் மித்ரா, தான் கட்சியின் அமைப்பாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் அதன் சமூகப் பொருளாதார சூழ்நிலைகள், வரலாற்றுப் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரச் சூழல் ஆகியன குறித்து படிப்பிலும் ஆய்வுகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1960களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் இகக மாலெயின் உதயம் ஆகியவற்றுடனான நமது மிகச்சில உயிருள்ள இணைப்புகளில் ஒருவராக தோழர் சங்கர் மித்ரா இருந்தார். அவரது மறைவு ஒரு மிகப் பெரிய இழப்பு. அவரது புரட்சிகர இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பினை இன்றைய தலைமுறையின் தோழர்களுக்கு அவர் விட்டுச் சொன்றுள்ளார்.

தோழர் சங்கர் மித்ராவுக்கு செவ்வணக்கம்.

தமிழில்: எஸ்.ஜவஹர்

Search