COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

4

மண்ணில் பாதி

நீதிபதி வர்மா குழு பரிந்துரைகள் தாமதமின்றி அமலாக்கப்பட வேண்டும்!

நீதிபதி வர்மா குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, பாலியல் வன்முறைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிற இயக்கத்துக்கு, பல பத்தாண்டுகளாக நாட்டில் நடந்து கொண்டிருக்கிற பெண்கள் இயக்கத்துக்கு, ஜனநாயக இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு முக்கியமான வெற்றி.

சம்பந்தப்பட்ட துறையில், சந்தேகத்துக்கு இடமின்றி புதுப்பாதை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்த செயல்வீரர்கள், கல்வியாளர்களுடன், வரவேற்கத்தக்க விதத்தில் நடத்தப்பட்ட காத்திரமான ஊடாடல் இயக்கப்போக்குக்குப் பிறகு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தயாரானது பாராட்டத்தக்கது. கவுரவம், அவமானம் ஆகியவை பற்றிய ஆணாதிக்கக் கருத்துக்கள் அடிப்படையில் அல்லாமல், பெண்களின் சுதந்திரம், உடல்ரீதியான ஓர்மை மற்றும் கவுரவம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் மீதான வன்முறை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை அறிக்கை உறுதியாக உயர்த்திப் பிடிக்கிறது. அந்த நோக்கு நிலையில் இருந்து, பாலியல் வன்முறைக்கு எதிராக இப்போது இருக்கிற சட்டங்கள் மட்டுமின்றி, சோதனை, தண்டனை, விசாரணை அமைப்புக்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. இந்த விசயத்தில், பெண்களை பாதுகாக்கத் தவறிய அரசு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. பின்தொடர்ந்து தொல்லை தருவது, பார்வைரீதியான அத்து மீறல், ஆடைகளைக் களைவது, பாலியல் துன்புறுத்தல் ஆகியவை பொருத்தமான தண்டனைகளுடன் குற்றங்கள் எனக் கருதப்பட வேண்டுமென அறிக்கை பரிந்துரைக்கிறது. பல்வேறு வடிவங்களிலான பாலியல் வன்முறைக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது. பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு கிரேடட் சிஸ்டம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறது. இழிவுபடுத்துகிற இரு விரல் பரிசோதனை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு தொகுப்பான மருத்துவ பரிசோதனை மற்றும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவனிப்பு ஆகியவற்றை முன்வைக்கிறது.பாலியல் வல்லுறவுக்கு எதிரான தற்போதைய சட்டத்தில் இருந்து திருமணத்துக்குட்பட்ட பாலியல் வல்லுறவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மனைவி கணவனின் சொத்து என்ற கருத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது என்பதை பரிந்துரை அங்கீகரிக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் போது காவல் வல்லுறவு நடப்பதை அனுமதிக்கும் காவல் துறை அதிகாரி மீது, பொறுப்பை நிறைவேற்றத் தவறியதற்காக குற்றம் சுமத்தப்பட்டு, 7 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்தப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பதட்டப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் கவுரவம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையை தடுக்க வேண்டிய அவசியம் ஆகியவை பற்றி அறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது. விரும்பியவர்களை தேர்ந்தெடுக்கும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக குடும்பத்தின் காவலுக்குள் நடக்கும் குற்றங்கள் பற்றி அறிக்கை விவாதிக்கிறது. காவல்துறை பொறுப்பாக்கப்படுவதற்கும், நீதி விசாரணை இயக்கப்போக்கு பாலியல் கூருணர்வு மற்றும் பாலியல் நீதி கொண்டதாக மாற்றப்படுவதற்கும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. துரிதமான விசாரணையை உறுதி செய்ய கூடுதல் நீதிபதிகளும் கூடுதல் நீதிமன்றங்களும் வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. பெண்கள் உரிமை சாசனம் ஒன்றை அறிக்கை முன்வைக்கிறது.

நீதிபதி வர்மா அறிக்கை இத்தனையும் சொல்கிறதென்றால், அது பெண்களின் சுதந்திரம், சுயவிருப்பம், உரிமை ஆகிய பிரச்சனைகளை வெற்றிகரமாக மய்யத்துக்கு கொண்டு வந்த நடந்து கொண்டிருக்கிற இயக்கத்துக்கு ஓர் உண்மையான வெற்றியாகும். அய்முகூ அரசாங்கம் நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைகள் பற்றி ஏன் மவுனம் காக்கிறது? பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரிந்துரைகள் பற்றி ஏன் மவுனம் காக்கின்றன?

மேலே சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை அமலாக்க ஒரு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

@   உதாரணமாக, இரு விரல் பரிசோதனையை ரத்து செய்ய அரசு கொஞ்சமும் தாமதிக்கக் கூடாது. இந்த இழிவுபடுத்துகிற, பெண்கள் விரோத பரிசோதனைக்கு இனி எந்தப் பெண்ணும் ஆளாக்கப்படக் கூடாது.

