COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 29, 2012

5

உலகம்

காசா

இருபத்தியோராம் நூற்றாண்டிலும்

காலனியம் தொடர்கிறது

எஸ்.கே

உலகின் கவனத்தை கடந்த சில தினங்களாக காசா பெற்றிருந்தது. எட்டு நாட்களாக இஸ்ரேல் ஒரு கொடூரமான போரை காசா மீது ஏவியது. இப்போது எகிப்தை முன் நிறுத்தி ஒரு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி காசா. 15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இங்கு வாழ்கிறார்கள். காசா சுமார் 5 ஆண்டுகளாக இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து, ஒபாமா பதவி ஏற்பதற்கு முன்பு இஸ்ரேல், காசா திட்டின் மேல் நடத்திய தாக்குதலில் 65 குழந்தைகள் உட்பட 430 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறையும், ஒபாமா மீண்டும் தேர்வாகிப் பதவி ஏற்கும் முன்புதான் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், தாக்குதலுக்குப் பிறகுதான் இஸ்ரேலில் தேர்தல்கள் நடக்கின்றன. 45 ஆண்டுகளாக இந்தப் பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், காசா மீதான தாக்குதல்களை, அவ்வப்போது கூடுதலாக வளர்ந்துள்ள புல்லை வெட்டுவது எனச் சொல்கிறது. இந்த மொழியே பாசிச இனச் சுத்திகரிப்பைப் புலப்படுத்தும். இம்முறை நடத்திய தாக்குதலில் 37 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட 162 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். எதிர்ப்பியக்கத்தை வழி நடத்தும் ஹமாசின் இராணுவத் தளபதி அஹமது ஜாபரி குறி வைத்துக் கொல்லப்பட்டார். 2008ல் அய்நா அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டன. 2012ல் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே அலுவலகம் தாக்கப்பட்டது. ஊடகங்களின் அலுவலகங்கள் குறி வைக்கப்பட்டன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் 1400 ராக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் தரப்பில் அய்வர் பலியாயினர். அதில் ஒருவர் இராணுவ வீரர். இம்முறை இஸ்ரேல் தன் தாக்குதலுக்கு, பாதுகாப்பு தூண் நடவடிக்கை எனப் பெயர் சூட்டியது. இஸ்ரேல் Iron Dome என்ற இரும்பு மாடத் தொழில் நுட்பத்தை, அதாவது ராக்கெட் தடுப்பு கவசத்தை உருவாக்கியது. 1500 ஏவுகணைகளில் 420 தடுக்கப்பட்டதாகச்  சொல்கிறது. (இஸ்ரேலின் முதன்மை ஆயுத வாடிக்கையாளரான இந்தியா இந்த இரும்பு மாட கவசத்தை வாங்குவது பற்றி பரிசீலிக்கிற தாம்). பாதுகாப்பு தூண் நடவடிக்கை, தனது ஏவுகணைத் தடுப்பு கவசத்தைச் சோதித்துக் கொண்டே, கனரக ஆயுதத் தாக்குதலைத் தொடுப்பதற்கானது என இஸ்ரேல் சொல்கிறது. இஸ்ரேல் இராணுவ அமைச்சர், தங்கள் மீது ஏவப்பட்டதைக் காட்டிலும் 1000 மடங்கு கூடுதலான வெடி பொருட்களை காசா மீது ஏவியதாகச் சொல்கிறார்.

போர்நிறுத்த உடன்படிக்கை

எகிப்து அதிபர் மோர்சி அமைதியைக் கொண்டு வந்தவராக, அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்ரேலால் முன்நிறுத்தப்படுகிறார். மோர்சி ஒரு பக்கம் அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டும். மறுபக்கம்தான் மற்றுமோர் ஹோஸ்னி முபாரக் அல்ல என்றும் ஹமாஸ் மீது அனுதாபம் கொண்டவர் என்றும் காட்டிக் கொண்டாக வேண்டும். உடன்படிக்கை சரத்துக்கள்:

N இஸ்ரேல், வான்வழி தரைவழி கடல்வழி தாக்குதல்களையும், குறிவைக்கப்பட்ட கொலைகளையும் நிறுத்த வேண்டும்.

N ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல்களையும் எல்லையில் உள்ள போர் வீரர்கள் மீதான தாக்குதலையும் நிறுத்த வேண்டும்.

N காசா திட்டு எல்லையில் மனிதர்கள் பொருட்கள் நடமாட்டம் மீதான தடைகள் தளர்த்தப்படும்.

N உடன்படிக்கையை இரு தரப்பினரும் அமலாக்க எகிப்து பொறுப்பு.

