COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 13, 2013

6

அனுபவம்

குற்றவாளி கூண்டில் நிரபராதிகள்

(குளச்சல் காவல்துறையினரால் பொய் வழக்கில் 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் அந்தோணி முத்துவின், (மாலெ கட்சி குமரி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர்) சிறைக் குறிப்புகளில் இருந்து)

குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் மாலெ கட்சியின் தொடர்ந்த வலுவான போராட்டங்களால் இயக்கங்களால் பாதிப்பிற்கு உள்ளான ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள், சமூக விரோதிகள் சேர்ந்து திட்டமிட்டு ஒரு வழக்கில் எனது பெயரைச் சேர்த்து கைது செய்தனர். இந்த அநியாயமான கைதை கண்டித்து குளச்சல் காவல் நிலையத்துக்குச் சென்று கேள்வி எழுப்பிய பெண் தோழர்கள் நிம்மி, உஷாகுமாரி தாக்கப்பட்டு, தோழர்கள் ஈடன், நிஸாந்த் தாக்கப்பட்டு பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் என்னுடன், தோழர்கள் ஈடன், நிஸôந்த், தக்கலையில் தோழர்கள் நிம்மி, உஷாகுமாரி அடைக்கப்பட்டனர்.

குற்றமற்றவர்கள் சிறையில் விசாரணை கைதிகள் என்ற பெயருடன் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் நண்பர்கள் வட்டம் உருவானது. மார்க்சியம் லெனினியம் பேச வாய்ப்பு ஏற்பட்டதும் மகிழ்ச்சியானேன். சில கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட தோழர்கள் தொடர்பு கிடைத்ததும், பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த எனக்கு சிறைச்சாலை ஓய்வு அறையானது. 19 நாட்களும் ஒரே நடைமுறை பழக்கமானது. காலையில் கணக்கு பார்ப்பதிலிருந்து துவங்கி டீ குடிப்பது, குளிப்பது 8.30 மணிக்கு கஞ்சி குடிப்பது 11.30 மணிக்கு மதிய உணவு மாலை 4.30 மணிக்கு இரவு உணவு சாப்பிடுவது ஒரு கட்டத்தில் சிரமமாகவும் சில நாட்களில் பழகிப் போய் சிறப்பாகவும் மாறத் தொடங்கியது. வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டது சர்க்கரை நோயை சரி செய்தது.

கதைப் புத்தகங்கள் படித்ததில் போராட்டம் தலைப்பிலான புத்தகம் என்னை வெகுவாக பாதித்தது. மல்லைய்யா குறவர் இன மக்களுக்காக பாடுபட்டது குறவர் இன பெண் பீஞ்சலு நெஞ்சைவிட்டு நீங்காதவர்கள் ஆகி விட்டனர். மேற்கு வங்காள சரத்சந்திரரின் அனுராதா, பீஞ்சலு போன்றவர்களுக்கு ஆணாதிக்க முதலாளித்துவ சமூக அமைப்பில் எவ்வளவு சிரமங்கள், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாழ்க்கையில் பிடிப்பின்றி பலகோடி பேர் வாழும் நமது தேசத்தில் எவ்வளவு சரியாக மாலெ கட்சி செயல் பாடு இருக்கிறது என்பது மேலும் உறுதிப்பட்டது. அதிலே நானும் ஒரு தொண்டனாக, தோழனாக போராளியாக செயல்படுவது எனக்கு உற்சாகம் தருகிறது.

தோழர் பகத்சிங் மற்றும் பிற புரட்சிகர தோழர்கள் வரலாறு, அவர்கள் தியாகம், 1726 முதல் சுதந்திர போராட்ட தளபதி மாவீரன் பூலித்தேவன் திறமை நமக்கு எப்போதும் உற்சாகம் தருபவை. நெற்கட்டான் சேவல் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு பனை ஓலை, பனைநார், சுண்ணாம்பு, வரகு, குதிரைவாலி, கடுக்காய், பதனீர் சேர்த்த மண்கலவை கோட்டையை வெள்ளைக்காரன் பீரங்கியால் தகர்க்க முடியவில்லை. 1800ஆம் ஆண்டைய தென்னிந்திய புரட்சி செய்த மருது சகோதரர்கள், 1798 வீரபாண்டிய கட்டபொம்மன், 1801 ஊமைத்துரை, 1806 வேலூர் புரட்சி, 1857 முதல் சுதந்திரப் போர் ஆகியவற்றைப் பற்றி சக கைதிகளுடன் பேசி, விவாதித்து பொழுது போவதே தெரியாமல் போனது.

சிறையில் இருந்தவர்களில் காவல் துறையால் பழி வாங்கப்பட்டவர்கள் சிலர், கட்சியில் சேர்ந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளனர். சிறையில் கிடைத்த தொடர்பில் மேலசங்கரன்குழி கொல்லமாவடியில் தோழர் குமார் தலைமையில் கட்சி கிளை அமைக்கப் பட்டுள்ளது. சிதம்பரம், மாயவரம், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மீதுள்ள அதிருப்தியால் நமது கட்சியில் இணைந்து செயல்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2013 பிப்ரவரி மாதம் அதற்கான கூட்டம் நடத்தப்படலாம்.

தமிழக மின் தட்டுப்பாடு சிறைக் கொடுமையை விட கடுமையானதாக உள்ளது. சிறையில் மின் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். சிறைச்சாலைகளில் என்னென்ன உரிமைகள் உண்டு என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் ஜெயில் உணவு பரவாயில்லை, விசாரணை கைதிகள், திறமையானவர்களால் சமைக்கப்படுகிறது. தக்கலை ஜெயிலில் உணவில் புழு இருந்ததாக கூறினர். வெள்ளைக்காரன் சிறைக் கொடுமை இல்லை என்றாலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுவது நம் ஆட்சியிலும் தொடர்கிறது.

ஊழல் அரசியல்வாதிகளும் ஊழல் அதிகாரிகளும், சமூக விரோதிகளும், கார்ப்பரேட் கொள்ளையர்களும் வீதியிலே கிரிவலம் வரும் போது நிரபராதிகள் குற்றவாளிக் கூண்டில் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமாயின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தலைமையில் தேசத்தில் ஆட்சி வரும் காலம்தான் அது சாத்தியப்படும். உண்மையான சுதந்திர நாடு என்றால் 120 கோடி பேரில் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது...

Search