@   நீதிபதி வர்மா குழு பரிந்துரைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கிற அரசாங்கம், தங்ஜம் மனோரமாவை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களும், சோனி சூரி பாலியல்ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டதை மேற்பார்வையிட்ட சட்டிஸ்கர் காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித்கார்க்கும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@   நீதிபதி வர்மா குழு அறிக்கை பரிந்துரைத்துள்ள, போதுமான நீதிபதிகள், நீதிமன்றங்கள், பாலியல் வல்லுறவு நெருக்கடி மய்யங்கள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான காப்பகங்கள், தடயவியல் ஆய்வுக்கான போதுமான நிறுவனங்கள், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து போன்ற, பல்வேறு உள்கட்டுமான மாற்றங்களை அமலாக்க, அரசாங்கம், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னரே, ஒரு செலவினத் திட்டத்தை தயாரித்து மக்கள் முன் வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும்.

@   நீதிபதி வர்மா குழு துவக்கி வைத்துள்ள இயக்கப்போக்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அமலாக்கப்பட வேண்டிய தேவையான சட்டங்களை விரைந்து வடிவமைக்க, கலந்தாலோசனை இயக்கப்போக்கை அரசாங்கம் தொடர வேண்டும்.

நீதிபதி வர்மா அறிக்கை சில அம்சங்களில் ஏமாற்றமளிக்கிறது. சில விசயங்களில் போதுமானதாக இல்லை. உதாரணமாக, மதவெறி வன்முறை, அட்டவணை சாதி மற்றும் பழங்குடி பெண்கள் மீதான வன்முறை, மூர்க்கமான பாலியல் தாக்குதல் என்ற வகையினத்தில் நடக்கும் படுகொலைகள் போன்ற நிலைமைகளில் நடக்கும் பாலியல் வன்முறையை உள்ளடக்கியதாக அறிக்கை இல்லை. பாலியல் துன்புறுத்தல் மசோதா தொடர்பாக, குறிப்பாக பல்கலை கழகங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக, முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்னும் பல்வேறு அம்சங்களில் நெருக்கமான பரிசீலனையும் விமர்சனரீதியான அணுகுமுறையும் தேவைப்படுகிறது. மொத்த அறிக்கையும் இன்னும் கூடுதலான ஓர் அனைத்தும் தழுவிய பார்வை கோருகிறது.

ஆனால், அனைத்துக்கும் மேலாக, பாலியல் வன்முறைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒரு விசேஷமான கட்டத்தின் விளை பொருளான நீதிபதி வர்மா குழு பரிந்துரைகள், இதற்கு முந்தைய பல்வேறு அறிக்கைகள் போல், கிடப்பில் போடப்படுவதற்கு விட்டு விடக் கூடாது. நாம்தான் அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கமும் நாடாளுமன்றமும் இந்த அறிக்கையை அமலாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஜனவரி 26 அன்று டில்லியில் நடந்த சுதந்திர அணிவகுப்பு

ஜனவரி 26 அன்று டில்லி முழுவதும் உள்ள மக்கள், குடியரசின் மீதான மக்கள் உரிமைகளை மறு அறுதியிடல் செய்ய, பெண்கள் சுதந்திரம், மக்கள் சுதந்திரம் ஆகியவற்றைக் கோரி, சுதந்திர அணிவகுப்பு நடத்தவுள்ளனர். நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை அமலாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலியல் நீதி கொண்ட சட்டங்கள் வடிவமைக்க, அமலாக்க, நீதிபதி வர்மா குழு துவக்கி வைத்துள்ள இயக்கப்போக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் நாம் கோரிக்கை எழுப்ப உள்ளோம். டிசம்பர் 26 அன்று அந்தத் துணிச்சலான போராளி ஏற்றி வைத்த ஜோதியை தொடர்ந்து பிரகாசமாக ஒளிர வைப்போம்.

 - அச்சமற்ற சுதந்திரத்துக்கான இயக்கம்,

டில்லி, 24.01.2013

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக்குழு கூட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக்குழு கூட்டம் 26.12.2012 அன்று சென்னை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி தலைமையில் நடந்தது. சென்னை, நாமக்கல், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய செயற்குழு முடிவின்படி 2013 ஜனவரி 10ல் இருந்து பெண்கள் கழக அமைப்பு தினமான பிப்ரவரி 12 வரை பிரச்சார இயக்கம் நடத்த கூட்டம் முடிவு செய்தது. இந்தப் பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கெதிராகவும், பாலினப் பாகுபாட்டுக்கெதிராகவும், கவுரவத்திற்காக, கண்ணியத்திற்காக, சுதந்திரத்திற்காக என இருக்கும். விலை உயர்வுக்கெதிராக, அந்நிய நேரடி முதலீட்டுக்கெதிராக முழக்கங்கள் எழுப்ப கூட்டம் முடிவு செய்தது. இகக மாலெ 9ஆவது அகில இந்திய காங்கிரசை வெற்றிகரமாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கவும் கூட்டம் முடிவு செய்தது.

2013 பிப்ரவரி 2லிருந்து 12 வரை நடைபெறும் ஏஅய்சிசிடியு பிரச்சார இயக்கத்துடன் பெண்கள் கழகம் இணைந்து செயல்பட்டு 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பெருமளவிலான பெண்களை அணிதிரட்டுவது எனவும், 2013 பிப்ரவரி 20, 21ல் நடைபெறும் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் இகக மாலெ 9ஆவது அகில இந்திய மாநாட்டு வரைவுத் தீர்மானமான பெண்கள் இயக்கம்: சவால்கள் மற்றும் கடமைகள் படிக்கப்பட்டது. மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி அறிக்கை மீது விளக்கங்கள் முன்வைத்தார்

Search