COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 7, 2013

5

களம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலையில்
கூலி குறைப்புக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் குட்டலாடம்பட்டி, தொட்டிவலசு ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினக் கூலியாக ரூ.100 வழங்கி வந்த நிலையில் டிசம்பர் 18 அன்று ரூ.60 ஆக குறைப்பதாக அறிவித்தனர். இதனால் கொதிப்படைந்த பெண் விவசாயத் தொழிலாளர்கள் கூலியைப் பெற்றுக் கொள்ள மறுத்து அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அடுத்த நாளே அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் குட்டலாடம்பட்டியில் காலை 8.30 மணியளவில் அரசு பேருந்தை மறித்து சிறை பிடித்தனர். அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர்.பி.கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதியம் வரை போராட்டம் நீடித்தது. இராசிபுரம் தாசில்தார், வெண்ணந்தூர் பிடிஓ குணசேகரன், ஓவர்சீயர் பேபி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிடிஓவும் ஓவர்சீயரும் பெண் தொழிலாளர்களை தரக்குறைவாகவும் பேசினர். தொழிலாளர்களுடைய கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு சென்று விட்டனர். அங்கு கூடிய விவசாய தொழிலாளர்கள் அதிகார மமதை பிடித்த வெண்ணந்தூர் பிடிஓ, ஓவர்சீயர் ஆகியோர் மீது நடவடிக்கை கோரியும், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்தும் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், சட்டக் கூலியை அமல்படுத்திட வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் டிசம்பர் 24 அன்று காலை 11 மணியளவில் எம்.கோமதி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண் விவசாயத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் குவிந்தனர். ஆணவம் பிடித்த ஊழல் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய், சட்டக் கூலி ரூ.132அய்க் குறைக்காதே என்ற கோரிக்கைகளை எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஏ.சந்திரமோகன், நாமக்கல் மாவட்ட செயலர் ஏ.கோவிந்தராஜ், சேலம் மாவட்ட செயலர் கோ.மோகனசுந்தரம், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் பி.கணேசன் எழுச்சியுரை ஆற்றினர்.

கூலி குறைப்பை கைவிடும் வரை வேலை நிறுத்தத்தை தொடர்வது என 1000 விவசாயத் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர். ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை வெண்ணந்தூர் ஒன்றியம் முழுவதும் விரிவுபடுத்துவது, சட்டக் கூலிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவது என தோழர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தகவல்: பி.கணேசன்

Search