பாலஸ்தீனமும் ஹமாசும்

பாலஸ்தீனத்தில், பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு மஹ்முத் அப்பாஸ் தலைமை தாங்குகிறார். அவர் காசா திட்டின் மீது தாக்குதல் நடந்த போது எட்டிப் பார்க்கக் கூட முயற்சிக்கவில்லை. ஹிலாரி கிளிண்டனுடன் போஸ் கொடுக்க, அப்பாஸ் காட்டிய ஆர்வம், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பில் காட்டவில்லை என்பதால் அவரும் அவருடைய ஃபடா (FATAH) அமைப்பும் தனிமைப்பட்டுள்ளனர். ஹமாஸ் தான் எதிர்ப்பு போராளி என்பது பாலஸ்தீனத்திலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும், சர்வதேச அரங்கிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

காசா மீதான போரை கண்டித்து
இஸ்ரேல்
தூதரகம் முன் எதிர்ப்பு

நவம்பர் 19 அன்று புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் திரண்டு, காசா மக்கள் மீதான இஸ்ரேலிய, தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றை எதிர்த்துக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு, அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கம், அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில், இடதுசாரி ஜனநாயக ஆசிரியர் கூட்டமைப்பு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அழைப்புவிடுத்தன.

ஜேஎன்யு பேராசிரியர்கள் நிவேதிதா, மேனன், கே.எம்.செனாய், சூசன் விஸ்வநாதன், மோகன்ராவ், ஆயேஷா கித்வாய், டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் அஷுதோஷ் குமார், எல்டிடிஎஃபின் உமா குப்தா, அய்சா தலைவர் சந்திப் சிங், ஆர்ஒய்ஏவின் அஸ்லம் கான், ஜேஎன்யுஎஸ்யுவின் தலைவர் லெனின் குமார் அகில இந்திய மாணவர் கழகத்தின் சுசேதா டே, ஓம் பிரசாத், அக்பர், டெல்லி பல்கலைக் கழகத்தின் அன்மோல், ஜாமியா மிலியா இஸ்லாமியாவிலிருந்து பர்ஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிக்கலான சர்வதேச சதுரங்க விளையாட்டு

இசுலாமிய மக்களும் அரபு மக்களும் அமெரிக்க - இஸ்ரேல் அச்சை முதன்மை எதிரியாகப் பார்த்தாலும், வெவ்வேறு இசுலாமிய மற்றும் அரபு அரசுகள் அமெரிக்கஇஸ்ரேல் அச்சுடன் நெருக்கமான, அதே நேரம், சிக்கலான உறவுகள் கொண்டுள்ளன. சவுதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் அமெரிக்க அடியாட்களாகவே உள்ளன. துருக்கி, பாலஸ்தீன ஆதரவு இஸ்ரேல் எதிர்ப்பு நிலை எடுத்தாலும், சிரியா உட்பட்ட அனைத்து பிரச்சனைகளிலும் அமெரிக்க ஆதரவு நிலையே எடுக்கிறது. ஹமாசும் கூட, சிரியா விசயத்தில் ஈரானோடு ஒத்துப் போகவில்லை. ஈரான் மட்டுமே சிரியாவில் ஏகாதிபத்தியத் தலையீடு உட்பட அனைத்து பிரச்சனைகளிலும் அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுக்கிறது. ஈரான் தளபதி முகமது அலி ஜபாரி, ஈரான் ஹமாசுக்கு ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் நுட்பம் தந்ததாகச் சொல்கிறார்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் நேரத்தில், ஒபாமாவை மட்டம் தட்டிய இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவுக்கே வியப்பு தரும் வகையில் ஒபாமா, இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றார். அய்ரோப்பிய யூனியனும் அதையே சொன்னது. பென்ஜமின் நெத்தன்யாகு தம்மால் போர் தொடுக்க முடியும் என நிரூபித்த பிறகு, சர்வதேச அரசியலில் காய் நகர்த்தவும் முடியும் எனக் காட்டிவிட்டதாகக் கருதுகிறார். கூடுதலாக வளர்ந்த புல்லை வெட்டி விட்டதுடன் இந்தச் சுற்று வேலை முடிந்துவிட்டது.

அடுத்தது என்ன?

இஸ்ரேல் 15 வருடங்கள் போர் நிறுத்தம் என்று கேட்டதை ஹமாஸ் ஏற்கவில்லை. அது இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன எதிர்ப்பியக்கத்தையே நிறுத்திவிடுவதற்கு ஒப்பானதாகும். மேற்கு ஆசியாவில் ஏகாதிபத்திய புறக்காவல் நிலையமாக உருவாக்கி நிறுத்தப்பட்ட இஸ்ரேல், இன்று ஓர் அணு ஆயுத நாடாகி, பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, தனது எல்லைகளை விரிவுபடுத்தி அந்த பிராந்தியத்தின் அமைதிக்கே பேராபத்தாக உள்ளது. இஸ்ரேல் இந்த முறையும், போரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு தராது. போர்க் குற்றவாளியாக சர்வதேச மன்றங்களில் நிற்காது. இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு தனித்தனி நாடுகள், அவற்றிற்கு இரு தனித்தனி அரசுகள் என்ற நிலை உருவாவதே தீர்வாகும்.

உலகமெங்கும் இந்தியாவெங்கும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள், இரு நாடுகள் இரு அரசுகள் என்பதே பாலஸ்தீன பிரச்சனைக்கான தீர்வு என, சக்திவாய்ந்த விதத்தில் மக்கள் கருத்தைப் பலப்படுத்தி, இந்தத் தீர்வை வலியுறுத்துமாறு தத்தமது அரசுகள் மீது நிர்ப்பந்தம் தரவேண்டும்.

Search